Search This Blog

Saturday, February 6, 2016


சங்கு கல் மண்டபம்


இன்றைக்கு செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார் மழையைப் பற்றி சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. மழையையும், வறட்சியையும் கணிக்க முடிந்த மனிதனால் ஆற்றில் மளமளவென்று உயரும் வெள்ளத்தை கணிக்க முடியவில்லை. ஒரு வெள்ளம் பல உயிர்களை காவு வாங்கிவிடும். 

ஒவ்வொரு வெள்ளத்திலும் சொந்த பந்தங்களை இழந்த நம் முன்னோர்கள் உயிரிழப்பை தடுக்க ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். அதுதான் ‘சங்கு கல்மண்டபம்‘. தலைமை கிராமத்தின் அருகில் ஆற்றின் மையத்தில் இந்த கல்மண்டபத்தை அமைத்திருப்பார்கள். இந்த மண்டபம் மூன்று பக்கமும் திறந்த அமைப்புடன் இருக்கும். ஆற்றின் நீர் வரும் பகுதியில் மட்டும் கல் சுவர் ஒன்றை எழுப்பியிருப்பார்கள். இந்த சுவரின் வெளிப்பகுதியில் உச்சியில் ஒரு பிரமாண்டமான சங்கு பதித்திருப்பார்கள். இது ஆற்றங்கரை உயரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த சங்கு மட்டத்திற்கு நீர் உயர்ந்துவிட்டால் அடுத்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துவிடும்.  இதில்தான் ஒரு அருமையான தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். வழக்கமான நீர் மட்டத்தைவிட ஆற்றின் நீர் மட்டம் உயருகிறது என்றால் இந்த சங்கு ஒலிக்கத் துவங்கும். நதி நீரின் வேகமும் உயரமும் கூடும்போது அது ஒருவிதமான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த காற்றழுத்தம் கூடக்கூட சங்கின் ஒலியும் கூடிக்கொண்டே வரும்.  இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. உடனே தாய்க் கிராமம் சுறுசுறுப்பு அடையும். தனது கட்டுப்பாட்டில் வெள்ளம் வரக்கூடிய அபாயம் உள்ள ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளம் வருகிறது என்ற செய்தியை அறிவிக்கும்.  

நீரின் வேகத்தை வைத்து எத்தனை மணி நேரத்தில் ஆற்று வெள்ளம் கரையைக் கடந்து ஊருக்குள் புகும் என்பதை சங்கு ஒலிக்கத் தொடங்கியதுமே கணித்துவிடுவார்கள். அதற்குள் ஊர்மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவார்கள். 

இப்படி எதிர்பாராத வெள்ளம் வந்துவிட்டால் தங்குவதற்கென்றே உயரமான பகுதியில் ஒரு கோவில் கட்டி அங்கு ஒரு மண்டபம் அமைத்திருப்பார்கள். அந்த கோவில் மண்டபத்தில் ஊர்மக்கள் அனைவரும் தங்கிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக கட்டியிருப்பார்கள். வெள்ளம் வடியும் வரை கிராமத்தின் சார்பாக அனைவருக்கும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்.  சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர்மட்டமும் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆற்றங்கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று பொருள். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.  நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத்துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். நீர் வடியும்போது உக்கிரமமாக ஒலிக்கும் சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். 

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. தாமிரபரணி போன்ற ஒருசில நதிகளில் வெகு அபூர்வமாக இந்த சங்கு கல்மண்டபங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.  சிறுவயதில் ஆற்றுக்கு நடுவே இத்தகைய மண்டபங்களை பார்க்கும்போது தேவையில்லாமல் எதற்கு ஆற்றுக்கு நடுவே மண்டபத்தை கட்டி வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. இப்போதுதான் தெரிகிறது அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய உன்னதங்கள் என்று.  நம் முன்னோர்கள் எதையும் தேவையில்லாமல் ஏற்படுத்தவில்லை. நாம்தான் அவற்றை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டோம்.

1 comment: