Search This Blog

Friday, February 12, 2016


முதல் இரட்டை வேட படம்

இரட்டை வேடத்தில் ஒரு நடிகர் நடிப்பது இன்றைக்கும் கூட வியப்பான விஷயம் தான். சம்பந்தப்பட்ட நடிகருக்கு மட்டுமல்லாது, அவருடைய ரசிகர்களுக்கும் அது இரட்டிப்பு சந்தோஷம் தரும் ஒன்று.

இரட்டை வேடத்தில் நடிக்காத நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அனேகமாக அனைத்து நடிகர்களுமே இரட்டை வேடத்தில் நடித்தவர்கள் தான். இந்த இரட்டை வேடப் படம் முதன் முதலில் வந்தது 1940-ல். இப்போது போல் கிராபிக்ஸ், டெக்னிக் என்று எதுவுமே இல்லாத அந்த காலத்தில் பிலிமின் ஒருபகுதியை மறைத்து, அதில் நடிகரின் ஒரு வேடத்தை எடுத்துக் கொள்வார்கள். அதற்கு எதிரே மீண்டும் அதே நடிகரை மற்றொரு வேடத்தில் நடிக்க வைத்து பிலிமின் மற்றொரு பகுதியை மறைத்து எடுப்பார்கள்.

இரட்டை வேட படத்தில், இரட்டை வேடமும் ஒரே பிரேமில் வரும் காட்சிகளை படமாக்குவது கேமராமேனுக்கு சவாலான வேலை. இன்று பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதால், ஒரு நடிகர் எத்தனை வேடம் ஏற்று நடித்தாலும் அத்தனையையும் ஒரே பிரேமில் சுலபமாக காட்டிவிட முடியும்.

1940-ல் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ‘தி மேன் இன் த அயர்ன் மாஸ்க்‘ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து பி.யு.சின்னப்பாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து உருவாக்கிய படம்தான் ‘உத்தம புத்திரன்‘. இதே கதையை அப்படியே 1958-ல் சிவாஜிகணேசனை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து அதே பெயரையும் வைத்து மீண்டும் ஒரு உத்தம புத்திரனை வெளியிட்டார்கள். இதுதான் சிவாஜிக்கு முதல் இரட்டை வேட படம்.

மன்னர் குலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாய்மாமன் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவன் நல்லவனாகவும், மற்றொருவன் கெட்டவனாகவும் மாறி, இறுதியில் நல்லவன் முடிசூட்டிக் கொள்வதுதான் கதை. இதுவொரு சாகா வரம் பெற்ற கதை என்றும் சொல்லலாம்.

சிவாஜி நடித்த உத்தமபுத்திரனை காலத்தை வென்ற படம் என்று சொல்லலாம். விக்கிரமன், பார்த்திபன் என இரட்டை வேடங்களில் அவர் அசத்தியிருப்பார். அதிலும், “யாரடி நீ மோகினி“ பாடலும், அதில் சிவாஜியின் கைதட்டலுடன் கூடிய நடனமும் இன்றும் மறக்க முடியாதவை. 

பி.யு.சின்னப்பாவின் உத்தம புத்திரனில் தொடங்கி சிவாஜியின் உத்தம புத்திரன், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப்பிள்ளை, கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே‘, ரஜினியின் ராஜாதி ராஜா என்று ஏகப்பட்ட படங்கள் இதே பாணியில் வந்துவிட்டன. ஆனாலும் இந்த கதை திகட்டாத கதையாகத்தான் உலக அரங்கில் இன்றும் இருக்கிறது.

No comments:

Post a Comment