Search This Blog

Friday, February 12, 2016


மனிதனை முன்னேற்றிய தானியங்கள் 13/02/2016

இன்றைய உலகில் மனிதனுக்கு உணவளிப்பவை தானியங்கள் தான். தானியம் புல் வகையைச் சேர்ந்த ஒரு பயிர். இந்த புல்லின் விதைகளைத்தான் தானியம் என்கிறோம். இதன் விதை உண்மையில் ஒரு கனி. ஒரேயொரு விதையும், அந்த விதையைச் சுற்றி இருக்கும் கனிச்சுவரும், அந்த கனிச்சுவரை மூடியபடி இருக்கும் உமியுமே தானியமாகும். கிராமங்களில் இந்த வகை தானியங்களை ‘தவசம்‘ என்றும் அழைக்கிறார்கள்.  மனிதன் ஆரம்பக் காலங்களில் விலங்குகளை வேட்டையாடி உண்டான். அதன்பின் காய், கனிகளை உணவாக உட்கொண்டான். அப்புறம் காட்டுப் புல்வகைகளை சமைத்து சாப்பிட்டான். இப்படியே வளர்ந்த மனிதன் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் தானியங்களை கல் கருவிகளை கொண்டு அரைத்து உண்ணும் முறையைக் கண்டுபிடித்தான். அப்போதும் அவன் விவசாயம் செய்ய கற்கவில்லை. காடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த தானியங்களை மட்டுமே உணவாக்கிக் கொண்டான்.  அதன் பின் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்தே தானியங்களை விளைவிக்க கற்றுக் கொண்டான். இதுதான் மனித சரித்திரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காட்டுமிராண்டியாக, நாடோடியாக திரிந்து கொண்டிருந்த மனிதன், ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த விவசாயம் தான்.  மனிதன் முதன் முதலாக பயிரிட்டது தானியம் தான். தனக்கு உணவாக பயன்படக்கூடிய புல் விதைகளைக் கண்டுபிடித்து பயிரிடத் தொடங்கினான். இதன் மூலம் தனக்கும் தன் விலங்குகளுக்குமான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான். உணவுக்காக காடு, மேடுகளில் அலைவதை நிறுத்திக் கொண்டான். இதன்மூலம் அவனுக்கு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை பல ஆக்கங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினான்.  நாகரிகம், கலாச்சாரம், அறிவியல் போன்றவை வளர்வதற்கு அடிப்படையாக அமைந்ததே தானிய உற்பத்திதான். தானியங்களே மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பிரதான உணவு. உலகில் பாதிப் பேர் அரிசி சோற்றை சாப்பிடுகிறார்கள். மீதிப் பாதி பேர் கோதுமையில் உணவு வகைகளை செய்து சாப்பிடுகிறார்கள். இரண்டுமே தானியங்கள்தான். மனிதன் தனக்கு தேவையான கலோரியில் 75 சதவீதத்தை தானியங்கள் மூலமே பெறுகிறான். உலகில் 70 சதவீத விளைநிலங்களில் தானியங்களே பயிரிடப்படுகின்றன என்றால் அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.  நமது பிரதான உணவாக இருக்கக்கூடிய நெல், புல் இனத்தை சேர்ந்தது.  இதை ஏன் இங்கு சொல்லவேண்டும் என்றால், நகரத்தில் வாழும் மாணவர்கள் பலரும் நெல் மரத்திலிருந்து கிடைக்ககூடிய ஒன்று என்றும், அரிசி மற்றொரு தாவரத்தில் இருந்து வருகிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை இன்றைய தலைமுறையிடமிருந்து நாம் வெகு தூரத்துக்கு விலக்கி வைத்துவிட்டோம் என்பதன் அடையாளம் இது. எது எப்படியோ இன்றைய மனித வாழ்வுக்கு முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது தானியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment