Search This Blog

Sunday, February 7, 2016



மழைநீர் சேகரிப்பின் தந்தை  
(26/01/2016)

பொதுவாக தமிழகத்தில் மழைக்காலத்தில் மட்டுமே  நீர் நிறைந்து ஓடும் ஆறுகள் இருந்தன. அன்றைய மன்னர்கள் அதை வைத்து தான் விவசாய பணிகளை வழி வகை செய்தனர். குடிநீரையும் மக்களுக்கு பகிர்ந்து அளித்து வந்தனர். மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது மன்னனின் தலையாய கடமை. அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாக வேண்டிய பொறுப்பு எல்லா மன்னர்களுக்குமே இருந்தது. அதில் இருந்து தவறினால் புலவர்கள் கேவலமாக, பாடியே கொன்று விடுவார்கள். பழிச்சொல்லுக்கு அஞ்சியவர்கள் அன்றைய மன்னர்கள். அதற்காகவே நீரை சேமிக்கும் உத்தியை மன்னர்கள் மாய்ந்து, மாய்ந்து செய்தார்கள்.

அத்தகைய மன்னர்களில் முதன்மையானவர் ‘இருப்பைக்குடி கிழவன்’ என்ற சிற்றரசன். இவரை நீரியியல் நிபுணர், நீரியியல் பொறியாளர், நீரியியல் வல்லுனர், நீரியியல் விஞ்ஞானி என்று எந்த பெயர் கொண்டு அழைத்தாலும், அது அவரது நீர் நிபுணத்துவத்துக்கு குறைவான சொல்லாகவே இருக்கும். அந்த அளவு நீர் ஞானம் கொண்ட ஒரு மன்னன். இவர் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த ‘இருஞ்சோணாடு’ என்ற பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர். இன்றைய சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு அது. வறண்ட நிலப்பரப்பை அதிகம் கொண்ட தனது நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவில், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீர் பாசனத்திற்காகவே செலவழித்த மன்னன். தனது நாடு மட்டுமல்லாமல் பாண்டிய நாடு முழுவதும் ஏரிகளை உருவாக்கிய பெருமை இந்த மன்னனையே சேரும். வைகை நதிக்கரையில் பல கண்மாய்களை உருவாக்கி அவற்றுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களை வடிவமைத்து தந்த தொழில்நுட்ப பொறியாளர் இந்தக் கிழவன் தான். இன்றைக்கு பெரிதாக பேசப்படும் ‘வாட்டர் ஹார்வெஸ்டிங்’ என்ற ‘நீர் அறுவடை’ அதாவது மழைநீர் சேமிப்பை சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திக் காட்டிய முன்னோடி. கி.பி.815 முதல் கி.பி.890 வரையிலான காலக்கட்டத்திலேயே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் இவரை ‘மழைநீர் சேகரிப்பின் தந்தை’ என்று சொல்வார்கள். மழைநீரை கொஞ்சம் கூட வீணாக்காமல் அதை அப்படியே ஓரிடத்தில் சேர்த்துவைத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதில் கில்லாடி. மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியதுதான். புவியீர்ப்பு விசைக்கு எதிராக எப்படி நீரை மேலேற்றினார் என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் மேலாண்மையில் சாதனை மன்னர் இவர் என்பதில் சந்தேகமில்லை. இந்த செயல்முறையால் அதுவரை நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின. கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி,  திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று இன்றும் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏரிகள் அனைத்தையும் அவர் உருவாக்கியதுதான். தற்போது தென் மாவட்டங்களில் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது என்றால் அதற்கு  இருப்பைக்குடி கிழவன் அன்று ஏற்படுத்தித் தந்த நீர்நிலைகள் தான் பெரும் காரணம்.

No comments:

Post a Comment