Search This Blog

Sunday, February 7, 2016


ரத்தப்பணம் 
(24/01/2016)

கருப்புப் பணம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒயிட் மணி என்ற வெள்ளைப் பணம் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தப் பணம் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா..?  இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்வோம். ரத்தப் பணம் என்பது கேங் ஸ்டார்கள் மொழியில் இருக்கிறது. இந்த  ரத்தப்பணத்திற்கு இடத்திற்கு தகுந்தபடி பல பெயர்கள் இருக்கின்றன. திய்யா, கிஸாஸ், எரிக்பைன், காலனாஸ், விரா, க்லொசிஸ்னா, மிமைசின், ஸீர், வியர்கில்ட் இவையெல்லாம் ரத்தப் பணத்தின்  மாற்றுப் பெயர்கள்.  தவறாக யாரையாவது கொலை செய்துவிட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்குத்தான் இத்தனை பெயர்கள்.

இயேசு நாதரை காட்டிக்கொடுத்து 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான், யூதாஸ். இயேசு சிலுவையில் அறையப்பட்டப் பின்பு, அவன் தன் தவறை உணர்ந்து குற்ற உணர்வு தாளாமல் வாங்கிய காசுகளை திருப்பிக் கொடுத்தான். அப்போது ஆட்சியாளர்கள் இந்த பணத்தை மீண்டும் கஜானாவில் வைக்க முடியாது. இது ரத்தத்துக்கு கிடைத்த விலை என்று சொன்னார்களாம். அப்போது தோன்றியதுதான் ‘பிளட் மணி’ என்ற வார்த்தை. அதாவது ரத்தத்துக்கு ஈடாக கொடுக்கும் பணம்.

ஜெர்மனியில் ‘வியர்கில்ட்’ என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ‘வியர்’ என்றல் மனிதன். ‘கில்ட்’ என்றால் பணம். ஒவ்வொரு மனித உயிருக்கும் அவர்கள் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள். அதன்படி தொழிலாளி உயிருக்கு விலை குறைவு. அரசனின் உயிர் என்றால் விலை அதிகம். அடிமைகளாக வாங்கப்பட்ட மனிதர்களை கொல்ல யாரும், யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை. இஷ்டம் போல் அவர்களை கொல்லலாம்.

இது மட்டுமில்லாமல், சில நேரங்களில் ‘உயிருக்கு உயிர்’ என்ற நடைமுறையும் இருந்தது. அதன்படி குடும்பத்தின் ஆண் வாரிசை யாராவது கொன்று விட்டால், கொன்றவரின் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் வாரிசை தத்தெடுத்து தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்வார்கள்.

தேவாலயத்திலோ, அரண்மனையிலோ ஒருவர் கொலை செய்யப்பட்டால், இந்த நஷ்டஈட்டு முறை எதுவும் செல்லாது. அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை தான்.

No comments:

Post a Comment