Search This Blog

Monday, August 31, 2015


மூட நம்பிக்கை மலைத்தொடர்
உலகில் பல்வேறு மர்ம சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் மட்டும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதனால் பல்வேறு சம்பவங்கள் மூடநம்பிக்கையால் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு இடம்தான் அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மூடநம்பிக்கை மலைத்தொடர். இதை சுற்றி நிகழும் சம்பவங்கள் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இந்த மலைத்தொடரை ஜக்கப் வால்ட்ஸ் என்பவர் 1800-ல் கண்டுபிடித்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய தங்கப் புதையல் இருந்த இடம் தெரிந்ததாகவும், அதை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடைசியாக அவர் நோயால் மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவருடைய நெருங்கிய நண்பரிடம், புதையல் ரகசியத்தை சொன்னாராம். அந்த நண்பர் அதை வேறு சிலரிடம் சொல்ல, அவர்களில், ஒருவர் அவரை கொன்றுவிட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை காட்டுத்தீயைப் போல பல இடங்களுக்கும் பரவியது. அப்போது புதையலை தேடிச் சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பி வரவில்லை. அவர்கள் மர்மமான முறையில் இறந்து போனார்கள்!. திரும்பி வந்தவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு வந்ததாக கூறினர். மேலும் அவர்கள் மலைத்தொடரில் புதையலுக்குப் பதில், தங்களுக்கு முன்பு அங்கு சென்றவர்களின் எலும்புக் கூடுகளைத்தான் கண்டார்களாம். அதைப்பற்றி பலவித கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அதனால் அந்த பகுதி மர்மப் பிரதேசமாக மாறியது. மேலும் சிலர் அங்கு ‘டார்டும்ஸ்‘ என்ற குள்ளமான மனிதர்கள் வாழ்வதாகவும், அவர்கள் தான் புதையலை காப்பதாகவும் கூறினார்கள். இதனால் அந்தப் பகுதி மேலும் மர்ம முடிச்சுகள் நிறைந்த பகுதியாக மாறியது. இன்னும் சிலர் அங்கு ‘ஏலியன்ஸ்‘ என்ற வேற்றுக்கிரக மனிதர்கள் வந்து செல்வதாகவும், ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இன்னும் சிலரோ அந்த இடத்தில் மலைகளுக்கு நடுவே மிகச் சிறிய இடுக்குகள் இருக்கின்றன என்றும், அது நரகத்தின் நுழைவுவாசல் என்றும் அங்கிருந்த மதகுருமார்கள் ஒரு கட்டுக் கதையை கட்டிவிட்டதால், அந்த பகுதியில் திகில் பற்றி எரிந்தது. மக்கள் அந்தப் பக்கம் போகவே பயந்தனர். ஆனால், விஞ்ஞானிகள் வேறு விதமாக கூறுகிறார்கள். மலைத்தொடரில் எப்போதும் வெப்பம் 115 முதல் 125 பாரன்ஹீட் வரை கொதித்துக்கொண்டிருக்கும். இங்கு நீர்நிலைகள் எதுவும் இல்லை. மழை பெய்தாலும் உடனே நீர் வழிந்தோடி வற்றிவிடும். இந்த மலைத் தொடர் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. பல குறுகிய குகைகளும் நிறைய உள்ளன. மிகக் குறுகலான இந்த மலை இடுக்குகளில் நுழைந்து வெளிவரமுடியாமல் மாட்டிக்கொண்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆனாலும் மனிதனுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆசை விடவில்லை. உயிர் போனாலும் பரவாயில்லை. புதையலை அடைந்தே தீருவோம் என்று இன்னும் பலர் அங்கு சென்று கொண்டே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திரும்புவதே இல்லை.

ஒரே நாளில் 97 லிட்டர் பால் தந்த பசு
பசு என்பது பெண் மாட்¬யும், காளை என்பது ஆண் மாட்டையும், இவற்றின் குட்டியை கன்று என்றும் அழைக்கிறார்கள். பசு மாட்டால் உயரமான படிகளில் ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. இறங்குவதற்கு வசதியாக அதன் கால் அமைப்பு இல்லை. அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காததால் அதனால் மேலிருந்து கீழே படிகள் மூலம் இறங்க முடியாது. பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது. ஒரு நாளில் 10 முதல் 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணத்தை கொடுக்கும். ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் இரை உண்ணவும், 7 முதல் 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்கு நேரம் தேவை. அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 முதல் 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது. ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லிட்டர் சிறு நீரும், 15 முதல் 20 கிலோ சாணத்தையும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். பசு மாடு நாள் ஒன்றுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கக் கூடியது. மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகிறது. பசு மாட்டின் வயிற்றில், உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன. மாட்டின் கண்கள், முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது. பசு மாட்டின் நுகரும் உணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 முதல் 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும். பால் கறக்கும் பசு மாடு ஒரு நாளுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுத்துகிறது.. பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி பாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால். 
உலகிலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 லிட்டர் பாலைச் சுரந்தது. ஒரே நாளில் 97 லிட்டர் பாலைச் சுரந்து உலக சாதனை படைத்த மாட்டின் பெயர் உர்பே ஆகும். இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும். இப்படி பசுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன.

வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும். இதன்மூலம் இழந்த நீர் சத்தை குழந்தைகளால் பெற முடியும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக் கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம். ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப்போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பார்கள். இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல் தட்டுதல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

செவித்திறனை பாதிக்கும் ‘ஹெட்போன்’ இசை
மொபைல் என்ற நவீனம் வந்த பின், ஹெட்போன் மூலம் பாடல் கேட்பது தாறுமாறாக வளர்ந்து இருக்கிறது. பஸ், ரெயில், இரைச்சல் மிகுந்த போக்குவரத்து நெரிசலில், அதிக சத்தத்தில் ஹெட்போனில் பாடல் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்றால் அந்த ஹெட்போனையும் மீறி பாடல்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இப்படி காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு, காது பாதிக்கப்பட்டால், மீண்டும் கேட்கும் சக்தியை பெறவே முடியாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு டினைடஸ் என்று மருத்துவப் பெயர். இந்த நோய் வந்துவிட்டால், சுற்றுப்புறம் சத்தமின்றி அமைதியாக இருந்தாலும், நம் காதுக்குள் மட்டும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இது சில சமயம் மென்மையாகவும், பல நேரங்களில் தாங்கமுடியாத அளவுக்கு அதிக ஒலியுடனும் கேட்கும். இந்த டினைடஸ் வந்துவிட்டால், காதுக்குள் மணி அடிப்பது போலவோ, கடல் அலையைப் போன்ற சத்தமோ, காதுக்குள் காற்று அடைத்துக் கொண்டது போலவோ, சலசலவென்று தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது இனம் புரியாத ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருக்கும். பின்னர் காணாமல் போகும். பல ஆண்டுகளாக இதில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதில் அகநிலைக் காது இரைச்சல், புறநிலைக் காது இரைச்சல் என வேறுபட்ட நிலைகள் உள்ளன.இவை வருவதற்கு முதுமை, அதீத சத்தம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டல நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் ரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன. இவை எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு ஹெட்போன் இசையால் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் உதட்டு அசைவை கவனித்துத்தான் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தேவையா? இசையை ரசிக்க நினைப்பவர்கள், இரைச்சல் உள்ள இடங்களில் அதை கேட்காதீர்கள். இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் மிகக் குறைந்த சத்தத்தில் ஹெட்போனில் இசையை கேளுங்கள். அதுவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெட்போன் இசையை தவிர்ப்போம். காதுகளைக் காப்போம்!
22.08.2014

ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு
பணம் இன்றைய உலகை ஆளும் மிக முக்கிய பொருள். பணம் வருவதற்கு முன்பு பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்தது. இது ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உலோக நாணயங்கள் 2400 வருடங்களுக்கு முன்பு உபயோகத்தில் வந்தன. அதன் நவீன வடிவம் தான் இன்றைய ரூபாய் நோட்டுகள். ரூபாய் நோட்டு கசங்கி இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது கறைகள் படிந்திருந்தாலோ அதன் மதிப்பை அது இழப்பதில்லை. எந்த நிலையில் இருந்தாலும் அதன் மதிப்பு மாறுவதில்லை. நமது மக்கள் தான் செல்லாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் வாங்குபவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். அவர்கள் குறைந்த பணத்தைக் கொடுத்து, வங்கியில் முழுத் தொகையையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எந்த பணமும் எந்த நிலையிலும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று. வட இந்தியாவில், பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலும் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் தான் கொஞ்சம் கசங்கியிருந்தாலும் செல்லாது என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா? குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அதிக செலவும், மதிப்பு அதிகம் கொண்ட நோட்டுகள் அச்சடிக்க குறைந்த செலவும் ஆகிறது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது. அதனால்தான் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள். (இப்போது மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்). அதேநேரம் ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 48 பைசா மட்டுமே செலவாகிறது. பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 96 பைசாவும், இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 46 பைசாவும், ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 81 பைசாவும், நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 79 பைசாவும், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசாவும், ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க 4 ரூபாய் 6 பைசாவும் செலவாகின்றன. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 100 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட, 50 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. ஒரு நாட்டில் எந்த அளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நாடு அதன் விருப்பத்திற்கு ஏற்ப நோட்டை அச்சடித்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதன்படியே ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடிக்க முடியும். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நாடும் அதன் இஷ்டத்துக்கு பணத்தை அச்சடித்து வெளிவிட்டு விடும்.

புதிய 7 அதிசயங்கள் உருவான விதம்
உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்டவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன. அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்கைளை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் (கி.மு 484, கி.மு.425) மற்றும் காலிமாசஸ் (கி.மு. 305, கி.மு.240) காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ 7 ஒண்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின்படி, சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநரும், விமான பைலட்டுமான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999-ல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணைய தளம் 2001-ல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் 700 அமெரிக்க டாலர்கள் அளித்தார். இந்தப் புதிய அதிசய பட்டியலுக்கான பட்டியலில் ஒரு இடம் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், அவை இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும் என்று பல விதிகளை வகுத்தார். அதன்படி நவம்பர் 24, 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதன்பின்னர், ஜனவரி 1, 2006-ல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அந்தப் பட்டியலும் பரிசீலிக்கப்பட்டது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த “நியூ-7 ஒண்டர்ஸ் தகுதியாளர்” என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மகாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈபிள் கோபுரம் உள்ளிட்டவற்றையும் அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகளுடன் வெளியிடப்பட்டது.

நெல்லிக்கனி தரும் நன்மைகள்
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது. நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக வைத்துக்கொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3,5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின் ‘சி’யும் உள்ளன. இது பல் நோய், அஜீரணம், மூட்டு வலி ஆகியவற்றை குறைக்கிறது. அருமையான கண் பார்வையை தரும். நீண்ட ஆயுளுக்கு தினமும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி நல்ல பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் போன்றவை குணமாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் ‘சி’ குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி, என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு அதிகம் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுயன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. ஆக, நெல்லியை தினமும் சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம்.

மிரட்டும் மலேரியா
சமீபத்திய புள்ளி விவரப்படி மலேரியாவின் தாக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. ‘பிளாஸ்மோடியா’ என்னும் ஓரணு உயிரிதான் இந்த நோயை உண்டாக்குகின்றது. ரத்தத்தில் நுழையும் இந்த ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துக்குள் மனிதனின் ஈரலை அடைந்துவிடும். அது ஈரல் செல்லுக்குள் புகுந்தாலே போதும். அது பலமிக்கதாக மாறி, புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து ரத்தத்துடன் கலந்து விடும். பிளாஸ்மோடியா எனும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உண்டாக்கும் திறன் கொண்டவை. அந்த நான்கு வகைகளிலும் ‘பிளாஸ்மோடியா பல்சிபறம்‘ என்னும் வகையே மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது. மலேரியாவால் ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துபவைதான். இந்த உயிரி மனித ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மலேரியா காய்ச்சலை உருவாக்க முடியும். இந்தநோய் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோயல்ல. எனவே, பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் நம் உடலில் சென்றால் மட்டுமே நோய் உண்டாகும். கொசுக்களில் 400 வகைகள் இருந்தாலும் 30 வகையான கொசுக்கள் மட்டுமே இந்த ஓரணு உயிரியை எடுத்துச் செல்லக் கூடியவை. பல நாடுகளில் குழந்தைகள் 5 வயது முடிவடைவதற்குள்ளாகவே இவை தாக்கி கொன்று விடுகின்றன. இந்த கொசுக்கள் மோப்பம் பிடித்து ஒருவர் தோலை துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள ரத்தக் குழாயைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்படி அவை உறிஞ்சும் ரத்தம் உறைவதைத் தடுக்க ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்பும். அந்த திரவத்தில் ஏற்கனவே வேறு ஒருவரின் உடலை துளைத்தபோது புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருந்தால் புதியவரின் ரத்தத்துடன் கலந்து நோயை உருவாக்கி விடும். தொடக்கத்தில் கூறியதுபோல் மலேரியா குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். காலமாற்றத்தால் இந்த கொசுக்கள் குறைந்து, சிறிது காலம் கழித்து மீண்டும் வீரியமுடன் உயிர் பெற்று மிரட்டினால் என்ன ஆகுமோ என்பது தான் அவர்களது அச்சம். இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், அது தற்போது கொஞ்சம் கூட நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத இன்றைய குழந்தைகளை பெருமளவு பாதிக்கும். ஒரு சுனாமி போல் வந்து மொத்த குழந்தைகளையும் கொன்று அழித்துவிடும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்கால கவலை.

புத்திசாலி யானைகள்
யானைகள் புத்திசாலிகள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதை நிரூபிப்பது போல் இந்த ஆய்வு உள்ளது. ஒரு யானை, தான் கேட்கும் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதை கண்டறிந்து விடுமாம். அது மட்டுமல்ல அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும்கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க காட்டு யானைகள் மத்தியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் ‘ப்ரோசீடிங்க்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்‘ என்கிற அறிவியல் இதழில் வந்துள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கேரன் மெக்கம்ப், கிரேமி ஷானன் ஆகியோர் நடத்தினர். ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கும் அந்தநாட்டில் மாடு மேய்க்கும் ‘மாசாய்‘ இன மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு. மாசாய் இனமக்கள் யானைகளை வன்முறையாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். ஆனால் அதே ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘கம்பா‘ இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வந்தாலும், இந்த இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்வதில்லை. இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். ‘அதோ பாரு, அங்க பாரு! யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு!‘ என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தனர்.இந்த குரல்களை தனியாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்பிரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக சத்தமாக ஒலிபரப்பினர். இதில் மாசாய் இன ஆண்களின் குரல்களை கேட்டவுடன், காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்ப குழுக்களாக ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் செயல்பாடுகளையும், சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தின. இதுதவிர ஒருவித கலவர நிலையில் யானைகள் இருந்தன, இதேபோல் கம்பா இன ஆண்களின் குரலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினர். அதைக்கேட்ட யானைகள் முன்பைப் போல கலவரப்படவில்லை. எச்சரிக்கை ஒலியை மட்டும் விடுத்து, கவனத்துடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதன் மூலம் யானைகளுக்கும் மனிதர்களின் குரலை கண்டறியும் சக்தி உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலவுக்குப் போய்வர கட்டணம் ரூ.8,250 கோடி
நிலவுக்கு மனிதர்களை ஜாலி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கட்டணம் வெறும் ரூ 8,250 கோடிதான்! 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள். அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின் இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர். இப்போது அதை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். ‘கோல்டன் ஸ்பைக்‘ என்ற நிறுவனம்தான் நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் கெர்ரி கிரிப்பின். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய வேண்டி வரும். நிலாவுக்கு உல்லாசப்பயணம் சென்றுவர இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும். “நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்த விதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்,“ என்கிறார் கிரிப்பின். நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் நாமெல்லாம் போகும் அளவிற்கு என்றுமே கட்டணம் குறையப் போவதில்லை. அதனால் நிலவு பற்றிய நம் அழகான சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டு பூமியில் இருந்தே நிலவை தரிசிக்கலாம்.

பகல் தூக்கம் நல்லதா?
பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும், ஒரே முடிவுதான் வந்தது. மேலும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது. இவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்தூக்கம் மட்டுமே பயன்தரும். அதைவிட்டு ஒரு மணி நேர தூக்கமானது, அதிக நேரம் நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.

‘நிகோட்டின்’ என்னும் நச்சு
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை மீண்டும் மீண்டும் சொன்னாலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு சிகரெட்டில் இருந்து சராசரியாக 1 மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது. நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான ‘ஆல்வியோலி’ என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயணிக்கிறது. ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவீத நிகோட்டினை ‘கோட்டிநைன்’, ‘நிகோட்டின் ஆக்சைட்’ என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் ரத்தத்தில் இருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.). தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்து, சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி ‘கேன்சர்’ வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம். புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்ற பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் மியூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவற்றை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது. அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது. இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய் களை சுருங்கச் செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும். எனவே புகைப்பவர்கள் இனியாவது அதை கைவிடும் முடிவுக்கு வரவேண்டும்.

நெஞ்செரிச்சலை குணமாக்க சில வழிகள்
நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. நேராநேரத்துக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அப்படி சரியான உணவை எடுத்துக்கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும். இந்தநிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும்போதோ அந்த அமிலமானது உணவுக்குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். இதுதவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம். நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம். தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து நீர்த்துப் போய்விடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். லிகோபாக்டர் பைலோரியா எனும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூசை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும். கடல் உணவுகளில் டாரின் என்ற சத்து அதிகம் உள்ளது. இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும். அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் சிறந்தது. வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், எரிச்சலை உண்டாக்கும் அமிலம் சுரப்பதை தடுக்கும். எனவே கால்சியம் உற்பத்திக்கு உதவும் பால் சாப்பிடுவது நல்லது. எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் அதிமதுரம் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கும். இப்படி சில உணவுகள் மூலமும் நெஞ்செரிச்சலை குணப் படுத்தலாம்.

மோசமான டிரைவர்கள் 

உலகிலேயே மோசமான டிரைவர்கள் இருப்பது இந்தியாவில்தான் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல உலக அளவில் அதிக வாகன விபத்துக்கள் நடப்பதும் இந்தியாவில் தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் மிதக்கும் டிரைவர்கள், முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாமை, டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் என இதற்கு காரணமாக கூறுகிறார்கள். 

இந்தியாவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 1.30 கோடி. இவை வருடத்துக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் அமெரிக்காவில் வருடத்துக்கு 41 ஆயிரம் மரணங்களே நிகழ்கின்றன. 

இந்தியாவில் 100 கார்களுக்கு, ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது. ஏன் இந்த வித்தியாசம்? அமெரிக்கர்கள் குடிப்பதில்லையா? அவர்கள் வேகமாக கார் ஓட்டுவதில்லையா? என்ற கேள்வி எழுகிறது. 

வளரும் நாடுகளில், வாகனங்களின் சராசரி வேக வரம்பு இந்தியாவைவிட அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 300 கி.மீ.க்கு மேல் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களும், சாலைகளும் உள்ளன. ஆனால், அவர்கள் எப்படி தொடர்ந்து விபத்துக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்? 

அமெரிக்காவில் சாதாரண டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கே கடுமையான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன. 

 பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 20 சதவீதமாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து 40 சதவீதத்தை இலக்காக வைத்திருக்கிறது. மலேசியா போன்ற நாடுகள் கூட 10 ஆயிரம் வாகனங்களுக்கு 3 விபத்துக்களாக குறைப்பதில் உறுதியாக உள்ளன. 

சுவீடனில் சாலை மரணம் 1997-ல் இருந்து பூஜ்ஜியமாக இருக்கிறது. அங்கு விபத்தால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. இதன் மூலம் சாலை விபத்து முற்றிலும் தடுக்கக் கூடியதே என்று அந்த நாடு உலகத்துக்கே நிரூபித்துக் காட்டியுள்ளது. 

குடிபோதை இல்லாமல், தங்கள் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உலகின் மோசமான டிரைவர்கள் என்ற பெயரை இந்திய டிரைவர்களால் உடைக்க முடியும். சாலை விபத்துகளில் உலகில் முதல் நாடாக இருக்கும் இந்தியா என்ற பெயரையும் மாற்ற முடியும்.

Thursday, August 13, 2015


அண்டத்தின் மொத்த நீளம்
ஒரு பொருள் இயங்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது திசை
மாறிக்கொண்டிருக்கும் போதோ அதன் எடை உணரப்படுவதில்லை. ஆனால், இயங்கிக்கொண்டிருக்கும் பூமியின் மீதுள்ள நம்முடைய எடையை உணர முடிகிறதே எப்படி? பொருள் ஓடுவதற்கும் அதன் எடைக்கும் சம்பந்தமில்லை. நம் எடை என்பது பூமிக்கும் நமக்கும் இடையில் செயல்படும் நிறையீர்ப்பு விசை. அது பூமி ஓடினாலும் நின்றாலும் அப்படியேதான் இருக்கும். 

அதே வேளையில் பூமி சுற்று அதிகரித்தால், பூமியில் இருந்து தூக்கி எறியும் நிலை ஏற்படும். அதனால், எடை குறைவு ஏற்படும். அதுபோல பூமி மெதுவாக சுற்றினாலும் நமது எடை மேலும் அதிகரிக்கும். அண்ட வெளியில் பல நட்சத்திர கூட்டங்களை கொண்ட பல அண்டங்கள் உள்ளன. சூரியனை உள்ளடக்கிய பல நட்சத்திரங்களை கொண்ட நமது அண்டம், அண்ட தொகுப்புகளின் விளிம்பில் உள்ளது. ஹவாய் விண்வெளி ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரெண்ட் டுல்லி தான் இதனை கண்டுபிடித்தவர். இந்த அண்டம் நீள் வட்டம் போன்ற தட்டையான வடிவமைப்பைக் கொண்டது. 

அண்டவெளியின் நீளத்தை ஒளியை வைத்து ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் செல்லும். நமது அண்டத்தின் ஒரு புள்ளியில் இருந்து எதிர் பகுதியில் மற்றொரு புள்ளிக்கு சென்றடைய ஒளிக்கு 100 ஆண்டுகள் பிடிக்கும். அப்படியென்றால் அண்டத்தின் நீளத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

மனிதன் பயிரிட்ட முதல் தாவரம்
உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன் களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 

சுரைக்காய் 2 அடி நீளம், 3 அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்ச்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. இதில் அதிக சத்து நிறைந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட உலகெங்கும் சாகுபடி செய்யப்பட்டாலும், இதன் பூர்வீகம் தென்னாப்பிரிக்கா ஆகும். உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. 

உடலில் கொழுப்புச் சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம். சுரைக்காய் சூப் தலைமுடி வளர்வதையும் ஊக்கப்படுத்துகிறது. சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. இது எலும்புக்கும், பற்களுக்கும் வலு கொடுக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சுரைக்காய் நல்ல மருந்து. கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர்ச் சத்து, வெட்கை அலர்ஜியை தடுக்கிறது. சுரைக்காயின் மொத்த எடையில் 96 சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது. 

தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி சமநிலைப்படுத்திகிறது. இதன் காரணமாக, முகத்தில் முகப்பரு தோன்றுவதை தவிர்க்கலாம். 

கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக சுரைக்காய் உள்ளது.



ஈமு பறவை
ஈமு பறவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது. இதன் சரியான உச்சரிப்பு “ஈம்யு” என்பதாகும் எனினும் தமிழக வழக்கில் இது ‘ஈமு கோழி’ என்றே அழைக்கப்படுகிறது. ஒரு ஆள் உயரத்திற்கு மேல் (ஆறரை அடி) சாதாரணமாக வளரும். நெருப்புக் கோழியை விட சற்றே சிறிதான இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் நெருப்புக் கோழியைப் போலவே வேகமாக ஓடக் கூடியது. இதன் கால்கள் மிக பலமானவை. காலால் தாக்கி இரும்பு வலை வேலியையே கிழித்து விட முடியும். கூர்மையான பார்வையும் கேட்கும் திறனும் இருப்பதால் மற்ற மிருகங்களையும் ஆபத்தையும் எளிதில் உணர்ந்து விடும். பல வகைத் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்ணும். சில சமயம் உணவில்லாமல் கூட வாரக்கணக்கில் தாக்குப் பிடிக்கும். நீர் கிடைக்கும் பொழுது அதிகமாக அருந்தும், மற்ற சமயங்களில் நீரில்லாமலும் தாக்குப்பிடிக்கும். இப்பறவைகளில் ஆண், பெண் இனம் பிரித்து அறிவது கடினம். இதன் முட்டை பச்சை நிறத்தில் பெரியதாக சுமார் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். முட்டை அடை காப்பதற்காக ஆண் பறவை தரையில் கூடு கட்டும். பின்பு ஆண் பறவை அதிக காலத்திற்கும் பெண் பறவை சில காலத்திற்கும் அடை காக்கும். ஆஸ்திரேலிய படைச் சின்னத்தில் கங்காரு ஒரு பக்கத்திலும் ஈமு மற்றொரு பக்கத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஈமுவை ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக அறிவிக்காவிட்டாலும், மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். பின்னர் இது அமெரிக்காவிற்கு கொண்டு சென்று வளர்க்கப்பட்டது. ஈமுவை அதன் இறைச்சிக்காவும், தோல் மற்றும் எண்ணெய்க்காகவும் வளர்க்கின்றனர். இது குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியாகும்.

 தமிழ் நாட்டில் சேலம், ஈரோடு மாவட்டங்களில், வியாபார ரீதியாக இதை வளர்க்கத் துவங்கினர். ஆனால் அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது பலரும் அறிந்ததே.

Tuesday, August 11, 2015


60 வருடத்துக்கு மேல் கருவை சுமந்த பாட்டி
10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளை என்று பலரும் தங்கள் பிள்ளைகளை சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண், அதுவும் 91 வயதான ஒரு பாட்டி 60 வருடத்துக்கு மேலாக தனது கர்ப்பப்பையில் ஒரு கருவை சுமந்து வந்திருக்கிறார். 

தென் அமெரிக்க நாடான சிலியை சேர்ந்த அந்த பாட்டியின் பெயர் எஸ்டெலா. சமீபத்தில் இவர் கீழே விழுந்து விட்டார். அவர் சிகிச்சை பெற மருத்துவமனை சென்றபோது, அவரது வயிற்றைப் பார்த்த டாக்டர்கள், வயிறு பெரிதாக இருந்ததால் கட்டி ஏதும் இருக்குமா என அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அவர்களுக்கு அதில் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அவரது கர்ப்பப்பையில் இருந்தது கெட்டியான ஒரு கரு. 

இந்த கருவை அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமந்து வந்துள்ளார். கல் குழந்தை என்று அழைக்கப்படுகிற இந்த கருவால் அவருக்கு உயிராபத்து ஏற்படவில்லை. அதே நேரத்தில் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டது இவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் இறந்து விட்டார். மணமாகி 74 ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தும் குழந்தை என்கிற கனவை அடைய முடியாமலேயே அவர் இறந்து விட்டார் என்று இப்போது வருத்தப்படுகிறார் இந்தப் பாட்டி. 

இந்த கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாட்டியின் வயதை கருத்தில் கொண்டு அகற்றுவதில்லை என டாக்டர்கள் முடிவு எடுத்துள்ளனர். 11/08/2014

பாகிஸ்தானில் இந்திய உளவாளி
உளவு பார்த்தல் சாதாரண வேலையில்லை. அதிலும் பாகிஸ்தான் போன்று எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் ஒரு நாட்டில் உளவு பார்ப்பது ஒரு அசாதாரண சாதனைதான். இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த ஒருவரைப் பற்றிய புத்தகம்தான் ‘மிஷன் டூ பாகிஸ்தான்‘ என்பது. இந்த புத்தகத்தை கிருஷ்ணாதர் என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் உளவாளி யாரென்று கடைசி வரை சொல்லவில்லை. அது மர்மமாகவே முடிகிறது. 

 2002-ம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் நபி அகமத் என்ற பெயரில் இருந்த ரவீந்திர கவுசிக் என்ற இந்தியர்தான் அந்த உளவாளி. உளவாளியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு கவுசிக்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். ராஜஸ்தானில் ஸ்ரீ கங்கா நகரைச் சேர்ந்த கவுசிக் படிக்கும் போது ஒரு மோனோ ஆக்டிங் நாடகம் நடத்தினார். அந்த நேரத்தில் தான் 1971 இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பமாகி இருந்தது. அப்போது கவுசிக் தேசப் பக்தியை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினார். 

இவரது நாடகங்கள் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதோடு கவுசிக்கையும் பிடித்து விட்டது. உயிரே போனாலும் தன் தேசத்தை காட்டிக்கொடுக் காத உளவாளியாக கவுசிக் அதில் நடித்திருப்பதுதான், அதற்கு காரணம். நாடக பாத்திரத்தை உண்மையாக்கினால் என்ன என்று ராணுவ அதிகாரிகள் யோசித்தார்கள். உண்மையாகவே இந்தியாவுக்காக உளவாளி வேலை செய்யவேண்டும் என்று அவரிடம் சொன்ன போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 

 டெல்லி, அபுதாபி, துபாய் என்று உளவறிந்து விட்டு கடைசியாக பாகிஸ்தான் வந்தார். நபி அகமத் என்ற பெயரில் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ‘பக்கா’ பாகிஸ்தானியாக மாறிய கவுசிக் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கிருந்து பல முக்கிய தகவல்களை இந்திய ராணுவத்துக்கு தெரிவித்தார். 

ஒருமுறை கவுசிக் போலவே பாகிஸ்தானில் உளவாளியாக இருக்கும் மற்றொரு இந்தியரை பாகிஸ்தானை விட்டு பத்திரமாக வெளியேற்றி வைக்க வேண்டும் என்று இவருக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டது. அதை செய்தபோது அந்த உளவாளி எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். ராணுவத்தின் கொடூரமான சித்ரவதையை தாங்க முடியாத அவர் கவுசிக் பற்றிய உண்மையை சொல்ல, கடைசியில் கவுசிக்கும் மாட்டிக்கொண்டார். பாகிஸ்தானில் உள்ள முல்தான் சிறையில் இவர் அனுபவித்த சித்ரவதை கொஞ்ச நஞ்சமல்ல. 18 வருட தொடர் சித்ரவதைக்கு ஆளானார். இந்தியா எதையும் கண்டுகொள்ளவில்லை. 

கடைசியாக அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் இதே வேலையை அமெரிக்காவுக்கு செய்திருந்தால் கைது செய்த மூன்றாம் நாளே வெளியே வந்திருப்பேன்.’ என்று மனம் நொந்து அழுது இருக்கிறார். அதற்கடுத்த மூன்றாம் நாளிலேயே அவர் இறந்து விட்டார்.