Search This Blog

Thursday, February 25, 2016


நிறங்கள் மூலம் சிகிச்சை 25/02/16


நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு ‘கிரோமோதெரபி‘ என்று பெயர். இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை.

ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது.

2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி. 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தை பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர்.

சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், நீல நிறம் தொண்டைப் பகுதியையும் இண்டிகோ நிறம் சருமத்தையும் ஊதா நிறம் தலைப் பகுதியையும் காப்பதாக இந்த மருத்துவமுறை சொல்கிறது.

‘டிஸ்லெக்சியா‘ போன்ற கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள். ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். இதனை அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment