Search This Blog

Tuesday, June 30, 2015







எதிரொலி

பெரிய அறையிலோ, கோவில்களிலோ நின்று உரக்க கத்தினால் அந்த ஒலி சுவரில் பட்டு திரும்பி வரும். இதை எதிரொலி என்கிறார்கள். ஒலியானது அலைகளாக மாறி ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பரவுகிறது. ஒலி அலைகள் காற்று, நீர், திடப்பொருள் வழியாகவும் பரவுகின்றன. ஒலியின் திசைவேகம் வினாடிக்கு 340 மீட்டர் ஆகும். நாம் பேசும் போது ஒலி அலைகள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன. இந்த அலைகள் சுவர் அல்லது மற்ற தடைகளை சந்தித்ததும் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரொலித்து வரும் ஒலியே எதிரொலியாகும். குரல் எழுப்புபவர் இருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 17 மீட்டர் தொலைவில் தடை இருந்தால் எதிரொலி உண்டாகும். எந்த ஒரு ஒலியும் நமது காதுகளில் 1/10 வினாடி நேரம் நிலைத்திருக்கும். ஆகவே இந்த வினாடியில் வேறெந்த ஒலி காதில் விழுந்தாலும் முன்னர் கேட்ட ஒலி காதில் நிலைத்திருப்பதால் இந்த ஒலியை காது உணராது. ஆகவே ஒலியை தடுக்கும் பொருள் 17 மீட்டருக்கு (55 அடி) தள்ளி இருந்தால் தான், பேசுபவரின் வாயிலிருந்து வெளிவரும் ஒலி 1/10 வினாடி நேரத்தில் தடுக்கும் பொருளை அடைந்து திரும்ப வருவதற்கு சரியாக இருக்கும். அதே நேரத்தில் காது தனது முதல் ஒலியின் பாதிப்பில் இருந்து விடுபட்டு எதிரொலியை கேட்டுணர்கிறது. மரம், சணல், அட்டை, துணி போன்ற பொருட்கள் ஒலியை ஈர்த்துக்கொள்கின்றன. சுவர்கள், பாறை, தண்ணீர் ஆகியவை ஒலியை திருப்பி அனுப்பி விடுகின்றன. இன்றைய காலகட்டங்களில் எதிரொலியை குறைத்து ஒலியை நல்ல முறையில் பரவச்செய்யும் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். இன்றைய தியேட்டர்களும் அரங்குகளும் வட்டவடிவில் மூலைகளைக்கொண்டு அமைக்கிறார்கள். இதனால் ஒலி அலைகள் ஈர்க்கப்படுகின்றன அல்லது சிதறடிக்கப்படுகின்றன. இப்படித்தான் ஒலி கட்டுப்படுத்தப்படுகிறது.

Monday, June 29, 2015



கிரெடிட் கார்டு

வாடிக்கையாளர்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டுகளை (கடன் அட்டைகள்) வழங்கி வருகின்றன. இந்த கடன் அட்டை மூலம் நமக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை ஆன்லைன் மூலமாகவோ, கடைகளிலோ பொருளாக வாங்கலாம். குறிப்பிட்ட தொகையை ஏ.டி.எம். மையம் மூலம் பணமாகவும் பெற முடியும். இப்படி கடன் அட்டை மூலம் நாம் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் வங்கியில் செலுத்த வேண்டும். பின்னர் மீண்டும் கடன் அட்டையை பயன்படுத்தி செலவு செய்யலாம். அதில் நாம் பணம் கட்ட தவறும் பட்சத்தில் அதற்கு வங்கிகள் தாமத கட்டணம், பயன்பாடு கட்டணம், உச்ச வரம்பு கட்டணம் என பல்வேறு பெயர்களில் வட்டி மேல் வட்டி போட்டு விடுவார்கள். வங்கிகள் வழங்கும் கடன்களில் மிக அதிகபட்ச வட்டி வசூலிப்பது கிரெடிட் கார்டுகளுக்கு தான். இந்த வட்டி தவிர நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல், ஆண்டுக் கட்டணம், சேவைக் கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு விதிக்கப்படுகின்றன. முழுமையான விவரங்கள் தெரியாமல், வங்கி கொடுக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டு பெற்ற பலரும், அதில் உள்ள பணத்தை செலவு செய்து விட்டு மீண்டும் பணம் கட்ட முடியாமல் ஆண்டுக்கணக்கில் வெறும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர். சரியாக வட்டி கட்டாதவர்கள் பற்றிய விவரம் கடன் தகவல் பணியக லிமிடெட் (சிபில்) நிறுவனத்தில் பதிவாகி விடும். அதன்பின் அவர்கள் எந்த வங்கியிலும் எந்த கடனும் வாங்க முடியாது. வீட்டு கடன் உள்பட எந்த கடன் கேட்டாலும், கிரெடிட் கார்டு கடனை அடைத்து விட்டு வாருங்கள் என்று சொல்லி விடுவார்கள். கிரெடிட் கார்டில் ரூ.15 ஆயிரம் செலவு செய்ததற்கு ஒரு ஆண்டு கழித்து பல்வேறு கட்டணங்கள் சேர்த்து வட்டியுடன் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் மாதம்தோறும் முறையாக, திட்டம் போட்டு செலவு செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு ஒரு வரப்பிரசாதம். அதுவே மற்றவர்களுக்கு இது ஒரு ஆபத்தான விஷயம் தான்.

12,000 ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு

மெக்சிகோ நாட்டில் உள்ள குயின்டானா ரூ மாநிலத்தில் துலும் கடற்கரை பகுதியில் பூமிக்கடியில் ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு மனித மண்டை ஓடும் கண்டெடுக்கப்பட்டது. மெக்சிகோ பல்கலைக்கழகம் அதனை ஆராய்ந்து இந்த மண்டை ஓடு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டுபிடித்துள்ளது. மனித இன ஆராய்ச்சி நிலையமான பாரீசை சேர்ந்த அடெலியர் டேனெஸ் ஸ்டூடியோ இந்த மண்டை ஓட்டை சீரமைத்து ஆய்வு செய்தபோது இது பெண்ணின் மண்டை ஓடு என்பதும், அதன் வயது உள்பட இதர பண்புகளும் உறுதி செய்யப்பட்டது. ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வில் ஈடுபட்டது. 

Sunday, June 28, 2015


உலகத்திலேயே மிக உயரமான ஏரி

டிட்டிகாகா’ ஏரி 

உலகத்திலேயே மிக உயரமான ஏரி தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டேஸ் மலையில் அமைந்துள்ள ‘டிட்டிகாகா‘ ஏரிதான் அது. கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த எரி. டிட்டிகாகா ஏரி இரண்டு நாடுகளுக்கு சொந்தமானது. பெரு நாட்டில் ஏரியின் பெரும் பகுதி அமைந்துள்ளது. பொலிவிய நாட்டில் ஏரியின் சிறிய பகுதி அமைந்துள்ளது. இந்த ஏரி அதிக நீளம் கொண்டது. 220.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஏரியின் அகலம் 110.4 கி.மீ ஆகும். இதில் பல ஆறுகள் வந்து கலக்கின்றன. டேஸ்கவுடேரா என்ற ஒரே ஒரு ஆறு மட்டும் இதிலிருந்து புறப்படுகிறது. இந்த ஏரியின் அருகில் சன், மூன் போன்ற பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. பூமத்திய ரேகைக்கு மிக சமீபமாக இந்த ஏரி அமைந்திருந்தாலும், கோடை காலத்தில் அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா ஏரிகளையும் விட குளிர்ந்தே இருக்கிறது. அதற்கு காரணம், இது கடல் மட்டத்தில் இருந்து வெகு உயரத்தில் அமைந்திருப்பதே. இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியின் அருகே மரங்கள் அதிக அளவில் வளர்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. இதுமட்டுமில்லாமல் கரையோரங்களில் மர்மமான அழிவுச்சின்னங்கள் சில காணப்படுகின்றன. இதனைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் தற்போது வரை ஆராய்ந்து வருகிறார்கள்.

Friday, June 26, 2015


வெள்ளை சர்க்கரை (சீனி) மனித உணவல்ல......

வெள்ளை சர்க்கரை உருவாகும் விதம்

இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து, இரவு படுக்கச் செல்லும் முன்பு குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை, சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விவரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளை சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்டைஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். 
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. 
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது. 
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது. 
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. 
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. 

இது தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கு அதிகமாகி விட்டால் சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. 

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Thursday, June 25, 2015



தொல்லியல் களம்

தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஓர் இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிப்பது, தொல்லியல் களம் ஆகும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது. இங்கே கடந்தகாலம் என்று குறிப்பிடுவது, வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாற்றுக் காலம், அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர, ஆய்வுசெய்யப்படும் காலப் பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக்கூடும். புதையல்கள், புதைகுழிகள் போன்றவை காணப்படும் இடங்களும் இதில் அடங்கும். பொதுவாகத் தொல்லியல் களமொன்றின் எல்லைகளை வரையறுப்பது மிகவும் கடினமானது. ஒரு களம் சில சமயங்களில் ஒரு குடியிருப்பைக் குறிப்பதாக இருக்கக்கூடும், ஆனால் தொல்லியலாளர் இதனைச்சுற்றி மனித நடவடிக்கைகள் இருந்திருக்கக் கூடிய இடங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். பண்பாட்டு வள மேலாண்மை என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தொல்லியல் தொடர்பில், களத்தை, வளர்ச்சிக்காகக் குறித்த எல்லைகளுக்குள் அடக்கவேண்டியதாக இருக்கும். இது சில சமயங்களில் வசதியாகவோ அல்லது வசதி இல்லாமலோ இருக்கலாம். இவ்வாறான வேளைகளிலும், குறிப்பிட்ட சான்றுகள் காணப்படும் இடத்தின் எல்லைக்கு வெளியேயும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு. அடுப்புகள், கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத எலும்புகள், செதில்கள், விதைகள் போன்ற உயிரியல் பொருட்கள், உயிரெச்சங்கள் முதலியனவும் தொல்லியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவை. பழையகற்காலம், இடைக்கற்காலம் போன்றவற்றில், சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும். நிலத்தோற்றத் தொல்லியல், தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலில் பின்னணியிலேயே நோக்குகிறது. இது, களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், நிலவியல்சார் தொல்லியலாளர்களும், சூழலியல்சார் தொல்லியலாளர்களும், மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால், ஒரு தொடர்ச்சியான இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும்.


டைட்டானிக் கண்காட்சி
 
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 100 வருடங்களுக்கு மேலாகின்றன. ஆனாலும், இன்றைக்கும் கூட டைட்டானிக் ஒரு ஹாட் சப்ஜெக்ட்தான். 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கிப் போனது. டைட்டானிக் போன்றே அதனுடன் சேர்ந்து மூழ்கிய விஷயங்கள் பல. அவற்றை அவ்வப்போது விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், வெளிக் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு செய்திதான் டைட்டானிக் நகைகள் பற்றியது. டைடானிக் நகைகள் என்பது கப்பல் மூழ்கிய போது அதில் பயணம் செய்தவர்கள் அணிந்திருந்த நகைகளே. விபத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறிது சிறிதாக மீட்டெடுக்கப்பட்ட நகைகள் இப்போது உலகின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. ஆர்லான்டாவில் தொடங்கி ப்ளா, லாஸ்வேகாஸ் ஆகிய மூன்று நகரங்களில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியை கிலிஞ்சல் ஹோபர் என்ற பெண் ஏற்பாடு செய்துள்ளார். மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடும், அளவுக்கு அதிகமான பொருட் செலவும் இந்த கண்காட்சியை நடத்துவதால் ஏற்படுகிறது என்கிறார், கிலிஞ்சல் ஹோபர். டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூற்றாண்டு ஆண்டான 2012-ல் ஒரு கண்காட்சி நடத்தியது, உலகத்திற்கு அறிய வைப்பதாக அமைந்தது என்று கூறுகிறார். காலம் கடந்து விட்டால் சோகம் கூட சுவராசியமான ஒன்றாகி விடும். அதற்கு டைட்டானிக் விபத்தும் விதிவிலக்கல்ல.

Tuesday, June 23, 2015


நைல் நதி 

உலகத்தில் உள்ள நதிகளில் மிகவும் நீளமானது ‘நைல்’ நதிதான். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை இந்த நைல் நதி பாலைவனச்சோலையாக மாற்றுகிறது. இவ்வளவு வறண்ட பிரதேசத்தில் இப்படி ஒரு பெரிய நதி எப்படி இருக்கக்கூடும் என்ற மர்மம் பல காலமாக இருந்து வந்தது? இந்த நதியின் முழு நீளத்தை 1515-ல் கண்டு பிடிக்க தொடங்கி, 1900-ம் வருடம் ஒரு வழியாக முடித்தனர். இந்த நதியின் முக்கியமான கிளைகள் விக்டோரியா, ஆல்பர்ட், டானா என்ற மூன்று ஏரிகளில் இருந்து ஆரம்பமாகின்றன என்றும் கண்டுபிடித்தனர். இந்த ஏரிகள் ஆப்ரிக்காவின் முக்கியமான பகுதிகளில் இருக்கின்றன. நைல் நதியின் ஆரம்ப பகுதியை வெள்ளை நைல் என்று அழைக்கிறார்கள். பெரிய கிளைப்பகுதியை நீல நைல் என்றும் அழைக்கிறார்கள். நைல் நதியின் கரையில் உலகின் மிகப்பெரிய நாகரீகமான எகிப்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நைல் நதியில் வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் அதிகமான சேறு பள்ளத்தாக்குகளில் சேருகிறது. இதன் மூலம் வளமாக்கப்பட்ட பகுதிகளில் எகிப்திய மக்கள் வாழ்கிறார்கள். அதனால் தான் எகிப்தை ‘நைல் நதியின் நன்கொடை’ என்று புகழ்கிறார்கள். பிரமிடுகள், அழிந்த புராதன கோவில்களை கடந்து நதி பாய்கிறது. உலகிலுள்ள பெரிய நகரங்களுள் ஒன்றான எகிப்தின் தலை நகரான ‘கெய்ரோ’ வையும் கடந்து பாய்கிறது. நைல் நதியின் முகத்துவாரத்தில் உலகத்திலுள்ள மிகப்பெரிய டெல்டாக்களுள் ஒன்று அமைந்துள்ளது. இந்த டெல்டாக்களில் பாயும் போது நதி சில ஓடைகளாக பிரிந்து விடுகிறது. அங்கே இவை சுமந்து வந்த சேறு படிந்திருக்கிறது. இந்த சேறு கடலில் 3200 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று கோடி மக்கள் இந்த நதியை நம்பி உயிர் வாழ்கிறார்கள். மிகப்பழங் காலத்தில், நைல் நதியில் வெள்ளம் வராமல் நின்று போனால், எகிப்தியர்கள் ஓர் அழகிய கன்னிப்பெண்ணை இதில் தள்ளி பலியிடுவது வழக்கமாகும். இன்றும் கூட நதியில் வெள்ளம் வரத் தவறினால் கன்னிப்பெண் போன்ற ஒரு பொம்மையை செய்து ஆற்றில் தள்ளி விடுகிறார்கள். நதியில் நெடுந்தூரம் வரையில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விக்டோரியா நீர் வீழ்ச்சிக்கு வடக்கே 288 கி.மீ வரை ஆற்றின் இரு கரையிலும் யானைகளும், சிங்கங்களும் ஏராளமாக வாழ்கின்றன. நைல் நதியின் மூன்றில் இரண்டு பகுதி ஆவியாகப்போய் விடுகிறது. ‘காலையில் நைல் வறண்டு போனால், மாலையில் எகிப்து மாண்டு போகும்‘ என்பது எகிப்திய பழமொழி. நைல் என்பதை எகிப்தியர்கள் ‘நீல்’ என்று உச்சரிக்கிறார்கள்.

Monday, June 22, 2015



சுற்றுச்சூழல் 

எல்லோருமே சுற்றுச்சூழல் பற்றி விரிவாகப் பேசுகிறோம். சமீபத்தில் தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சீர்கேட்டின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்திருக்கிறது. ரோமப் பேரரசர்களின் எலும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கி.மு.வில் ரோமப் பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால் கி.பி.யில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப்பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். இதற்காக அங்குள்ள மரங்களை வெட்ட தனது வீரர்களை மன்னர் அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இன மக்கள், இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். மரங்களை வெட்ட வந்த வீரர்களைப் பார்த்ததும் பதறிப்போன பிஷ்ணோய் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது. 363 மரங்களையும், அவற்றை கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான், மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளையிட்டார். பிஷ்ணோய் மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத் தான் இந்த நிகழ்வு ‘சிப்கோ இயக்கம்‘ என்று தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பிரச்சினையை பற்றி ஏதாவது புத்தகம் வந்தால்தான் அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினார். ‘மேன் அண்டு நேச்சர்‘ என்ற இந்த புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.


சூரியன் உருவாக்கும் வலிப்பு 

சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் 179 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்ளும். 1982-ம் ஆண்டு கடைசியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. அடுத்து 2161-ம் ஆண்டு நிகழும். சூரியனின் ஆயுள் 1000 கோடி ஆண்டுகள். தற்போது 500 கோடி ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உயிரோடு இருக்கும். நாம் வாழும் பூமியை விட சூரியன் 13 லட்சம் மடங்கு பெரியது. சூரிய குடும்பத்தின் மொத்த எடையில் 99 சதவீதத்தை சூரியன் கொண்டுள்ளது. மற்ற எல்லா கோள்களும் சேர்ந்து ஒரு சதவீத எடையை பகிர்ந்து கொள்கின்றன. சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சூரியனில் ஏகப்பட்ட கரும்புள்ளிகள் உண்டு. இது 11 வருடங்களுக்கு ஒரு முறை மாறும். இது சுழற்சி முறையில் மாறுகிறது. 11 வருடங்கள் கரும்புள்ளிகள் அதிகரிக்கும். அடுத்த 11 வருடங்கள் குறையும். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் எப்போதும் 6000 டிகிரி கெல்வின் வெப்பம் இருக்கும். சில இடங்களில் 4500 டிகிரி கெல்வின் வெப்பம் இருக்கும். இப்படி குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் இடங்களே கரும்புள்ளியாக தெரிகிறது. இந்த கரும் புள்ளிகளில் சிறியது 1500 கி.மீ குறுக்களவு கொண்டதாகும். பெரிய கரும்புள்ளி ஒரு லட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாகவும் உள்ளது. இந்த கரும் புள்ளியில் நமது பூமியைப் போன்ற 5 பூமிகளை உள்ளடக்கி விடலாம். அவ்வளவு பெரியது. சூரியனும் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. சூரியனின் மத்திய பாகம் 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 34 நாட்களுக்கு ஒருமுறையும் சுற்றுகிறது. இப்படி திருகிக்கொள்வது போல் சூரியன் சுற்றுவதால் தான் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. விண்வெளியில் இருந்துவரும் கதிர்கள் பூமியில் உள்ள நைட்ரஜனை தாக்கும் போது கார்பன் 14 தோன்றுகிறது. கரும் புள்ளி ஏற்படும் போது காந்த சக்தி அதிகமாவதால் பூமியில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. காந்த சக்தி அதிகமாகும் போது காஸ்மிக் கதிர்கள் திசை திரும்பி விடுகின்றன. இதனால் கார்பன் 14 குறைகிறது. இப்படி குறைவதால் தாவரங்கள், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. நமது ரேடியோ, தொலைக்காட்சிகள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு மன நோயும் வலிப்பும் ஏற்படலாம். தினமும் சூரியன் ஒளிவீசுவதற்க்கு 39,744 டன் ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியமாக வெளி வருகிறது.