Search This Blog

Monday, May 16, 2016



வஞ்சிக்கப்பட்ட இனத்தின் பெண் முகம் 17/05/2016

மே.சி.ஜெமிசன் என்பவருக்கு கருப்பினத்தில் இருந்து விண்வெளிக்குப் போன முதல் பெண் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.  வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சிக்கான பெண்முகம் என்று இவரை உலகம் கொண்டாடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று வானத்தில் பறப்பதற்கு பதிலாக பசிபிக் கடலில் விழுந்தது. நாசாவிற்கு அது கவுரவப் பிரச்சினை. உடனே அடுத்த விண்கலத்தை ஏவ தயாரானது. அதற்காக 2000 விண்ணப்பங்களிலிருந்து வடிகட்டி, வடிகட்டி குறைவான நபர்களை விண்ணில் பறப்பதற்கான பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தது.  1987-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெமிசனுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் அதுவே வாழ்க்கையானது. இத்தனைக்கும், நாசாவிற்கு வருவதற்கு முன்பு வரை ஜெமிசன் ஒரு மருத்துவர். ஸ்டான்போர்டிலும், கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்து பொது மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் வானம், விண்மீன்கள், விண்வெளி என பால்ய காலத்து கனவு அவரை துரத்தியது. துணிந்து நாசாவுக்கு விண்ணப்பித்தார். முதல் ஆண்டு தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டார். சோர்ந்துவிடாமல், அடுத்த ஆண்டு விண்ணப்பித்ததில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பின சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்  அவர். அப்போதும் விண்வெளிக்கு போவது நிச்சயமில்லை. நாசா எப்போதும் மூன்று அடுக்குகளாகத்தான் ஆட்களை தேர்ந்தெடுக்கும். விண்கலம் ஏவும் நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சரியான பேக்-அப் தேவை என்பதற்காக, எப்போதும் ரிசர்வில் ஆட்கள் இருப்பார்கள். ஜெமிசனுக்கு, அவர் படித்த மருத்துவர் பட்டம் காப்பாற்றியது.

விண்கலத்தில் புவியீர்ப்பு விசையில்லாத போது மனிதர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள், பாதிப்புகள் உண்டாகின்றன என்பதை துல்லியமாக அருகிலிருந்து கணிக்க வேண்டும். அந்த வாய்ப்பு மருத்துவரான ஜெமிசனுக்கு செப். 12, 1992-ல் கிடைத்தது. எண்டவர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தில் ஜெமிசனையும் சேர்த்து ஆறு நபர்கள் பயணிக்க முடிவாயிற்று. ஜெமிசன் விண்வெளி வீரர்களுக்கான உடையை மாட்டினார். எண்டவரில் எட்டு நாட்கள், 190 மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தார். எட்டு நாட்கள் கழித்து செப்டம்பர் 20-ந் தேதி அனைவரும் பூமிக்கு திரும்பினார்கள். பூமியில் காலடி வைத்த அந்த நொடியில் இருந்து கருப்பினத்தவர்களின் வரலாறு மாறியது.

Friday, May 6, 2016


ஏழைகள்  ரெயில்  எப்போது? 07/05/2016

மக்களின் அன்றாட வாழ்வில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். தினமும் தொழிலோ, படிப்போ, மருத்துவமோ, அல்லது சொந்த காரணங்களுக்காகவோ ரெயில் பயணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை ஒன்று உண்டென்றால், அது நிச்சயமாக ரெயில் போக்குவரத்துதான் என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. நாடு முழுவதிலும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. 7 ஆயிரத்து 172 ரெயில் நிலையங்கள் இவர்களை ரெயிலில் ஏறவும், இறங்கவும் வைக்கிறது.

பயணிகள் ரெயில்களை பொறுத்தமட்டில், தென்னக ரெயில்வே பயணிகள்தான், ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம்செய்வது மட்டுமல்லாமல், பதிவுசெய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுக்கும் பயணிகள் ஒருபோதும் பதிவுசெய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் ஏறுவதில்லை என்பது, வடமாநிலங்களுக்கு ரெயில்களில் பயணம்செய்யும் ஒவ்வொரு பயணியின் அனுபவமாகும். ஆனால், புதிய ரெயில்கள் விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் தென்னக ரெயில்வேவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே என்பது எல்லோருடைய ஆதங்கம் ஆகும். ரெயில் பயணம் என்பது வசதி படைத்தவர்களைவிட, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கே அத்தியாவசிய தேவையாகும். ஆனால், ரெயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் ஓடும் ரெயில்களில் அதிக கூட்டநெரிசலோ, அல்லது ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலையிலோ, அவர்களுக்கெல்லாம் வசதியாக கூடுதலாக சிறப்பு ரெயில்களை விடவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாகும். ஆனால், இப்போது ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நேரங்களில் விடும் சிறப்பு சுவிதா ரெயில்களின் கட்டணம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.

சாதாரண ரெயில் கட்டணங்களைவிட, மும்மடங்கு கட்டணம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றால், தூங்கும் வசதிகொண்ட பெட்டிக்கு ரூ.315 கொடுத்து டிக்கெட் எடுக்கவேண்டும். ஆனால், சுவிதா ரெயிலில் டிக்கெட் எடுத்தால் ரூ.1,135 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இவ்வளவு தொகை கொடுத்து பயணம் செய்யமுடியுமா? என்று கேட்டபோது, சுவிதா சிறப்பு ரெயில்களில் மொத்த இருக்கைகளின் முதல் 20 சதவீத இடங்கள் முன்பதிவுக்கு 415 ரூபாய்தான் வசூலிக்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத கட்டணம் உயரும். இந்த வகையில் அடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 525 ரூபாய், அதற்கடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 775 ரூபாய், 4-வது 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்கு 995 ரூபாய், கடைசி 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்குதான், 1,135 ரூபாய் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். இதேபோலதான் 3-வது வகுப்பு தூங்கும் வசதிகொண்ட குளிர்சாதன பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 810 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, இந்த ரெயிலில் 3,185 ரூபாயும், 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 1,140 ரூபாய், இந்த ரெயிலில் 4,470 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக, பயணிகளின் பணத்தை கறப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பட்ஜெட்டில் ஏற்கனவே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் என்ற ஏழைகள் ரெயில் அதாவது, முழுக்கமுழுக்க பதிவு செய்யப்படாத ‘அன்ரிசர்வ்டு’ ரெயில்வே பெட்டிக்கொண்ட சூப்பர் பாஸ்ட் ரெயில்களை விடும் அறிவிப்புகளை தென்னக ரெயில்வேயில் விரைவில் அறிமுகப்படுத்தவேண்டும். இதுபோல, தொலைதூர ரெயில்களில் 2 முதல் 4 வரை பதிவு செய்யப்படாத கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பையும் தென்னக ரெயில்வேயில் விரைவில் நிறைவேற்றப்படவேண்டும். இந்த அந்தியோதயா என்ற ஏழைகளின் ரெயிலையும், தீனதயாளு ரெயில் பெட்டிகளையும் விரைவில் அறிமுகப்படுத்தினால்தான், சாதாரண ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமே தவிர, சுவிதா ரெயிலால் அல்ல.


ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது? 07/05/2016

மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை. வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது. சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும். இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும். சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.

சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள். தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள். குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்க்க வேண்டும்.

Thursday, May 5, 2016


விலங்குகளின் நுட்பம் 05/05/2016

விலங்குகள், பறவைகள் போன்ற சில உயிரினங்களுக்கு மிக நுட்பமான நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதம் விளைந்தது. இதை முன் கூட்டியே அறிந்திருந்தன, சில வீட்டு விலங்குகள். நிலப்பிளவு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே நடக்கப்போகும் விபரீதத்தை அந்த உயிரினங்கள் தெரிந்து கொண்டன. அதோடு நிற்காமல் அவை அந்த இடத்தை விட்டு வெளியேறி பத்திரமான இடத்திற்கு சென்று விட்டன.

விசுவாசம் கொண்ட ஒரு நாய் மட்டும் தனது எஜமானரை விட்டுப் போக மனமில்லாமல் அவருக்கு துணையாக அங்கேயே நின்றது. அப்போதும் அது சும்மா இருக்கவில்லை. இரவு, பகல் பாராமல் குரைத்துக்கொண்டே இருந்தது. தனது எஜமானுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை அது அறிவித்துக் கொண்டே இருந்தது.

ஆனால், அந்த எஜமானர் அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர் அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டதாகவே கருதினார். பொழுது விடிந்தது. நிலம் லேசாக நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து பெரிதாக ஆடியது.

அது நில நடுக்கம்தான் என்று உணர்வதற்குள் நிலம் பிளவு படத் தொடங்கியது. அந்த எஜமானர் அவசரம், அவசரமாக அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அதற்குள் நிலம் பிளந்து பூமிக்குள் விழுந்தார். நன்றியுள்ள நாய் முன் கூட்டியே இந்த இயற்கை சீற்றத்தை அறிவித்தும், அதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும் எஜமான் மீது இருந்த விசுவாசத்தால் அவருடன் சேர்ந்து அதுவும் பூமிக்குள் விழுந்து உயிரை விட்டது.

பூகம்பம் பூமியின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பே பூமியின் வெகு ஆழத்தில் அதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கி விடும். அப்போது அது பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தும். அந்த மிகப் பெரும் ஒலி மனித காதுகளுக்கு கேட்காது. மனிதனின் காதுகள் ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். இந்த பூகம்ப ஒலி வித்தியாசமானது என்பதால் மனிதனுக்கு அந்த சத்தம் கேட்கவே கேட்காது. ஆனால் விலங்குகளின் காதுகளுக்கு இந்த ஒலி நன்றாக கேட்கும்.

இதனால்தான் பூகம்பத்தின் போது நாய், பூனை மற்றும் சில பறவைகள் தப்பித்து விடுகின்றன. மனிதர்களுக்கு அந்த சத்தம் கேட்காததால் அதை அறிந்து கொள்ள முடியாமல் உயிரை விடுகிறார்கள்.


இந்திய உளவு நிறுவனங்கள் 06/05/2016

இந்தியாவில் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, ‘இன்டெலிஜென்ஸ் பீரோ‘, சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று ‘ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்‘, இதனை சுருக்கமாக ‘ரா‘ என்று அழைக்கிறார்கள்.

உள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகிலேயே மிக பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்புப்படை பிரிவுகளுக்கும் தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா. 1968-ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது.

உலகநாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு உளவு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி, பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் ‘ரா‘தான்.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999-ம் ஆண்டு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த ‘ரா‘ அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளிலும் பாகிஸ்தானின் ஆதிக்கம் பெருமளவு குறைந்ததற்கு ‘ரா‘வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள், பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும் என்கிறது அரசாங்கம். உண்மைதானே!

Tuesday, May 3, 2016


வறட்சியை தாங்கி வளரும் தாவரங்கள் - ஜீன் வங்கி 04/05/2016


நமது நாட்டின் ஒருபுறம் தண்ணீர் கிடைக்காமல் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. மறுபுறம் தண்ணீர் கிடைத்தாலும் அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இத்தகைய நிலையை எல்லாம் தாண்டித் தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் விவசாயமே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இத்தகைய தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விவசாயம் செய்வதற்கு ஏற்ற தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ரூ.12 கோடியை ஒதுக்கி உள்ளது.

வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களை கண்டறிந்து, அவற்றின் ஜீன்களை பெற்று, அதனைக் கொண்டு மேலும் பல தாவர வகைகளை உருவாக்கும் திட்டத்திற்கே இந்த 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயொடெக்னாலஜி இதை சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம் வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ஜீன்கள் தொகுக்கப்படும். அந்த ஜீன்கள் தற்போது பயன் தந்து கொண்டிருக்கும் தாவரங்களுக்குள் புகுத்தப்படும். இதனால் நெல் போன்ற பயன்தரும் தாவரங்கள் மனிதனுக்கான பயனை எப்போதும் போல் தந்து கொண்டே வறட்சியையும் தாங்கி வளரும். இதனால் உணவு உற்பத்தி தடையின்றி நடக்கும்.

இதேபோன்ற முயற்சி விலங்குகள் மீதும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் இன்னுமொரு பயனும் இருக்கிறது. தாவரங்களில் மேற்கொள்ளப்படும் ஜீன் மாற்றங்களால் நல்ல சத்துள்ள உணவை தரும் வகையில் அந்த தாவரங்கள் மாற்றப்படும்.

இத்தகைய ஆராய்ச்சி மூலம் இந்தியாவில் ஏற்கனவே சத்துள்ள உருளைக்கிழங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உருளைக்கிழங்கில் மாவுச்சத்து மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஜீன்கள் மூலம் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ஜீன் வங்கியில் நான்காயிரம் மருத்துவ தாவரங்களின் ஜீன்களும், 500 நார்ச்சத்து தாவரங்களின் ஜீன்களும், 100 நறுமண தாவரங்களின் ஜீன்களும், எண்ணெய் வித்துக்களின் ஜீன்களும், 400 தீவனத் தாவரங்களின் ஜீன்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேறுபட்ட உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையும், வடகிழக்கு இந்தியாவும் உலகின் 25 முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கின்றன.


சனிக்கிரகத்தில்  நிலவுகள் 
 03/05/2016

சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29½ ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது.

சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக் கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்குதான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாய்க் காணப்படுகின்றது.

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90 சதவீதத்தை 'டைட்டான்' என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான 'ரியா'வுக்கு சுற்று வளையம் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10 கி.மீ. இருந்து 50 கி.மீ.க்குள் விட்டம் கொண்ட 14 நிலவுகள் இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச்சிறிய அளவு கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.   பிறகோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது என்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப்பற்றிய பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப்போல குறிப்பிடும் படியாய் அதற்கு இல்லை.

சனி வளையங்கள் பற்றிய உண்மைகளை 1981 'வாயேஜர்' விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் சனியை துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன. சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையாமல், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றளவும் புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும்.

Sunday, May 1, 2016


விற்பனைப் பொருளான குடிநீர் 02/05/2016

கடந்த தலைமுறை வரை குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான பொருளாக குடிநீர் இருந்தது. இப்போது அது கோடிகள் புரளும் மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது.

குடிநீருக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதனை வசப்படுத்துவதற்காக முதலாளித்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போடுகின்றன. அதற்கான முதல் முயற்சிதான் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என்ற கருத்தாக்கம். சாதாரணமாக நமது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடித்தால் ஆரோக்கியம் போய்விடும். நோய்க் கிருமிகள் தாக்கும். என்ற எண்ணத்தை இந்த நிறுவனங்கள் திட்டம் போட்டுப் பரப்புகின்றன.

அதன் தாக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை குழாய் நீரை குடித்து வளர்ந்தவர்களின் வீடுகளில் இன்று மினரல் வாட்டர். ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் மாதத்திற்கு குடிநீருக்காக மட்டும் 1,500 ரூபாய் செலவழிக்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு 552 கோடி ரூபாய்க்கு குடிநீர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தையும் கைப்பற்ற தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நீர் விற்பனை என்பது இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், மற்றொன்று மினரல் வாட்டர் என்கிற பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீர். இரண்டுமே உடலுக்கு நல்லது செய்பவை அல்ல.

பாட்டில் நீரில் இனிப்பு பொருட்களோ, ரசாயனப் பொருட்களோ இருக்கக் கூடாது. சர்க்கரை சேர்க்கக் கூடாது. குறைந்த அளவு கலோரியே இருக்க வேண்டும். அதே வேளையில் பழங்கள், வாசனை பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட எசன்ஸ்களையும், சத்துப் பொருட்களையும் வாசனைப் பொருட்களையும் மிகச் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் அளவு மொத்த எடையில் ஒரு சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.

அப்படி ஒரு சதவீதத்திற்கு மேல் இது கூடிவிட்டால் அது பாட்டில் நீர் என்ற இனத்தில் இருந்து மாறி குளிர்பானம் என்ற பிரிவில் சேர்ந்துவிடும். சட்டப்படி எல்லா குடிநீரும் சோடியம் கலப்பு இன்றி தயாரித்திருக்க வேண்டும். இந்த குடிநீரும் அதிகபட்சம் 6 மாதம் வரைதான் பாதுகாப்பானது.

மினரல் வாட்டர் என்பது குடிநீரில் இயற்கையில் கலந்துள்ள தாது உப்புகளைக் குறிக்கிறது. தொடர்ந்து நீரை 180 டிகிரி சென்டிகிரேட்டில் கொதிக்க வைத்த பிறகு மீதமுள்ள தாது உப்புகளின் அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து கிடைக்கும் நீரிலேயே கால மாற்றத்திற்கு ஏற்ப கனிமங்களின் அளவில் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

ஆனால், என்னதான் மினரல் வாட்டராக இருந்தாலும் அதில் எந்தவொரு தாது உப்பும் இருப்பதில்லை என்பதே உண்மை. தொடர்ந்து இப்படி சுத்தகரிக்கப்பட்ட நீரையே பருகுவதால் நீரின் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காசு கொடுத்து மினரல் வாட்டரை வாங்குவதை விட வடிகட்டிய நீரை காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவம் சொன்னாலும், தங்களின் வியாபாரத்திற்காக பல நிறுவனங்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குழாய் நீரை கழிவுநீர் போல் சித்தரித்து மக்களை மூளைச் சலவை செய்து, தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன என்பதே வருத்தமான உண்மை.

Saturday, April 30, 2016

காமராஜர் மதிய உணவு திட்டம்
Add caption


அமெரிக்காவில் பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை 

   கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூரம்

வாஷிங்டன், மே.1-/2016

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த பெண் டைனல் லேன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக கர்ப்ப கால உடைகள் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து விட்டு, 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த மிச்செல் வில்கின்ஸ் என்ற பெண், டைனல் லேன் வீட்டுக்கு சென்றார்.<

ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் டைனல் லேன், அந்த கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தார். இந்த தாக்குதலில், கர்ப்பிணி மிச்செல் வில்கின்ஸ் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது கருக்குழந்தை உயிரிழந்தது.

இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மிச்செல் வில்கின்ஸ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், “ ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து டைனல் லேன் வீட்டுக்கு சென்றேன். ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென என்னை அடித்து உதைத்து கீழே தள்ளினார். சமையலறை கத்தியால் என் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்தார். குழந்தை இறந்து விட்டது” என கூறினார்.

ஆனால் கொலையாளி டைனல் லேன் சார்பில் ஆஜரான வக்கீல், “இது முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல” என வாதிட்டார். ஆனால் அரசு தரப்பு வக்கீல், “மிச்செல் வில்கின்சை அடித்து உதைத்து, அவருடைய குழந்தையை திருட வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டுள்ளார்” என மறுத்தார்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதி, டைனல் லேன் குற்றவாளி என கண்டு, ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது’ என கூறி, அவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

விண்வெளிச் சுற்றுலா 01/05/2016

ஸ்பேஸ் டூர் என்பது  உலக கோடீஸ்வரர்களைப் பித்துப்பிடித்து ஆட்டும் ஒரு விண்வெளி சுற்றுலா ஆகும். பல கோடீசுவரர்களுக்கு இது வாழ்நாள் கனவு. வான்வெளியில் ஜாலியாக டூர் போகலாம் என்றதுமே பல பணக்காரர்கள், பணத்தைக் கட்டி வரிசையில் நின்றுவிட்டார்கள். இந்த டூர் செல்ல மன வலிமை மட்டும் போதாது, உடல் வலிமையும் வேண்டும். உடற் தகுதி விஷயத்தில் பல பணக்காரர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவை எல்லாவற்றையும் கடந்து முதன் முதலில் விண்வெளியில் விசிட் அடித்து திரும்பியவர் டென்னிஸ் டிடோ என்ற அமெரிக்கர்.

ஸ்பேஸ் டூரை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். பூமியில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இரண்டரை மணி நேரம் தங்கிவிட்டு. அந்தரத்தில் மிதக்கும் நீல வண்ண பூமிப் பந்தைப் பார்த்துவிட்டு கிறங்கிப் போய் உடனே பூமிக்கு திரும்புவது. இதில் என்ன ஒரு வித்தியாசமான அனுபவம் என்றால் புவி ஈர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கும் அற்புத உணர்வுதான்.

இப்படி ஒரு டூரை ஏற்பாடு செய்து நம்மை கூட்டிக் கொண்டு போவதற்காகவே ஸ்பேஸ் அட்வெஞ்சர் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. 2001-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பலரை விண்ணுலகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பேர் விண்ணுலகம் போய் திரும்பி இருக்கிறார்கள்.

இதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் என்கிறார்கள். கால்குலேட்டர் கையுமாக உட்கார்ந்து நம் பணத்துக்கு எவ்வளவு என்று கணக்குப்போட்டுப் பார்த்தால் நம் தலை சுற்றும். கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய். இவ்வளவு பணம் நம்மிடம் இருந்தால் தான், விண்ணுலகத்தில் பறக்க முடியும்.

இன்னொரு வகை டூர் விண்வெளியில் தங்கி வருவது. அமெரிக்க தொழில் அதிபரான ராபர்ட் என்பவர் நாசாவுடன் இணைந்து ‘ஜெனசிஸ்-1‘, ‘ஜெனசிஸ்-2‘ என்ற இரண்டு மாதிரி ஓட்டல்களை விண்வெளியில் வடிவமைத்து வருகிறார். இந்த ஓட்டலில் தங்கி வரலாம் என்ற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது.

இது ராபர்ட்டுக்கு மகிழ்ச்சி தர 2012-ல் இருந்து இந்த ஓட்டல்களை கமர்சியலாக பயன்படுத்தி வருகிறார். இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்படி வரும்போது இங்கு பயணிகள் தங்கலாம். அப்போது அதிக பட்சமாக 15 நாட்கள் விண்ணில் தங்கலாம். இது நடைமுறைக்கு வரும்போது, விண்வெளி பயணச் செலவு பன்மடங்கு குறையலாம். இப்போது விண்வெளியில் அமைக்கப்படும் ஓட்டல்கள் வருங்காலத்தில் நிலவிலும் அமைக்கப்படும்.

இந்தியாவில் இந்த ஸ்பேஸ் டூர் வர இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படி வரும்போது வாய்ப்பும், வசதியும், உடல் திடமும் இருந்தால் விண்ணில் போய் தங்கி வரலாம்.

Friday, April 22, 2016


அடுத்த இரண்டு ஆண்டுகளில்
இந்தியாவில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும்
ஆய்வறிக்கையில் தகவல் 

சுதானுகா கோசல் கொல்கத்தா 23/04/2016

இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது.

எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி - என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

கம்ப்யூட்டர் 

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதே சமயம், வீடுகளில் உருவாகும் மின் கழிவுகளின் பங்கு 15 சதவீதமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவை மிக அதிக பங்கினைக் கொண்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர்களின் பங்கு 20 சதவீதமாகவும், மொபைல்போன்களின் பங்கு 2 சதவீதமாகவும் இருக்கிறது.

பாதிப்புகள்

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல்போன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை  இருப்பதால்,  மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன் காரணமாக, தலைவலி, வாந்தி, மயக்கம், மற்றும் கண்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குடல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கோகினூர்  வைரம் 23/04/2016

உச்சநீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை கையில் எடுத்து இருக்கிறது. ஆனால், தற்போது மிகவும் வியக்கத்தக்க ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடந்துவருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு, இப்போது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் ஜொலித்துக்கொண்டு இருக்கும் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு வழக்கு போடப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாறைக்கொண்ட இந்த கோகினூர் வைரம்தான் உலகிலேயே பழமையானதாகவும், புகழ்மிக்கதாகவும் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இந்த வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிடப்படவில்லை. பின் நாட்களில்தான் கோகினூர் அதாவது, ஒளி மலை என்று பெயரிடப்பட்டது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இடைக்காலத்தில் இப்போதுள்ள ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த வைரம் பலருடைய கைகளுக்கு மாறி மாறி சென்றிருக்கிறது. 1304-ம் ஆண்டு மார்வா மன்னர் கைக்கு வந்திருக்கிறது. 1306-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தி இலக்கியத்தில் இந்த வைரத்தை சொந்தமாக வைத்திருப்பவன் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்வான். ஆனால், அதன் அனைத்து துரதிருஷ்டத்தையும் அனுபவிப்பான், தண்டனையில் இருந்து தப்ப கடவுள் அல்லது பெண்கள் மாத்திரமே அணியலாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி, பாபர், அவுரங்கசீப் என்று பலர் கைக்கு மாறியது. இறுதியில் பாபர் பரம்பரையை சேர்ந்த சுல்தான் முகமது கையில் இருந்த நேரத்தில் 1739-ல் பாரசீக தளபதி நாதிர்ஷா முகாலய பேரரசரோடு போரிட்டு இந்த வைரத்தை பாரசீகத்துக்கு எடுத்துச்சென்றார். அவர்தான் இந்த 186 கேரட் வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிட்டார். அவர் கொலை செய்யப்பட்டபிறகு இந்த கோகினூர் வைரத்தை, அவருடைய பேரன் ஷா ஷுஜா எடுத்துக்கொண்டுவந்து பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்குக்கு பரிசாக கொடுத்தார். 1813-ல் சீக்கிய போரின்போது உதவியதற்காக ரஞ்சித்சிங் மன்னரின் மகன் துலீப் மகாராஜா கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக அளித்தார்.

கோகினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் 1850-ல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் விக்டோரியா மகாராணி தன் கிரீடத்தில் அந்த வைரத்தை பதித்து அணியத்தொடங்கினார். அவர் எழுதியுள்ள ஒரு உயிலில், ‘கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் ராணிகளால் மட்டுமே அணியவேண்டும். அப்படி ஒருவேளை ராஜா ஆளுகையில் இருந்தால், அவரது மனைவிதான் அந்த வைரத்தை வைத்திருக்கவேண்டும்’ என்று எழுதியுள்ளார். இப்படி ஆண்களுக்கு சாபத்தையும், பெண்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் கோகினூர் வைரத்தை திரும்பப்பெறவேண்டும் என்ற வகையில், உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வைரத்தை லாகூரில் இருந்துதான் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். ஆகவே, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானோடு தொடர்புள்ளதால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தலீபான்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரத்தின் கதையை பார்த்தால், இது இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு சென்றதுபோல தெரியவில்லை. பரிசாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. 1936-ல் பண்டித நேருவே அப்படித்தான் சொல்லியிருக்கிறார். மேலும், கோகினூர் மட்டுமல்ல, பாரீஸ், போலந்து, வியன்னா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் போன்ற பல நாடுகளில் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட வைரங்கள் இருக்கின்றன. எனவே, இதை ஒரு பிரச்சினையாக்காமல் விட்டுவிடுவதே நல்லது. இதை நாம் கேட்கத் தொடங்கினால், ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது விட்டுச்சென்ற பலபொருட்களை அவர்களும் திரும்பகேட்கும் நிலைமை உருவாகும். எனவே, இதில் ராஜ்யஉறவுகளை எல்லாம் மனதில்வைத்து முடிவெடுப்பதே சாலச்சிறந்தது.

Thursday, April 21, 2016


அமெரிக்காவில் ‘அடிமைப் பெண்’ணுக்கு டாலர் நோட்டில் இடம்



வாஷிங்டன், ஏப்.22-2016

அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழிக்க போராடியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், ஹேரியட் டப்மேன். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், 1820-ம் ஆண்டுவாக்கில் ஒரு அடிமையாக பிறந்தவர்.

அடிமைத்தனத்தில் நூற்றுக்கணக்கானோர் விடுபடுவதற்கு உதவியவர், இந்த டப்மேன்.

இவரை கவுரவிக்கிற வகையில், அமெரிக்க நாடு தனது 20 டாலர் நோட்டில் டப்மேனின் உருவப்படத்தை இடம்பெறச்செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 20 டாலர் நோட்டின் முன் பகுதியில் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த இடத்தில் அவரது படத்துக்கு பதிலாக இனி டப்மேன் படம் இடம் பெற்றிருக்கும்.

20 டாலர் நோட்டின் பின்பக்கத்தில் ஆண்ட்ரூ ஜாக்சன் படமும், வெள்ளை மாளிகை படமும் இடம் பெற்றிருக்கும்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேக்கப் லெவ் வெளியிட்டுள்ளார்.

20 டாலர் நோட்டில், அடிமை உரிமையாளராக விளங்கிய ஆண்ட்ரூ ஜாக்சனுக்கு கிடைத்திருந்த இடம், இப்போது அடிமை மீட்பு போராளியான டப்மேனுக்கு கிடைத்திருப்பது சிறப்பு. அதுவும் பெண் ஒருவர் கடந்த 100 ஆண்டு காலத்தில் டாலர் நோட்டில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.     இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடலின் ஆழம்  22/04/2016

கடலின் அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில், கடலுக்கு அடியில் பல சுவராசியமான விஷயங்கள் இருப்பதாக எதையோ சொல்லிவைக்க, அவருடைய சிஷ்யர் அலெக்சாண்டர் என்பவர் கண்ணாடி பலூன் மாதிரி ஒன்றை செய்து அதற்குள் உட்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்று பார்த்துவிட்டு வந்தார். அதில் ஒரு பிரமாண்டமான திமிங்கிலத்தை பார்த்ததாக சொன்னார்.

கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால்தான் நிஜ கடல் ஆரம்பமாகிறது. ‘காண்டினெண்டல் ஷெல்ப்‘ என்று சொல்லக்கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெறும் 3 சதவீத கடல் தான்.

அதற்கு பின்பு இருக்கும் 97 சதவீத கடல் தான் உண்மையான பிரமாண்டமான கடல். இங்கு ஆழம் என்பது 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபீஸ்‘ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே பிரமாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத் தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

கடலுக்குள் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் ஊடுருவிப் போக முடியும். அதற்கு கீழே போகப் போக ஒளி மங்கிக் கொண்டே போகும். 1000 அடிக்கு மேல் கும்மிருட்டு தொடங்கிவிடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை.

எந்தவொரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் ‘தம்‘ பிடித்துக்கொண்டு கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்த சிலேட்டுப் பலகை ஒவ்வொன்றிலும் கையெழுத்துப் போட்டுக்கொண்டே சென்றார். 285-வது சிலேட்டில் கையெழுத்திட்ட அந்த மனிதர் சுயநினைவை இழந்தார். இதுதான் மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கிய ரிக்கார்டு.

சுவிட்சர்லாந்தில் பிக்கார்ட் என்பவர் ஒரு நீர்மூழ்கிப் படகு ஒன்றைத் தயாரித்து அதற்கு ‘டிரையஸ்ட்‘ என்று பெயரிட்டார். அந்தப் படகில் உட்கார்ந்து கொண்டு செங்குத்தாக கடலில் இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை தட்டவில்லை. கிட்டத்தட்ட 5 மைல் ஆழம் இறங்கியும் அதுவரை தரையை தொடவில்லை.

ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையை தொட்டுவிட்டேன்‘ என்று வயர்லெஸ்ஸில்  செய்தி அனுப்பினார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய அந்த இடம் ‘மெரியானா டிரெஞ்ச்‘ என்றழைக்கப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 35,808 அடி. எவரெஸ்ட் 29,028 அடிதான்.  கடலின் மிக ஆழமான இந்தப் பகுதியில் பிக்கார்ட் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே!

Wednesday, April 20, 2016


டைனமைட்டை கண்டுபிடித்த நோபல் 16/04/2016

‘டைனமைட்‘ என்பது ஒரு வெடிமருந்து. இதை கண்டுபிடிப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனாலும் ரசாயனத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையாததால், துப்பாக்கி வெடி மருந்துகளை விட சக்தி வாய்ந்த ஆயுதத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளை ஒவ்வொரு நாட்டு ராணுவமும் நிர்ப்பந்தித்து வந்தது.

விஞ்ஞானிகளும் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்தார்கள். ஆனால், அவற்றில் எதுவுமே பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. மேலும் யுத்தங்களுக்கு மட்டுமில்லாமல், நிலக்கரி சுரங்கங்கள் தோண்டவும் வெடிமருந்து கட்டாயமாக தேவைப்பட்டது. இதற்கான ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1867-ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.

இவர் கண்டுபிடித்த வெடிமருந்தை விட மற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், உலகம் அவற்றை நிராகரித்து விட்டு டைனமைட்டை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதற்கு ஒரேயொரு காரணம், நோபல் கண்டுபிடித்த டைனமைட் மிகவும் பாதுகாப்பானது என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

நோபலின் டைனமைட்டுக்கு ஏகப்பட்ட தேவை இருந்தது. மிக அதிகமாகவும் தயாரிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். உலகின் நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் நோபலிடம் டைனமைட் கேட்டு வரிசையில் நின்றன. 1875-ல் டைனமைட்டின் உற்பத்தி 3 ஆயிரம் டன் வரை உயர்ந்தது. இதனால் நோபல் ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம் பெற்றார்.

டைனமைட்டைத் தொடர்ந்து ஜெலட்டினையும் கண்டுபிடித்தார். இதனால் அவரது புகழ் பெரும் அளவில் பரவி, பணம் எந்த வகையில் வருகிறது என்று தெரியாத அளவிற்கு, அவரது வீட்டின் முன்பு கொட்டியது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் குவிய ஆரம்பித்தது. மற்றவர்களாக இருந்தால் இன்னும் எப்படி சம்பாதிப்பது என்று யோசித்திருப்பார்கள். ஆனால், நோபலுக்கு சந்தோஷம் இல்லை. மாறாக, கவலைப்படத் தொடங்கினார்.

டைனமைட் கண்டுபிடிக்கும் போது தனது சகோதரன் உடல் கருகி இறந்தது போல், தான் கண்டுபிடித்த டைனமைட் எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடிக்குமோ என்று பயந்தார். நோபலுக்கு திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு நண்பர்களும் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடைசி காலத்தில் தன் ஆதங்கத்தை சொல்லி அழக்கூட ஆளில்லாமல் தனிமையில் தவித்தார். ‘பிறந்த அந்த நிமிடமே தான் இறந்திருக்கக் கூடாதா..?‘ என்று விரக்தியில் அழுதார்.

வருங்கால சந்ததிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை குத்தி எடுத்தது. டைனமைட்டை கையில் எடுத்துக்கொண்டு உலக நாடுகள் போர் செய்தால் இந்த பூமி தாங்காது. அதனால், உலக நாடுகள் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்று அவரே ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

டைனமைட்டை ஏற்றுக்கொண்ட உலகநாடுகள், நோபலின் இந்த திட்டத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. மனம் வெறுத்துப்போன நோபல், தனது பெயரிலே ஒரு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு எழுதி வைத்துவிட்டு அனாதை போல் இறந்து போனார். அவரது பெயரால்தான் நோபல் பரிசு வருடந்தோறும் பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.


ஆண்-பெண் பார்வை வேறுபாடு 17/04/2016

ஆதிமனிதனாக, மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை அவன் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என்.ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  காட்டுமனிதர்களில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, இரை தப்பிவிடாமல் வேட்டையாட ஆணுக்கு கூர்மையான பார்வை தேவைப்பட்டது.  ஆனால் பெண்கள், விலங்குகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், அவர்களின் பார்வை அதிக பரப்பை பார்க்கும் திறன் பெற்றிருந்தது. அவர்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கூட பெற்றிருந்தார்கள்.  ஆண்கள் பெரும்பாலும் ஒரு பொருளை வார்த்தை கொண்டு தேடுகிறார்கள். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட தடுமாறுவார்கள். ஆனால், பெண்களின் பார்வையில் சிக்கலான வடிவங்களை தேடிட, அவர்களின் மூளையில் ஆஸ்டொஜன் என்ற ஹார்மோன் உதவுவதாக கூறுகிறார்கள். அதன் காரணமாக பெண்கள், எந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்களைப் போன்று திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதில்லை.  ஆணின் கூர்மையான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நன்மை  தீமை இரண்டுமே உண்டு. ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்கவாட்டிலேயே அதிக விபத்து நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால் பெண்களால் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவதாகவே இருக்கும். சாலைகளில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும் வீட்டில் சாவி, சீப்பு போன்ற எந்தவொரு பொருளையும் சட்டென்று கண்டுபிடிக்க இது உதவுகிறது.  இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும் பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை உணர்ந்து, மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் சின்னச் சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண் பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. இது அறிவியலும், உளவியலும் நமக்கு தரும் தகவல்.

குழந்தைகளை வசியப்படுத்திய ‘வால்ட் டிஸ்னி‘ 20/04/2016

ராணுவம், பீரங்கி, வெடிகுண்டுகள் என்று மொத்த ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்க, ட்லரும், முசோலினியும் புறப்பட்ட சமயம், ஒரு சுண்டெலியையும் வாத்தையும் கையில் பிடித்துக்கொண்டு மொத்த உலகையும் வசப்படுத்தியவர், வால்ட் டிஸ்னி. <p></p>குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்து பரவசப்படுத்தியது, மிக்கி மவுஸ். இதில் மிக்கியின் குரலுக்கு சொந்தக்காரர் டிஸ்னி தான். இந்த சாதனை மனிதரையும் ஆரம்ப காலங்களில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர் சினிமா வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கிய போது, பொம்மையை கிறுக்குபவனுக்கு எல்லாம் எப்படி சினிமாவைக் கொடுக்கமுடியும் என்று கேலியாக சிரித்தார்கள். இதற்கெல்லாம் அசரவில்லை, டிஸ்னி. தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கி சொந்தமாக ‘அலைஸ் இன் கார்ட்டூன் லேண்ட்‘ என்ற படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை. இருந்தாலும் டிஸ்னி தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் டிஸ்னி, ஒரு சுண்டெலி ஓவியத்தை உருவாக்கினார். அதற்கு மார்டிமர் என்று பெயர் வைத்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் அதற்கு மிக்கி என்று பெயர் வைக்கச் சொன்னார்கள். இறுதியில் ‘மிக்கி மவுஸ்‘ என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர் உருவானது. முகத்துக்கு ஒரு வட்டம், இரண்டு காதுகளுக்கு இரண்டு வட்டம் என்று மூன்று வட்டங்களில் பிறந்த மிக்கிமவுஸ், ஒரு வருடத்திற்குள்ளேயே உலகை தன் பக்கம் வளைத்துக்கொண்டது.

தொடர்ந்து இவர் படங்கள் எல்லாம் வசூலை அள்ள, பணம் குவிந்தது. அங்கீகாரமும் தேடி வந்தது. 1932-ல் டிஸ்னி உருவாக்கிய ‘ப்ளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்‘ படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போதுதான் ‘டொனால்ட் டக்‘ என்ற வாத்தினை அறிமுகப்படுத்தினார். உலகில் உள்ள உல்லாச பொழுது போக்கு பூங்காக்களை கணக்கெடுத்தால், முதலிடத்தில் இருப்பது ‘டிஸ்னி லேண்ட்‘ தான். 300 டாலர் நுழைவுக்கட்டணம் கொண்ட இந்த பூங்கா, பூலோக சொர்க்கம் எனப்படுகிறது. இங்கு ஒரு வருடத்திற்கு ஒன்றரைக் கோடி பேர் வந்து போகிறார்கள். இந்த பூங்கா உருவானது கூட ஒரு பழிவாங்கும் கதைதான்.  டிஸ்னி சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு போகும் வழியில் ஒரு சிறு பூங்கா இருந்தது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே போகமுடியும். ஒவ்வொரு நாளும் பூங்காவில் விளையாடும் சிறுவர்களை அவர் ஏக்கத்தோடு பார்த்தபடியே வீடு திரும்புவார். ஏழ்மையில் வாடிய டிஸ்னி ஒருநாள் கூட அந்த பூங்காவிற்குள் செல்லவில்லை. அந்த ஏக்கம்தான் பின்னாளில் டிஸ்னி லேண்ட் உருவாக காரணமானது.

டிஸ்னி மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன பின்னரும், அவரது வாழ்க்கை முறை மாறவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் எளிமையானவராகவே இருந்தார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு ஆடம்பரம் மட்டும் உண்டு. ரெயில் மீது மிகுந்த ஆசை கொண்ட அவர், சொந்தமாக தனது வீட்டைச் சுற்றி ரெயில்பாதை அமைத்து பழைய கால ரெயிலை அவரே ஒட்டி விளையாடினாராம்.


திமிங்கலம், மீன் அல்ல.21/04/2016

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது, நீரில் வாழும் திமிங்கலம் ஆகும். திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162 டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம் ஆகும். இதன் எலும்புகள் மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம் 40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன் தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும். திமிங்கலத்தின் எண்ணெய்யை கொண்டு ‘அம்பர்‘ என்ற வாசனைத் திரவியம், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.  திமிங்கலத்தின் உணவு, மீன்கள், கீல், கடல் நாய்கள் தான். இதன் வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். கருக்காலம் ஒரு வருடம்.

பிறந்த குட்டி கூட ஒரு பெரிய யானையின் உருவத்தைவிட பெரிதாகவும், அதிக எடையுடனும் இருக்கும். பிறக்கும் போதே 7.5 மீட்டர் நீளம் இருக்கும். குட்டி, தாயிடம் பால் குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.3 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும். 9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும். ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில் இருக்கிறது. மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீரூற்று போல் பீய்ச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு தெரியும். திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. நீர் மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் காற்றுக்காக மேலே வரும்.  ஒரு முறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600 குதிரை சக்தியை செலவிடுகிறது. இவ்வளவு பெரிய உருவத்தின் கண், ஒரு குதிரையின் கண் அளவே உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன. ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துளைகள் உள்ளன. திமிங்கலங்கள் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க திமிங்கலம், பலின் திமிங்கலம் ஆகியவை அவற்றில் சிலவாகும்.

ஆன்லைனில்  விவசாய  விளைபொருட்கள்  விற்பனை 20/04/2016

சில ஆண்டுகள் முன்புவரை வரப்புகளையும், வாய்க்கால்களையும் கொண்டு நெல், கரும்பு, வாழை என்று பணப்பயிர்களையும், மானாவாரி நிலங்களில் அதாவது மழையை நம்பி விவசாயம் செய்த இடங்களில் தானியவகைகள் என்று பயிரிட்ட விளைநிலங்கள் எல்லாம் இன்று சர்வே கல் மயமாக பொட்டல்காடாகக் காட்சியளிப்பதை எல்லா ஊர்களிலும் பார்க்கமுடிகிறது. பரம்பரை பரம்பரையாக இது எங்கள் சொந்தபூமி என்று பெருமையோடு விவசாயம் செய்துவந்த வேளாண்பெருமக்களெல்லாம், இன்று தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, வேறுவேலைக்கோ அல்லது வேறுவேலை தெரியாத நிலையில் தங்களுக்குத் தெரிந்த ஒரே வேலையான விவசாயத்தைப் பார்க்கும் விவசாய கூலிகளாகவோ மாறியுள்ள சோகமான நிலை நிலவிக் கொண்டு இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இதற்கு முக்கியக்காரணம், விவசாயம் லாபகரமானதாக இல்லை, போட்டபணம் கிடைக்காமல் கையைப்பிடித்து தொடர்ந்து கடிக்கிறது.

நெருப்பு தணல் கொண்ட குச்சியை யாரால் கையில் பிடித்துக்கொண்டு இருக்கமுடியும்?. கையைச்சுடும்போது கீழே போடவேண்டிய நிலைதானே ஏற்படும்?. அதேபோலத்தான், ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ளமுடியும் என்று விவசாயிகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. அப்படி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், மழை பொய்த்துப்போவது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், விதை, உரம், பூச்சிமருந்து, விவசாய பணிகளுக்கான சம்பளம் போன்ற பல செலவுகள் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணம். எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் தான் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இடைத்தரகர்களும், அந்த விளைபொருட்களை வாங்குபவர்களும் என்னவிலையை சொல்கிறார்களோ, அந்த விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலும் அழுகும்பொருட்களாக இருந்தால் வேறுவழியே இருக்காது. சிலநேரங்களில் விளைநிலங்களில் இருந்து வண்டியைக் கட்டிக்கொண்டோ, வேன், லாரியிலோ, மண்டி அல்லது சந்தை அல்லது மொத்தவியாபாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்லும் நிலையில் அவர்கள் கேட்கும் விலைக்குத்தான் கண்டிப்பாக விற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றி, கட்டுப்படியான விலைகிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதியமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாய புரட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வித்திட்டுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம் அதாவது ‘ஈ-நம்’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த விலைக்கு?, எங்கு?, எப்போது? விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படி என்றால், மொத்தவிற்பனை மண்டிகளுக்கும், விவசாயிகளுக்கும் இணையதளம் மூலம் நேரடிதொடர்பு ஏற்பட்டுவிடும். தங்களுக்குத் தேவையான விளைபொருட்களை வாங்க மண்டியில் உள்ள வியாபாரிகளும், விவசாயிகளோடு நேரடி தொடர்புகொள்ளலாம். இதன்மூலம் இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. யார் தனக்கு கட்டுப்படியான விலையைக் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கே விவசாயியால் தான் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யமுடியும்.

அப்படி ஆன்லைன் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யவேண்டுமென்றால், வேளாண் விளைபொருள் விற்பனை குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். அந்த வகையில், தற்போது 14 மாநிலங்களில்தான் இப்படி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால், சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். எனவே, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அரசு, விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குபவர்களுடன் கலந்து பேசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆன்லைன் முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்ஆளுமை சேவை மையங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்

Monday, April 18, 2016


நாம் வாழ பூமி வேண்டும் 19/04/2016

சமீபத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தொடர் ஆபத்துக்களைப் பார்க்கும் போது மனதில் பெரும் அச்சம் தோன்றுகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பூமிதான். இந்த பூமியில் தான் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும்.

பூமியை சுரண்டி பணம் ஈட்டிய பின், அந்த பணத்தைக் கொண்டு வேறு ஒரு கிரகத்தில் நாம் வாழப்போவதில்லை. இந்த பூமியில்தான் வாழவேண்டும். அப்படியென்றால் இந்த பூமியை நாம் எந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்கள், ஆய்வாளர்கள்.

நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும், அவற்றை அனுபவிக்கவும், வரும்காலங்களில் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை, வெறும் பணத்தை வைத்து எந்த பெரிய கடைகளிலும் வாங்கி விட முடியாது. அதனால் நாம் மாறியாக வேண்டும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லை. ‘நீ உயிரோடு இருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்‘ என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்து தான் முடிப்போம்.

அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மாறாவிட்டால் துளியும் தயங்காமல் தள்ளி விட்டு விடும் என்று மேலும் நம்மை பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்ய வேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்து இருக்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக செலவழித்து தீர்த்துவிடாமல், குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும்.

இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று எல்லாவற்றையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டை குறைக்க குறைக்க, உற்பத்தியின் அளவு குறையும். இதனால் இயற்கையின் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ, வேலைவாய்ப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள்.

இதோடு நம் கடமை முடிந்து போய்விடவில்லை. சுற்றுச் சூழலை பற்றியும், உலக வெப்பமயமாதலைப் பற்றியும் புத்தகங்கள், விழிப்புணர்வு கட்டுரைகள் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் மாறினால்தான், உண்மையான மாற்றம் ஏற்படும் என்று மேலும் அவர்கள் கூறுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம் என்று அறிவுரை கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

Monday, April 4, 2016

பீர் தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம் 05/04/2016

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் அவரவருக்கு பிடித்த பாடத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவில் போட்டி போட்டுக் கொண்டு சேருவார்கள்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘எடித்கோவன் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிக்க கற்றுத்தருகிறது. ‘கம்பெனிகளில் தயாரித்து வரும் பீர்களில் வர்த்தக நோக்கம் நிறைய இருக்கும். நீங்கள் நினைப்பது போல் அது தரமானதாக இருக்காது. தரமான பீர் வேண்டுமானால் அதை நீங்கள் தான் சொந்தமாக தயாரிக்க வேண்டும். அதை தயாரிக்க நாங்கள் சொல்லித்தருகிறோம். இப்படி நீங்கள் தயாரிக்கும் பீரை அக்கம் பக்கத்திலும் விற்பனை செய்து சம்பாதிக்கலாம் ‘என்கிறார்கள், இந்தப் பல்கலைக்கழகத்தினர். இவர்கள் பீர் தயாரிப்பில் இளநிலைப் பட்டத்தை கொடுக்கிறார்கள்.

முதுகலை பட்டம் வேண்டும் என்பவர்களுக்கு பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிப்பில் மாஸ்டர் டிகிரியைக் கொடுக்கிறது. பள்ளிப்படிப்பில் உணவு அறிவியல் பாடம் எடுத்தவர்களுக்குத்தான் இங்கு இடம் கிடைக்கும். அடிப்படை அறிவும், ஆர்வமும் இருந்தால் எந்தவித நன்கொடையும் வாங்காமலேயே கல்லூரியில் இடம் கொடுத்து விடுகிறார்கள்.

மதுவில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அப்படியிருக்க பீருக்கு மட்டும் அப்படியென்ன தனி முக்கியத்துவம் என்று கேட்பவர்களுக்கு, உலகில் அதிகமான மக்களால் விரும்பி அருந்தப்படும் மதுபானம் பீர்தானாம். கிட்டத்தட்ட கி.மு.9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பீர் குடிக்க கற்றுக்கொண்டான். எகிப்து, மெசபடோமியாவில் ஆதிகாலத்திலேயே பீரை தயாரித்து இருக்கிறார்கள்.  ஒயினுக்கு மதம் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருக்கிறது. புனித நூல்களில் கூட ஒயின் ஒரு சிறப்பான பானமாக சொல்லப்படுகிறது. அதனால் அதனை வீட்டில் தயாரித்துக் கொண்டாலும், ஒயின் தயாரிக்க கற்றுக் கொடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால், பீரின் நிலைமை அப்படியில்லை. நீண்ட நெடிய வரலாறு இதற்கு இருந்தால் கூட பீர் தயாரிக்க கற்றுக்கொடுப்பதை தொடர்ந்து எதிர்த்தே வருகிறார்கள்.

இப்போது எதிர்ப்பையும் மீறி கற்றுத்தர பல்கலைக்கழகங்கள் முன்வந்துவிட்டன. இங்கு பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரி பாடங்கள். பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், தண்ணீர் இந்த நான்கின் கூட்டுக்கலவை தான் பீர். முதலில் தண்ணீரில் பார்லியை மசிய வைக்க வேண்டும். அதன்பின் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்பு ஈஸ்ட் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஹாப்ஸ் என்ற தாவர வகையை சேர்த்தால் பீர் தயார். இவையெல்லாம் எந்த விதத்தில் எப்படி சேர்க்க வேண்டும் என்பதுதான் பாடமே.  இவற்றையெல்லாம் படித்து மார்க் எடுத்த பின் பிராக்டிக்கல் வகுப்பில் நல்ல பீரை தயாரித்து கொடுக்க வேண்டும். கச்சிதமாக தயாரித்த பீர் நன்றாக நுரைக்கும். பீரை ஓரிரு நாளில் தயாரித்துவிட முடியாது. தயாரித்த பீரை கொஞ்ச நாட்கள் அப்படியே விட்டு வைத்து பார்வையிடுகிறார்கள். பீர் நன்றாக இருந்தால் பிராக்டிக்கலில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். அதேநேரம், பீர் தயாரிக்கும் வகுப்பில் மாணவர்கள் பீர் குடிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 22, 2016


தாய்ப்பாலின் மகத்துவம் 19/03/2016

உலகம் முழுவதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் தாய்மார்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களை அதிக அளவு தொற்றிக்கொண்டுள்ளது. 37 சதவீத குழந்தைகளுக்குத் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் புகட்டப்படாத குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பணியாற்றுகிறது.

குழந்தைகளைப் போலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கரு உருவாகாமல் தடுக்கலாம்.

குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உள்பட்ட 8 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் இறக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற ‘லேன்செட்‘ மருத்துவ இதழ். இந்த இதழ், தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவில், “இந்தியாவில் தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் ரூ.4 ஆயிரத்து 300 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாய்ப்பால் கொடுப்பதன்மூலம் குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாயின் கையிலும் உள்ளது.

Monday, March 21, 2016


அழி ய லா மா அடை யா ளம்?
மார்ச் 21, 2016 திங்கட்கிழமை 
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்த புலி சுட் டுக் கொல் லப் பட் டுள்ள விஷ யத் தில் பல ருக் கும் வருத் தம் தான். ஆட் கொல்லி புலி அது; கடித்து குதற வந்த புலியை தற் காப் புக் காக சுட் டோம் என் கி றது வனத் து றை யும், போலீ சும். உணவு தேடி திரி யும் புலியை துப் பாக் கி யால் அடக்க நினைப் பது நியா யமா என இன் னொரு தரப் பி னர் ேகட் கின் ற னர்.
இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை வேக மாக குறைந்து வரு வ தாக மத் திய அரசு தெரி வித் துள் ளது. தமி ழ கத் தில் 2 ஆண் டில் 24 புலிகள் இறந் துள் ளன. இதில் 10 புலி கள் விஷம் வைத்து கொல் லப் பட் டன. கடந்த ஆண் டில் 6 புலி யும், நடப் பாண் டில் இது வரை 3 புலி யும் இறந் துள் ளன. புலி கொலை யின் பின் ன ணி யில் மனித உயிர் பாது காப்பு பிர தா ன மாக கூறப் ப டு கி றது. கடந்த 11ம் தேதி ஜார்க் கண்ட் மாநி லத்தை சேர்ந்த தொழி லாளி மது வோ ரான் என் ப வர் நீல கிரி கூட லூர் அரு கே யுள்ள ேதவர் சோ லை யில் புலி யால் ெகால் லப் பட் டார். இந்த சம் ப வத் தின் தொடர்ச் சி யாக 8 வய தான, 200 கிலோ எடை கொண்ட ஆண் பு லியை போலீ சார் சுட்டு கொன் ற னர். இந்த புலி யின் இடது கால் காயத் து டன் நடக்க முடி யா மல் சுற் றி யது என் பது கவ னத் தில் கொள்ள வேண் டிய முக் கிய விஷ யம்.
புலி கள் சாதா ர ண மாக தாங் கள் வாழு மி டங் களை விட்டு வெளியே வரு வ தில்லை. கடந்த சில ஆண் டாக புலி கள் எண் ணிக்கை அதி க ரித்து விட வில்லை. இந் திய வரை பட பரப் ப ள வில் ஒப் பி டு கை யில் இந்த எண் ணிக்கை குறை வு தான். புலி கள் இப் ப கு தியை விட்டு வெளியே வரா மல் இருக்க நீல கிரி முது மலை புலி கள் சர ணா லய வடக் குப் புற வெளிச் சுற்று பகு தியை அதி க ரிக்க வேண் டும் என்ற அர சா ணை யும் பிறப் பிக் கப் பட் டது. எல் லையை விரி வு ப டுத் தும் போது பொக் கா பு ரம், மசி னக் குடி போன் ற வை யும் இந்த எல் லைக் குள் வந் து வி டும். வன விலங் கு கள் வாழ் வி டம் அதி க மா கி வி டும். ஆனால் ஏனோ பின் னர் செயல் ப டுத் தப் ப ட வில்லை.
இது போல் கூட லூர் அருகே தேவர் சோலை ஒரு கா லத் தில் மழைக் கா டு க ளாக இருந் தது. ஆனால் தேயிலை தோட் டம் மற் றும் வணிக பயன் பாடு அதி க மா ன தால் இது தன் தன் மையை இழந்து விட் டது. எல்லை விரி வு ப டுத் தி யி ருந் தாலோ, வணிக மயம் குறைந் தி ருந் தாலோ விலங் கு கள் எல் லையை விட்டு வெளியே வந் தி ருக்க வாய்ப் பில்லை. மற் றொன்று விவ சா யி கள் தங் கள் ஆடு, மாடு களை புலி, சிறுத்தை போன்ற வன விலங் கு கள் அடித் துக் கொல் லும் போது அவற் றுக்கு உரிய இழப் பீடு அர சி டம் இருந்து கிடைப் ப தில் சிக் கல் நீடிப் ப தால், விஷம் வைத்து கொல் கின் ற னர். அடித் துக் கொன்ற இறைச் சியை புலி மீண் டும் வந்து உண் ணும் போது பலி யாகி விடு கி றது. இது போன்ற சம் ப வங் க ளும் தடுக் கப் பட வேண் டும்.
வேட் டை யா டும் தன் மையை இழக் கும் அல் லது வய தான விலங் கு கள் வனப் ப கு தியை விட்டு வெளியே வரு கின் றன. சில சம யம் மற் றொரு வனப் ப கு தி யில் இருந்து கொண் டு வ ரப் ப டும் விலங் கு க ளும் அங் கி ருக் கும் விலங் கு க ளால் அடித்து விரட் டப் ப டு வ தும் உண்டு. வனப் ப குதி இடம் சுருங் கி வி டு வ தால் வெளியே வரும் விலங் கு கள் ஆட் கொல் லி யாக மாறு கின் றன. பொது வாக இவ் வாறு ஊருக் குள் வரும் கொடிய விலங் கு கள் மயக்க தோட்டா செலுத் தி தான் பிடிக் கப் ப டும். ஆனால் கொல் லப் பட் டுள் ளது.
புலி பிடிக்க ஏனோ தானோ முயற்சிகளை தான் இன் னும் வனத்துறையும், டைகர் ஸ்கு வார் டும் செய்து வரு கி றது. புலியை பிடிக்க டைகர் ஸ்கு வார்டு போலீ சார் பாது காப்பு கவச ஆடை அணி யா மல் ஆடு பிடிப் பது போல் சென் றது சர்ச்சை ஏற் ப டுத் தி யுள் ளது. பெண் புலி யின் சிறு நீர் வைத் தும், மயக்க ஊசி செலுத் தி யும் வனத் து றை யி னர் செய்த முயற்சி பலிக் காத நிலை யில், மக் க ளின் கோபம் தணிக்க வேட்டை நடத் தப் பட் டி ருக் க லாம் என கூறப் ப டு கி றது.
வனப் ப கு தியை விரி வு ப டுத் து வது ஒன்றே நிரந் தர தீர்வாக அமை யும். வடக்கே முது மலை வனப் ப கு தியை விரி வு ப டுத் தி விட் டால் விலங் கு க ளின் வாழ் விட பரப் ப ளவு அதி க ரித்து, அதற் கேற்ப அவை யும் இடம் மா றி வி டும். மனி தர் க ளுக் கும் தொல் லை கள் இருக் காது. புலி களை காக்க முயற் சிக் கா மல் அழிக்க ஆயு தங் களை தூக் கி னால் தேசிய விலங் கான புலியை புகைப் ப டத் தில் மட்டுமே காணும் அவல நிலை முடி யும்.

Thursday, March 17, 2016


உணவுக்காக ஒரு வங்கி 18/03/2016

ரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி என்று பல வங்கிகள், அவை சேகரிக்கும் பொருட்களை இருப்பவர்களிடம் பெற்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ‘ரொட்டி வங்கி‘ என்ற பெயரில் மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத் என்ற இடத்தில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஜவுளித்தொழில் செய்து வரும் யூசுப் முகதி என்பவர் தான் இதன் நிறுவனர். பசி நிறைந்த மக்கள் ஒரு புறமும், அத்தகைய மக்களுக்கு உதவும் மனநிலையில் இருக்கும் மக்கள் மறுபுறமும் இருப்பதைக் கண்ட யூசுப். இவர்களை இணைக்கும் விதமாக, இந்த வகை வங்கியை ஆரம்பித்தார். காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இந்த வங்கி திறந்திருக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு இங்கு அனுமதி இல்லை. அவர்களைத் தவிர மற்ற யார் வேண்டுமானாலும் இங்கு வந்து உணவைப் பெற்றுக்கொண்டு போகலாம். பெரும்பாலும் பசியில் வாடும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இந்த வங்கிக்கு வருகிறார்கள்.  இவர்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள், இந்த வங்கியில் அன்னதானம் செய்யலாம். அதற்கென்று ஒரு படிவம் தரப்படும். அதில் உணவளிப்பவரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கொடுத்து உணவையும் தந்துவிட்டு போகலாம். இந்த பெயர் மற்றும் முகவரி கூட உணவின் தரம் பற்றி சொல்வதற்காகத்தான் வாங்குகிறார்கள்.

சிலர் தினசரி வந்து உணவு தருகிறார்கள். சிலர் எப்போதாவது வந்து தருகிறார்கள். அசைவம், சைவம் என்று எந்த வகை உணவையும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி பெறப்படும் உணவு வகைகள் ரொட்டி வங்கியில் தனி உணவுப் பாக்கெட்டுகளில் அடைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். உணவு என்று பசியோடு  வருபவர்களுக்கு  அதை தருகிறார்கள்.

ஆரம்பத்தில் 250 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில், இரண்டே வாரங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துவிட்டது. உறுப்பினர்கள் டெபாசிட் செய்யும் உணவு மட்டுமில்லாமல், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்தும் உணவை கொண்டு வந்து தருகிறார்கள். தற்போது தினமும் 500 பேர் இங்கு உணவு பெற்று பயனடைகிறார்கள்.

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வட்டி கிடைக்கும். ரொட்டி வங்கியில் டெபாசிட் செய்யும் உணவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். அதென்னவோ உண்மைதான்..!

Wednesday, March 16, 2016


‘இலுப்பை’யின் சிறப்புகள் 17/03/2016

இலுப்பை மரத்தில், ‘நெட்டிலை இலுப்பை‘ என்றொரு வகை உண்டு. இது 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது. கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் மிளிரும்.

நெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை. பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை பூக்கள் துளைஉடையனவாக இருக்கின்றன.  மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளில் இருந்து காற்றில் சுழன்று, வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானில் இருந்து வீழ்வதுபோலத் தோன்றும் பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடியபின் மீன் தூண்டில் போன்று இருக்கும். இலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை“ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ.  இலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால் பழங்குடியினர் இதை சர்க்கரையைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.

வங்கிக்கடன்  வசூல் 17/03/2016

பொதுவாக ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும் சரி, தங்களது அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக நிதிநிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் வாங்குகிறார்கள். அது விவசாயி என்றாலும் சரி, பெரும் செல்வந்தர் விஜய் மல்லையா என்றாலும் சரி, வங்கிகளில் கடன் கொடுப்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள், விதிகளை ஏற்றுத்தான் கடன் வாங்குகிறார்கள். எனவே, யாராக இருந்தாலும் சரி, கடன் வாங்கும்போது ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், கடனை கண்டிப்பாக திருப்பிக்கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதை திரும்ப வசூலிப்பதில் மென்மையான அணுகுமுறைகளுக்கு பதிலாக, தேவைக்கு அதிகமாக கெடுபிடி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்தவாரம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தில் டிராக்டர் வாங்குவதற்காக பாலன் என்ற விவசாயி, ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியிடம் கடன்பெற்றிருக்கிறார். வாங்கியகடன் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 430. இதற்கு 6 தவணைகளில் வட்டியும் சேர்த்து, ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 கட்டிவிட்டார். அதன்பிறகும், ‘நீ இன்னும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 86 கட்டவேண்டும்’ என்று அந்த தனியார் வங்கி நிர்ப்பந்தித்து இருக்கிறது. ‘நெல் அறுவடை முடிந்தவுடன் தந்துவிடுகிறேன்’ என்று அந்த விவசாயி உறுதிமொழி அளித்தும், போலீசாரின் துணையோடு அந்த வங்கி, அவரது டிராக்டரை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், போலீசாரால் அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளது, எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மற்றொரு சோகசம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி, டிராக்டர் வாங்க ‘சோழமண்டலம் பைனான்ஸ்’ என்ற ஒரு தனியார் நிதிநிறுவனத்திடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி, மாத தவணைகளில் ரூ.5 லட்சத்தை கட்டிவிட்ட நிலையில், மீதி தவணைகளைக்கட்ட தாமதம் ஆனதால், அவரை பொதுமக்கள் முன்னால் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்துவிட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ஆக, தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களை அரசு ஒழுங்குபடுத்தவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. மேலும், மாநில அரசின் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், அரசு வங்கிகளிலும் விவசாயிகள் கடன்பெற கடுமையான நிபந்தனைகள், நடைமுறைகள் இருப்பதால்தான், வட்டி அதிகமாக இருந்தாலும், இதுபோல கேட்டதும் கிடைக்கும் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் நாடுகிறார்கள். எனவே, அரசு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் கடன்பெறும் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்க, பெரும் செல்வந்தரான விஜய்மல்லையா தொடர்ந்து அவரது நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால், 17 வங்கிகளுக்கு ரூ.9,091 கோடியே 40 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இவர் டெல்லி மேல்-சபை உறுப்பினர். மார்ச் 1-ந் தேதி அவைக்கு வந்திருக்கிறார். இவ்வளவு தொகை கட்டவேண்டிய அவர், எல்லோருக்குமே டிமிக்கி கொடுத்துவிட்டு, மார்ச் 2-ந் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரிடம் இந்த ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேலும் கட்டவேண்டிய பணத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதுதான் நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் கேட்கப்படும் கேள்வியாகும். சாதாரண ஏழை மக்கள் கடன்வாங்கினால் கியாரண்டி, சொத்து அடமானம் கேட்கும் வங்கிகள், இந்த ரூ.9 ஆயிரம் கோடி கடனுக்கும் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றினவா?, வங்கி அதிகாரிகள் ஏழை-எளிய மக்களுக்கு கடன் வழங்கும்போது பயன்படுத்திய அளவுகோலை பயன்படுத்தினார்களா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். வங்கிக்கடன் வழங்குவதில் எளியோருக்கு ஒரு நீதி, வலியோருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு கூடாது.

Tuesday, March 15, 2016


தனி மனிதன் உருவாக்கிய காடு 16/03/2016

பழங்குடி இனத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவ் பயேங் என்பவருக்கும் அந்த காதல் இருந்தது. அவர்  சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு. பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்து இருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்த தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்தார். அப்போது அவரின் வயது 16.

1980-ல் வனத்துறையினர் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்‘ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நட்டார். வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு புறப்பட்டச் சென்று விட்டனர்.  லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்... மரித்துவிடும் என்பதால் அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார், ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்தது. அதன்பின் ஒருவர் கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சமூக காட்டின் மண்ணை வளப்படுத்துவதற்காக ஜாதவ் ஒரு யுக்தியை கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல், அசாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து, மணல் திட்டில் விட்டார்.

30 வருடங்களாக எந்த பிரதிபலனும், எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜூலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன்முனி ஆகியோருடன் தற்போதும் வாழ்ந்து வருகிறார். தனது வருமானத்திற்காக 50 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும். இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்ற பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டார். சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டில், மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது.

பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் அவரின் வளர்ப்பு ஆடுகளை உணவாக்கி கொண்டன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டா மிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன. தனது 17-வது வயதில் தொடங்கி 51 வயது வரை மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்துள்ள ஜாதவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர், நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்’ என்கிறார், இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கம் செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.

Monday, March 14, 2016


பணத்தைக் கொண்டுபோகவே  முடியவில்லையே? 15/03/2016

தமிழகத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ந் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4-ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. 4-ந் தேதி முதலே அதாவது, இந்த தேர்தல் தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. 70 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்ததால், பல விதிகளின் அமலில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில விதிகள் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தலையொட்டி, ஆங்காங்கு சோதனை நடத்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப்பிடித்து சோதனை நடத்துகிறார்கள். சோதனையில், யாராவது ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை கொண்டுபோனால், இந்த பறக்கும் படையினரும், கண்காணிப்பு படையினரும் அதற்கும் கணக்கு கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்குமேல் பணம் இருந்தால் ஏ.டி.எம். ரசீதை காட்டுங்கள், இந்த பணம் உங்களுக்கு கிடைத்தற்கான ‘பில்’, அல்லது ‘ரசீதுகள்’, அல்லது ‘ஆதாரங்கள்’ ஏதாவது உள்ளதா?, எதற்காக கொண்டுபோகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுபோல, வங்கிகளோ, நிதிநிறுவனங்களோ பணத்தை எடுத்துக் கொண்டுபோனால் கூட, அதற்கும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த இடத்தில் உடனே ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யமுடியவில்லை என்றால், அந்த பணத்தைக் கைப்பற்றி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை அணுகி, இதற்கான அத்தாட்சிகளை தாக்கல் செய்தால்தான், பணத்தை திரும்ப பெறமுடியும். சில நேரங்களில் உரிய அத்தாட்சிகளை தாக்கல்செய்ய சற்று தாமதமானால் அரசு கருவூலத்தில் போய் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதன்பிறகு உரிய ஆதாரத்தை காட்டினாலும், பணத்தை திரும்பப்பெற பலநாட்கள் ஆகிவிடும். இந்த பறக்கும்படை சோதனைகளால் நியாயமான வகையில் முக்கியமான செலவுகளுக்காகப் பணம்கொண்டு செல்பவர்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ரூ.50 ஆயிரம் என்பது சாதாரணமாக ஆகும் செலவுகளுக்குத் தேவையான பணம்தான். குடும்பங்களில் திருமணங்களுக்கு 4 பவுன் நகைவாங்கவேண்டுமென்றால் கூட, ரூ.1 லட்சத்துக்குமேல் செலவாகும். இதுபோல, முக்கியமான செலவுகளுக்கு வீட்டிலுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு செல்பவர்களுக்கு உடனடியாக அந்த பணத்துக்கு ஆதாரமாக என்ன ரசீதை காட்டமுடியும்?. மேலும், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், அன்றாடம் விற்பனையாகும் தொகையை வங்கியில் போடுவதில்லை. ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் தொகையை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டுதான், மொத்த வியாபாரிகளிடம் போய் சரக்குளை வாங்குவார்கள். அந்த வகையில், ஒரு சிறிய கடையை எடுத்துக்கொண்டாலும், அன்றாடம் சரக்குகளை வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல, சிறிய தொழில்கள் செய்பவர்களெல்லாம் அவசரமாக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்குக்கூட ரூ.50 ஆயிரத்துக்குமேல் நன்கொடை கொடுக்க பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கிறது.

பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாக இந்த கட்டுப்பாடு தேவைதான். ஆனால், அரசியல் கட்சிகள் கொண்டுசெல்லும் பணத்துக்கும், பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்துக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. அது அதிகாரிகளுக்கும் நன்றாகத்தெரியும். தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற பெயரில், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னல்களுக்கு ஆளாவது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் பணத்தை கொண்டுபோகிற ஆட்கள் யார்?, என்ன காரணங்களுக்காக கொண்டுபோகிறார்கள்? என்று பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்களும் கூடுமான வரையில், பணப்பரிமாற்றங்களை வங்கிப்பரிமாற்றங்களாகவே வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினைக்கும் இடமிருக்காது.

ஸ்கேட்டிங் விளையாட்டில் 6 1/2 வயது சிறுமி சாதனை 14/03/2016
10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்தார்

கோவை,மார்ச்.14-
கோவையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டில் 6½ வயது சிறுமி, 10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

கோவை சிறுமி சாதனை

கோவையை அடுத்த பி.என்.புதூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் கே.தர்ஷினி (வயது 6½). இவர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை செய்யும் நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்சில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர், 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து காஸ்மோ பாலிட்டன் கிளப் வளாகத்தில் சிறுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன நிர்வாக ஆசிரியரும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன இந்திய பிரதிநிதியுமான மன்மோகன்ரவாத் கலந்து கொண்டு, சிறுமி கே.தர்ஷினியின் இந்த சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

கின்னஸ் சாதனை இலக்கு

இது குறித்து சிறுமி கே.தர்ஷினி கூறியதாவது:-
எல்.கே.ஜி. முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். தற்போது ஸ்கேட்டிங்கில் 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஊக்கம் அளித்து வரும் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி தெரிவித்து கொள்கிறேன். கின்னஸ் சாதனை நிகழ்த்துவது எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி கே.தர்ஷினி கணுவாயில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஸ்கேட்டிங் மட்டுமின்றி நீச்சல், ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம் 14/03/2016

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 2 ஆயிரம் பேர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77 சதவீதம் பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59 சதவீத பேர் தெரிவித்து இருந்தார்கள்.   

தொற்று நோய்கள் காரணமாக 46 சதவீத பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25 சதவீத பேரும், அரசியல் காரணமாக 25 சதவீத பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62 சதவீத பேர் கூறி இருக்கிறார்கள். 10 சதவீதக்கும் குறைவானவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 20 சதவீதக்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லி இருக்கிறார்கள்.

சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும், எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55 சதவீத பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36 சதவீத பேரும் முடிவு எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34 சதவீத பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17 சதவீத பேரும் பெறுவதாக கூறி இருக்கிறார்கள்.

தீவிரவாதம்  காலூன்றக்கூடாது! 14/03/2016

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின்  எண்ணிக்கை       87 லட்சத்தை தாண்டிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். திறன்சாராத உடல்உழைப்பு வேலைகள் ஓரளவு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் இந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, தமிழ்நாட்டிற்கு வந்து வேலையையும் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் மாநிலத்தை ஒப்பிடும்போது, இங்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வழங்கும் சம்பளத்தை கருத்தில்கொண்டால், இங்கு அவர்களை வேலையில் அமர்த்துபவர்கள் கொடுக்கும் சம்பளம் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தைவிட குறைவானது என்பதால், அவர்களையே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 10 லட்சத்து 67 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில், 27 சதவீதம் பேர் பல்வேறு பொறியியல் தொழிற்கூடங்கள் போன்ற உற்பத்திப்பிரிவுகளில் வேலைபார்க்கிறார்கள். 14 சதவீதம் பேர் ஜவுளி தொழிற்கூடங்களிலும், 11.41 சதவீதம் பேர் கட்டுமான தொழில்களிலும் வேலைபார்க்கிறார்கள். இதுதவிர, ஓட்டல்களில் வேலை பார்ப்போர், காவல்பணியில் ஈடுபடுபவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மேற்குவங்காளம், ஒடிசா, பீகார், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். இன்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றால், தினமும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்து அலை அலையாய் வருவதைப்பார்க்க முடியும்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில், அரபு நாடுகளில் வேலைக்கு சென்றவர் என்றால், அந்த குடும்பத்துக்கு தனி மவுசு இருப்பதுபோல, வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் குடும்பங்களுக்கு தனி மவுசு உள்ளதாக கூறுகின்றனர். இவர்களெல்லாம் யார்?, இவர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது?, அங்கு ஏதாவது குற்றவழக்குகளில் ஈடுபட்டு தப்பித்து வந்திருக்கிறார்களா? என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரிவதில்லை. சமீபத்தில் சென்னையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரயாதவ் என்ற தீவிரவாதியை ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் தமிழக ‘கியூ’ பிராஞ்சு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.    32   வயதான   இந்த  தீவிரவாதி, 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தில் கண்ணிவெடி வைத்து 7 போலீசார் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவன். ‘மாவோயிஸ்டு’ இயக்கத்தின் மண்டல தளபதியாக செயல்பட்டுவந்தவன். பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 17 கொலை வழக்குகள் இவன் மீது இருக்கிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் இவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில போலீசார் இந்த தீவிரவாதியை வலைவீசி தேடிவந்தனர். ஆனால், எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தண்டலத்தில் வடஇந்திய தொழிலாளர்களுடன் பதுங்கியிருந்ததை, கியூ பிராஞ்சு போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தது, பெரிய நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் வேரூன்ற திட்டமிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தீவிரவாதி தமிழக சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்தான் என்ற தகவலும் வெளிவருகிறது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில், தீவிரவாதம் எந்தவகையிலும் காலூன்றிவிடக்கூடாது. எனவே, தமிழக போலீசார் இந்த விஷயத்தில் மிகத்தீவிரமாக கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிடவேண்டும். வடமாநில சகோதரர்கள் வேலைபார்க்க வருவது சரிதான். வந்தாரை வாழவைப்பதுதான் தமிழ்நாடு. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பின்னணி குறித்து ஆராய எந்தெந்த வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை காவல்துறையும், தமிழக அரசும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்
கின்னஸ் சாதனை படைத்தார்

வாஷிங்டன், மார்ச்.13-

இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல். இவர் போலந்து நாட்டில் ஜார்னவ் நகர் அருகே 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது, ஆஸ்விட்ச் நகரில் நாஜிக்கள் சித்ரவதை முகாமில் உயிர் தப்பியவர் ஆவார். ஆனால் இவரது மனைவி சாஜா அதில் உயிரிழந்தார். ஜெர்மனி கையகப்படுத்தியபோது, லூட்ஸ் நகரில் அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர். 1950-ம் ஆண்டு கிறிஸ்டல் தனது 2-வது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்று அவர் கின்னஸ் சாதனை படைத்தார். அவருக்கு வீடு தேடிச்சென்று கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அந்த நிறுவன அதிகாரிகளிடம் பேசிய அவர், “நான் இத்தனை நீண்ட காலம் வாழுவதின் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே, நமக்கு மேலே உள்ள ஒரு சக்தியால்தான் நடக்கிறது என்று நான் நம்புகிறவன். அதற்கு காரணம் என்ன என்று நம்மால் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னை விட அழகான, வலிமையான, சிறப்பான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்போது இல்லை” என கூறினார்.

இதற்கு முன் உலகிலேயே வயதான மனிதர் என்ற பெயரை பெற்றிருந்தவர் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்). இவர் ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்தே கிறிஸ்டல் உலகின் வயதான மனிதர் பெயரை பெறுகிறார்.

ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ் 13/03/2016

மலிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா? அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. ‘சர்பன்டைன்‘, ‘ஆம்பிபோல்‘ என்ற இரண்டு விதமான ஆஸ்பெஸ்டாஸ்கள் உள்ளன. ‘சர்பன்டைன்‘ வகையில் ‘கிரைசோலைட்‘  என்ற வெண்மை நிற ஆஸ்பெஸ்டாஸ்தான் உலக அளவில் 95 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. உறுதி மட்டுமல்லாமல் வெப்பத்தை தாங்கும் திறனும் இருப்பதால் கட்டுமான பணிகள், மின்சாதனங்கள் உள்பட 3 ஆயிரம் வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆஸ்பெஸ்டாஸ் எப்படி மனித ஆயுளை குறைக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் இழைகள் கண்ணுக்கு தெரியாத மிக நுண்துகள்களாக மாறக்கூடியவை. இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும். இவை எப்போதும் காற்றில் கலந்தே இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ், உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமல்ல, குப்பையில் தூக்கி எறியும்வரை சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த துகள்கள் காற்றில் கலந்து விட்டால், வேறு எங்கும் தங்குவதில்லை. இதனால் சுவாசித்தலின் போது மிக சுலபமாக மனித நுரையீரலுக்குள் புகுந்து தங்கிக்கொள்கிறது.  விபத்துக்களில் உயிரிழப்பவர்களை விட, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் உருவாகும் துகள்களை நீக்குவதற்காகவே அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த துகள்களை நீக்க விண்வெளி வீரர்களை போன்ற பாதுகாப்பு கவச உடை, சிறப்பு சுவாச வசதி பெற்று துகள்களை நீக்குகிறார்கள்.

 இதன் பாதிப்பு எப்படி தெரியும்? மூச்சிறைப்பு, நெஞ்சிறுக்கம், வறட்டு இருமல், விரல்கள் ஊனமடைதல் ஆகியவை இந்தநோயின் அறிகுறிகள். நுரையீரல் சுவர்கள் புண்ணாகித்தடித்துப்போகும். இதற்கு மருந்தே கிடையாது. இது மார்புச்சளி, இதயம் செயலிழத்தல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 24 மாதங்களுக்குள் உயிரிழப்பார்கள். சுவாசத்தில் ஊடுருவும் இந்த துகள்கள் உடலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்கிறது.

2000-ம் ஆண்டு வரை உலகில்  அதிக அளவு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் செய்து வந்த கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது ஆஸ்பெஸ்டாசுக்கு தடைபோட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு நாடுகள், போலந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆஸ்பெஸ்டாசுக்கு தடைவிதித்து விட்டன. இங்கு இன்னம் தடை வராவிட்டாலும், ஆஸ்பெஸ்டாஸ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. வேறுவழியின்றி பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது, அதன் மீது நன்றாக பெயின்ட் அடித்துவிடுங்கள். எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றால் பெரிய அளவில் நன்மை இல்லையென்றாலும், ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். புதிய ஆஸ்பெஸ்டாஸை விட பழைய ஆஸ்பெஸ்டாஸில்தான் பாதிப்பு பல மடங்கு அதிகம்.

மாசி மாத நெல்லிக்கனியின் சிறப்பு 12/03/2016

நெல்லிக்கனியை அதியமானுக்கு அவ்வை கொடுத்த கனி என்பர். நெல்லிக்கனி மார்கழி, தை மாதங்களில் நன்றாக விளைந்திருக்கும். அதன் பிறகு நான்கு மாதங்கள் வரை விற்பனைக்கு வரும். அதன் பிறகு வராது. மாசி மாதத்தில் வரும் நெல்லியை சிறப்பித்துச் சொல்வர்.

இதை சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். இது மலமிளக்கி. தாகத்தை தணிக்க வல்லது. இதயத்திற்கு நன்மை தரும். நெல்லிக்காயை கோடைக்காலத்தில் ஏற்படும் பித்த அதிகரிப்பை தணிக்க பயன்படுத்தலாம்.

நெல்லிக்கனி போதிய அளவு கிடைக்காவிட்டால் நெல்லிக்கனி கிடைக்கும் போது நெல்லி பானம் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு காய்ந்த நெல்லிக்கனிகளை சுத்தம் செய்து கொட்டையை எடுத்து விட்டு இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும். மண்பாணை அல்லது கண்ணாடி பாத்திரம் ஊற வைப்பதற்கு ஏற்றது.

மறுநாள் காலையில் ஊறிய நீரை ஒரு துணியில் வடிகட்டி கொஞ்சம் உப்பு சேர்த்து குடிக்கலாம். சிலருக்கு கோடை கொடுமையாக இருக்கும். பித்தம் அதிகமாகும். சிலருக்கு பசி எடுக்காது. தண்ணீர் அடிக்கடி குடிப்பார்கள். இந்த பிரச்சினைகளை தணிக்க மேற்கூறிய நெல்லி பானத்தை குடிக்கலாம்.

நெல்லிக்கனியை போல வைட்டமின் சி நிறைந்த கனி வேறு இல்லை. ஆரஞ்சு சாற்றை விட 20 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரு நெல்லிக்கனி ஒன்றரை ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைக்கக் கூடிய சி வைட்டமினை தருகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் சி குறைவு. இதனாலேயே நோய்கள் தொற்றுகின்றன.

நெல்லிக்கனியை தொடர்ந்து உண்டு வருவதால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். நெல்லிக் கனி ஒரு முக்கியமான பழ உணவு. இது மருந்தாகவும் இருப்பதால் இதனை தவிர்க்காமல் உண்பது நல்லது.

அரசியலில்  இதெல்லாம் சகஜமப்பா...! 12/03/2016

வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை மேற்குவங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்குவங்காளத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. ஏனெனில், இந்த மாநிலங்களில் தேர்தல் நேரங்களில் வன்முறை வெடிக்கலாம் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், பாரதத்தாயின் செல்ல மகள்களான தமிழ்த்தாயும், கேரள அம்மேயும் குடியிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் எப்போதுமே அமைதி தவழும் மாநிலங்களாகும். எனவே, இந்த மாநிலங்களில் மட்டும் மே 16-ந் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பது நிச்சயமாக பெருமைப்படத்தக்க விஷயமாகும்.

பொதுவாக, தேர்தல் என்றாலே, நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற வகையில், நேற்று வரை ஒரு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள், இன்று அதற்கு நேர் எதிர் போவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கொள்கை ரீதியாகவே இருவேறு திசையில் நிற்பவர்கள். கேரளாவை எடுத்துக் கொண்டால், 1970-களிலேயே கூட்டணி அரசியலுக்கு வித்திட்டது இந்த மாநிலம்தான். இங்கு எப்போதுமே காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையில்தான் போட்டியிருக்கும். இருவரும் மாறி மாறித்தான் ஆட்சியமைத்து கொண்டிருப் பார்கள். இப்போது முதல் முறையாக பா.ஜ.க.வும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் நீயா?, நானா? என்ற வகையிலேயே கேரளாவில் இவ்வளவு நாளும் மட்டுமல்லாமல், இப்போதும் தேர்தல் களத்தில் நிற்கிறது.

ஆனால், அதே காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மேற்குவங்காளத்தில் மட்டும் கைகோர்க்கும் நிலையை பார்க்கும்போது, “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்ல வேண்டியிருக் கிறது. மேற்குவங்காளத்தில் இதுவரை யாராலும் வீழ்த்த முடியாது என்ற வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வரலாற்றையே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஓட்டு சதவீத எண்ணிக்கையை பார்த்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 39.8 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 30.08 சதவீதத்தையும், காங்கிரஸ் கட்சி 8.91 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மந்திரத்தை இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க, மார்க்சிஸ்டும், காங்கிரசும் கூட்டணி வைக்கவில்லை. ஆனால், உடன்பாடு வைத்திருக்கிறோம் என்று இரு தரப்பிலும் செயல்கள் நடக்கிறது. கூட்டணி என்றால் என்ன?, உடன்பாடு என்றால் என்ன?. ஒருவர் நிற்கும் தொகுதியில் அடுத்தவர் நிற்காமல் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்பதுதானே?. இப்போது 294 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி 116 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், ‘ஒரேமேடையில் ஏறி பிரசாரம் செய்யமாட்டோம்’ என்று மட்டும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள். கேரளாவில் விரோதிகளாகவும், மேற்குவங்காளத்தில் நண்பர்களாகவும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களம் இறங்குவதுதான், அரசியல் அரங்கில் இப்போது பேச்சாக இருக்கிறது.

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் பலி 
அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து 12/03/2016

ஆயுள் தண்டனையாக குறைப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

3 மாணவிகள்  பலியான  தர்மபுரி  பஸ் எரிப்பு வழக்கில், அ.தி.மு.க.வினர்  3 பேருக்கு    விதிக்கப்பட்ட   தூக்கு  தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி, மார்ச்.12-<p></p>கொடைக்கானல், ‘பிளசன்ட் ஸ்டே’ ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சென்னை தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

3 மாணவிகள் பலி

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் பயணம் செய்த பஸ்சை, அ.தி. மு.க.வினர் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலி ஆனார்கள்.

 3 பேருக்கு தூக்கு தண்டனை.
இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட்டு முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குற்றவாளிகள் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மறுஆய்வு மனு தாக்கல் இதைத்தொடர்ந்து முனியப்பன், நெடுஞ்செழியன் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதில், “இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் மறுஆய்வு மனு மீது திறந்தவெளி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

விசாரணை

இந்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ் மற்றும் சுசில் குமார் ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் ஆஜர் ஆனார்கள். குற்றவாளிகள் தரப்பில் முன்வைத்த வாதத்தில், “இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே 3 பேருக்கும் மரண தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை. இதனை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. மேலும், ஆயுள் தண்டனை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகு, ஆயுள் தண்டனையின் காலஅளவு என்ன என்பது பற்றியும், குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்வது குறித்து எழுந்த வாதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

தமிழக அரசு வக்கீல் வாதம். தமிழக அரசின் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜர் ஆனார். அவர் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:- இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், குற்றத்தில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்து வகையிலும் தண்டனைக்கு உரியதாகவே இருந்துள்ளதாக கூறி உள்ளது. அந்த தண்டனை என்பது தூக்கு தண்டனையா? அல்லது ஆயுள் தண்டனையா? என்பதை அரிதிலும் அரிதான கோட்பாட்டின் அடிப்படையில் பரிசீலித்து இந்த குற்றத்துக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். இந்த வழக்கு மறுஆய்வுக்கான பரிசீலனைக்கு ஏற்புடையது அல்ல. எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு யோகேஷ் கன்னா கூறினார்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அரசியல் தலைவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த கலவரத்தின் போது, பொது சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கும் வகையில் நடந்த சம்பவம் இது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். எனவே இதனை திட்டமிட்டு செய்த செயலாக கருத முடியாது.

கலவரம் நடந்த நேரத்தில் பொது சொத்தை நாசமாக்கும் நோக்கில் செய்த செயல். உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறு. எனவே, மறுஆய்வு மனு ஏற்கப்படுகிறது. குற்றவாளிகள் மூவருக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்


அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டது 11/03/2016

ஆஸ்டின், மார்ச்.11-
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் கேய் வெஸ்புரூக் (வயது 58). இவரது மனைவி குளோரியா. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில், வெஸ்புரூக் சம்பவத்தன்று ஹூஸ்டன் நகரில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வேறு சில நபர்கள் இருப்பதை அவர் கண்டார். அவர்களுடன் அவர் மது அருந்தினார்.

அதைத் தொடர்ந்து மனைவியின் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். வெளியே வேகமாக வந்த அவர், தனது வாகனத்தில் வைத்திருந்த வேட்டைத் துப்பாக்கியை எடுத்துச்சென்று, மனைவியின் வீட்டில் கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டுத்தள்ளினார்.

இந்த கொடூர சம்பவத்தில் அவரது மனைவி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வெஸ்புரூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஹண்ட்ஸ்வில்லேயில் உள்ள சிறையில் அவருக்கு விஷ ஊசி போட்டு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8.04 மணிக்கு அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர் வெஸ்புரூக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 535-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.