Search This Blog

Saturday, April 30, 2016

காமராஜர் மதிய உணவு திட்டம்
Add caption


அமெரிக்காவில் பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை 

   கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூரம்

வாஷிங்டன், மே.1-/2016

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த பெண் டைனல் லேன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக கர்ப்ப கால உடைகள் தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்து விட்டு, 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த மிச்செல் வில்கின்ஸ் என்ற பெண், டைனல் லேன் வீட்டுக்கு சென்றார்.<

ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் டைனல் லேன், அந்த கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தார். இந்த தாக்குதலில், கர்ப்பிணி மிச்செல் வில்கின்ஸ் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது கருக்குழந்தை உயிரிழந்தது.

இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, மிச்செல் வில்கின்ஸ் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், “ ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து டைனல் லேன் வீட்டுக்கு சென்றேன். ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் திடீரென என்னை அடித்து உதைத்து கீழே தள்ளினார். சமையலறை கத்தியால் என் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்தார். குழந்தை இறந்து விட்டது” என கூறினார்.

ஆனால் கொலையாளி டைனல் லேன் சார்பில் ஆஜரான வக்கீல், “இது முன்கூட்டியே திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல” என வாதிட்டார். ஆனால் அரசு தரப்பு வக்கீல், “மிச்செல் வில்கின்சை அடித்து உதைத்து, அவருடைய குழந்தையை திருட வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டுள்ளார்” என மறுத்தார்.

இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதி, டைனல் லேன் குற்றவாளி என கண்டு, ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது’ என கூறி, அவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

விண்வெளிச் சுற்றுலா 01/05/2016

ஸ்பேஸ் டூர் என்பது  உலக கோடீஸ்வரர்களைப் பித்துப்பிடித்து ஆட்டும் ஒரு விண்வெளி சுற்றுலா ஆகும். பல கோடீசுவரர்களுக்கு இது வாழ்நாள் கனவு. வான்வெளியில் ஜாலியாக டூர் போகலாம் என்றதுமே பல பணக்காரர்கள், பணத்தைக் கட்டி வரிசையில் நின்றுவிட்டார்கள். இந்த டூர் செல்ல மன வலிமை மட்டும் போதாது, உடல் வலிமையும் வேண்டும். உடற் தகுதி விஷயத்தில் பல பணக்காரர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவை எல்லாவற்றையும் கடந்து முதன் முதலில் விண்வெளியில் விசிட் அடித்து திரும்பியவர் டென்னிஸ் டிடோ என்ற அமெரிக்கர்.

ஸ்பேஸ் டூரை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். பூமியில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இரண்டரை மணி நேரம் தங்கிவிட்டு. அந்தரத்தில் மிதக்கும் நீல வண்ண பூமிப் பந்தைப் பார்த்துவிட்டு கிறங்கிப் போய் உடனே பூமிக்கு திரும்புவது. இதில் என்ன ஒரு வித்தியாசமான அனுபவம் என்றால் புவி ஈர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கும் அற்புத உணர்வுதான்.

இப்படி ஒரு டூரை ஏற்பாடு செய்து நம்மை கூட்டிக் கொண்டு போவதற்காகவே ஸ்பேஸ் அட்வெஞ்சர் லிமிடெட் என்ற அமெரிக்க நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. 2001-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பலரை விண்ணுலகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 பேர் விண்ணுலகம் போய் திரும்பி இருக்கிறார்கள்.

இதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தான் என்கிறார்கள். கால்குலேட்டர் கையுமாக உட்கார்ந்து நம் பணத்துக்கு எவ்வளவு என்று கணக்குப்போட்டுப் பார்த்தால் நம் தலை சுற்றும். கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய். இவ்வளவு பணம் நம்மிடம் இருந்தால் தான், விண்ணுலகத்தில் பறக்க முடியும்.

இன்னொரு வகை டூர் விண்வெளியில் தங்கி வருவது. அமெரிக்க தொழில் அதிபரான ராபர்ட் என்பவர் நாசாவுடன் இணைந்து ‘ஜெனசிஸ்-1‘, ‘ஜெனசிஸ்-2‘ என்ற இரண்டு மாதிரி ஓட்டல்களை விண்வெளியில் வடிவமைத்து வருகிறார். இந்த ஓட்டலில் தங்கி வரலாம் என்ற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது.

இது ராபர்ட்டுக்கு மகிழ்ச்சி தர 2012-ல் இருந்து இந்த ஓட்டல்களை கமர்சியலாக பயன்படுத்தி வருகிறார். இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. அப்படி வரும்போது இங்கு பயணிகள் தங்கலாம். அப்போது அதிக பட்சமாக 15 நாட்கள் விண்ணில் தங்கலாம். இது நடைமுறைக்கு வரும்போது, விண்வெளி பயணச் செலவு பன்மடங்கு குறையலாம். இப்போது விண்வெளியில் அமைக்கப்படும் ஓட்டல்கள் வருங்காலத்தில் நிலவிலும் அமைக்கப்படும்.

இந்தியாவில் இந்த ஸ்பேஸ் டூர் வர இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படி வரும்போது வாய்ப்பும், வசதியும், உடல் திடமும் இருந்தால் விண்ணில் போய் தங்கி வரலாம்.

Friday, April 22, 2016


அடுத்த இரண்டு ஆண்டுகளில்
இந்தியாவில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும்
ஆய்வறிக்கையில் தகவல் 

சுதானுகா கோசல் கொல்கத்தா 23/04/2016

இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2018-ஆம் ஆண்டிற்குள்), 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும் என அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் கூட்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது.

எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி - என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

மறுசுழற்சி

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

கம்ப்யூட்டர் 

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த அளவில், மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சாலைகளின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதே சமயம், வீடுகளில் உருவாகும் மின் கழிவுகளின் பங்கு 15 சதவீதமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளிவரும் மின்னணு கழிவுகளில் டெலிவிஷன், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவை மிக அதிக பங்கினைக் கொண்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர்களின் பங்கு 20 சதவீதமாகவும், மொபைல்போன்களின் பங்கு 2 சதவீதமாகவும் இருக்கிறது.

பாதிப்புகள்

கம்ப்யூட்டர், டி.வி., மொபைல்போன் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றில் நச்சுத்தன்மை  இருப்பதால்,  மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன் காரணமாக, தலைவலி, வாந்தி, மயக்கம், மற்றும் கண்வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குடல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அசோசெம் மற்றும் பிராஸ்ட் அண்டு சல்லிவான் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கோகினூர்  வைரம் 23/04/2016

உச்சநீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை கையில் எடுத்து இருக்கிறது. ஆனால், தற்போது மிகவும் வியக்கத்தக்க ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடந்துவருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு, இப்போது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் ஜொலித்துக்கொண்டு இருக்கும் கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு வழக்கு போடப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாறைக்கொண்ட இந்த கோகினூர் வைரம்தான் உலகிலேயே பழமையானதாகவும், புகழ்மிக்கதாகவும் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இந்த வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிடப்படவில்லை. பின் நாட்களில்தான் கோகினூர் அதாவது, ஒளி மலை என்று பெயரிடப்பட்டது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இடைக்காலத்தில் இப்போதுள்ள ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த வைரம் பலருடைய கைகளுக்கு மாறி மாறி சென்றிருக்கிறது. 1304-ம் ஆண்டு மார்வா மன்னர் கைக்கு வந்திருக்கிறது. 1306-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தி இலக்கியத்தில் இந்த வைரத்தை சொந்தமாக வைத்திருப்பவன் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்வான். ஆனால், அதன் அனைத்து துரதிருஷ்டத்தையும் அனுபவிப்பான், தண்டனையில் இருந்து தப்ப கடவுள் அல்லது பெண்கள் மாத்திரமே அணியலாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி, பாபர், அவுரங்கசீப் என்று பலர் கைக்கு மாறியது. இறுதியில் பாபர் பரம்பரையை சேர்ந்த சுல்தான் முகமது கையில் இருந்த நேரத்தில் 1739-ல் பாரசீக தளபதி நாதிர்ஷா முகாலய பேரரசரோடு போரிட்டு இந்த வைரத்தை பாரசீகத்துக்கு எடுத்துச்சென்றார். அவர்தான் இந்த 186 கேரட் வைரத்துக்கு கோகினூர் என்று பெயரிட்டார். அவர் கொலை செய்யப்பட்டபிறகு இந்த கோகினூர் வைரத்தை, அவருடைய பேரன் ஷா ஷுஜா எடுத்துக்கொண்டுவந்து பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்குக்கு பரிசாக கொடுத்தார். 1813-ல் சீக்கிய போரின்போது உதவியதற்காக ரஞ்சித்சிங் மன்னரின் மகன் துலீப் மகாராஜா கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக அளித்தார்.

கோகினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் 1850-ல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் விக்டோரியா மகாராணி தன் கிரீடத்தில் அந்த வைரத்தை பதித்து அணியத்தொடங்கினார். அவர் எழுதியுள்ள ஒரு உயிலில், ‘கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் ராணிகளால் மட்டுமே அணியவேண்டும். அப்படி ஒருவேளை ராஜா ஆளுகையில் இருந்தால், அவரது மனைவிதான் அந்த வைரத்தை வைத்திருக்கவேண்டும்’ என்று எழுதியுள்ளார். இப்படி ஆண்களுக்கு சாபத்தையும், பெண்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் கோகினூர் வைரத்தை திரும்பப்பெறவேண்டும் என்ற வகையில், உச்சநீதிமன்றத்தில் இப்போது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வைரத்தை லாகூரில் இருந்துதான் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். ஆகவே, எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானோடு தொடர்புள்ளதால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தலீபான்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரத்தின் கதையை பார்த்தால், இது இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு சென்றதுபோல தெரியவில்லை. பரிசாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. 1936-ல் பண்டித நேருவே அப்படித்தான் சொல்லியிருக்கிறார். மேலும், கோகினூர் மட்டுமல்ல, பாரீஸ், போலந்து, வியன்னா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் போன்ற பல நாடுகளில் இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட வைரங்கள் இருக்கின்றன. எனவே, இதை ஒரு பிரச்சினையாக்காமல் விட்டுவிடுவதே நல்லது. இதை நாம் கேட்கத் தொடங்கினால், ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது விட்டுச்சென்ற பலபொருட்களை அவர்களும் திரும்பகேட்கும் நிலைமை உருவாகும். எனவே, இதில் ராஜ்யஉறவுகளை எல்லாம் மனதில்வைத்து முடிவெடுப்பதே சாலச்சிறந்தது.

Thursday, April 21, 2016


அமெரிக்காவில் ‘அடிமைப் பெண்’ணுக்கு டாலர் நோட்டில் இடம்



வாஷிங்டன், ஏப்.22-2016

அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழிக்க போராடியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், ஹேரியட் டப்மேன். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், 1820-ம் ஆண்டுவாக்கில் ஒரு அடிமையாக பிறந்தவர்.

அடிமைத்தனத்தில் நூற்றுக்கணக்கானோர் விடுபடுவதற்கு உதவியவர், இந்த டப்மேன்.

இவரை கவுரவிக்கிற வகையில், அமெரிக்க நாடு தனது 20 டாலர் நோட்டில் டப்மேனின் உருவப்படத்தை இடம்பெறச்செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 20 டாலர் நோட்டின் முன் பகுதியில் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் படம் இடம் பெற்றிருக்கிறது. அந்த இடத்தில் அவரது படத்துக்கு பதிலாக இனி டப்மேன் படம் இடம் பெற்றிருக்கும்.

20 டாலர் நோட்டின் பின்பக்கத்தில் ஆண்ட்ரூ ஜாக்சன் படமும், வெள்ளை மாளிகை படமும் இடம் பெற்றிருக்கும்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேக்கப் லெவ் வெளியிட்டுள்ளார்.

20 டாலர் நோட்டில், அடிமை உரிமையாளராக விளங்கிய ஆண்ட்ரூ ஜாக்சனுக்கு கிடைத்திருந்த இடம், இப்போது அடிமை மீட்பு போராளியான டப்மேனுக்கு கிடைத்திருப்பது சிறப்பு. அதுவும் பெண் ஒருவர் கடந்த 100 ஆண்டு காலத்தில் டாலர் நோட்டில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.     இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடலின் ஆழம்  22/04/2016

கடலின் அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில், கடலுக்கு அடியில் பல சுவராசியமான விஷயங்கள் இருப்பதாக எதையோ சொல்லிவைக்க, அவருடைய சிஷ்யர் அலெக்சாண்டர் என்பவர் கண்ணாடி பலூன் மாதிரி ஒன்றை செய்து அதற்குள் உட்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்ச தூரம் சென்று பார்த்துவிட்டு வந்தார். அதில் ஒரு பிரமாண்டமான திமிங்கிலத்தை பார்த்ததாக சொன்னார்.

கரையிலிருந்து கடலுக்குள் ஓரிரு மைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால்தான் நிஜ கடல் ஆரம்பமாகிறது. ‘காண்டினெண்டல் ஷெல்ப்‘ என்று சொல்லக்கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெறும் 3 சதவீத கடல் தான்.

அதற்கு பின்பு இருக்கும் 97 சதவீத கடல் தான் உண்மையான பிரமாண்டமான கடல். இங்கு ஆழம் என்பது 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபீஸ்‘ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே பிரமாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத் தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.

கடலுக்குள் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் ஊடுருவிப் போக முடியும். அதற்கு கீழே போகப் போக ஒளி மங்கிக் கொண்டே போகும். 1000 அடிக்கு மேல் கும்மிருட்டு தொடங்கிவிடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை.

எந்தவொரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் ‘தம்‘ பிடித்துக்கொண்டு கடலுக்கடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்த சிலேட்டுப் பலகை ஒவ்வொன்றிலும் கையெழுத்துப் போட்டுக்கொண்டே சென்றார். 285-வது சிலேட்டில் கையெழுத்திட்ட அந்த மனிதர் சுயநினைவை இழந்தார். இதுதான் மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கிய ரிக்கார்டு.

சுவிட்சர்லாந்தில் பிக்கார்ட் என்பவர் ஒரு நீர்மூழ்கிப் படகு ஒன்றைத் தயாரித்து அதற்கு ‘டிரையஸ்ட்‘ என்று பெயரிட்டார். அந்தப் படகில் உட்கார்ந்து கொண்டு செங்குத்தாக கடலில் இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை தட்டவில்லை. கிட்டத்தட்ட 5 மைல் ஆழம் இறங்கியும் அதுவரை தரையை தொடவில்லை.

ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையை தொட்டுவிட்டேன்‘ என்று வயர்லெஸ்ஸில்  செய்தி அனுப்பினார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய அந்த இடம் ‘மெரியானா டிரெஞ்ச்‘ என்றழைக்கப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 35,808 அடி. எவரெஸ்ட் 29,028 அடிதான்.  கடலின் மிக ஆழமான இந்தப் பகுதியில் பிக்கார்ட் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே!

Wednesday, April 20, 2016


டைனமைட்டை கண்டுபிடித்த நோபல் 16/04/2016

‘டைனமைட்‘ என்பது ஒரு வெடிமருந்து. இதை கண்டுபிடிப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து புழக்கத்தில் வந்துவிட்டது. ஆனாலும் ரசாயனத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையாததால், துப்பாக்கி வெடி மருந்துகளை விட சக்தி வாய்ந்த ஆயுதத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளை ஒவ்வொரு நாட்டு ராணுவமும் நிர்ப்பந்தித்து வந்தது.

விஞ்ஞானிகளும் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்தார்கள். ஆனால், அவற்றில் எதுவுமே பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. மேலும் யுத்தங்களுக்கு மட்டுமில்லாமல், நிலக்கரி சுரங்கங்கள் தோண்டவும் வெடிமருந்து கட்டாயமாக தேவைப்பட்டது. இதற்கான ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1867-ல் டைனமைட்டை கண்டுபிடித்தார்.

இவர் கண்டுபிடித்த வெடிமருந்தை விட மற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வெடிமருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. ஆனால், உலகம் அவற்றை நிராகரித்து விட்டு டைனமைட்டை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதற்கு ஒரேயொரு காரணம், நோபல் கண்டுபிடித்த டைனமைட் மிகவும் பாதுகாப்பானது என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

நோபலின் டைனமைட்டுக்கு ஏகப்பட்ட தேவை இருந்தது. மிக அதிகமாகவும் தயாரிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஒரு தொழிற்சாலையை நிறுவினார். உலகின் நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் நோபலிடம் டைனமைட் கேட்டு வரிசையில் நின்றன. 1875-ல் டைனமைட்டின் உற்பத்தி 3 ஆயிரம் டன் வரை உயர்ந்தது. இதனால் நோபல் ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம் பெற்றார்.

டைனமைட்டைத் தொடர்ந்து ஜெலட்டினையும் கண்டுபிடித்தார். இதனால் அவரது புகழ் பெரும் அளவில் பரவி, பணம் எந்த வகையில் வருகிறது என்று தெரியாத அளவிற்கு, அவரது வீட்டின் முன்பு கொட்டியது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் குவிய ஆரம்பித்தது. மற்றவர்களாக இருந்தால் இன்னும் எப்படி சம்பாதிப்பது என்று யோசித்திருப்பார்கள். ஆனால், நோபலுக்கு சந்தோஷம் இல்லை. மாறாக, கவலைப்படத் தொடங்கினார்.

டைனமைட் கண்டுபிடிக்கும் போது தனது சகோதரன் உடல் கருகி இறந்தது போல், தான் கண்டுபிடித்த டைனமைட் எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடிக்குமோ என்று பயந்தார். நோபலுக்கு திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு நண்பர்களும் கிடையாது. கடவுள் நம்பிக்கையும் இல்லை. கடைசி காலத்தில் தன் ஆதங்கத்தை சொல்லி அழக்கூட ஆளில்லாமல் தனிமையில் தவித்தார். ‘பிறந்த அந்த நிமிடமே தான் இறந்திருக்கக் கூடாதா..?‘ என்று விரக்தியில் அழுதார்.

வருங்கால சந்ததிக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை குத்தி எடுத்தது. டைனமைட்டை கையில் எடுத்துக்கொண்டு உலக நாடுகள் போர் செய்தால் இந்த பூமி தாங்காது. அதனால், உலக நாடுகள் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என்று அவரே ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.

டைனமைட்டை ஏற்றுக்கொண்ட உலகநாடுகள், நோபலின் இந்த திட்டத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. மனம் வெறுத்துப்போன நோபல், தனது பெயரிலே ஒரு அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். தனது சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு எழுதி வைத்துவிட்டு அனாதை போல் இறந்து போனார். அவரது பெயரால்தான் நோபல் பரிசு வருடந்தோறும் பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.


ஆண்-பெண் பார்வை வேறுபாடு 17/04/2016

ஆதிமனிதனாக, மனிதன் காட்டில் இருந்த காலம் முதல் இன்று வரை அவன் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. பெண் உணர்ந்து கொள்ளும் உலகம் வேறு. 10 ஆயிரம் வருடங்களில் டி.என்.ஏ.வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  காட்டுமனிதர்களில் ஆண் என்றால் வேட்டையாடுதல் முக்கிய வேலையாக இருந்தது. பெண்ணுக்கு குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பது முக்கியமானதாக இருந்தது. வேட்டையாடும் போது விலங்கையும், அது இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு, இரை தப்பிவிடாமல் வேட்டையாட ஆணுக்கு கூர்மையான பார்வை தேவைப்பட்டது.  ஆனால் பெண்கள், விலங்குகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், அவர்களின் பார்வை அதிக பரப்பை பார்க்கும் திறன் பெற்றிருந்தது. அவர்களில் சிலர் 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கூட பெற்றிருந்தார்கள்.  ஆண்கள் பெரும்பாலும் ஒரு பொருளை வார்த்தை கொண்டு தேடுகிறார்கள். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட தடுமாறுவார்கள். ஆனால், பெண்களின் பார்வையில் சிக்கலான வடிவங்களை தேடிட, அவர்களின் மூளையில் ஆஸ்டொஜன் என்ற ஹார்மோன் உதவுவதாக கூறுகிறார்கள். அதன் காரணமாக பெண்கள், எந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்றும், ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்றும் ஒரே பார்வையால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்களைப் போன்று திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதில்லை.  ஆணின் கூர்மையான பார்வையிலும், பெண்ணின் பரவலான பார்வையிலும் நன்மை  தீமை இரண்டுமே உண்டு. ஆண்கள் ஓட்டும் வாகனங்கள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவது இல்லை. பக்கவாட்டிலேயே அதிக விபத்து நடக்கும். பெண்களுக்கு பரவலான பார்வை இருப்பதால் பெண்களால் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவதாகவே இருக்கும். சாலைகளில் இது பெண்ணுக்கு தீங்காக இருந்தாலும் வீட்டில் சாவி, சீப்பு போன்ற எந்தவொரு பொருளையும் சட்டென்று கண்டுபிடிக்க இது உதவுகிறது.  இயற்கையின் இந்த உண்மையை ஆண்களும் பெண்களும் அறிய வேண்டும். அவர்கள் தங்களின் இயலாமையை உணர்ந்து, மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் சின்னச் சின்ன சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆண் பெண் இருவருக்கும் மனித இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. இது அறிவியலும், உளவியலும் நமக்கு தரும் தகவல்.

குழந்தைகளை வசியப்படுத்திய ‘வால்ட் டிஸ்னி‘ 20/04/2016

ராணுவம், பீரங்கி, வெடிகுண்டுகள் என்று மொத்த ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்க, ட்லரும், முசோலினியும் புறப்பட்ட சமயம், ஒரு சுண்டெலியையும் வாத்தையும் கையில் பிடித்துக்கொண்டு மொத்த உலகையும் வசப்படுத்தியவர், வால்ட் டிஸ்னி. <p></p>குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்து பரவசப்படுத்தியது, மிக்கி மவுஸ். இதில் மிக்கியின் குரலுக்கு சொந்தக்காரர் டிஸ்னி தான். இந்த சாதனை மனிதரையும் ஆரம்ப காலங்களில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர் சினிமா வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கிய போது, பொம்மையை கிறுக்குபவனுக்கு எல்லாம் எப்படி சினிமாவைக் கொடுக்கமுடியும் என்று கேலியாக சிரித்தார்கள். இதற்கெல்லாம் அசரவில்லை, டிஸ்னி. தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கி சொந்தமாக ‘அலைஸ் இன் கார்ட்டூன் லேண்ட்‘ என்ற படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை. இருந்தாலும் டிஸ்னி தோல்வியை ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் டிஸ்னி, ஒரு சுண்டெலி ஓவியத்தை உருவாக்கினார். அதற்கு மார்டிமர் என்று பெயர் வைத்தார். ஆனால், அவருடைய நண்பர்கள் அதற்கு மிக்கி என்று பெயர் வைக்கச் சொன்னார்கள். இறுதியில் ‘மிக்கி மவுஸ்‘ என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர் உருவானது. முகத்துக்கு ஒரு வட்டம், இரண்டு காதுகளுக்கு இரண்டு வட்டம் என்று மூன்று வட்டங்களில் பிறந்த மிக்கிமவுஸ், ஒரு வருடத்திற்குள்ளேயே உலகை தன் பக்கம் வளைத்துக்கொண்டது.

தொடர்ந்து இவர் படங்கள் எல்லாம் வசூலை அள்ள, பணம் குவிந்தது. அங்கீகாரமும் தேடி வந்தது. 1932-ல் டிஸ்னி உருவாக்கிய ‘ப்ளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்‘ படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அப்போதுதான் ‘டொனால்ட் டக்‘ என்ற வாத்தினை அறிமுகப்படுத்தினார். உலகில் உள்ள உல்லாச பொழுது போக்கு பூங்காக்களை கணக்கெடுத்தால், முதலிடத்தில் இருப்பது ‘டிஸ்னி லேண்ட்‘ தான். 300 டாலர் நுழைவுக்கட்டணம் கொண்ட இந்த பூங்கா, பூலோக சொர்க்கம் எனப்படுகிறது. இங்கு ஒரு வருடத்திற்கு ஒன்றரைக் கோடி பேர் வந்து போகிறார்கள். இந்த பூங்கா உருவானது கூட ஒரு பழிவாங்கும் கதைதான்.  டிஸ்னி சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு போகும் வழியில் ஒரு சிறு பூங்கா இருந்தது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே உள்ளே போகமுடியும். ஒவ்வொரு நாளும் பூங்காவில் விளையாடும் சிறுவர்களை அவர் ஏக்கத்தோடு பார்த்தபடியே வீடு திரும்புவார். ஏழ்மையில் வாடிய டிஸ்னி ஒருநாள் கூட அந்த பூங்காவிற்குள் செல்லவில்லை. அந்த ஏக்கம்தான் பின்னாளில் டிஸ்னி லேண்ட் உருவாக காரணமானது.

டிஸ்னி மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன பின்னரும், அவரது வாழ்க்கை முறை மாறவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் எளிமையானவராகவே இருந்தார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு ஆடம்பரம் மட்டும் உண்டு. ரெயில் மீது மிகுந்த ஆசை கொண்ட அவர், சொந்தமாக தனது வீட்டைச் சுற்றி ரெயில்பாதை அமைத்து பழைய கால ரெயிலை அவரே ஒட்டி விளையாடினாராம்.


திமிங்கலம், மீன் அல்ல.21/04/2016

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது, நீரில் வாழும் திமிங்கலம் ஆகும். திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162 டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம் ஆகும். இதன் எலும்புகள் மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம் 40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன் தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும். திமிங்கலத்தின் எண்ணெய்யை கொண்டு ‘அம்பர்‘ என்ற வாசனைத் திரவியம், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.  திமிங்கலத்தின் உணவு, மீன்கள், கீல், கடல் நாய்கள் தான். இதன் வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். கருக்காலம் ஒரு வருடம்.

பிறந்த குட்டி கூட ஒரு பெரிய யானையின் உருவத்தைவிட பெரிதாகவும், அதிக எடையுடனும் இருக்கும். பிறக்கும் போதே 7.5 மீட்டர் நீளம் இருக்கும். குட்டி, தாயிடம் பால் குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.3 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும். 9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும். ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில் இருக்கிறது. மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீரூற்று போல் பீய்ச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு தெரியும். திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. நீர் மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் காற்றுக்காக மேலே வரும்.  ஒரு முறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600 குதிரை சக்தியை செலவிடுகிறது. இவ்வளவு பெரிய உருவத்தின் கண், ஒரு குதிரையின் கண் அளவே உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன. ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துளைகள் உள்ளன. திமிங்கலங்கள் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க திமிங்கலம், பலின் திமிங்கலம் ஆகியவை அவற்றில் சிலவாகும்.

ஆன்லைனில்  விவசாய  விளைபொருட்கள்  விற்பனை 20/04/2016

சில ஆண்டுகள் முன்புவரை வரப்புகளையும், வாய்க்கால்களையும் கொண்டு நெல், கரும்பு, வாழை என்று பணப்பயிர்களையும், மானாவாரி நிலங்களில் அதாவது மழையை நம்பி விவசாயம் செய்த இடங்களில் தானியவகைகள் என்று பயிரிட்ட விளைநிலங்கள் எல்லாம் இன்று சர்வே கல் மயமாக பொட்டல்காடாகக் காட்சியளிப்பதை எல்லா ஊர்களிலும் பார்க்கமுடிகிறது. பரம்பரை பரம்பரையாக இது எங்கள் சொந்தபூமி என்று பெருமையோடு விவசாயம் செய்துவந்த வேளாண்பெருமக்களெல்லாம், இன்று தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, வேறுவேலைக்கோ அல்லது வேறுவேலை தெரியாத நிலையில் தங்களுக்குத் தெரிந்த ஒரே வேலையான விவசாயத்தைப் பார்க்கும் விவசாய கூலிகளாகவோ மாறியுள்ள சோகமான நிலை நிலவிக் கொண்டு இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இதற்கு முக்கியக்காரணம், விவசாயம் லாபகரமானதாக இல்லை, போட்டபணம் கிடைக்காமல் கையைப்பிடித்து தொடர்ந்து கடிக்கிறது.

நெருப்பு தணல் கொண்ட குச்சியை யாரால் கையில் பிடித்துக்கொண்டு இருக்கமுடியும்?. கையைச்சுடும்போது கீழே போடவேண்டிய நிலைதானே ஏற்படும்?. அதேபோலத்தான், ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ளமுடியும் என்று விவசாயிகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. அப்படி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், மழை பொய்த்துப்போவது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், விதை, உரம், பூச்சிமருந்து, விவசாய பணிகளுக்கான சம்பளம் போன்ற பல செலவுகள் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணம். எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் தான் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இடைத்தரகர்களும், அந்த விளைபொருட்களை வாங்குபவர்களும் என்னவிலையை சொல்கிறார்களோ, அந்த விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலும் அழுகும்பொருட்களாக இருந்தால் வேறுவழியே இருக்காது. சிலநேரங்களில் விளைநிலங்களில் இருந்து வண்டியைக் கட்டிக்கொண்டோ, வேன், லாரியிலோ, மண்டி அல்லது சந்தை அல்லது மொத்தவியாபாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்லும் நிலையில் அவர்கள் கேட்கும் விலைக்குத்தான் கண்டிப்பாக விற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றி, கட்டுப்படியான விலைகிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதியமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாய புரட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வித்திட்டுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம் அதாவது ‘ஈ-நம்’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த விலைக்கு?, எங்கு?, எப்போது? விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படி என்றால், மொத்தவிற்பனை மண்டிகளுக்கும், விவசாயிகளுக்கும் இணையதளம் மூலம் நேரடிதொடர்பு ஏற்பட்டுவிடும். தங்களுக்குத் தேவையான விளைபொருட்களை வாங்க மண்டியில் உள்ள வியாபாரிகளும், விவசாயிகளோடு நேரடி தொடர்புகொள்ளலாம். இதன்மூலம் இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. யார் தனக்கு கட்டுப்படியான விலையைக் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கே விவசாயியால் தான் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யமுடியும்.

அப்படி ஆன்லைன் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யவேண்டுமென்றால், வேளாண் விளைபொருள் விற்பனை குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். அந்த வகையில், தற்போது 14 மாநிலங்களில்தான் இப்படி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால், சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். எனவே, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அரசு, விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குபவர்களுடன் கலந்து பேசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆன்லைன் முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்ஆளுமை சேவை மையங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்

Monday, April 18, 2016


நாம் வாழ பூமி வேண்டும் 19/04/2016

சமீபத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தொடர் ஆபத்துக்களைப் பார்க்கும் போது மனதில் பெரும் அச்சம் தோன்றுகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பூமிதான். இந்த பூமியில் தான் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும்.

பூமியை சுரண்டி பணம் ஈட்டிய பின், அந்த பணத்தைக் கொண்டு வேறு ஒரு கிரகத்தில் நாம் வாழப்போவதில்லை. இந்த பூமியில்தான் வாழவேண்டும். அப்படியென்றால் இந்த பூமியை நாம் எந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்கள், ஆய்வாளர்கள்.

நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும், அவற்றை அனுபவிக்கவும், வரும்காலங்களில் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை, வெறும் பணத்தை வைத்து எந்த பெரிய கடைகளிலும் வாங்கி விட முடியாது. அதனால் நாம் மாறியாக வேண்டும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லை. ‘நீ உயிரோடு இருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்‘ என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்து தான் முடிப்போம்.

அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மாறாவிட்டால் துளியும் தயங்காமல் தள்ளி விட்டு விடும் என்று மேலும் நம்மை பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்ய வேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்து இருக்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக செலவழித்து தீர்த்துவிடாமல், குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும்.

இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று எல்லாவற்றையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டை குறைக்க குறைக்க, உற்பத்தியின் அளவு குறையும். இதனால் இயற்கையின் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ, வேலைவாய்ப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள்.

இதோடு நம் கடமை முடிந்து போய்விடவில்லை. சுற்றுச் சூழலை பற்றியும், உலக வெப்பமயமாதலைப் பற்றியும் புத்தகங்கள், விழிப்புணர்வு கட்டுரைகள் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் மாறினால்தான், உண்மையான மாற்றம் ஏற்படும் என்று மேலும் அவர்கள் கூறுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம் என்று அறிவுரை கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

Monday, April 4, 2016

பீர் தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம் 05/04/2016

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் அவரவருக்கு பிடித்த பாடத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவில் போட்டி போட்டுக் கொண்டு சேருவார்கள்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘எடித்கோவன் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிக்க கற்றுத்தருகிறது. ‘கம்பெனிகளில் தயாரித்து வரும் பீர்களில் வர்த்தக நோக்கம் நிறைய இருக்கும். நீங்கள் நினைப்பது போல் அது தரமானதாக இருக்காது. தரமான பீர் வேண்டுமானால் அதை நீங்கள் தான் சொந்தமாக தயாரிக்க வேண்டும். அதை தயாரிக்க நாங்கள் சொல்லித்தருகிறோம். இப்படி நீங்கள் தயாரிக்கும் பீரை அக்கம் பக்கத்திலும் விற்பனை செய்து சம்பாதிக்கலாம் ‘என்கிறார்கள், இந்தப் பல்கலைக்கழகத்தினர். இவர்கள் பீர் தயாரிப்பில் இளநிலைப் பட்டத்தை கொடுக்கிறார்கள்.

முதுகலை பட்டம் வேண்டும் என்பவர்களுக்கு பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் ‘நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்‘. இது பீர் தயாரிப்பில் மாஸ்டர் டிகிரியைக் கொடுக்கிறது. பள்ளிப்படிப்பில் உணவு அறிவியல் பாடம் எடுத்தவர்களுக்குத்தான் இங்கு இடம் கிடைக்கும். அடிப்படை அறிவும், ஆர்வமும் இருந்தால் எந்தவித நன்கொடையும் வாங்காமலேயே கல்லூரியில் இடம் கொடுத்து விடுகிறார்கள்.

மதுவில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அப்படியிருக்க பீருக்கு மட்டும் அப்படியென்ன தனி முக்கியத்துவம் என்று கேட்பவர்களுக்கு, உலகில் அதிகமான மக்களால் விரும்பி அருந்தப்படும் மதுபானம் பீர்தானாம். கிட்டத்தட்ட கி.மு.9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பீர் குடிக்க கற்றுக்கொண்டான். எகிப்து, மெசபடோமியாவில் ஆதிகாலத்திலேயே பீரை தயாரித்து இருக்கிறார்கள்.  ஒயினுக்கு மதம் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருக்கிறது. புனித நூல்களில் கூட ஒயின் ஒரு சிறப்பான பானமாக சொல்லப்படுகிறது. அதனால் அதனை வீட்டில் தயாரித்துக் கொண்டாலும், ஒயின் தயாரிக்க கற்றுக் கொடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால், பீரின் நிலைமை அப்படியில்லை. நீண்ட நெடிய வரலாறு இதற்கு இருந்தால் கூட பீர் தயாரிக்க கற்றுக்கொடுப்பதை தொடர்ந்து எதிர்த்தே வருகிறார்கள்.

இப்போது எதிர்ப்பையும் மீறி கற்றுத்தர பல்கலைக்கழகங்கள் முன்வந்துவிட்டன. இங்கு பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரி பாடங்கள். பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், தண்ணீர் இந்த நான்கின் கூட்டுக்கலவை தான் பீர். முதலில் தண்ணீரில் பார்லியை மசிய வைக்க வேண்டும். அதன்பின் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்பு ஈஸ்ட் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஹாப்ஸ் என்ற தாவர வகையை சேர்த்தால் பீர் தயார். இவையெல்லாம் எந்த விதத்தில் எப்படி சேர்க்க வேண்டும் என்பதுதான் பாடமே.  இவற்றையெல்லாம் படித்து மார்க் எடுத்த பின் பிராக்டிக்கல் வகுப்பில் நல்ல பீரை தயாரித்து கொடுக்க வேண்டும். கச்சிதமாக தயாரித்த பீர் நன்றாக நுரைக்கும். பீரை ஓரிரு நாளில் தயாரித்துவிட முடியாது. தயாரித்த பீரை கொஞ்ச நாட்கள் அப்படியே விட்டு வைத்து பார்வையிடுகிறார்கள். பீர் நன்றாக இருந்தால் பிராக்டிக்கலில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். அதேநேரம், பீர் தயாரிக்கும் வகுப்பில் மாணவர்கள் பீர் குடிக்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.