Search This Blog

Tuesday, February 16, 2016


சுற்றுச்சூழலின் வரலாறு 15/02/2016


இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்கேட்டை பற்றி விரிவாகப் பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள்.

கி.மு.400-க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது.  இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமப்பேரரசர்களின் எலும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு.வில் ரோமப்பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பி.யில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப்பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும். அந்த வேலையை செய்ய மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இன மக்கள், இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.

363 மரங்களையும் கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான் மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளை இட்டான். பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை ‘சிப்கோ இயக்கம்‘ என்று கொண்டாடுகிறார்கள். 

ஒரு பிரச்சினையை பற்றி ஏதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினார். ‘மேன் அண்டு நேச்சர்’ என்ற இந்த புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.

No comments:

Post a Comment