Search This Blog

Thursday, December 31, 2015



இந்தியாவில் புகையிலை
புகையிலை இந்தியாவில் சிகரெட், பீடி, சுருட்டு தொழில், ஜர்தா, வாயிலிட்டு மெல்லும் புகையிலை தொழில், மூக்குப்பொடி தொழில் என பல்வேறு வகைகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் சிகரெட் தொழிற்சாலைகள் மும்பை, பரோடா, மாங்கீர், கொல்கத்தா, அலகாபாத், ஜலந்தர், ஐதராபாத் முதலிய இடங்களில் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த வெர்ஜினியா வகை புகையிலை பிரகாசம், குண்டூர், கர்னூல், மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா பகுதிகளில் பயிராகிறது. வருடத்திற்கு 40 ஆயிரம் டன் புகையிலை, சிகரெட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய புகையிலை வளர்ச்சி கம்பெனி இதை தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, சிகரெட் தொழிற்சாலைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறது.
இந்தியாவில் பீடித்தொழில் ஒரு குடிசைத்தொழிலாக நடைபெறுகிறது. இதற்கு 75 ஆயிரம் டன்னிலிருந்து 80 ஆயிரம் டன் வரை புகையிலை பயன்படுகிறது. குஜராத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் இருந்தும் புகையிலை வருகிறது. இதனுடன் பீகார், உத்திரப்பிரதேசம், தென் கர்நாடகம் போன்றவற்றிலிருந்து வரும் தரம் குறைவான புகையிலையும், பீடி புகையிலையுடன் கலக்கப்படுகிறது. தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஒரிசா மாநிலக்காடுகளில் பீடி சுற்றும் இலைக்குரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆசிய, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 5 ஆயிரம் கிலோவுக்கு மேல் பீடிகளை ஏற்றுமதி செய்கிறது. மட்டரகப் புகையிலையில் இருந்து சுருட்டுகள் தயாரிக்கப்படுகிறது. 
ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி சுருட்டுகள் தயாரிக்கபடுகின்றன. இவை தமிழ்நாட்டிலுள்ள பல சிறு தொழிலகங்களில் தயாராகின்றன. சுருட்டு தயாரிப்பில் சென்னையும், திருச்சியும், மிகப்பெரிய உற்பத்தி மையங்களாகும். இந்தியா ஆண்டுக்கு ரூ.150 கோடி புகையிலை பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. 1975-ல் புகையிலை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. புகையிலை உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது நாடாக திகழ்கிறது. ஏற்றுமதியில் 8-வது இடம் பிடித்துள்ளது. டெல்லி, லக்னோ, கோரக்பூர் முதலிய வட இந்திய நகரங்களில் ஹூக்காவுக்கான புகையிலை அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் பரவலாக மூக்குப்பொடி, மற்றும் வாயிலிட்டு சுவைக்கும் புகையிலையும் சிறு தொழில்களாக நடைபெறுகின்றன. ஜர்தா போன்ற ‘பான்’ வகைகள் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகி வரும் புகையிலைப் பொருள்களாகும். 30/12/2015

Thursday, October 15, 2015


டி.வி. ரிமோட்டுக்காக பேரனை கத்தியால் குத்திய பாட்டி 

ரஷியாவின் மாஸ்கோவை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் தனது 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். இருவரும் ஒருநாள் வீட்டில் இருந்தபோது அந்த பெண் தனது பேரனிடம் டி.வி. ரிமோட்டை எடுத்து தருமாறு கேட்டார். ஆனால் பேரனோ பாட்டியின் பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், கத்தியை எடுத்து பேரன் என்றும் பாராமல் சிறுவனின் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் 3 முறை குத்திவிட்டார். பலத்த சிகிச்சைக்குப்பின் சிறுவன் உயிர் பிழைத்தாலும், அவனது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பேரனை குத்திய பாட்டிக்கு, 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சம்பவத்தின் போது அந்த பெண் மது அருந்தியிருந்ததாகவும், எனினும் அவர் சுயநினைவுடன்தான் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.(16.10.2015)

முதல் திரை முத்தம்
இந்திய சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படும் தாதா சாகேப் பால்கே எடுத்த ‘ராஜா ஹரிச்சந்திரா‘ (1913) படம் தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள்தான். அன்று பெண்கள் சினிமாவில் நடிக்க முன்வராததால் பெண்கள் வேடத்திலும் ஆண்களே நடித்தனர். முதன் முதலாக இந்திய சினிமாவில் பெண்கள் நடிக்கத் தொடங்கியது 1914-ல். தாதாசாகேப் பால்கேயின் இரண்டாவது படமான ‘மோகினி பஸ்மசூர்‘ என்ற படத்தில் துர்காபாயும், அவருடைய மகள் கமலாபாய் கோகலேவும் நடித்தனர். பெண்களை திரையில் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். 

முதன் முதலாக அதிக நாட்கள் ஓடி வெற்றிப் படம் என்று வசூலில் சாதனை புரிந்த படம் ‘லங்கா தகன்‘ (1921). இந்த படம் மும்பை நகரில் கிர்காம் என்ற இடத்தில் இருந்த ‘வெஸ்ட் எண்டு‘ என்ற தியேட்டரில் 23 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது. 

தடை செய்யப்பட்ட முதல் இந்திய சினிமா ‘பகத் விதூர்‘ (1921). படத்தின் தயாரிப்பாளரே மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த படம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ஒருசில மாநிலங்களில் இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ஓடியது. 

இந்திய சினிமாவில் முதல் தணிக்கைக்குழு (சென்சார் போர்டு) 1920-ல் பாம்பே, கல்கத்தா, மதராஸ், ரங்கூன் (இன்றைய மியான்மர்) ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டது. 1927-ல் லாகூரில் மேலும் ஒரு திரைப்பட தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. சமூகத்தை நையாண்டி செய்த முதல் படம், 1921-ல் வங்க மொழியில் வெளியான ‘பிலேத் போராட்‘ என்பது. இந்த படம் காதலையும், கிழக்கத்திய, மேற்கத்திய முரண்பாடுகளையும் திறம்படச் சொன்னது. 

இந்தியாவின் முதல் சரித்திர படம் 1923-ல் வெளியான ‘சிங்காகாத்‘ என்ற படம் தான். இந்தப் படம் மராட்டிய சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘தேவதாஸ்‘ திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் 12 முறை படமாக்கப்பட்டிருக்கிறது. முதல் தேவதாஸ் 1928-ல் வெளிவந்தது. அதேபோல் முதல் மொகலாய வரலாற்றுப் படம் 1923-ல் ‘நூர்ஜகான்‘ என்ற பெயரில் வந்தது. 

இந்திய சினிமாவில் முதல் முத்தக் காட்சி 1933-ல் வெளிவந்த ‘கர்மா‘ படத்தில் இடம் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் சினிமா முத்தத்திற்கு தடையில்லை. அதனால் மான்ஷு ராய், தேவிகா ராணி ஆகிய இருவரும் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் முத்தமிட்டுக் கொண்டது தான் இந்தியாவின் முதல் திரை முத்தம். 

இந்தியாவின் முதல் கவர்ச்சி நடிகை இத்தாலியைச் சேர்ந்த நடிகை சினோரின்னா மனெல்லி என்ற பெண்தான். இவர் 1922-ல் நடித்த ‘பதிபக்தி‘ படத்தில் உடல் பாகங்கள் எல்லாம் வெளியே தெரியும் வண்ணம் மிக மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மீண்டும் மீண்டும் தணிக்கை செய்தனர். முதல் கவர்ச்சியே அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது.

Wednesday, October 14, 2015


சரியானதை செய்தால் வெற்றி (கன்பூசியஸ்)
சீனாவில் மன்னர்களின் ஆதிக்கத்தால் மக்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த காலம். மேலும் அதிக வரி விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாடினர். அப்போது தோன்றியவர்தான் கன்பூசியஸ் என்ற தத்துவஞானி. 

‘அதிக வரியும், அதிகமான தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதைவிட்டு பரம்பரை மட்டுமே கொடுக்கும் தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் தர முடியாவிட்டால் அவர்கள் ஆட்சியில் நீடிக்கும் உரிமை அற்றவர்கள்’ என்று கூறி ஒரு அரசன் எப்படி நடக்க வேண்டும் என்று வகுத்துச் சொன்னவர் அவர். 

இவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு மக்கள் மாபெரும் கூட்டமாக திரண்டனர். இப்படி மக்கள் பேராதரவு பெற்ற ஒருவரை கைது செய்தால் நாடு முழுக்க கலவரம் நடக்கும் என்பதை முன்கூட்டிய தீர்மானித்த அந்த அரசன். கன்பூசியசை சட்டத்துறை அமைச்சராக நியமித்தான். அவருக்கென்று வேலை ஆட்கள், பெரிய மாளிகை, மனதை நிறைத்த சம்பளம். இவற்றையெல்லாம் கொடுத்து, புதிய சட்டங்களை இயற்றும் படி மன்னன் கூறினான். அவரும் இரவு, பகல் பாராமல் உழைத்து, மக்கள் நலனுக்காக புதிது, புதிதான சட்டங்களை இயற்றினார். அதை எல்லாம் மன்னரிடம் ஒப்படைத்தார். 

 வெகுகாலம் கடந்தும் கன்பூசியஸ் எழுதிக்கொடுத்த ஒரு சட்டம் கூட அமல் படுத்தப்படவில்லை. சற்று தாமதமாக இந்த பதவியினால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என்பதை உணர்ந்த கன்பூசியஸ் பதவியில் இருந்து விலகினார். ‘ஒரு செல்வந்தானாக வாழாமல், ஏன் பிச்சைக்காரன் போல் வாழ ஆசைப்படுகிறீர்கள்?’ என்று மன்னன் கோபத்தோடு கேட்டான். ‘’எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என்று என் மனம் என்னை தொந்தரவு செய்கிறது’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார் 

கன்பூசியஸ். சிறு வயதிலேயே பழைய இலக்கியங்கள், அரசியல் சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து முடித்தார். அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதையும் தனது தனிப்பெரும் குணமாக வளர்த்து கொண்டார். இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார். மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்லவில்லை என்பதால், அவற்றை புறக்கணித்தார். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகள் அவரைத் தங்கள் எல்லைக்குள்ளேஅனுமதிக்காமல் விரட்டி அடித்தன. 

‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்‘ என மனிதர்களின் துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார். 

அதைப்போலவே மனிதர்கள் வெற்றி பெறுவதற்கும் கன்பூசியஸ் ஒரு சூத்திரம் சொல்லிக் கொடுத்துள்ளார். அது, ‘மனிதர்கள் எப்போதும் எளிதான செயல்களை செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது எப்போதும் சரியல்ல. வெற்றி பெற வேண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றவர், இதை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் விவசாயிகள் 

மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசை கூட குடிபெயர வைக்கிறது. இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட மாநிலம் பஞ்சாப் தான். அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமைதான் இருக்கிறது. பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு ஏக்கர் விளைநிலம் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டி போட்டு இந்த நிலத்தை வாங்குகிறார்கள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதிக லாபம் கிடைப்பதால் விளைநிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று விவசாயிகள் குடியேறி விடுகிறார்கள். ஆஸ்திரேலியா இந்தியாவை விட மூன்று மடங்கு பரப்பளவில் பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. இதில் 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மா கிடக்கின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு. பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்குகிறது. பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம். ஆஸ்திரேலியாவில் நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே கிடையாது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் இல்லாமல் நடைபெறுவதில்லை. பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலைகளையும் முடித்து விடலாம். காய்கறி, பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது. ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழிலான பால் பண்ணை வைத்து ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும்? தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்கிறார்கள். (15.10.2015)

பணத்துடன் எரிக்கப்பட்ட பிணம் 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த தாவோ என்ற விவசாயிக்கு 2 மகன்கள் உள்ளனர். வயதான தாவோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது நிலத்தை 2 மகன்களுக்கும் பகிர்ந்து அளித்தார். பின்னர் அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, பழைய இரும்பு பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து பிழைத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் தனியாக வாழ முடியவில்லை. எனவே தனது மகன்களுடன் சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவரை புறக்கணித்தனர். இதனால் பெருத்த சோகத்துக்கு உள்ளான அவர், தனது மகன்களை தண்டிக்க விரும்பினார். அதன்படி தான் இறந்த பின், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும், தனது உடலுடன் சேர்த்து எரித்துவிடுங்கள் என உயில் எழுதிவைத்தார். சமீபத்தில் ஒருநாள் தாவோ உயிரிழந்தார். அவரது உடலை எரிப்பதற்காக மகன்கள் எடுத்து சென்றனர். அப்போது அவரது உயிலை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். பின்னர் உயிலில் எழுதியிருந்த படி, தாவோ சேர்த்து வைத்திருந்த 33 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.20 லட்சம்) பணத்தையும் அவரது உடலுடன் சேர்த்து எரித்து விட்டனர். (15.10.2015)
 


உலகின் விலை உயர்ந்த பிஸ்கட் 

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கியது. இதில் பயணிகள், பணியாளர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த சில பயணிகளை எஸ்.எஸ்.கார்பதியா என்ற கப்பல் காப்பாற்றியது. இந்த மீட்பு பணிகளுக்கு, கார்பதியா கப்பலில் பயணித்த ஜேம்ஸ் பென்விக் என்ற பயணியும் உதவி புரிந்தார். அப்போது ஒரு உயிர்காக்கும் படகில் இருந்து பிஸ்கட் ஒன்றை ஜேம்ஸ் பென்விக் எடுத்து வந்தார். இது டைட்டானிக் கப்பல் கேப்டன் உண்பதற்காக வைத்திருந்த பிஸ்கட் ஆகும். இதை ஜேம்ஸ் பென்விக், தனது வீட்டில் ஒரு குறிப்புடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பிஸ்கட், இங்கிலாந்தில் உள்ள ஒரு ஏல நிறுவனம் மூலம் தற்போது ஏலம் விடப்படுகிறது. இது ‘உலகிலேயே விலை உயர்ந்த பிஸ்கட்’ என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பிஸ்கட் சுமார் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (15.10.2015)




உணவு உற்பத்தியை குறைக்கும் சுற்றுச்சூழல்
உலகம் முழுவதும் மாறி வரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர் ஆகிய இருவரும் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் சாராம்சம் வருமாறு:- உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக எராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும் மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுபோக எஞ்சியுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகள் நீர்ப்பாசனத்துக்கும் சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ள வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவீதத்துக்கும் அதிகமாக உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். விழித்துக்கொள்ளுமா, எல்லா நாடுகளும்?

Monday, September 28, 2015


பனை தரும் நீர் மேலாண்மை
பனைமரத்தை நாம் ஒரு வறட்சித் தாவரம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப வறண்ட பகுதிகளில் தான் இவை அதிகம் காணப்படும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி உள்ளன. இவற்றில் 2.5 கோடி மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகம். பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. நமது முன்னோர்கள் மக்கள் வாழும் எல்லா பகுதிகளிலும் ஏகப்பட்ட குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினர். இப்படி குளங்களை வெட்டினால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்து விடாது. நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும். இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள். இதோடு பனையின் நன்மைகள் நின்றுவிடுவதில்லை. ஒரு பனை மரம் ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ பனை வெல்லம், 16 கிலோ பனங்கற்கண்டு, 12 கிலோ தும்பு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் ஆகியவற்றை கொடுக்கிறது. பனை மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தது. நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இது செலவு வைக்காத நீர் மேலாண்மையாகும்.

விவசாயத்தை பாழ்படுத்தும் எலிகள்
விவசாயத்தில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் நெல், கரும்பு பயிர் செய்திருந்தால் எலிகளின் தொல்லை பற்றி கேட்கவே வேண்டாம். அறுவடைக்குப் பின்பும் இவை பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எலிகள் சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அவற்றின் கழிவுப் பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் சேதப்படுத்தும் அளவு 30 மடங்காகும். ஒரு எலி ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 250 கிராம் வரை உணவு உட்கொள்ளும். எலியின் உடல் அளவோடு ஒப்பிடும் போது அது சாப்பிடும் உணவின் அளவு மிக அதிகம். ஒரு எலிக்கு 40 மில்லி நீர் அன்றாடம் தேவைப் படுகிறது. எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியவை. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகின்றன. ஓராண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர்ப்பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 400 கோடி எலிகள் உள்ளன. ஒரு மனிதனின் ஒரு நாள் உணவை இரண்டு எலிகள் ஒரு நாளில் காலி செய்து விடுகின்றன. இந்தியாவில் மொத்தம் 71 வகையான எலி வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு வகை ஆண்-பெண் பிறப்புறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டவை. இவற்றில் ஒரு எலி 18 மாதங்களில் 10 லட்சம் எலிகளை உருவாக்கிவிடுமாம். விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை, பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம். வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்புத் தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தையும், இனப்பெருக்கத்தையும் குறைக்கலாம். எலிகளை கட்டுப்படுத்தினால் மகசூலை கூட்ட முடியும்.

கல்லீரலின் போராட்டம்
மது குடிப்பவர்களிடம் நடைபெறும் மிகப் பெரும் போட்டியே இதுதான். அதாவது எவ்வளவு மது அருந்தினாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்பது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஸ்டெடி மனிதர்கள் எவ்வளவு அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தகவல் அனுப்பிவிடும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைத்துவிடும். அந்த ரசாயனம் ரத்தத்தை உறையச் செய்கிறது. இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இதை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறி மரணம் ஏற்படும். இன்றைக்கு லேசான தலைவலி, உடல் மெலிவு, சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை உள்ளது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் நச்சு இதயத்தை நேரடியாக தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும். மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால், அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது? கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. கல்லீரலும் அப்படித்தான். தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். அதன்பின் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான். அதனால், “மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்” என்கிறது, அந்த ஆய்வு.

இணையதளத்தில் பலூன் பயன்பாடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன்கள் தற்போது நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்தில் இருந்து பறக்க விடப்பட்டுள்ளன. இவை ஆகாயவிமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும். தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது. பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம். ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார். இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நின்று கொண்டே உட்காரலாம்
வேலைகளில் பலவகை உள்ளன. உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலை, நடந்து கொண்டே பார்க்கும் வேலை, நின்று கொண்டே பார்க்கும் வேலை என்று பல. இதில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் வேலை எவ்வளவு ஆபத்தோ, அதேபோல நாள் முழுக்க நின்று கொண்டே பார்க்கும் வேலையும் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதிதான். வெகு நேரம் நிற்கும் போது வெரிகோஸ் வெயின் என்ற நோய் வர வாய்ப்புள்ளது. இந்த நோய் கால் மூட்டுக்கு கீழே நரம்பு முடிச்சுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் காலில் வலி, வேதனை, குடைச்சல் போன்ற உணர்வு ஏற்படும். அது மட்டுமின்றி நின்று கொண்டே பணிபுரியும் பலருக்கும் சிறிது நேரம் கிடைத்தால் உட்காரலாம் என்று தோன்றும். ஆனால், அதற்கான இருக்கை எதுவும் அந்த இடத்தில் இருக்காது. அதனால் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது அமரமுடியாமல் தொடர்ந்து நின்று கொண்டே இருக்கிறார்கள். தொழிற்சாலைகளில் இருக்கைகள் கொடுத்தால் வேலை கெடும் என்பதாலும், இடத்தை வேறு அது அடைத்துக்கொள்ளும் என்பதாலும் இருக்கைகள் தரப்படுவதில்லை. இதெற்கெல்லாம் ஒரு தீர்வாக வந்திருக்கிறது பயோனிக் பேண்ட் என்ற உடலோடு ஒட்டிய சேர். கெயித் கன்னுரா என்பவர்தான் இதைக் கண்டுபிடித்தார். தற்போது 29 வயதாகும் இவர், தனது 17-வது வயதில் பேக்கிங் கம்பெனி ஒன்றில் நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்தார். அப்போது ஏற்பட்ட வேதனை தான், இத்தகைய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை தன் நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த இருக்கையை ஒரு காலுக்கு ஒரு பயோனிக் பேண்ட் வீதம், இரண்டு பேண்டுகளை அணிந்து கொள்ள வேண்டும். இந்த பேண்ட் இடுப்பின் எடையை அப்படியே குதிகாலுக்கு அனுப்பி விடுகிறது. இதனால் நமக்கு உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதை அணிந்துக் கொண்டு சாதாரணமாக நடக்கலாம், ஓடலாம் எல்லா வேலைகளையும் செய்யலாம். இடத்தையும் அடைக்காது. நாற்காலி இல்லாமலே வெறும் காற்றில் வெட்ட வெளியில் அமரலாம். இந்த பயோனிக் பேண்ட் இயங்க ஒரு பேண்டுக்கு ஒரு ஆறு வோல்ட் பேட்டரி தேவை. இந்த பேட்டரியின் சார்ஜ் 24 மணி நேரம் வரை நிற்கும். இனி கால் வலியில்லாமல் நின்று கொண்டே வேலை பார்க்கலாம்.

செஞ்சிலுவை சங்கம்
செஞ்சிலுவை சங்கம் என்பது உலக அளவில் வியாபித்திருக்கும் ஒரு மனிதநேய சங்கமாகும். ஆரம்பத்தில் போரில் காயம்பட்ட வீரர்களை கவனித்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. விபத்துகளால் தாக்குண்ட நாடுகளின் நலனுக்காக பாடுபடுவதோடு, அமைதி காலத்தில் முதலுதவி தருதல், விபத்துகளைத் தடுத்தல், குடிநீரைப் பாதுகாத்தல், நர்சுகளுக்கு பயிற்சியளித்தல், தாய்சேய் நல மையங்களை பேணுதல், மருத்துவமனைகளை நிறுவுதல், ரத்த வங்கி அமைத்தல் முதலியவற்றை செய்து வருகிறது. செஞ்சிலுவை சங்கம் 1859-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நிறுவப்பட்டது. 

 இதன் நிறுவனர் ஜீன்ஹென்றி டுனண்ட். இவர் தனது வியாபார விஷயமாக லாபார்டி நகரத்துக்கு சென்று இருந்தார். அப்போது ஆஸ்திரியாவுக்கும், பிரான்சுக்கும் ஓயாத போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நாட்களில் லாபார்டி நகரம் தாக்குதலின் மையமாக இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் போரின் கொடுமையால் அவதிக்குள்ளாயினர். முதலுதவி கிடைக்காததால் அநேக மக்கள் மாண்டனர். 

நெஞ்சை பிளக்கும் இந்த காட்சிகள் ஹென்றியின் மனதை பாதித்தன. அவர் தனது சொந்த வேலையை அறவே மறந்தார். துன்பமுற்ற மக்களின் துயரை துடைக்க முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது சேவை பல உயிர்களைக் காப்பாற்றியது. 

இந்த போர் முடிந்ததும் அவர் உலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். போரில் காயமடைந்த வீரர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் சேர்ந்தவர் அல்ல. படைக்கலத்திலே நாதியற்ற இந்த வீரர்களுக்கு மனிதாபிமானத்துடன் சேவை செய்வது மனித குலத்தின் கடமை என்று அவர் அதில் குறிப்பிட்டார். இந்த வேண்டுகோள் உலக மக்களை கவர்ந்தது. 

1864-ல் ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்க அனைத்துலக மாநாடு நடைபெற்றது. அதில் 14 நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தை நிறுவ ஒப்புதல் அளித்தன. சுவிட்சர்லாந்து நாட்டின் கொடியில் சிவப்பு நிற நிலைக்கலனில் வெள்ளை நிற சிலுவை பொருத்தி இருந்தது. இதனை மாற்றி வெள்ளை நிற கலரில், சிவப்பு நிற சிலுவையை இந்த நிறுவனத்தின் கொடியில் பொருத்தினார். 

 இதுவே செஞ்சிலுவை சங்கம் பிறந்த கதை. செஞ்சிலுவைக்கு மூன்று குழுக்கள் உள்ளன. முதலாவது, செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்துலக குழு. கட்சி சார்பற்ற இந்த குழுவில் சுவிட்சர்லாந்து நாட்டின் 25 குடிமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைமை இடம் ஜெனீவாவில் உள்ளது. இரண்டாவது, செஞ்சிலுவை சங்கங்களின் லீக் என அழைக்கப்படுகிறது. மூன்றாவது, தேசிய செஞ்சிலுவை சங்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

போர்க்காலங்களில் செஞ்சிலுவையின் அனைத்துலக குழு போரில் ஈடுபட்ட நாடுகளுக்கும், தேசிய செஞ்சிலுவை சங்கங்களுக்கும் நடுவராக செயலாற்றும். இது போர்க் கைதிகளின் நலத்தை பாதுகாக்கிறது. உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு அனுப்பப்படும் தபால்களை சேர்ப்பிக்க உதவுகிறது. பெரும்புயல், கொள்ளை நோய், பஞ்சம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமிக்க பணிகளை செஞ்சிலுவை சங்கம் செய்து வருகிறது.

Friday, September 25, 2015


சென்னைக்கு வந்த முதல் சினிமா
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட உடன் அந்த சில நிமிட திரைப்படம் உலகமெங்கும் வலம் வந்தது. பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களை மாயாலோகத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட திரைப்படம் சென்னைக்கும் வந்தது. சென்னைவாசிகளுக்கு சினிமா என்ற பிரமாண்டம், மிகச் சிறிய அளவில் சுவரில் போட்டுக்காட்டப்பட்டது. 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற வெள்ளைக்காரர், ரிப்பன் பில்டிங்கிற்கு அருகில் தற்போது இருக்கும் ‘விக்டோரியா மாளிகையில்‘ திரையிட்டு காட்டினார். மக்கள் வரிசையில் நின்று அதை கண்டு ரசித்தனர். இரண்டு படங்களுமே சில நிமிடங்கள் ஓடக்கூடியவை. ஒன்று ஒரு தொழிற்சாலையில் வேலை முடிந்த தொழிலாளர்கள் கூட்டமாக வெளியே வரும் காட்சி. இந்த படத்திற்கு ‘லீவிங் த பேக்டரி‘ என்று பெயர். இதுதான் உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட படம். அதற்கடுத்து திரையிடப்பட்டது ‘த அரைவல் ஆப் த டிரெயின்‘ இது வேகமாக வரும் ஒரு ரெயிலை படம் பிடித்திருப்பார்கள். இந்த ரெயிலை பார்த்து பயந்து போய் எழுந்து ஓடியவர்கள், அன்றைய காலகட்டத்தில் ஏராளம். திரையில் வரும் ரெயில் நம் மீது மோதிவிடும் என்று பயந்தார்கள். அது படம் தான் என்பதையே அன்றைக்கு நம்ப மறுத்தார்கள். இவ்வாறு சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, இதுபோன்று ஏராளமான படங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றைப் பார்ப்பதற்கு ஒன்றரை பைசா கட்டணம். மக்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டார்கள். பயாஸ்கோப் என்ற படம் காட்டும் கருவி அன்று புகழ் பெற்று விளங்கியது. வெறும் மேக்னிசியத்தை வைத்து மின்சாரம் இன்றி, லைசென்ஸ் இன்றி குறைந்த செலவில் வீதி வீதியாக இதைக் காட்டினார்கள். “பாரு பாரு பயாஸ்கோப்பு படத்தப்பாரு..“ என்ற பாட்டையும் வைத்திருந்தார்கள். 1900-ம் ஆண்டு மக்களின் பேரார்வத்தை பார்த்து சென்னையில் வாரிக் மேஜர் என்பவர் ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதற்கு “எலக்ட்ரிக் தியேட்டர்“ என்று பெயரிட்டார். அண்ணா சாலையில் இன்றைய தலைமை தபால் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் அன்றைக்கு எலக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. கோஹன் என்பவர் “லிரிக் தியேட்டர்“ என்ற ஒரு தியேட்டரை அண்ணா சாலையில் நிறுவினார். சில நாட்களிலேயே அந்த தியேட்டர் தீயில் எரிந்து சாம்பலானது. அதன் பின்பு அதே இடத்தில் கட்டப்பட்ட தியேட்டர் ‘எல்பின்ஸ்டன்’. இப்படியாகத்தான் சென்னையில் சினிமா வரலாறு தொடங்கியது

105 வயதில் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை
ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது 105-வது வயதில் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்தவர் டோகிசி மியாஸாகி. 105 வயதான இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 42.22 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். 105 வயதுடையவர்களுக்கான பிரிவில் உலகிலேயே அதிவேக ஓட்டக்காரர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஓட்டப்பந்தயத்தில் 105 வயதுடையவர்களுக்கான பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவரையே சேரும். 105 வயதில் இவர் இவ்வாறு அதிவேகமாக ஓடுவது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர் தனது வேகத்தில் திருப்தி இல்லை என்று கருதுகிறாராம். இதில் மற்றொரு வியப்பு என்னவென்றால், உலகப்புகழ் பெற்ற அதிவேக ஓட்டக்காரர் உசேன் போலட்டுடன் போட்டியிடுவதுதான் அவரது லட்சியமாம். இவர் தனது 100-வது வயதில் 100 மீட்டர் தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது. 25/09/2015
இயற்கை வயாகரா
ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் அதனை சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலரும் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 சதவீத கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. 

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதி மாற்றம் இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி ஆகியவற்றை இந்த தர்பூசணி கொண்டுள்ளது. 

அத்துடன், தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது, தர்பூசணி. இது, உடலுக்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய், கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியமும், புரதமும் கொழுப்பைக் குறைக்க வல்லவை. தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாகரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. 

தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாகச் சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியைத் தருகின்றன. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாகராவைப் போல் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Tuesday, September 15, 2015


பனை தரும் நீர் மேலாண்மை 

பனைமரத்தை நாம் ஒரு வறட்சித் தாவரம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப வறண்ட பகுதிகளில் தான் இவை அதிகம் காணப்படும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி உள்ளன. இவற்றில் 2.5 கோடி மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகம். பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. நமது முன்னோர்கள் மக்கள் வாழும் எல்லா பகுதிகளிலும் ஏகப்பட்ட குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினர். இப்படி குளங்களை வெட்டினால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்து விடாது. நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும். இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள். இதோடு பனையின் நன்மைகள் நின்றுவிடுவதில்லை. ஒரு பனை மரம் ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ பனை வெல்லம், 16 கிலோ பனங்கற்கண்டு, 12 கிலோ தும்பு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் ஆகியவற்றை கொடுக்கிறது. பனை மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தது. நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இது செலவு வைக்காத நீர் மேலாண்மையாகும்.

Sunday, September 13, 2015


உடலளவில் ஆண், பெண் வேறுபாடு
பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் பொருத்தவரை பிறப்புறுப்புகள், மார்பகம் போன்றவை முக்கியமான வித்தியாசங்கள். இவை எல்லாம் நமது பார்வைக்கு தெரியும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆனால் இவற்றையெல்லாம் விட ஆணுக்கும், பெண்ணுக்குமான உடல் வித்தியாசங்கள் ஏராளமாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். 

ஆணைவிட பெண்ணின் இடுப்புப் பகுதி மிகப் பெரிதாக இருக்கும். இது குழந்தைப் பிறப்புக்காக இயற்கை ஏற்படுத்திய வடிவம். ஆணின் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்க்கப்படுகிறது. அதனாலே ஆணுக்கு தொந்தி உருவாகிறது. பெண்ணுக்கு இப்படி அதிகமாக சேரும் கொழுப்பு வயிற்றில் சேமிக்கப்படுவதில்லை. அதனால்தான் பெண்களுக்கு தொந்தி இருப்பதில்லை. அப்படியென்றால் அந்த கொழுப்பு எங்கு சேர்க்கப்படுகிறது என்றால், தொடையிலும் இடுப்பின் பின்பகுதியிலும் சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஆண்களின் தொடையைவிட பெண்களின் தொடை பெரியதாக தெரிகிறது. 

இதுபோக உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லின் தோற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு காரணம் குரோமோசோம்கள் இடையே உள்ள வித்தியாசம் என்கிறார்கள், மருத்துவர்கள். அதேபோல் பெண்களின் ரத்தத்தில் ஆண்களின் ரத்தத்தில் உள்ளதைவிட நீரின் அளவு அதிகம் இருக்கும். இதனால் பெண்களுக்கு 20 சதவீத சிவப்பணுக்கள் குறைவாகவே இருக்கும். பெண்கள் அடிக்கடி ரத்தச்சோகை பாதிப்புக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

 ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. அது குறையும் போது ஆக்சிஜனும் குறைகிறது. இந்த காரணத்தினால் தான் வெப்பம் மிகுந்த இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பெண்கள் மயங்கி விழுகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாகவே இருக்கும். பெண் நுரையீரலைவிட ஆணின் நுரையீரல் 30 சதவீதம் பெரியதாக இருக்கும். அதனால் நுரையீரல் கொள்ளளவும் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களிலும் திருவிழா கூட்டத்திலும் பெண்கள் சோர்ந்து போவதற்கு இதுதான் காரணம். 

உற்சாகம் என்ற விஷயத்தில் பெண்கள், ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள். இந்த உற்சாகத்திற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் தனி ஹார்மோனின் சக்திதான் என்கிறார்கள். நோய் என்று எடுத்துக் கொண்டாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிகம் மரணமடைகிறார்கள். மார்பக புற்றுநோய், பெண்ணின் பிறப்புறுப்பு நோய், கர்ப்பப்பை கட்டி போன்ற நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களும் ஆண்களுக்கே வருகின்றன. 

வெயிலை அதிகமாக பெண்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்கள் அதிகமான வெயிலில் சோர்ந்து போய்விடுவார்கள். இதற்கு காரணம் பெண்களின் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம்தான். வயிறு, கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புகள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரியதாக இருக்கும். முரட்டுத்தனம் என்பதை எடுத்துக் கொண்டால் ஆண்களின் முரட்டுத்தனம் பெண்களைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும். 

ஆண்களைவிட பெண்களின் இதயம் எப்போதும் வேகமாகத் துடிக்கும். சராசரியாக ஆண்களுக்கு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்றால் பெண்களுக்கு 80 முறை துடிக்கிறது. ஆண்களின் பற்களைவிட பெண்களுக்கு பற்கள் விரைவாகவே விழுந்துவிடும். பொக்கைவாய் தாத்தாக்களைவிட, பொக்கைவாய் பாட்டிகளே அதிகம். 

ஆணைவிட பெண்ணுக்கு தலை, தண்டுவடம், கால்கள் முதலியவை மிகச் சிறியவை. இப்படி பல விஷயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கின்றன.
விமான கழிவறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட தம்பதி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு நார்வே விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 2 மணி நேர பயணமாக அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, ஒரு தம்பதி விமான கழிவறைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கேயே உல்லாசத்தில் ஈடுபட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தினர். இதை விமான பணிப்பெண் ஒருவர் பார்த்து விட்டார். சிறிது நேரத்தில் கழிவறையை விட்டு வெளியே வந்த அந்த தம்பதி, எதுவும் நடக்காதது போல தங்கள் இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். அப்போது அந்த பணிப்பெண் விமானத்தின் நடுவில் வந்து, ‘விமான கழிவறையில் துணிச்சல் காட்டிய தம்பதிக்கு மகிழ்ச்சியான இனப்பெருக்கம் அமைய எங்கள் வாழ்த்துக்கள்’ என்று கூறினார் இதைக்கேட்ட சக பயணிகள் திகைப்படைந்தனர். பின்னர் அவர்களும் தங்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். எனினும் அந்த செயலில் ஈடுபட்ட தம்பதி யார்? என கடைசி வரை அவர்களுக்கு தெரியவில்லை. விமான பணிப்பெண்களும் அதை வெளிப்படுத்தவில்லை. (14.09.2015)

ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவருக்கு சிறை 

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி, கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஓரின ஜோடிகள், தங்கள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் கெண்டகி மாகாணத்துக்கு உட்பட்ட ரோவன் மாவட்ட அதிகாரி கிம் டேவிஸ் என்ற பெண்மணி, ஓரின ஜோடிகளுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க மறுத்து வந்தார். ஓரினச்சேர்க்கை திருமணம், ஒரு பாவம் என்று தான் நம்புவதாக கூறி வந்த அவர், தொடர்ந்து ஓரின ஜோடிகளை அலைக்கழித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட கிம் டேவிஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள அவர், விரைவில் பணியில் சேர உள்ளார். எனினும் இனியாவது அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவாரா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செவ்வாய் கிரகத்துக்கு குடிபோகலாம் 

தொடக்கத்தில் மனிதன் ஊர்விட்டு ஊர் குடியேறினான். சிறிது காலம் கழித்து மாநிலம் விட்டு மாநிலம் குடியேறினான். அதற்குபின் நாடு விட்டு நாடு. இப்போது அவன் நாட்டமெல்லாம் பூமியை விட்டு வேறு எங்காவது போகலாமா? என்பதுதான். அப்படி பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு கூட்டிப் போவதற்காகவே ‘மார்ஸ் ஒன்’ என்ற நிறுவனம் தயாராக இருக்கிறது. நெதர்லாந்தில் இருக்கும் இந்த நிறுவனத்தில் ஒரு சிறுதொகையை கட்டிவிட்டு காத்திருந்தால் போதும். 2024-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துப் போவார்கள். அப்படி அங்கு போவோர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அவர்கள் நிரந்தரமாக செவ்வாயில் குடியேற வேண்டியதுதான். இப்படி செவ்வாயில் நிரந்தரமாக குடியேறுவதற்காக 2,02,586 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 660 பேரை மட்டும் தேர்வு செய்து அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்தது அந்த நிறுவனம். அவர்களையும் வடிகட்டி 100 பேரை தேர்வு செய்துள்ளது. அந்த 100 பேரில் நால்வரை மட்டும் முதல்கட்ட பயணத்துக்கு அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நால்வரும் 7 வருட பயிற்சிக்குப் பின் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். செவ்வாய்க்குப் போனால் கடைசி வரை அங்கேயே இருக்க வேண்டியது தான். இந்த பயணத்துக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளார்கள். இவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே தங்குவதற்கு வசதியாக ஆளில்லா விண்கலங்கள் மூலம் குடில்கள் எடுத்துச் சென்று அமைப்பார்கள். செவ்வாயில் நமது பூமியைப் போல் ஆறு, குளம், மரம், செடி, கொடி எதுவும் இருக்காது. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களுக்கு அருகே காய்கறி பயிரிடுவதற்கான இடம் இருக்கும். அதில் விளைவித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அங்கு தங்குபவர்களை பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப குடிகளுக்குள் டிவி கேமராக்கள் இருக்கும். முதல் குழுவில் இருக்கும் நான்கு பேர்களில் இரண்டு பேர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களின் வயது 18 முதல் 40 வரை. இவர்கள் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு வாழ முடியும். இந்த நால்வரும் 7 மாதம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைவார்கள். இப்படி இவர்கள் பயணம் செய்யும் நிகழ்ச்சிகளையும் அவர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான உரிமை ஏலம் மூலம் விடப்பட்டு பெரும் பணம் திரட்டப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. செவ்வாயில் மனிதனுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இல்லை. கடுங்குளிர் வேறு. புழுதிப் புயல் ஏற்பட்டால் பல மாதங்களுக்கு நீடிக்கும். அதில் இருந்து தப்ப முடியாது. அங்கு நிலவும் கதிர்வீச்சால் காய்கறிகளை பயிர் செய்வதும் சிரமமே. தண்ணீரும் போதிய அளவு அங்கு கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் அவர்கள் பூமியில் இருந்து செல்லும் விண்கலன்கலையே நம்பி இருக்க வேண்டும். நிலைமை இப்படி இருக்க மரணத்துக்கான ஒருவழிப் பாதைபோல் செவ்வாயில் மனிதர்களை இறக்கிவிட்டு வருவது நியாயமில்லை என்ற கருத்தும் எழாமல் இல்லை. சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்புவது போல செவ்வாய்க்கும் சென்று திரும்பலாமே என்றால் அது முடியாது என்கிறது விஞ்ஞானம். நிலவின் தூரம் பூமியில் இருந்து 4 லட்சம் கி.மீ. மூன்று நாள் பயணத்தில் சென்று சேரலாம். நிலவு சிறிய கோள் என்பதால் அங்கு ஈர்ப்பு விசையும் குறைவு. அதனால் சிறிய விண்கலங்களில் மனிதன் சென்று வந்து விடலாம். செவ்வாயின் கதையோ வேறு. அது பெரிய கிரகம். தூரமோ 20 கோடி கி.மீ. 7 மாதங்கள் பயணிக்க வேண்டும். அதிகமான ஈர்ப்பு சக்திக் கொண்டது. அதற்கு பெரிய விண்கலங்கள் வேண்டும். அவ்வளவு பெரிய விண்கலங்களை ராக்கெட்டால் சுமந்து செல்ல முடியாது. அப்படியே சென்றாலும், செவ்வாயில் இறங்கிய அந்த விண்கலங்களை மீண்டும் பூமி நோக்கி செலுத்த பெரிய ராக்கெட் ஏவுதளம் வேண்டும். அதெல்லாம் இப்போதைய தொழில்நுட்பத்தில் நடக்கவே முடியாத உண்மைகள். வருங்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம். அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. அதனால் செவ்வாய் பயணத்துக்கு தடை வரலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Sunday, September 6, 2015


ஆண்-பெண் குரல் வித்தியாசம்
உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும். மனிதனின் இந்த பேசும் அமைப்புக்கு காரணமாக இருப்பது பேசும் பெட்டி. இது மனிதனை தவிர, இன்னொரு உயிரினத்திற்கும் இருக்கிறது என்றால் அது கிளிக்கு மட்டும்தான். இதன் பேசும் பெட்டி கிட்டத்தட்ட மனிதனின் பேசும் பெட்டியில் 50 சதவீதம் உள்ளது. அதனால்தான் கிளிகள், மனிதனைப் போல் தெளிவாகப் பேசமுடியா விட்டாலும் சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தால் அந்த வார்த்தை களை மட்டும் பேசுகின்றன. ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத் தொடங்குகிறது. இது லேசான மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில் விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும், பெண்ணுக்கு இனிமையான குரலும் தோன்றுகின்றன. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மை போய் கரகரப்பு சேர்ந்து விடுகிறது. மனிதனை பேச வைப்பது குரல் நாண்கள் என்று சொல்லப் படுகிற தசை மடிப்புகள்தான். இந்த குரல் நாண்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், பேச முயலும் போது விரைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று, நாம் பேசும் போது திரும்பி வந்து விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது. குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த குரல் நாண்கள் சத்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும் அதிர்கின்றன. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது. அறுபது வயதுக்கு மேல் ஆண், பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளத் தொடங்கி விடும். அதனால் அவர்கள் குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகின்றன. இதனால்தான் வயதான சிலரால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் போய்விடுகிறது. எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைபிடித்தலும், குரல் நாணை நேரடியாக பாதிக்கும் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப் பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக வைத்திருப்பவர்களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இவற்றை கடைப்பிடித்து நாமும் நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோம்.

Saturday, September 5, 2015

இவர்கள் ஆசிரியர்களா ..?

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தில் வெளிவந்துள்ள செய்திகள் இவை.

ஆசிரியரின் தவறான செயலால் சிக்கல் 

இங்கிலாந்தில் பிரிஸ்டல் என்ற இடத்தில் கிளிட்டன் என்ற கல்லூரி இருக்கிறது. இங்கு ஆசிரியராக இருந்தவர் ஜேனதன் தாம்சன் கிளவர் (வயது 53). இவர் தான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கு படித்த மாணவிகளின் குளியல் அறை காட்சிகளை ரகசியமாக படம் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வினோதம் என்றால் அவர் எதோ சபலத் தில் ஒருமுறை மட்டும் இந்த தவறை செய்யவில்லை. ஏறத்தாழ 16 ஆண்டுகளாக 120 மாணவிகளின் குளியல் காட்சிகளை அவர் ரகசியமாக படம் எடுத்துள்ளார். படம் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் 12-முதல் 17-வயது வரை உடையவர்கள். மொத்தம் 2 ஆயிரத்து 500 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய வீடியோ பதிவுகள் அவரிடம் இருந்தன. 



ரூ.100 திருட்டு போனதாக புகார் எதிரொலி
12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை
செய்த தலைமை ஆசிரியை
பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
பெங்களூரு, செப்.5- கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் பகுதியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜெயலட்சுமியம்மா என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, தான் வைத்திருந்த 100 ரூபாய் திருட்டு போய் விட்டதாக தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அந்த மாணவியின் வகுப்புக்கு சென்று, வகுப்பறையில் இருந்த 29 மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனாலும் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மா, 12 மாணவிகளின் புத்தகப் பை மற்றும் இருப்பிடத்தில் சோதனையிட்டார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை உள்புறமாக தாழிட்டு, அந்த 12 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பணம் கிடைக்கவில்லை. ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதால் மனமுடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை விசாரித்த மாநில கல்வி துறை அதிகாரி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியம்மாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆவி உலகம்
லண்டனில் இருக்கும் “சொசைட்டி பார் சைக்கிள் ரிசர்ச்” என்ற இயக்கம் 17,000 பேரிடம் பேயைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேள்விகேட்டு கடிதம் அனுப்பியது. அவர்களில் 10 சதவீதம் பேர் பேயைப் பார்த்ததாக சொல்லி யிருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பார்த்திருக்கிறார்களாம். இத்தனைப் பேர் பேயைப் பார்த்திருப்பது சாதாரண விஷயமில்லை என்று கூறுகிறது, அந்த அமைப்பு. சரி, இப்படி தூணிலும், துரும்பிலும் நிறைந்திருக்கும் ஆவிகள் நம் முன் தோன்றினால் அவற்றை எப்படி விரட்டுவது? முதலில் ஆவிகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. பயந்தால்தான் ஆபத்து என்கிறார், பல அனுபவங்களைப் பெற்ற ஆவி ஆராய்ச்சியாளர் பாய்ன், 

இவரும் ஒரு பெண் தான். இவருக்கு ஆவிகள் என்றால் அலாதியான பிரியம். எங்காவது ஆவிகள் நடமாடுவதாக கேள்விப்பட்டால் பெட்டி-படுக்கையோடு அங்கே ஆஜராகி, அதைப் பற்றி ஆராயத்தொடங்கி விடுவார். அவர் தனது ஆராய்ச்சி மூலம் பெற்ற அனுபவங்களையும், ஆவிகளிடம் எக்குதப்பாக நாம் மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிக்க வேண்டும், ஆவிகளை எப்படி விரட்ட வேண்டும் என்றும் விலாவாரியாக சொல்கிறார். ஆவிகளில் நான்கு வகை இருக்கிறதாம். ஒருவர் மரணமே அடைந்திருக்க மாட்டார். ஆனால் வெகு தொலைவில் உள்ள மற்றொருவர் கண்ணுக்கு அந்த ஆவி தெரியும். இது முதல்வகை ஆவி. 

இரண்டாவது வகை, பாசப் பிணைப்போடு சம்பந்தப்பட்டது. ஒருவர் மரணிக்கும் தருவாயில் அவருக்கு வேண்டியவர்கள் முன்பு தோன்றுவது. அல்லது இறந்த உடனே தோன்றுவது. 

மூன்றாவது வகை தான் நாம் அடிக்கடி கேள்விப்படும் சாதாரண ஆவிகள். இவை இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தோன்றும். நாம் கொஞ்சம் பயந்த ஆள் என்றால் நம்மை அதிகமாக பயமுறுத்தும். 

 நான்காவது வகை ஆவிதான் நமது சினிமாக்காரர்களுக்கு பிடித்த ஆவி. பேய்ப் படங்கள் எல்லாவற்றிலும் இந்த ஆவிகள்தான் வந்து நம்மை பயமுறுத்தும். இவை பழம்பெரும் ஆவிகள். இவை எப்போதும் ஒரே இடத்தில் இருக்கும். பாழடைந்த வீடுகள், பழைய கோட்டைகள் போன்ற இடங்கள்தான் இவற்றின் புகலிடம். இந்த ஆவிகள் நூற்றாண்டுகளுக்கு மேல் அங்கு தங்கியிருக்குமாம். 

மனிதர்களில், பயப்படும் மனிதனைத்தான் மற்றவர்கள் மேலும் மிரட்டி பயமுறுத்துவார்கள். தைரியமானவர்களிடம் அதே மனிதர்கள் பணிந்து போவார்கள். இதே லாஜிக்தான் ஆவிகளுக்கும். பயந்தால் அது மேலும் நம்மை பயமுறுத்தும். 

நாம் பயப்படும்போது நமது உடலில் இருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியைத்தான் ஆவிகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் பயத்தில்தான் இறந்து போயிருக்கிறார்களே தவிர, ஆவி தாக்கியதால் அல்ல என்கிறார், பாய்ன். 

ஆவிகள் எதிரே வந்தால் அவற்றை கொஞ்சம் அலட்சியப் படுத்துங்கள். கண்டுகொள்ளாதீர்கள். நம்மை தொடர்ந்து வரும் நாயை விரட்டுவது போல பலமான சைகை மூலம் ‘போ’ என்று விரட்டுங்கள். உங்கள் பயத்தின் மூலம் உங்கள் சக்தியை எடுத்து ஆவிகளை ரீசார்ஜ் செய்து கொள்ள அனுமதித்து விடாதீர்கள். உங்கள் துணிவு ஆவியை அங்கிருந்து நகர்ந்து போக வைத்துவிடும். அடுத்த முறை ஆவி வந்தால் இப்படி செய்து பாருங்களேன்! என்கிறார், பாய்ன்.

Friday, September 4, 2015


காரீயம்
செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே! ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். 

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. 

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணையை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். . 

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். 

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். 

 முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து, தடை செய்யப்பட்டது.

கரும்பு ஒரு கசப்பான வரலாறு 

       இன்று உலகம் முழுக்கவே கரும்பு பெரும் விவசாய விளைபொருளாக இருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாறு தந்த ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதி, ‘தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்தார். 

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டிலேயே கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறையை தெரிந்து வைத்திருந்தார்கள். கி.மு.100-ம் ஆண்டில் இந்த முறை சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்தது தான். 

கி.பி. 636-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. 

இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கசப்பான கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் பெருமளவு உருவாவதற்கு கரும்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் அப்போது இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் மிக தேவைப்பட்டார்கள். 

ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக அடிமைகளை பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கினார்கள். அந்த அடிமைகள் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டார்கள். தோட்ட முதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18-ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். 

இப்படி அடிமைகள் பெருமளவு உருவாவதற்கு கரும்பு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனிக்கும் கரும்பிற்குப் பின்னால் இருக்கும் இந்த கசப்பான வரலாறு இன்றைய தலைமுறை அறியாதது.

Thursday, September 3, 2015


ராஜநாகம் 

உலகில் கிட்டத்தட்ட 2,900 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 10 செ.மீ. நீளம் கொண்ட ‘நூல்‘ பாம்பு முதல் 28 அடி நீளம் கொண்ட ‘அனகோண்டா‘ பாம்பு வரை வகை வகையாய் இருக்கின்றன. இந்த பாம்பு இனங்களுள், ஒரேயோர் இனம் மட்டும்தான் பறவைகளைப் போல் கூடு கட்டி முட்டை இட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். அந்த பாம்பினத்தின் பெயர் ராஜநாகம். இந்த வகைப் பாம்புகள் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், தெற்கு ஆசியப் பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றிலும் 200 இனங்கள் உள்ளன. இவை மற்ற பாம்புகளைவிட புத்திசாலிகள். இவற்றின் கண்பார்வை மிகக் கூர்மையானது. 330 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக்கூட தெளிவாக பார்க்கமுடியும். இரவிலும் இதன் பார்வை படு தெளிவு. ராஜ நாகம் எப்போதும் மற்ற பாம்புகளையே உணவாக உட்கொள்ளும். அப்படி பாம்புகள் கிடைக்காத போது, ஓணான், அணில், பறவைகள் போன்றவற்றை உண்ணும். ராஜநாகங்களில் ஆண், பெண் இரண்டுமே இணைவதற்கு முன்பு ஒருவிதமான புனுகு வாசனையை வெளிப்படுத்துகின்றன. இதுவே நாகப்பாம்பு என்றால் உளுந்து வாசனை வரும். இந்த வாசனையை வைத்துதான் கிராமப்புறங்களில் பாம்பு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள். ராஜநாகங்களில் ஆண், பெண் இணைசேர்ந்த பின்பு 2 மாதம் கழித்து பெண் முட்டையிடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்காக இலை, செத்தை, மரக்குப்பைகளை சேர்த்து கூடு கட்டும். அதன்பின்பு அடை காக்கும். ஆண் பாம்பு, பெண்ணையும், முட்டைகளையும் பாதுகாக்கும். 60-90 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். அவை 50 செ.மீ. நீளம் இருக்கும். முட்டையில் இருந்து குஞ்சுகள் வந்ததும் தாய் விலகி விடும். குஞ்சுகள் தன்னந்தனியாக சுயமாக வளரும். இந்த குஞ்சுகளின் விஷம் கூட பெரியப் பாம்புகளின் விஷம் போலவே வீரியமாக இருக்கும். ராஜநாகம் சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடியது. நுனிவாலை மட்டும் தரையில் பதித்து நேராக நிமிர்ந்து 6 அடி உயரத்துக்கு எழுந்து நின்று, மனிதனை ஆட்டம் காண வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. உலகிலேயே கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று. 20 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. சாதாரணமாக மனிதனைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. சீண்டினால் நேருக்கு நேராக எதிர்த்து தாக்கும் தன்மைக் கொண்டது. இது ஒருமுறை கடித்தால் 7 மி.லி. விஷத்தை செலுத்தும். அது 20 மனிதர்களைக் கொல்ல போதுமானது. ஒரு யானையையும் கொல்லும். விஷம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். முதலில் கண் பார்வை மங்கும், தலை சுற்றி பக்கவாதம் ஏற்படும். இதய ரத்தக் குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். மூச்சுத் திணறி மரணம் சம்பவிக்கும். ராஜநாகம் கடித்தால் அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை உயிர் இருக்கும். இது கடித்தவர்களில் 80 சதவீதம் பேர் மரணத்தையே தழுவியிருக்கிறார்கள். அத்தனை கொடிய விஷம் கொண்டது இது.

Monday, August 31, 2015


மூட நம்பிக்கை மலைத்தொடர்
உலகில் பல்வேறு மர்ம சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் மட்டும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதனால் பல்வேறு சம்பவங்கள் மூடநம்பிக்கையால் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு இடம்தான் அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மூடநம்பிக்கை மலைத்தொடர். இதை சுற்றி நிகழும் சம்பவங்கள் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இந்த மலைத்தொடரை ஜக்கப் வால்ட்ஸ் என்பவர் 1800-ல் கண்டுபிடித்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய தங்கப் புதையல் இருந்த இடம் தெரிந்ததாகவும், அதை யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடைசியாக அவர் நோயால் மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவருடைய நெருங்கிய நண்பரிடம், புதையல் ரகசியத்தை சொன்னாராம். அந்த நண்பர் அதை வேறு சிலரிடம் சொல்ல, அவர்களில், ஒருவர் அவரை கொன்றுவிட்டார். இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை காட்டுத்தீயைப் போல பல இடங்களுக்கும் பரவியது. அப்போது புதையலை தேடிச் சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பி வரவில்லை. அவர்கள் மர்மமான முறையில் இறந்து போனார்கள்!. திரும்பி வந்தவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு வந்ததாக கூறினர். மேலும் அவர்கள் மலைத்தொடரில் புதையலுக்குப் பதில், தங்களுக்கு முன்பு அங்கு சென்றவர்களின் எலும்புக் கூடுகளைத்தான் கண்டார்களாம். அதைப்பற்றி பலவித கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அதனால் அந்த பகுதி மர்மப் பிரதேசமாக மாறியது. மேலும் சிலர் அங்கு ‘டார்டும்ஸ்‘ என்ற குள்ளமான மனிதர்கள் வாழ்வதாகவும், அவர்கள் தான் புதையலை காப்பதாகவும் கூறினார்கள். இதனால் அந்தப் பகுதி மேலும் மர்ம முடிச்சுகள் நிறைந்த பகுதியாக மாறியது. இன்னும் சிலர் அங்கு ‘ஏலியன்ஸ்‘ என்ற வேற்றுக்கிரக மனிதர்கள் வந்து செல்வதாகவும், ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். இன்னும் சிலரோ அந்த இடத்தில் மலைகளுக்கு நடுவே மிகச் சிறிய இடுக்குகள் இருக்கின்றன என்றும், அது நரகத்தின் நுழைவுவாசல் என்றும் அங்கிருந்த மதகுருமார்கள் ஒரு கட்டுக் கதையை கட்டிவிட்டதால், அந்த பகுதியில் திகில் பற்றி எரிந்தது. மக்கள் அந்தப் பக்கம் போகவே பயந்தனர். ஆனால், விஞ்ஞானிகள் வேறு விதமாக கூறுகிறார்கள். மலைத்தொடரில் எப்போதும் வெப்பம் 115 முதல் 125 பாரன்ஹீட் வரை கொதித்துக்கொண்டிருக்கும். இங்கு நீர்நிலைகள் எதுவும் இல்லை. மழை பெய்தாலும் உடனே நீர் வழிந்தோடி வற்றிவிடும். இந்த மலைத் தொடர் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. பல குறுகிய குகைகளும் நிறைய உள்ளன. மிகக் குறுகலான இந்த மலை இடுக்குகளில் நுழைந்து வெளிவரமுடியாமல் மாட்டிக்கொண்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆனாலும் மனிதனுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆசை விடவில்லை. உயிர் போனாலும் பரவாயில்லை. புதையலை அடைந்தே தீருவோம் என்று இன்னும் பலர் அங்கு சென்று கொண்டே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திரும்புவதே இல்லை.

ஒரே நாளில் 97 லிட்டர் பால் தந்த பசு
பசு என்பது பெண் மாட்¬யும், காளை என்பது ஆண் மாட்டையும், இவற்றின் குட்டியை கன்று என்றும் அழைக்கிறார்கள். பசு மாட்டால் உயரமான படிகளில் ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. இறங்குவதற்கு வசதியாக அதன் கால் அமைப்பு இல்லை. அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காததால் அதனால் மேலிருந்து கீழே படிகள் மூலம் இறங்க முடியாது. பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது. ஒரு நாளில் 10 முதல் 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணத்தை கொடுக்கும். ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் இரை உண்ணவும், 7 முதல் 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்கு நேரம் தேவை. அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 முதல் 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது. ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லிட்டர் சிறு நீரும், 15 முதல் 20 கிலோ சாணத்தையும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இதன் அளவு இன்னும் அதிகரிக்கும். பசு மாடு நாள் ஒன்றுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கக் கூடியது. மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகிறது. பசு மாட்டின் வயிற்றில், உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன. மாட்டின் கண்கள், முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது. பசு மாட்டின் நுகரும் உணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 முதல் 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும். பால் கறக்கும் பசு மாடு ஒரு நாளுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுத்துகிறது.. பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி பாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால். 
உலகிலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 லிட்டர் பாலைச் சுரந்தது. ஒரே நாளில் 97 லிட்டர் பாலைச் சுரந்து உலக சாதனை படைத்த மாட்டின் பெயர் உர்பே ஆகும். இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும். இப்படி பசுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன.

வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்
குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்படும். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது. ஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும். இதன்மூலம் இழந்த நீர் சத்தை குழந்தைகளால் பெற முடியும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும். உப்புக் கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம். ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப்போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பார்கள். இதனை தடுக்கக் கூடாது. இதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல் தட்டுதல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

செவித்திறனை பாதிக்கும் ‘ஹெட்போன்’ இசை
மொபைல் என்ற நவீனம் வந்த பின், ஹெட்போன் மூலம் பாடல் கேட்பது தாறுமாறாக வளர்ந்து இருக்கிறது. பஸ், ரெயில், இரைச்சல் மிகுந்த போக்குவரத்து நெரிசலில், அதிக சத்தத்தில் ஹெட்போனில் பாடல் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அருகில் சென்றால் அந்த ஹெட்போனையும் மீறி பாடல்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இப்படி காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு, காது பாதிக்கப்பட்டால், மீண்டும் கேட்கும் சக்தியை பெறவே முடியாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு டினைடஸ் என்று மருத்துவப் பெயர். இந்த நோய் வந்துவிட்டால், சுற்றுப்புறம் சத்தமின்றி அமைதியாக இருந்தாலும், நம் காதுக்குள் மட்டும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இது சில சமயம் மென்மையாகவும், பல நேரங்களில் தாங்கமுடியாத அளவுக்கு அதிக ஒலியுடனும் கேட்கும். இந்த டினைடஸ் வந்துவிட்டால், காதுக்குள் மணி அடிப்பது போலவோ, கடல் அலையைப் போன்ற சத்தமோ, காதுக்குள் காற்று அடைத்துக் கொண்டது போலவோ, சலசலவென்று தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது இனம் புரியாத ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருக்கும். பின்னர் காணாமல் போகும். பல ஆண்டுகளாக இதில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதில் அகநிலைக் காது இரைச்சல், புறநிலைக் காது இரைச்சல் என வேறுபட்ட நிலைகள் உள்ளன.இவை வருவதற்கு முதுமை, அதீத சத்தம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டல நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் ரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்றவை காரணங்களாக கருதப்படுகின்றன. இவை எதுவுமே இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு ஹெட்போன் இசையால் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் உதட்டு அசைவை கவனித்துத்தான் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது தேவையா? இசையை ரசிக்க நினைப்பவர்கள், இரைச்சல் உள்ள இடங்களில் அதை கேட்காதீர்கள். இரவு நேரத்தில் அமைதியான இடத்தில் மிகக் குறைந்த சத்தத்தில் ஹெட்போனில் இசையை கேளுங்கள். அதுவும் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெட்போன் இசையை தவிர்ப்போம். காதுகளைக் காப்போம்!
22.08.2014

ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு
பணம் இன்றைய உலகை ஆளும் மிக முக்கிய பொருள். பணம் வருவதற்கு முன்பு பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்தது. இது ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உலோக நாணயங்கள் 2400 வருடங்களுக்கு முன்பு உபயோகத்தில் வந்தன. அதன் நவீன வடிவம் தான் இன்றைய ரூபாய் நோட்டுகள். ரூபாய் நோட்டு கசங்கி இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது கறைகள் படிந்திருந்தாலோ அதன் மதிப்பை அது இழப்பதில்லை. எந்த நிலையில் இருந்தாலும் அதன் மதிப்பு மாறுவதில்லை. நமது மக்கள் தான் செல்லாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் வாங்குபவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். அவர்கள் குறைந்த பணத்தைக் கொடுத்து, வங்கியில் முழுத் தொகையையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எந்த பணமும் எந்த நிலையிலும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று. வட இந்தியாவில், பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலும் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் தான் கொஞ்சம் கசங்கியிருந்தாலும் செல்லாது என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா? குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அதிக செலவும், மதிப்பு அதிகம் கொண்ட நோட்டுகள் அச்சடிக்க குறைந்த செலவும் ஆகிறது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது. அதனால்தான் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள். (இப்போது மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்). அதேநேரம் ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 48 பைசா மட்டுமே செலவாகிறது. பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 96 பைசாவும், இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 46 பைசாவும், ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 81 பைசாவும், நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 79 பைசாவும், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசாவும், ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க 4 ரூபாய் 6 பைசாவும் செலவாகின்றன. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 100 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட, 50 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. ஒரு நாட்டில் எந்த அளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நாடு அதன் விருப்பத்திற்கு ஏற்ப நோட்டை அச்சடித்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதன்படியே ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடிக்க முடியும். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நாடும் அதன் இஷ்டத்துக்கு பணத்தை அச்சடித்து வெளிவிட்டு விடும்.

புதிய 7 அதிசயங்கள் உருவான விதம்
உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்டவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன. அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்கைளை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் (கி.மு 484, கி.மு.425) மற்றும் காலிமாசஸ் (கி.மு. 305, கி.மு.240) காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ 7 ஒண்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின்படி, சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநரும், விமான பைலட்டுமான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999-ல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணைய தளம் 2001-ல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் 700 அமெரிக்க டாலர்கள் அளித்தார். இந்தப் புதிய அதிசய பட்டியலுக்கான பட்டியலில் ஒரு இடம் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அந்த அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், அவை இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும் என்று பல விதிகளை வகுத்தார். அதன்படி நவம்பர் 24, 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதன்பின்னர், ஜனவரி 1, 2006-ல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அந்தப் பட்டியலும் பரிசீலிக்கப்பட்டது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த “நியூ-7 ஒண்டர்ஸ் தகுதியாளர்” என்ற கவுரவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மகாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈபிள் கோபுரம் உள்ளிட்டவற்றையும் அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகளுடன் வெளியிடப்பட்டது.

நெல்லிக்கனி தரும் நன்மைகள்
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் நெல்லிக்கனியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையானது. நெல்லியின் மருத்துவ குணங்கள் வேறு பழங்களில் இல்லையென்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் அதிகம். மனிதனை இளமையாக வைத்துக்கொள்ள முக்கியமானதாக சொல்லப்படும் காயகல்பத்தில் நெல்லி தான் பிரதான பொருள். மேலும் இது தாது விருத்திக்கும், தலை முடி டானிக்காகவும் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. அதனால் கண்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு மேன்மையான ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்தால் அந்த நீர் தூய்மையான குடிநீராக மாறிவிடும். 100 கிராம் நெல்லிச்சாற்றில் 82 சதவீதம் நீரும், 0.5 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 14 சதவீதம் மாவுப்பொருளும், 3,5 சதவீதம் நார்ச்சத்தும், 50 யூனிட் அளவு கால்சியமும், 20 யூனிட் பாஸ்பரசும், 1.2 யூனிட் இரும்பும், 600 யூனிட் வைட்டமின் ‘சி’யும் உள்ளன. இது பல் நோய், அஜீரணம், மூட்டு வலி ஆகியவற்றை குறைக்கிறது. அருமையான கண் பார்வையை தரும். நீண்ட ஆயுளுக்கு தினமும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி நல்ல பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் போன்றவை குணமாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் ‘சி’ குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி, என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு அதிகம் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுயன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. ஆக, நெல்லியை தினமும் சாப்பிடுவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம்.

மிரட்டும் மலேரியா
சமீபத்திய புள்ளி விவரப்படி மலேரியாவின் தாக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. ‘பிளாஸ்மோடியா’ என்னும் ஓரணு உயிரிதான் இந்த நோயை உண்டாக்குகின்றது. ரத்தத்தில் நுழையும் இந்த ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துக்குள் மனிதனின் ஈரலை அடைந்துவிடும். அது ஈரல் செல்லுக்குள் புகுந்தாலே போதும். அது பலமிக்கதாக மாறி, புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து ரத்தத்துடன் கலந்து விடும். பிளாஸ்மோடியா எனும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உண்டாக்கும் திறன் கொண்டவை. அந்த நான்கு வகைகளிலும் ‘பிளாஸ்மோடியா பல்சிபறம்‘ என்னும் வகையே மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது. மலேரியாவால் ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துபவைதான். இந்த உயிரி மனித ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மலேரியா காய்ச்சலை உருவாக்க முடியும். இந்தநோய் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோயல்ல. எனவே, பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் நம் உடலில் சென்றால் மட்டுமே நோய் உண்டாகும். கொசுக்களில் 400 வகைகள் இருந்தாலும் 30 வகையான கொசுக்கள் மட்டுமே இந்த ஓரணு உயிரியை எடுத்துச் செல்லக் கூடியவை. பல நாடுகளில் குழந்தைகள் 5 வயது முடிவடைவதற்குள்ளாகவே இவை தாக்கி கொன்று விடுகின்றன. இந்த கொசுக்கள் மோப்பம் பிடித்து ஒருவர் தோலை துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள ரத்தக் குழாயைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்படி அவை உறிஞ்சும் ரத்தம் உறைவதைத் தடுக்க ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்பும். அந்த திரவத்தில் ஏற்கனவே வேறு ஒருவரின் உடலை துளைத்தபோது புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருந்தால் புதியவரின் ரத்தத்துடன் கலந்து நோயை உருவாக்கி விடும். தொடக்கத்தில் கூறியதுபோல் மலேரியா குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். காலமாற்றத்தால் இந்த கொசுக்கள் குறைந்து, சிறிது காலம் கழித்து மீண்டும் வீரியமுடன் உயிர் பெற்று மிரட்டினால் என்ன ஆகுமோ என்பது தான் அவர்களது அச்சம். இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், அது தற்போது கொஞ்சம் கூட நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத இன்றைய குழந்தைகளை பெருமளவு பாதிக்கும். ஒரு சுனாமி போல் வந்து மொத்த குழந்தைகளையும் கொன்று அழித்துவிடும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்கால கவலை.

புத்திசாலி யானைகள்
யானைகள் புத்திசாலிகள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதை நிரூபிப்பது போல் இந்த ஆய்வு உள்ளது. ஒரு யானை, தான் கேட்கும் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதை கண்டறிந்து விடுமாம். அது மட்டுமல்ல அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும்கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க காட்டு யானைகள் மத்தியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் ‘ப்ரோசீடிங்க்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்‘ என்கிற அறிவியல் இதழில் வந்துள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கேரன் மெக்கம்ப், கிரேமி ஷானன் ஆகியோர் நடத்தினர். ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கும் அந்தநாட்டில் மாடு மேய்க்கும் ‘மாசாய்‘ இன மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு. மாசாய் இனமக்கள் யானைகளை வன்முறையாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். ஆனால் அதே ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘கம்பா‘ இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வந்தாலும், இந்த இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்வதில்லை. இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். ‘அதோ பாரு, அங்க பாரு! யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு!‘ என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தனர்.இந்த குரல்களை தனியாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்பிரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக சத்தமாக ஒலிபரப்பினர். இதில் மாசாய் இன ஆண்களின் குரல்களை கேட்டவுடன், காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்ப குழுக்களாக ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் செயல்பாடுகளையும், சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தின. இதுதவிர ஒருவித கலவர நிலையில் யானைகள் இருந்தன, இதேபோல் கம்பா இன ஆண்களின் குரலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினர். அதைக்கேட்ட யானைகள் முன்பைப் போல கலவரப்படவில்லை. எச்சரிக்கை ஒலியை மட்டும் விடுத்து, கவனத்துடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதன் மூலம் யானைகளுக்கும் மனிதர்களின் குரலை கண்டறியும் சக்தி உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலவுக்குப் போய்வர கட்டணம் ரூ.8,250 கோடி
நிலவுக்கு மனிதர்களை ஜாலி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்கவிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். கட்டணம் வெறும் ரூ 8,250 கோடிதான்! 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள். அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின் இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர். இப்போது அதை நிறைவேற்றும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். ‘கோல்டன் ஸ்பைக்‘ என்ற நிறுவனம்தான் நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் கெர்ரி கிரிப்பின். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.38 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய வேண்டி வரும். நிலாவுக்கு உல்லாசப்பயணம் சென்றுவர இரண்டு நபர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.8 ஆயிரத்து 250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு நபர்கள் நிலாவுக்கு உல்லாசப் பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படும். “நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத்தகுந்த விதத்தில் சுற்றுலாப்பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்,“ என்கிறார் கிரிப்பின். நிலாவுக்கு முதல் உல்லாசப்பயணம் 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப்பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்பு உள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் நாமெல்லாம் போகும் அளவிற்கு என்றுமே கட்டணம் குறையப் போவதில்லை. அதனால் நிலவு பற்றிய நம் அழகான சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டு பூமியில் இருந்தே நிலவை தரிசிக்கலாம்.

பகல் தூக்கம் நல்லதா?
பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. இப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட போதிலும், ஒரே முடிவுதான் வந்தது. மேலும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாராகாங்கிளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது. இவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித்தூக்கம் மட்டுமே பயன்தரும். அதைவிட்டு ஒரு மணி நேர தூக்கமானது, அதிக நேரம் நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.

‘நிகோட்டின்’ என்னும் நச்சு
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை மீண்டும் மீண்டும் சொன்னாலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு சிகரெட்டில் இருந்து சராசரியாக 1 மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது. நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான ‘ஆல்வியோலி’ என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயணிக்கிறது. ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவீத நிகோட்டினை ‘கோட்டிநைன்’, ‘நிகோட்டின் ஆக்சைட்’ என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் ரத்தத்தில் இருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.). தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்து, சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி ‘கேன்சர்’ வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம். புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்ற பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் மியூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவற்றை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது. அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது. இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய் களை சுருங்கச் செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும். எனவே புகைப்பவர்கள் இனியாவது அதை கைவிடும் முடிவுக்கு வரவேண்டும்.

நெஞ்செரிச்சலை குணமாக்க சில வழிகள்
நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. நேராநேரத்துக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அப்படி சரியான உணவை எடுத்துக்கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும். இந்தநிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும்போதோ அந்த அமிலமானது உணவுக்குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். இதுதவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம். நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம். தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து நீர்த்துப் போய்விடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். லிகோபாக்டர் பைலோரியா எனும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூசை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும். கடல் உணவுகளில் டாரின் என்ற சத்து அதிகம் உள்ளது. இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும். அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் சிறந்தது. வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், எரிச்சலை உண்டாக்கும் அமிலம் சுரப்பதை தடுக்கும். எனவே கால்சியம் உற்பத்திக்கு உதவும் பால் சாப்பிடுவது நல்லது. எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் அதிமதுரம் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கும். இப்படி சில உணவுகள் மூலமும் நெஞ்செரிச்சலை குணப் படுத்தலாம்.