Search This Blog

Wednesday, July 29, 2015


5 பேருக்கு 697 ஆண்டு சிறை 
11 பெண்கள் படுகொலை
 
மெக்சிகோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு 

  மெக்சிகோ, ஜூலை.30- மெக்சிகோவில் சிகுவாகுவா என்ற மாகாணத்தில் 1990-ம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர். இந்த கொலைகள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைந்தது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அங்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ஜூவரெஸ் நகரில் 11 பெண்களை ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்ததாக 5 பேர் பிடிபட்டனர். அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை இல்லாத சாதனை அளவாக அவர்களுக்கு தலா 697 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக அரசு வக்கீல் அலுவலகம் கருத்து தெரிவிக்கையில், “இந்த குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளிகள், பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி பின்னர் கொன்றுள்ளனர்” என்றார். 30/07/2015

ஆலமரம்
ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது. 

கிராமங்களில் பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய நாட்டின் வெப்ப பகுதிகளில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆலமரங்களை நடுகிறார்கள். இந்த மரத்திற்கு ஆங்கிலத்தில் பன்யான் ட்ரீ என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறைவணக்கத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் இந்த மரத்தின் அடியில் அடிக்கடி கூடுவார்கள். எனவே அந்த மரத்துக்கு ஆங்கிலேயர்கள் பனியாக்களின் பெயரையே அந்த மரத்துக்கு வைத்து விட்டார்கள். 

ஆல மரங்களை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை தொடர்ந்து பல மீட்டர் அளவுக்கு அகலமாக விழுதுகள் விட்டுச் செல்லக் கூடியவை. பொதுவாக பல சந்தர்ப்பங்களால் ஆல மரங்கள் முழுமையாக வளர முடிவதில்லை. பல இடங்களில் குழந்தைகள் ஆல மரத்தின் விழுதுகளை ஊஞ்சலாக உபயோகிப்பதால் விழுதுகளும், வேர்களும் சேதம் அடைகின்றன. அதனால் அவை நிலத்தினை வந்து அடைவதில்லை. சில இடங்களில் கால்நடைகள் தங்களின் உணவாக ஆல மரத்தில் இருந்து கீழே தொங்கும் இளம் விழுதுகளை உண்கின்றன. இதனாலும் அந்த விழுதுகள் பூமியை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.

 சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீதையில் ஆல மரத்தின் பெருமை கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவுதான் தடுத்தாலும் ஆல மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பி உண்பதால் அவை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு நாட்டில் விதைகள் பரவி மரங்கள் மீண்டும், மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆல மரத்துக்கு அழிவில்லை என்கிறார்கள்.

Tuesday, July 28, 2015


சென்னையில் ஓடிய ஆறுகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று சென்னையை இரண்டாகப் பிரிக்கும் கூவம் ஆறு. மற்றொன்று தென் சென்னையில் ஓடும் அடையாறு. இந்த அடையாற்றின் கரையில் தான் முதல் கர்நாடகப் போர் நடைபெற்றது. 

கூவம் ஆறு, செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 32 கி.மீ. துரத்திற்கு ஒரு வாய்கால் போல ஓடி வரும் கூவம். அதன்பின் அகன்ற ஆறாக ஓடி வருகிறது. காடுவெட்டி உள்ள திருவேற்காட்டில் இதை பழம்பாலாறு என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்ட நதி இது என்றால் இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். கூவம் ஆறு கோயம்பேடு பகுதியில் சென்னைக்குள் நுழைந்து சேப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட்ட சமயத்தில் சுத்தமான நீர் இந்த கூவத்தில் ஓடியது. மக்கள் இதில் குளித்து இருக்கிறார்கள். கோமலீஸ்வரன் பேட்டை அருகே இது வடக்கு நோக்கி பாய்கிறது. இப்படி வடக்கு நோக்கி பாய்வதை உத்தரவானி என்று அழைக்கிறார்கள். வடக்கு நோக்கிப் பாயும் நதியை புண்ணிய நதி என்பார்கள். அந்த வகையில் கூவமும் புண்ணிய நதியாக இருந்தது. இப்படி சிறந்து விளங்கிய கூவம் ஆறு, இன்று கழிவு நீர் நிறைந்து ஓடும் சாக்கடையாக மாறி இருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் கூவம் நதியின் குறுக்கே 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

கூவத்தின் மொத்த நீளம் 48 கி.மீ. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்து ஏரிகள் நிரம்பும் பொழுது கூவத்தில் அதிகமாக நீர் பாயும். கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருகிறது. கூவம் போலவே சென்னையில் ஓடும் மற்றொரு ஆறு அடையாறு. இது காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, எரித்தாங்களில் உற்பத்தியாகிறது. இது அனகாபுத்தூர் வழியாக ஓடி ஈக்காட்டுத்தாங்கல் அருகே சென்னைக்குள் நுழைகிறது. அதன்பின் சைதாபேட்டை, கிண்டி வழியாக சென்று அடையாறு அருகே கடலில் கலக்கிறது. சென்னை நகரில் அடையாறு மீது 4 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆறிலும் ஒரு காலத்தில் சுத்தமான நீரே ஓடியது. மக்களுக்கும் பயன்பட்டது. 

இன்றைக்கும் கூட அடையாறு சென்னைக்குள் நுழையும் வரை சுத்தமான நீராகவே இருக்கிறது. சென்னையில் நுழைந்தவுடன் அதில் சாக்காடை நீர் கலந்து விடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளும் சென்னைவாசிகளை பிராணயாமம் செய்ய வைக்கிறது. இந்த ஆறுகளை அழகுபடுத்த அவ்வப்போது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிவதுதான் வேதனை.

Monday, July 27, 2015


பட்டு பிறந்த வரலாறு
பட்டு சேலைக்கு மயங்காத பெண்களே இல்லை எனலாம். காஞ்சிப் பட்டு, பனாரஸ் பட்டு, பெல்ஜியம் பட்டு என்று ஏகப்பட்ட பட்டு சேலைகள் மங்கையரின் கனவுகளில் தொந்தரவு செய்கின்றன. இந்த பட்டு பிறந்த கதை மிக சுவாரசியமானது. 

 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பட்டு உற்பத்தி செய்ய கற்று இருந்தனர். சீன நாட்டு அரசி ஷீலிங்ஷீ ஒரு நாள் கை கழுவும் போது, நீர்த் தொட்டியின் அருகில் இருந்த செடியில் பட்டுப் புழுக்கூடு தொங்குவதை பார்த்தாள். 

உடனே அதை எடுத்து தொட்டியில் போட்டு வைத்தாள். மறுநாள் காலை அந்த தொட்டியை பார்த்த போது, அதில் இருந்த நீரில் மெல்லிய நூலிழைகள் இருப்பதைக் பார்த்தாள். நூலின் ஒரு முனையை பிடித்து இழுத்த போது, அது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த நூலைக் கொண்டு ஆடைகளைத் தயாரிக்கலாம் என்று அரசி கூறினாள். 

இதையடுத்து பட்டுத் துணியின் மவுசு, வண்ணத்துப் பூச்சியாக சிறகடித்து உலகம் முழுவதும் பறந்தது. பல நூற்றாண்டுகள் வரை சீனர்கள் பட்டுத் தயாரிப்பை படுரகசியமாக வைத்திருந்தனர். இந்தப் பட்டுத் துணியை வாங்குவதற்காக பல நாட்டினரும் சீனாவுக்கு சென்றனர். இறுதியில் மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானியர்களுக்கு பட்டின் ரகசியம் பிடிபட்டது. அவர்களும் வெகு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். 

கி.பி.550-ல் பைஸண்டிய நாட்டின் அரசன் ஜஸ்டினியன் பட்டு ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக, தனது ஒற்றர்கள் இருவரை மதகுருமார்கள் வேடத்தில் சீனாவிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மூங்கில் குழாயினுள் பட்டுப் புழு முட்டைகளை சேகரித்து ரகசியமாக சீனாவில் இருந்து கொண்டு வந்தனர். அதன் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு பெருகி, பட்டுநூல் உற்பத்தி செய்யும் கலை உலகெங்கும் பரவியது. 

தற்போது சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகள் பட்டு உற்பத்திக்காக பட்டுப் புழுவை வளர்க்கின்றன. பெண் பட்டுப் பூச்சி, முசுக் கொட்டை செடியின் இலைகளில் 500 முட்டைகளை இடும். 10 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். நோயுள்ள புழுக்களை எடுத்துவிட்டு ஆரோக்கியமான புழுக்களை வளர்க்கின்றனர். 

 இந்தப் பட்டுப் புழுக்களின் வாயின் அடியிலுள்ள துவாரம் வழியாக வரும் இழையே பட்டு. 25 நாட்களில் பட்டுப் புழு வளர்ச்சியடைந்தால் அதற்கு இறக்கை முளைத்து கூட்டைப் பிளந்து கொண்டு வண்ணத்துப் பூச்சியாகப் பறந்துவிடும். இப்படி பூச்சி வெளிவந்து விட்டால் நூல் ஒரே இழையாக நூற்க பயனற்றதாக ஆகிவிடும். அதானால்தான், பூச்சி வெளிவரும் முன்பே அதை வெந்நீரில் போட்டுக் கொன்றுவிடுகிறார்கள். 

ஒரு பட்டுப் புழுவில் இருந்து, அதன் எடையில் ஐந்தில் ஒரு பங்கு பட்டு கிடைக்கும். இந்த பட்டு 500 முதல் 1300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பட்டு நூல் அதே கனம் கொண்ட உருக்குக் கம்பி போல் உறுதியானது. அழகையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் வைத்து பார்த்தால் உலகிலேயே மிகவும் தரமான மேன்மையான பட்டு இத்தாலிய நாட்டுப் பட்டுதான்.

Saturday, July 25, 2015


ஆசியாவின் முதல் தேசிய பூங்கா
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் பலரை உருவாக்கும் பயிற்சி மையங்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளன. இந்த மாநிலம் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. இங்கு தான், இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் பூங்கா உள்ளது. இது 1936-ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்த பூங்காவின் பெயர் ஹெய்லி தேசிய பூங்கா. இங்கு தான் முதன்முதலில் புலிகளை பாதுகாக்கும் மையம் தொடங்கப்பட்டது. அரிய வகை விலங்கினமான பெங்கால் டைகர்ஸ் என்று சொல்லப்படும் வங்காளப் புலிகள் இந்த பூங்காவில் மட்டுமே அதிக அளவு காணப்படுகின்றன. இந்த பூங்கா 201 மைல் பரப்பளவு கொண்டது. இதில் 73 சதவீதம் வனப்பகுதியாகும். 10 சதவீதம் பசும்புல் தரையை கொண்டது. இங்கு மரங்களில் வாழும் 110 உயிரினங்களும், 50 வகையான பாலூட்டிகளும், 580 வகையான பறவை இனங்களும், 25 அரியவகை உயிரினங்களும் உள்ளன. இந்த பூங்கா உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த பகுதி தெஹ்ரி கார்வால் என்ற மன்னரின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. போக்சாஸ் என்ற பழங்குடி மக்கள் இந்த பகுதியில் குடியேறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். ஆனால் 1860-களில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பதில் பெரும் முயற்சி எடுத்தவர் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரி மேஜர் ரம்சே ஆவார். அவர் தான் முதன் முதலில் இந்த வனப்பகுதியை பாதுகாக்க, 1868-ல் வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதியை கொண்டு வந்தார். பின்னர் 1879-ல் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1900-ல் இந்த வனப்பகுதியில் ஒரு தேசிய பூங்கா உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் நிர்வாகம் 1907-ல் தனது முயற்சியை தொடங்கியது. 1930-ல் இந்த பகுதி பிரிட்டிஷ் அலுவலர் ஜிம்கார்பெட் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதைய கவர்னர் மால்கம் ஹெய்லி பெயரில் 125 மைல் பரப்பளவில் தேசிய பூங்காவாக 1936-ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் முதல் தேசிய பூங்காவும் இது தான். இந்த வனப்பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான மரங்கள் வெட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 2-ம் உலகப்போரின் போது இந்த பூங்காவில் விலங்குகளை வேட்டையாடி, கடத்தி செல்வதும், அளவுக்கதிகமாக மரங்கள் வெட்டுவதும் நிகழ்ந்தது. பின்னர் இந்த பூங்கா 1955-ல் ராம்கங்கா தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுபடியும் 1956-ல் கார்பெட் தேசிய பூங்காவாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த பெயர் பூங்காவை உருவாக்கிய ஜிம் கார்பெட் நினைவாக வைக்கப்பட்டது. வங்கப்புலிகள் தான் இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். அதற்கு அடுத்த இடத்தை யானைகள் பிடித்துள்ளன. இவை இரண்டும் அதிக அளவில் காணப்படுவது இந்தியாவில் இந்த ஜிம் கார்பெட் பூங்காவில் மட்டுமே. 1993- முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்ற காலாமாகும். இங்கு ஜீப், டிரக் ஆகியவற்றில் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் ஒரே அவசர எண்
எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கணினி மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 1800180551 என்று அனைத்திற்கும் ஒரு எண் உண்டு. இவற்றை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது. இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது வெகு சுலபமாக உள்ளது. அங்கு ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண்கள் தான் 911, 112. இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்திற்கோ சென்றடையும் படி அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் 911, 112 என்ற எண்களை டயல் செய்தால் தானாக அவசர எண் 100க்கு சென்று சேருவது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள். செல்போன்களில் பேசினால் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட் லாக் ஆகியிருந்தால் கூட 1, 2, 9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சிம் கார்டே இல்லாமல் இருந்தாலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்யமுடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.

Thursday, July 23, 2015


அறுவடைத் திருவிழா
உணவுப் பயிர்கள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அறுவடை செய்யும் போது பயிர்களில் உள்ள ஆவி கோபமடையும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த கோபத்தை குறைக்க அவற்றுக்கு படையல் செலுத்த வேண்டும் என்பது ஆதியில் இருந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் தான் அறுவடைத் திருவிழாக்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன. 

கிரேக்க, ரோம், எகிப்திய, எபிரேய கலாச்சாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழாக்களை கொண்டாடியிருக்கின்றனர். கொரியாவில் ‘சூசாக்‘ எனும் பெயரிலும், ஜப்பானியர்கள் ‘டோரினோய்ச்சி‘ என்ற பெயரிலும் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். 

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையும், சீனாவில் ஆகஸ்ட் நிலா விழா என்ற பெயரிலும் அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. வியட்நாமில் ‘தெட் திரங்‘ எனும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் 15-ம் நாளில் நடத்தப்படுகிறது. இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் 15-வது நாள் சக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவை கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இந்த விழாவில் இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்பு பரிசுகளாக கருதப்பட்டு பெருமைப்படுத்தப்படுகின்றனர். ரோமானியர்கள் அக்டோபர் 4-ம் நாள் செரிலியா எனும் விழாவை கொண்டாடுகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுகின்றன. 

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் ஜூன் மாதம் 2-ம் நாள் அறுவடை நாள் விழா நடத்தப்படுகிறது. தமிழர்களின் பொங்கல் விழாவும் அறுவடைத்திருநாள் தான். 

இவ்வாறு உலகமெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள், இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், இறைவனோடும் சக உயிர்களுடனும் மனிதன் கொள்கிற உறவையும் வெளிப்படுத்துவதாக திகழ்கின்றன.

நியூட்ரானை கண்டறிந்த ஜூலியட்
ஜூலியட் கியூரி என்ற பெண் விஞ்ஞானி தான் நியூட்ரானை கண்டுபிடித்தவர். கியூரி என்ற பெயரை கேட்டவுடனே எல்லோருக்கும் மேரி கியூரிதான் நினைவுக்கு வரும். அந்த மேரி கியூரியின் மகள்தான் ஜூலியட் கியூரி. பொதுவாக விஞ்ஞானிகளின் குழந்தைகள் விஞ்ஞானிகளாக வருவதில்லை. அந்த சித்தாந்தத்தில் விதிவிலக்கானவர் ஜூலியட். இவரின் முழுப்பெயர் ஐரீன் கியூரி ஜூலியட். 1897 செப்டம்பர் 12-ல் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பெற்றோரின் குழந்தை என்பதை மறந்து, கடுமையாக உழைத்து படித்தார், ஜூலியட். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் முடித்த கையோடு, முதல் உலகப் போரின் போது ஒரு செவிலியராகவும் வானிலை கருவியில் சிக்னல்களை அனுப்புபவராகவும் வேலைக்கு சேர்ந்தார். அதன்பின்பு ஆல்பா கதிர்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 1926-ல் தன்னுடன் பணிபுரிந்த பெட்ரிக்கை மணந்து ஹெலன், பியரி என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆறு வருடங்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தினர். அதன் பலனாக செயற்கை கதிர்வீச்சை கண்டுபிடித்தனர். சீராக இருக்கும் தனிமங்கள், சீரற்றவையாக கலைக்கப்பட்டால், செயற்கை கதிர்வீச்சை பெற முடியும் என்பதை இருவரும் இணைந்தே கண்டுபிடித்தனர். இன்று புதிய வகை தானியங்கள், மருத்துவம், உணவு பகுத்தல் போன்ற பல துறைகளுக்கு அணுக்கதிர்வீச்சை பயன்படுத்தவும் இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதற்காக இந்த தம்பதியருக்கு 1935-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வது குறைவு. செல்லும் இடமெல்லாம் பாராட்டு, விருந்து, உபசரிப்பு, புகழ் போன்றவற்றால் காலத்தை கழித்து விடுவார்கள். ஆனால் ஜூலியட் கியூரி அப்படி செய்யவில்லை. தனது ஆய்வுகளை தொடர்ந்தார். அணுவின் நேர்மின் துகள்களாக புரோட்டானும், எதிர்மின் துகள்களாக எலக்ட்ரானும் இருப்பது போல் மின் தன்மையற்ற நியூட்ரான் இருப்பதையும், அணுப்பிளவு போல், அணு இணைப்பும் ஏராளமான சக்தியை வெளிப்படுத்தும் என்பதை 1938-ல் அவர் கண்டுபிடித்தார். அடுத்த ஆண்டே இரண்டாவது உலகப் போர் தொடங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டால் அரசு அதை யுத்தத்திற்கு பயன்படுத்தும் என்று கருதி தனது கண்டுபிடிப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து, போர் முடிந்தபின் வெளியிட்டார். அதோடு யுத்தம் முடிந்ததும் ரேடியம் கல்வியகத்தின் இயக்குனராக ஜூலியட் கியூரி நியமிக்கப்பட்டார். 

ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்ட ஜூலியட் கியூரி தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளாகி லுக்கேமியா நோயால் தாக்கப்பட்டு 1956 மார்ச் 17ல் இறந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள், மருமகன் என்று அனைவரும் நோபல் பரிசு பெற்றது கியூரி குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பெருமை.

Monday, July 20, 2015


ஆடை அவிழ்ப்பு தொழிலை பெருமையாக கருதும் ஆண்கள்
அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதிகளில், ஆடை அவிழ்த்து, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் தொழிலில் பெண்களைப் போல ஆண்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மரன் ஸ்கல் என்பவர் ஒரு ஆய்வு நடத்தினார். இதற்காக அவர் அத்தகைய விடுதி ஒன்றுக்கு 2 ஆண்டுகளாக சென்று வந்தார். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்களை பேட்டி கண்டார். அதில், ஆடை அவிழ்ப்புக்கு, பெண்களை விட ஆண்களுக்கு அதிக சம்பளம் அளிக்கப்படுவதை அறிந்தார். பெண்கள், பணத்துக்காக மட்டுமே அந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பதையும், ஆண்களோ, தொடக்கத்தில் பணத்துக்காக ஈடுபட்ட போதிலும், நாளடைவில் அவர்களுக்கு அது ஒரு பெருமையான, பிடித்தமான விஷயமாக ஆகிவிட்டதையும் கண்டறிந்தார். நிர்வாண அழகன்கள் பலர், தங்களது தன்னம்பிக்கை உயர்ந்திருப்பதாக கூறினர். 21/07/2014

இறக்கும் இந்திய குழந்தைகள்
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை நமது நாடு சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இளமை இந்தியாவில் குழந்தைகளின் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்து போவதாகவும், அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை, உலக அளவில் நமது நாட்டில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த அளவிற்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் இந்த வயதுடைய 3.8 குழந்தைகள் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான். உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன், நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. நம் நாட்டின் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது உலக அளவில் மிக அதிகம் தான். ஐ.நா.வின் கணக்கீடுப்படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. இதில் 33 சதவீதத்தினர் நமது நாட்டில் உள்ளனர். இவற்றில் பெருமளவு போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. 2008-ம் ஆண்டு தகவலின்படி நாட்டில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு. நாட்டில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இளமையான மக்கள் தொகை நம் நாட்டிற்குக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

உலகின் முதல் பெண் விஞ்ஞானி
இன்றைக்கு வேதியியல்துறை மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த துறை மட்டும் இல்லையென்றால், நமக்கு பல நவீன பொருட்கள் கிடைத்து இருக்காது. இந்த வேதியியலை தனிப்பெரும் துறையாக அடையாளம் காண வைத்த பெருமை மரியா ஜூயசை சேரும். மரியா தனது கண்டுபிடிப்புகளை ‘மரியா ப்ராக்டிகா’ என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் வேதியியலின் சோதனைகள் மூலம் நேரடியாக கண்ட உண்மைகளை அதில் எழுதி இருந்தார். உலோகங்கள் தனிமங்களா? என்ற ஆய்வில் இருந்து, அவற்றின் உருகும் தன்மை போன்ற 70-க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துள்ளார். உயிரினங்களில் ஆணும், பெண்ணும் இணைந்து, ஒரு புதிய உயிர் தோன்றுகிறது. அந்த உயிர் தனது தாய், தந்தையரின் பண்புகளை பெற்றிருப்பது போல, இரண்டு வெவ்வேறு உலோக தனிமங்கள், ஒன்றிணையும் போது, அதில் கிடைக்கும் புதிய கலவை, இரண்டு தனிமங்களின் பண்புகளோடு, புதிய சிறப்பு பண்புகளையும் பெறுகிறது என்று முதலில் உலகுக்கு உணர்த்தியவர் மரியாதான். தங்கத்தை பெண்கள் அணியும் அணிகலனாக மாற்றியவரும், தங்கத்தை காரட் என்ற புதிய அளவையில் அளக்க வேண்டும் என்று காரட் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். 24 காரட் தங்கத்தில் தாமிரம் போன்ற மற்றொரு தனிமத்தை சரியான விகிதத்தில் கலந்தால் மட்டுமே அதை அணிகலனாக வளைக்க முடியும். இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி 22 காரட் தங்கத்தை உருவாக்கியவர் மரியா. பாதரசம், சல்பர், காரீயம் போன்றவற்றை உயர் நொதிநிலைக்கு உட்படுத்தி, அந்த வெப்பத்தில் தாமிரத்தை உருக்கும் புதிய உத்தியை கண்டுபிடித்தார். சல்பரின் ஆவி நிலை தங்கம் போல பளபளக்கும். அதில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முயன்றார். பின்னர் அது தவறு என்பதை கண்டுபிடித்தார். அதை வெள்ளி சல்பைடு என்ற புதிய தனிமமாக கண்டறிந்தார். இத்தனை கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திய மரியாவை சுத்தமாக சரித்திரமும், விஞ்ஞானமும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் துயரம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் மரியா. அதனால் பெயர் குழப்பங்களும் உள்ளன. பைபிளில் வரும் மோசசின் சகோதரி மிரியம் தான் மரியா என்று கூறுபவர்களும் உண்டு.

குழந்தையை விற்க முயன்ற தந்தை
வறுமையில் வாடும் நாடுகளில் கைக் குழந்தைகளை விற்பனை செய்வது சர்வசாதாரண குற்றச்செயலாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அபூர்வம். ஆனால், இதுபோன்றதொரு சம்பவம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்துள்ளது. அந்த நகரில் உள்ள நடைபாதை கடைப் பகுதியில் 28 வயது ஆண் ஒருவர் பிறந்த 3 மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்தவாறு ரூ.1 லட்சத்துக்கு (ஆயிரம் பவுண்டுகள்) விற்பனை செய்ய ஒருவரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மான்செஸ்டர் போலீசார் கைது செய்தனர். அந்த குழந்தை அங்குள்ள காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தை யாருக்கு சொந்தமானது? குழந்தையை பெற்ற பெண் எங்கிருக்கிறார்? என்பது பற்றி மான்செஸ்டர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 20/07/2015

விசாரணை கைதிகள்

மனித உரிமைகள் அமைப்பு 1960-ல் உருவாக்கிய வார்த்தைகள் தான் ‘பிரிசனர் ஆப் கான்சியஸ்’ என்பது. இதற்கு எந்த ஒரு செயலையும் செய்யாமல் தன்னுடைய இனம், மதம், நிறம், மொழி, நம்பிக்கை, வாழ்க்கை முறை, இனச்சேர்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர்களைத் தான் பிரிசனர் ஆப் கான்சியஸ் என்று கூறுகிறார்கள். இந்த வகை கைதிகள் உலகம் முழுவதும் ஏராளமானோர் இருக்கிறார்கள். 

டிராவிஸ் பிஷப் என்ற அமெரிக்க ராணுவவீரர் செய்த தவறு ‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று சொன்னது தான். இன்று வரை அவர் சிறையில் இருக்கிறார். 

மெக்சிகோவின் சாண்டியாகோ பகுதியில் உள்ள ஒரு சந்தையில், பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி அதிகாரிகள் சோதனைக்குச் சென்றனர். அங்கு கடை போட்டிருந்தவர்களை அவர்கள் மிரட்டினர். அப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் ஜெஸிந்ரா பிரான்சிஸ்கோ மார்ஷியல் என்ற ஐஸ்கிரீம் விற்கும் பெண்ணின் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினர். அது பொய் வழக்கு என்று நிரூபிக்க 21 வருடங்கள் ஆயிற்று. ஆனால் அதுவரை அந்த பெண் கைதியாக சிறையில் இருந்தார். 

இவ்வாறு குற்றம் செய்யாமல் சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் ஏராளம். இந்திய சிறைகளில் கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 357 கைதிகள் இருந்தனர். (ஆனால் இந்திய சிறைகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 87 பேரை அடைப்பதற்கான இடவசதியே உள்ளது). சிறையில் இருக்கும் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள் அல்ல. 

இவர்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 38 பேர் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள். படிப்பறிவும், வசதியுமற்ற இந்த கைதிகள் 20, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கிடைத்தாலே, அதிகபட்சமாக 14 ஆண்டுகள் தான் சிறை. ஆனால் வழக்கு விசாரணை என்ற பெயரில் ஆயுளுக்கும், சிறை தண்டனையை கொடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றன 

அந்தந்த நாட்டு அரசாங்கங்கள். இதில் ஒரு மாற்றம் வந்தால் தான் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் விமோசனம் வரும், அவர்களது எண்ணிக்கையும் குறையும்.

Friday, July 17, 2015


‘ஹை-ஹீல்ஸ்’ ஆபத்து

பெண்களுக்கு அழகான தோற்றத்தை தரக்கூடிய பொருட்களில் ஒன்று ஹை-ஹீல்ஸ். ஆனாலும் 50 சதவீத ஹை-ஹீல்ஸ் பெண்களுக்கு பாதவலி, சுளுக்கு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலத்துக்கு ஹை-ஹீல்ஸ் அணிவதால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் தவிர குதிகாலின் பின்பகுதி பெரிதாகி துருத்திக்கொண்டு சிவப்பாகவோ அல்லது வீங்கியோ இருக்கலாம். எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது, குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம். இதனால் தட்டையான காலணிகளை அணிய முடியாமல் போகலாம். முதுகெலும்பு நகர்வு, அதன் மீது அதிகபட்ச அழுத்தம் அல்லது மூட்டிணைப்பு இடம் நகர்வு போன்ற உடல் தோற்ற பிரச்சினைகளுக்கு ஹை-ஹீல்ஸ் காரணமாக அமைகிறது. தொடர்ந்து ஹை-ஹீல்ஸ் அணிவதால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஹை-ஹீல்சுக்குள் காலைத்திணிப்பதால் ஒரே நாளில் பாதம் சுமார் 455 கிலோ சக்தியை உள்வாங்குகிறது. பாதத்தில் இருந்து அதிகப்படி ரத்தம் வெளியேறி வீக்கம் உருவாகிறது. இந்த வீக்கத்தை குறைக்க ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை குளிர்ந்த நீரையும், சுடு தண்ணீரையும் மாற்றி, மாற்றி ஊற்றவும். கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி காயவைக்கவும்.சில பயிற்சிகளையும் செய்தால் கால்வலியில் இருந்து மீளலாம். காலில் வலி, வீக்கம் அதிகமானால் காலணிகளை கழற்றிவிட்டு அமருங்கள். சிறிய பந்தின் மீது காலை வைத்து உருட்ட வேண்டும். அடுத்த காலுக்கு மாற்றி அதையே செய்யவும். கோலிக் குண்டுகளை தரையில் சிதறச்செய்து கால்விரல்களால் ஒவ்வொன்றாக பற்றி எடுக்கவும். கால்விரல்களை கீழ்நோக்கி நீட்டவும். பின்னர் மேல்நோக்கி வளையுங்கள். இதை தலா 6 முறை செய்தால் நல்லது.அதே போல் ஹை-ஹீல்ஸ் அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது. முழுக்கட்டுப்பாடு கிடைக்காது. காலணியின் பின்புறமும் சேதம் அடையும். கூடியவரை ஹீஸ்ஸ் உபயோகிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மீறி உபயோகிக்க வேண்டும் என்றால் மேற்சொன்ன பயிற்சியை தவறாது செய்து வந்தால் பாதிப்பில் இருந்து ஓரளவு பாதங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Thursday, July 16, 2015


காதல் திருவிழா

காதலுக்கென்றே யூதர்கள் ஒரு திருவிழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாற்கு ‘தூ பி ஆவ்’ என்று பெயர். யூதர்களின் மிக முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று. அவர்களின் காலண்டர் வழக்கப்படி ‘ஏவ்’ என்ற மாதத்தில் இது கொண்டாடப்படுகிறது. நமது காலண்டர்படி பார்த்தால் ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் இந்த திருவிழா வரும். இந்த மாதங்களில் கடுமையான குளிர் விடைபெற்று, கதகதப்பான கோடைகாலம் தொடங்கும். குளிருக்கு விடை கொடுத்து, ஒளியை வரவேற்பது தான் திருவிழாவின் நோக்கம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு இது மிக விஷேசமான திருவிழாவாகும். ஊரில் உள்ள திராட்சை தோட்டங்களில் கன்னிப் பெண்கள் அனைவரும் கூடுவார்கள். எல்லோருமே வெள்ளைநிற கவுன்தான் அணிய வேண்டும் என்பது விதி. பொருளாதார வித்தியாசத்தை உடையில் காட்டக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனாலும் பணக்காரப் பெண்களின் உடையை ஏழைத் தோழிகளும், ஏழைப் பெண்களின் உடைகளை பணக்கார தோழிகளும் அணிந்து கொள்வது நடக்கும். இது எல்லாமே ஆண்களை குழப்புவதற்குதான். திராட்சை தோட்டத்துக்கு வந்து குவியும் கன்னிப் பெண்கள் தங்கள் தோழிகளோடு சேர்ந்து ஆட்டம், பாட்டம் என திருவிழா, களை கட்டத் தொடங்கும். அப்போது அந்த ஊரில் உள்ள திருமணமாகாத ஆண்கள் வந்து சேருவார்கள். அதன்பிறகு தான் திருவிழா உச்சத்தை தொடும். பெண்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஒரு கூட்டம் ‘அழகுதான் பெண்களுக்கு பெருமை. அதைப் பொறுத்து முடிவு செய்!’ என்று ஆண்களைப் பார்த்து பாடும். உடனே அதற்கு பதில் கூறுவது போல் மற்றொரு கூட்டம், ‘குழந்தைகள் நல்லவிதமாக வளர வேண்டாமா? அதற்கு பெருமை மிகு குடும்பத்தின் நல்ல பெண்களை தேர்வு செய்!’ என்று பாடும். இப்படி கூட்டம் கூட்டமாக பாடும் பெண்கள் தனியாக பிரிந்து ‘என்னை தேர்வு செய், நமது திருமணம் சொர்க்கத்துக்கு ஒப்பானது. நான் உனக்கு பெரும் இன்பத்தையும், நல்ல குழந்தைகளையும் பெற்றுத் தருவேன்’ என்று பாடுவார்கள். திராட்சை தோட்டத்தில் இப்படி ஆடிப்பாடும் பெண்களுக்கு, ஒரு ஆண் அந்தப் பெண்ணின் காதலை ஏற்றுக்கொண்டால், அவர்கள் கடைசி வரை இணைபிரியாமல் கணவன், மனைவியாக வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. தற்போது நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் காதல் திருவிழா, திராட்சை தோட்டத்தில் நடைபெறுவதற்கு பதிலாக, மண்டபங்களிலும், ஓட்டல்களிலும் நடைபெறுகின்றன. பாரம்பரிய முறைப்படி மீண்டும், இந்த திருவிழாவை திராட்சை தோட்டத்தில் நடத்த வேண்டும் என்று ஒருதரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

Tuesday, July 14, 2015



மிகப்பெரிய அறுவை சிகிச்சை
வரலாற்றுக் காலத்தில் வைத்திய முறையில் எந்த வகை நோய்க்கும் உடலுக்குள் செல்லும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டு வந்தது. உறுப்பு உபாதைகள், உடல் காயங்கள், கட்டிகள் போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் இதே போன்ற உள் மருந்து, சூரணம், லேகியம் ஆகியவையே கொடுக்கப்பட்டன. பாதிப்பு உண்டாக்கும் கட்டிகள், உறுப்புப் பகுதிகள் அந்நாட்களில் உடலில் இருந்து அகற்றப்படாமல் மருந்து மூலமே குணமாகி விடும் என்றே நம்பினார்கள். இதனால் கொடிய நோய் வாய்ப்பட்டவர்கள் பலர் அதிக எண்ணிக்கையில் இறந்து போனார்கள். 16-ம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை முறை அறிமுகம் ஆனது. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த ஒரு சிறு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த முதல் அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா? 

ஒரு எரியும் மெழுகுவர்த்தியும், குறடு ஒன்றும், நோயாளி வலி தாங்க முடியாமல், துள்ளி எழுந்து விடாமல் இருக்க, அமுக்கி பிடித்துக் கொள்ள 2 வேலையாட்களும் இருந்தனர். சில காலம் சென்ற பின் விஞ்ஞான வளர்ச்சியையொட்டி மருத்துவமும் முன்னேற அறுவை சிகிச்சை முறையும் மிகவும் பிரபலம் அடைந்தது. உறுப்புக்களை மாற்றி வைத்து தைக்கும் அளவுக்கு அறுவை சிகிச்சைகள் முன்னேற்றம் பெற்றன. இந்த முன்னேற்றத்துக்கு ஒரு மைல் கல்லாக சில ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ஆப்பிரிக்காவில் டாக்டர் கிறிஸ்டியன் மெர்னார்டு செய்த அறுவை சிகிச்சை விளங்கியது. இது ஒரு மிகச் சிறந்த, கடினமான அறுவை சிகிச்சை என ஒப்புக் கொள்ளாத மருத்துவ நிபுணரே உலகில் எவரும் இல்லை. ஆனால் இதைவிட மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று அமெரிக்காவில் நடந்தது. இந்த சிகிச்சையில் 90 கிலோ எடை உள்ள கர்ப்பப் பை கட்டி ஒன்றினை 30 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுத்தார்கள். 

கலிபோர்னியாவில் பல்கலைக்கழக மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 7 மருத்துவர்கள் கொண்ட குழு 1978-ம் ஆண்டு மே மாதம் இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த அறுவை சிகிச்சையின்போது வெளிப்பட்ட கட்டி 74 லிட்டர் நீராக உடைந்து வெளியேறிய பின்னும் 18 கிலோ எடை சதைப் பிண்டமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் 172 கிலோ எடையில் இருந்த அந்த நோயாளி சிகிச்சை முடிந்ததும் 82 கிலோ எடையானார் என்றால் இது எவ்வளவு பெரிய அளவில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை என்பதை புரிந்து கொள்ள முடியும்.


கல்யாண மன்னன்

இன்று டி.வி., ரேடியோ, மருத்துவமனை, காவல் நிலையம் என்று 24 மணி நேரமும் இயங்கும் அமைப்புகள் பல இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இருக்கும் தேவாலயம் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். அந்த தேவாலயத்தின் பெயர் பிரெஞ்ச் குவாட்டர். எப்போது காதல் ஜோடிகள் வந்தாலும் அவர்களுக்கு அங்கிருக்கும் பாதிரியார் டோனி டலவேரா திருமணம் செய்து வைப்பது வழக்கம். இவருக்கு காதலர்கள் மத்தியில் ‘ரொமான்ஸ் பாதர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. 

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 5 வயது மிகாவும், 6 வயது அன்னாவும் குழந்தை காதலர்கள். அவர்களுக்கு ஆப்பிரிக்கா சென்று திருமணம் செய்து கொள்ள ஆசை. ஒருநாள் வீட்டில் பெற்றோர்கள் அசந்த நேரம் பார்த்து நீச்சல் உடை, குளிர் கண்ணாடி, மிதவைகளை பைகளில் அடைத்து வைத்து, அன்னாவும் அவளின் தங்கையையும் (சாட்சிக்காக) அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்றிருக்கிறான் மிகா. வெளிநாடு செல்ல விசா, பாஸ்போர்ட் போன்றவைகள் தேவை என்பதை தெரியாத மிகா போலீசில் மாட்டிக்கொண்டான். இப்பவே இப்படியா என்று மிரண்டு போன போலீஸ் 3 பேரையும் வீட்டுக்கு கொண்டுபோய் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு வந்தது. 

ஒரு தனி மனிதன் 158 திருமணங்கள் செய்து சந்தோஷமாக வாழ முடியுமா? அப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெர்சியாவின் அரசர். அவர் பெயர் பாத் அலி ஷா. இம்சை அரசன் 24ம் புலிகேசி போல இவருக்கும் போர் என்றால் பயம். எந்த மன்னராவது போர் தொடுக்க தயாரானால் உடனே வெள்ளைக் கொடியோடு ஆரவாரமாக கிளம்பிவிடுவார். அந்த நாட்டு இளவரசியை மனைவியாக்கிக் கொள்வார். சொந்தக்காரன் கிட்ட என்ன சண்டை போடுவது என்று எதிரி அரசர்களும் விட்டு விடுவார்கள். இப்படியாக மொத்தம் 158 பேரை திருமணம் செய்து கொண்டார் ஷா. கடைசிவரை இந்த கல்யாண மன்னனுக்கு, தனது மனைவிகளின் பாதிப்பேரின் பெயர் கூட தெரியாது. 158 மனைவிகள் மூலம் 260 குழந்தைகளை பெற்று தள்ளி இருக்கிறார். அவர் இறக்கும் போது 780 பேரக்குழந்தைகள் இருந்தனர். நிஜத்திலும் ஒரு இம்சை அரசன் இருந்திருக்கிறார்.

Monday, July 13, 2015


நாற்காலியுடன் பறந்தவர் கைது
கனடாவின் கல்காரி பகுதியை சேர்ந்த வாலிபர் டேனியல் பூரியா. இவர் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பலூன்களை ஆன்லைன் மூலம் வாங்கி, நாற்காலி ஒன்றில் கட்டினார். பின்னர் அதனுடன் ஒரு பாராசூட்டையும் இணைத்து விட்டு விண்ணில் பறந்தார். இவ்வாறு 2 கி.மீ. தூரம் பறந்து சென்ற பூரியா, தான் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து திசைமாறி சென்று ஒரு வயல்வெளியில் தரையிறங்கினார். அவரது நாற்காலி பல கி.மீ. தூரத்துக்கு அப்பால் ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. பிரபல கம்பெனி ஒன்றின் விளம்பரத்துக்காக அவர் இந்த விந்தையான செயலில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்களுக்கு குழப்பமும், அச்சமும் ஏற்படுத்தியதாக பூரியாவை போலீசார் கைது செய்தனர். அந்த பலூன்கள் வெடித்து பூரியா கீழே விழுந்திருந்தால் அவருக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது போலீசாரின் வாதமாகும். (12.07.2015)

(அடேங்கப்பா எப்படிப்பட்ட யோசனை...?)

கணிதச் சக்கரவர்த்தி ‘காஸ்’

அலுவலக வரவு செலவு கணக்குகளை 12 மணி நேரம் போராடி பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து தவறுகளை திருத்தியது. குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கோ கடுங்கோபம். ‘ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்திருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?‘ என்று கேட்டார். ‘அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!‘ என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து அந்த கணக்கை சரி பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது. இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே திருத்திய அந்தக் குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கிய கால் பிரெட்ரிக் காஸ் என்பதாகும். எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ். நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே, இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காட செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி சிரமமின்றி கணிதத்தை எளிமையாக ஆக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.கி.பி. 1777-ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்திருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டையே உதாரணமாக சொல்லலாம். ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாகி இருக்கும் என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23ல். ஆக 19க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ் தான். 1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். ‘பாளினாமியல்‘ சமன்பாடுகளுக்கு பல முறையில் விடை என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாய் பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை. எப்படி இவருக்குள் தினம், தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்தது உலகம். 1809-ல் விண் பொருட்களின் இயக்கம் என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன. மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணிதத் திறமை கொண்டிருந்த காஸ். தனி ஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக்கொள்ளாமல் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்திருக்கும்.

சிலந்திகள் பலவிதம்
சிலந்தி வலை அபூர்வமானது. இந்த வலையை போலவே சிலந்தி பூச்சியும் ஆச்சரியம் நிறைந்தது. எந்த சூழலிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் சிலந்திகள் காணப்படும். வானம், தண்ணீர், தரை, தரைக்கு அடியில் என எல்லா இடங்களிலும் சிலந்திகள் வாழக்கூடியவை. கண்ணுக்கு தெரியாத உருவத்தில் இருந்து 3 அங்குலம் வரையிலான சிலந்திகள் உள்ளன. ஒரு வருடத்தில் இருந்து 15 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. தண்ணீரே கிடைக்காத இடத்தில் கூட ஒரு வருடம் வரை உயிரை தக்க வைத்துக் கொள்ளும் திறமை சிலந்திகளுக்கு உண்டு. சிலந்தியை பூச்சி வகையில் சேர்க்கக்கூடாது என்கிறார்கள், விஞ்ஞானிகள். சிலந்திக்கு எட்டுக்கால், எட்டுக்கண் உண்டு. இறக்கை கிடையாது. உடல் இரண்டு பாகங்களைக் கொண்டது. சிலந்தி பின்னும் வலை ஆச்சரியமான ஒன்று. சிலந்தி வலைக்கான நூல் அதன் அடிவயிற்றில் இருந்து மிக நுட்பமான துவாரங்கள் மூலம் வெளியே வருகிறது. வெளிவரும் போது திரவ நிலையில்தான் இருக்கும். காற்று பட்டதும் இறுகி நூல் போன்று ஆகிவிடும். சிலந்தி நூல்களில் பலவகை உண்டு. ஒட்டிக்கொள்ளும் நூல் ஒருவகை. இந்த நூல்கள் மூலம்தான் இரை கிடைக்கிறது. பசையுள்ள நூலில் பறந்து வரும் பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. அதில் இருந்து அந்த பூச்சிகளால் தப்ப முடிவதில்லை. சிலந்தி வலைக்கு குறுக்கே அமைக்கப்படும் நூல் கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும். இதற்காக அமைக்கப்படும் நூல் ஒட்டாத வகை. மேலும் முட்டையிடும் போது அதை பாதுகாப்பாக சுருட்டி வைக்க ஒரு வகை நூலை பயன்படுத்துகிறது. இந்த நூல் பஞ்சு மெத்தை போல் இருக்கும். வலுவான நார் நாராக இருக்கும். சிலந்தி வலைகளிலும் நிறைய வடிவங்கள் இருக்கின்றன. வட்ட வடிவ வலை இரையை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதலில் சுமாராக ஒரு நீண்ட சதுரம் அமைத்துக் கொள்கிறது. இதுதான் அதன் அஸ்திவாரம். அதன்பின் குறுக்கு கோடுகள் அமைக்கின்றன. அதற்கடுத்து மூன்று அல்லது நான்கு சுற்றுக் கோடுகள் போடும். கடைசியில் குறுக்கு கோடுகள் போடும்போது அதனுடன் பிசினை சேர்த்துக் கொள்கிறது. சிலந்தி வலைகளில் சில தட்டையாக இருக்கும். சில வட்ட வடிவமாக இருக்கும். புனல் போல் சில வலைகள் இருக்கும். சில சிலந்திகள் பாட்டில் போல ஓட்டைப் போட்டு மூடியை மறித்து வைத்திருக்கும். மற்றொரு வகை பூமியில் துளை போட்டு அதன் சுவர்களில் கூடு கட்டி இருக்கும். நீரில் வாழும் சிலந்திகளும் உண்டு. மணி வடிவத்தில் நீர்பரப்புக்கு கீழே ஒரு அறை போன்று கட்டி முட்டை இட்டுக் கொள்கிறது. அதில் காற்றை நிரப்பி முட்டையை வைக்கிறது. எல்லா சிலந்திகளும் வலை பின்னுவதில்லை. பல்லியைப் போல் மெதுவாக ஊர்ந்து சென்று பூச்சிகளை பிடிக்கிற சிலந்திகளும் இருக்கின்றன. உலகில் இப்படி பலவகை சிலந்திகள் உள்ளன.

Friday, July 10, 2015


போலீஸ் துப்பாக்கிக்கு வேலை இல்லை

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்ற செயல்களால், ராணுவம் மற்றும் போலீசார் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி உள்ளது. ஆனால் நார்வே போலீசார் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் துப்பாக்கிக்கு பெரும்பாலும் வேலை கொடுக்காமலே இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அங்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கடந்த ஆண்டு வெறும் 42 சந்தர்ப்பங்களில் மட்டுமே போலீசார் துப்பாக்கியை ஏந்தியுள்ளனர். இதில் 2 முறை மட்டுமே சுடப்பட்டு உள்ளது. அதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டை எடுத்துக்கொண்டால், அந்த ஆண்டு வெறும் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் அங்கு நடந்துள்ள துப்பாக்கிச்சூட்டில் 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் மட்டும் தலா ஒருவர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் விஷேசம் என்னவென்றால், கடந்த 2011-ம் ஆண்டு ஆஸ்லோவில் தீவிரவாதி ஒருவர் அரங்கேற்றிய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட போதும், நார்வே போலீசார் ஒரே ஒரு முறை மட்டுமே துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். (11.07.2015)

இயற்கையின் வினோதம் (11.07.2015)
இயற்கை எப்போதுமே வினோதம் நிறைந்ததுதான். அதில் ஒன்று தான் வெயில். இந்த வெயில் அதிகரிப்புக்கும், சூரியன், பூமிக்கும் இடையேயான தொலைவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 6-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் மிக கடுமையாக இருந்தது. சென்னையைப் பற்றி கேட்கவே வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்தபட்ச வெப்பமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைக்குத்தான் சூரியன், பூமியை விட்டு வெகு தொலைவில் இருந்தது. சரியாக சொல்வதென்றால் 15 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரத்து 480 கி.மீ. தூரத்தில் இருந்தது. இயற்கை நியதிப்படி சூரியன் தொலைவில் இருக்கும் போது வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், அன்று அப்படி இருக்கவில்லை. இன்னொரு உதாரணத்தை பார்ப்போம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. அன்றைக்கோ சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்தது. அன்றைய தினம் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவு 14 கோடியே 70 லட்சத்து 96 ஆயிரத்து 204 கி.மீ. இருந்தது. ஜூலை மாதம் 6-ந்தேதிக்கும், ஜனவரி மாதம் 4-ந்தேதிக்கும் இடையே சூரியனின் தொலைவு கிட்டத்தட்ட சுமார் 49 லட்சம் கி.மீ. வித்தியாசம் இருந்தது. இந்த தூரம் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதற்கு நாம் சிறுவயதில் படித்த நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனை சுற்றுவதுதான் காரணம். இதில் புதிரான விஷயம் என்னவென்றால், சூரியன் அருகே இருக்கும் போது குளிராகவும், தொலைவில் இருக்கும் போது வெப்பமாகவும் இருக்கிறதே இதற்கு காரணம் என்னவென்று அறிவியல் அறிஞர்களிடம் கேட்டால், பூமியின் சாய்மானம்தான் என்று அவர்களிடமிருந்து பதில் வருகிறது. நமது பூமி எப்போதுமே 23 டிகிரி சாய்வாகத்தான் சுற்றி வருகிறது. இதனால் மார்ச் மாதம் முதல் இந்தியா போன்ற பூமியின் நடுகோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகளில் கோடைகாலமாக இருக்கிறது. வெப்பமும் அதிகமாக தாக்குகிறது. வெயிலின் தாக்கம் சூரியன் தொலைவில் இருக்கும் போது கூட வீரியமாக இருக்கிறது. அதே காலகட்டத்தில் பூமியின் நடுகோட்டுக்கு கீழே உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியுசிலாந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுகின்றன. இதனால் அங்கு குளிராக இருக்கிறது. நமக்கு கோடையாக இருக்கும் போது இந்த நாடுகளுக்கு குளிராகவும், அவர்களுக்கு கோடை காலமாக இருக்கும் போது, நமக்கு குளிராகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் பூமியின் சாய்மானமே காரணம்.

உடல் நலம் பாதித்த பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்

இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் சாரா கோல்வில். 40 வயதான இப்பெண், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தபோது, அவரது வட்டார பாணி பேச்சு மறைந்து, அவரது பேச்சு சீன மொழி உச்சரிப்பு போல மாறிவிட்டது. அவரது குரலும் மாறி விட்டது. அவரை நரம்பியல் மருத்துவரிடம் கூட்டிச் சென்றனர். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. அந்த பாதிப்பு, நிரந்தரமானது என்றும், அதை சரிசெய்ய முடியாது என்றும் டாக்டர் கூறிவிட்டார். இதனால், சாரா மேலும் அதிர்ச்சி அடைந்தார். தனது வாழ்க்கையே நரகமாகி விட்டதாக அவர் கண்ணீர் வடித்து வருகிறார். தனது வீடு, வேலை எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும் அவர் கூறினார். அவர், சீனாவுக்கு இதுவரை சென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரின்போது, விமான குண்டு வீச்சு சிதறல்கள் பட்டதால் மூளை பாதிப்பு அடைந்த நார்வே பெண் ஒருவர், திடீரென ஜெர்மன் மொழி உச்சரிப்பில் பேசத் தொடங்கி விட்டார். அப்போதுதான், இத்தகைய பாதிப்பு முதல்முறையாக அறியப்பட்டது. (10.07.2015)


"டாட்டூஸ்" ஆபத்து

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார்கள். ஆனால் இப்படி வரைந்து கொள்வது ‘லுக்கே மியா‘ என்னும் ஒருவித புற்று நோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண்களுக்கு இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கே மியா) என்னும் ஒரு வித ரத்தப் புற்று நோய் ஏற்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதத்திற்கும் அதிகமாகவும் இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில், கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மெகந்தி ஒரு வகை காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் உள்ள ரசாயனம் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளிபடுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது. ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில், ‘ஆண்களும், பெண்களும் ஒரே சூழலில் வசிக்கிறோம். ஒரேவித உணவையே உண்கிறோம். ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் ஏ.எம்.எல். பாதிப்பு ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் மெகந்தியோ, டாட்டூசோ வரைந்திருப்பது மட்டுமே‘ என்றார். இயற்கையான மருதாணியில் ஆபத்து உண்டா என்றால் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

Thursday, July 9, 2015


உலகின் வயதான பெண்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் சூசன்னா மசாத் ஜோன்ஸ். 1899-ம் ஆண்டு பிறந்த இந்த மூதாட்டி, தனது 116-வது பிறந்த நாளை சமீபத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். பூமியில் தற்போது உயிர் வாழ்பவர்களில் மிகவும் அதிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையை சூசன்னா படைத்துள்ளார். இதற்கான சான்றிதழ், அவரது பிறந்த நாளின் போது வழங்கப்பட்டது. ‘என்னைச்சுற்றி அன்பும், நேர்மறையான ஆற்றல்களும் நிறைந்துள்ளன. இதுதான் எனது நீண்டகால வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சிக்கான காரணம்’ என்று சூசன்னா கூறினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பொழுதை கழிக்கும் சூசன்னாவுக்கு கண் பார்வை பறிபோய் விட்டது. மேலும் கேட்கும் திறனும் குறைவாகவே இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். (09.07.2015)


உப்புக்கு வேலி

வேலி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதென்ன உயிர்வேலி? மரங்கள், செடிகள் போன்ற உயிருள்ள பொருட்களை கொண்டு அமைக்கப்படுவது தான் உயிர்வேலி. பெரிய விளைநிலங்களை விலங்குகள், மனிதர்கள் மற்றும் பெரும் காற்றில் இருந்து பாதுகாக்க இப்படிப்பட்ட வேலிகளை விவசாயிகள் அமைப்பார்கள். இது அதிகபட்சமாக ஓரிரு கி.மீ. நீளம்தான் இருக்கும். ஆனால், ஒரு அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான கி.மீ. நீளத்துக்கு உயிர்வேலி அமைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். கிட்டத்தட்ட 6,430 கி.மீ. நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய வேலி உருவாக்கப்பட்டது இந்தியாவில். அதை அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். மராட்டியத்தில் உள்ள பர்ஹான்பூரில் ஆரம்பித்து மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் ணீஉள்ள சிந்து மாகாணத்தில் சென்று முடிகிறது அந்த வேலி. 1803-ம் ஆண்டில் வேலியை அமைக்கத் தொடங்கியவர்கள், 1843-ல் முடித்தார்கள். 12 அடி உயரம் கொண்ட அந்த உயிர்வேலி முள்மரங்கள் வளர்க்கப்பட்டு இணைத்துக்கட்டி உருவாக்கப்பட்டது. அந்த வேலியை கடந்து எவரும் போக முடியாது. இந்த உயிர்வேலியை பராமரிக்கவும் பாதுகாக்கவும் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் முழுநேரப் பணியில் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 வருடங்களாக கடினமான மலைகள், பொட்டல்கள், விளைநிலங்கள், பாலைவனங்கள், கிராமங்கள், நகரங்களில் இந்த உயிர்வேலியை எதற்காக அமைத்தார்கள்? காரணம் தெரிந்தால் இன்று நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அன்றைக்கு அது வருமானம் அள்ளித்தரும் ஒரு பொருளாக இருந்தது. அந்த பொருள் உப்பு. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் மிக முக்கிய வருமானமே அவர்கள் உப்புக்கு விதித்த உள்நாட்டு சுங்கவரிதான். அந்த வரியை வசூலிக்கவும் உள்நாட்டு உப்புப் பரிமாற்றத்தை தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தான் இப்படியொரு பிரமாண்ட வேலி. இந்தியாவில் உப்பு அதிகமாக கிடைக்கும் இடம் குஜராத்தில் உள்ள கட்ஜ் வளைகுடா பகுதிதான். அங்குள்ள கடலில் பெரிய நதிகள் எதுவும் கலப்பதில்லை. அதனால், அங்கு உப்பின் அடர்த்தி அதிகம். அதேபோல் காஷ்மீரின் கடைசி எல்லையாக இருந்த (தற்போது பாகிஸ்தானில் இருக்கும்) இமயமலையில்தான் உலகின் மிகப் பெரிய உப்பு மலைகள் உள்ளன. அங்கிருந்து மிக மிக சுத்தமான உப்பு மிக மலிவான விலையில் கிடைத்தது. இந்த உப்புதான் திபெத், சீனா போன்ற நாடுகளின் உப்புத் தேவையை நிவர்த்தி செய்தது. ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்த கொல்கத்தாவிலோ நிலைமை வேறு. பிரம்மபுத்ரா, கங்கை போன்ற வற்றாத ஜீவநதிகளின் தண்ணீர் பெருமளவு கலப்பதால், அங்குள்ள கடல்நீரில் உப்பின் அடர்த்தி மிக மிகக் குறைவாக இருந்தது. அந்த உப்பை எடுப்பதற்கு அதிக செலவாகியது. இதனால், இந்தியாவின் உப்பு தேவையை மேற்கு கடற்கரை பகுதியே நிவர்த்தி செய்தது. ஒரு மாதத்துக்கு ஆகும் உப்பின் செலவு மொத்த உணவு செலவைவிட அதிகம். வடஇந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும், உப்பு எவ்வளவு வருமானம் தரும் பொருள் என்று... அதற்காகத்தான் ஆங்கிலேயர்கள் இவ்வளவு பெரிய வேலியை அமைத்தார்கள். 1879-ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்து செய்யும் வரை அந்த பிரமாண்டமான வேலி உயிர்ப்போடு இருந்தது. இன்று அதன் சுவடு கூட தெரியவில்லை.

Tuesday, July 7, 2015


விளம்பரம் உருவான கதை

விளம்பரம் இல்லையென்றால் எந்த பொருளையும் விற்கமுடியாது என்ற நிலைதான் நிலவுகிறது. அந்த அளவிற்கு எல்லா துறைகளிலும் விளம்பரம் ஆட்சி செய்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் பல வடிவங்களில் விளம்பரம் நம் கண்ணில் படுகிறது. இந்த விளம்பரம் உருவான கதை சுவாரஸ்யமானது. மனித சரித்திரத்தில் வர்த்தகம் என்று தொடங்கியதோ, அன்றே விளம்பரமும் தொடங்கிவிட்டது. வியாபாரி, தான் விற்கும் பொருளின் சிறப்புகளை, மக்களுக்கு எடுத்துக் கூறியது தான் முதல் விளம்பரம். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பொருட்களின் அருமை, பெருமைகளை தொண்டை கிழிய கத்தி எடுத்துரைத்தார்கள். இப்படி சொல்வதற்காகவே வேலையாட்களை வைத்திருந்தார்கள். எத்தனை நாளைக்குத்தான் இப்படி கத்துவது என்று நினைத்த வியாபாரிகள், மவுன விளம்பரமாக கருதப்படும், சுவர் விளம்பரத்தை செய்யத் தொடங்கினர். பொருட்களை விற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சுவரில் பொருளின் பெருமைகளை எழுதி விளம்பரம் செய்தார்கள். 

கி.பி. 1450-ல் அச்சுத்தொழில் அறிமுகமானது. அதன்பின் விளம்பரத்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. இது எளிமையாகவும் மலிவாகவும் இருந்தது. 1460-ல் ‘வில்லியம் காக்ஸ்டன்’ என்பவர் முதன் முதலாக சமயம் தொடர்பான ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலை மக்களிடையே அறிமுகப்படுத்த விளம்பரக் கலையை பயன்படுத்தினார். பின்னர் செய்தித்தாள் தொடங்கப்பட்டது. அந்த அறிமுகத்திற்குப் பிறகு விளம்பர உலகில் பெரும் புரட்சியே ஏற்பட்டது எனலாம். தற்போது வர்த்தகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், சமூகத் தொண்டர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் போன்றவர்களும், அரசும் மக்களுக்கு செய்திகளை சொல்ல செய்தித்தாள் விளம்பரங்களை பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களுக்காக மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. 1968-ல் மட்டுமே அமெரிக்கா 180 கோடி டாலர்களை விளம்பரத்திற்காக செலவிட்டது. மேற்கு ஜெர்மனி 40 கோடி டாலரும், ஜப்பான் 15 கோடி டாலரும், இங்கிலாந்து 12 கோடி டாலரும், பிரான்சு மற்றும் கனடா தலா 10 கோடி டாலரும் செலவு செய்தன. இன்றைக்கு விளம்பர செலவுகள் விண்ணைத் தொடுகின்றன. 2014-ல் மட்டும் 545.40 பில்லியன் டாலர்கள் விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளன. 

மக்கள் எந்த விளம்பரத்தின் மீதும் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு புற்றீசல்கள் போல் இப்போது விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நமது நாட்டில் வானொலி மூலம் ‘விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு’ என்ற பெயரில் 1967 நவம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. தொலைக்காட்சியில் 1976 ஜனவரி 4-ந்தேதி முதல் விளம்பர ஒளிபரப்பு தொடங்கியது. ஒரு நாடு, அந்த நாட்டின் மக்கள் தொகை, ஒரு வருடத்திற்கு செய்யும் விளம்பரச் செலவு, இவற்றையெல்லாம் கொண்டு ஒரு கணக்கீடு உருவாக்கி இருக்கிறார்கள். அதன்படி ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களின் பொருட்களை வாங்கச் செய்வதற்காக ஒரு தனிநபர் மீது எவ்வளவு செலவு செய்கிறது என்றால், அமெரிக்கா 589.29 டாலர்களை செலவு செய்கிறது. இரண்டாவது இடத்தில் நார்வே நாடு உள்ளது. அது ஒரு நபர் மீதான விளம்பரச் செலவாக 543.16 டாலர்களை கொண்டிருக்கிறது. மூன்றாவதாக ஆஸ்திரேலியா 509.45 டாலர்களை செலவழிக்கிறது. இந்தியாவை ஏழை நாடு என்கிறோம். இங்கேயும் கூட ஒரு இந்தியருக்காக வருடத்திற்கு 5.40 டாலர்கள் விளம்பர செலவுகள் செய்யப்படுகின்றன. 

கோடிகள் அரசாட்சி செய்யும் இந்த துறை, இன்று ஒரு கலையாக மட்டுமல்லாமல், அறிவியலாகவும் போற்றப்படுகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க புதுப்புது யுத்திகளுடன் விளம்பரம் தயாரிக்கப்படுகிறது. விளம்பர உலகம் மாபெரும் இலக்கை நோக்கி வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.

Monday, July 6, 2015


தாத்தாவின் உடலுடன் செல்பி எடுத்த பேரன்

சவுதி அரேபிய மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த வயதான ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து விட்டார். அவரது உடல் படுக்கையில் கிடக்கும் நிலையில், அதன் அருகில் சிரித்தபடி நின்றவாறே அவரது பேரன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். ‘குட்பை தாத்தா’ என பெயரிடப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த புகைப்படம், வலைத்தள ஆர்வலர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒழுக்கக்கேடான செயல் என கொந்தளித்துள்ள மக்கள், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.மேலும் இந்த செல்பியை எடுக்க அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.                 (07,07,2015)

கரடிகளாக மாறிய நாய்கள்? (07.07.2015)
சீனாவின் மகுவான் கவுண்டியில் வசித்து வரும் வாங் கையு என்பவர், வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2 நாய்க்குட்டிகளை வாங்கி வந்தார். அவற்றை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த அவர், தினமும் அவற்றுக்கு தேவையான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது நாய்களை விட மிகவும் அதிகமான உணவுகளை சாப்பிட தொடங்கின. இதனால் 2 ஆண்டுகளில் ஒவ்வொன்றின் எடையும் சுமார் 45 கிலோவை தாண்டி விட்டன. அதுமட்டுமின்றி வாங் கையுவின் வீட்டில் நின்ற கோழிகளையும் அடித்து சாப்பிட தொடங்கி விட்டன. இதனால் வாங் கையுவுக்கு அவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் வனத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது, வாங் கையு வளர்த்து வந்தவை நாய்களல்ல, ஆசியாவின் மிகவும் கொடூரமான கரடிகள் என தெரிய வந்தது. ஒரு ஆணும், ஒரு பெண்ணுமான அந்த 2 கரடிகளும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.


வெயில் அதிகம் உள்ள பகுதி

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் எங்கு வெயில் அதிகம் என்பதை சரியாக கணித்துச் சொல்ல முடியாது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடம் எது என்று கேட்டால் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை சொல்கிறோம். அதுபோல் வெயிலை சொல்ல முடியாது. ஏனென்றால் வெயில் ஒரே பகுதியில் அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆண்டு தோறும் வெயில் மாறும் தன்மை கொண்டது. ஒரு ஆண்டில் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கும் வெயில், மறு ஆண்டில் வேறொரு பகுதியில் அதிகமாக இருக்கும். இருப்பினும் விஞ்ஞானிகள் உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் பகுதிகளாக 3 இடங்களை சொல்கிறார்கள். அதில் முதலாவது இடம் பிடித்து இருப்பது ஈரானில் உள்ள லூட் பாலைவனம். உலகில் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களின் வரிசையில் 25-வது இடத்தை பிடித்திருக்கும் இந்த இடத்தை உப்பு பாலைவனம் என்றும் சொல்வார்கள். இங்குதான் பூமியிலேயே மிக அதிகமான வெயிலின் அளவு பதிவாகி இருக்கிறது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 70.6 டிகிரி செல்சியஸ் வெப்பம், அதாவது 159 பாரன்ஹீட் என்ற மிக உச்சபட்ச அளவு பதிவாகி இருந்தது. இதற்கடுத்து, இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பது லிபியாவில் உள்ள அல்அசியா. இது லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வர்த்தகப் பகுதியான இங்கு மலையும், பாலைவனமும் மிகுந்து இருக்கின்றன. சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1922-ம் ஆண்டு 136 பாரன்ஹீட் வெயில் பதிவானது. மூன்றாவது இடத்தை கலிபோர்னியாவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு பிடித்துள்ளது. இங்கு 1913-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி 134 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த மூன்று இடங்களுக்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஏமன், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அதிகபட்சமாக 132 பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை ஒடிசா மாநிலத்தில் உள்ள அனுகுல் என்ற இடத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பதிவான 131 பாரன்ஹீட் வெப்பமே இந்தியாவின் உச்சபட்ச வெப்பமாகும். நூறு பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அதிகமானாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் உலகில் 130 பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் உள்ள இடங்களில் கூட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலான விஷயம் தான்.

பொம்மைகள்
குழந்தைகளை குதூகலமாக இருக்க வைப்பது பொம்மை தான். இந்த பொம்மைகள் செய்வது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மரத்தில் விலங்குகளைப்போல் உருவம் செய்து விளையாடுவது, சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அலுமினியத்தில் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார்கள். சுட்ட களிமண்ணால் பொம்மைகள் செய்து அழகிய துணிகளால் அதற்கு அலங்காரம் செய்யும் முறையும் எகிப்தியர்களிடம் இருந்தது. கிரேக்கர்கள் மெழுகினால் பொம்மை செய்தார்கள். ரோம் நாட்டில் எலும்பிலும், தந்தத்திலும் உருவங்களை செதுக்கி பொம்மைகளை உருவாக்கினார்கள். இந்த பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடும் பெண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பொம்மைகளை காதல் தேவதையான ‘வீனசுக்கு‘ அர்ப்பணம் செய்வார்கள். இதனால் வீனஸ் திருப்பதி அடைந்து அழகிய குழந்தைகளை அருளுவாள் என்பது அவர்களின் நம்பிக்கை. இதன் பின்னர் ஹாலந்தில் செய்யப்பட்ட பொம்மைகள், உலக அளவில் பிரபலமாயின. 18-வது நூற்றாண்டின் முடிவில் பிரான்சிலும், ஜெர்மனியிலும் சீனக்களிமண்ணைக்கொண்டு பொம்மைகள் செய்யத் தொடங்கினர். எளிதில் உடையக்கூடியவை என்றாலும் அழகாக விளங்கின. 19-வது நூற்றாண்டின் மத்தியில் தான் துணி பொம்மைகள் தோன்றின. எளிதில் உடையாத செலுலாயிட் பொம்மையைச் செய்து லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்தது ஜப்பான். உந்து விசையால் இயங்கும் பொம்மைகள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி உலகமெங்கும் பிரபலமடைந்தன.

மொழியும், ஒலியும்

பேசப்படுவதே மொழி. ஒலியை அடிப்படையாகக் கொண்டதே மொழி. செயற்கையாக பல ஒலிகளை மனிதன் ஒலித்து தன் கருத்தை பிறருக்கு அறிவிப்பதே மொழி. இத்தகைய மொழி ஒன்றேயானாலும் அது வட்டாரத்திற்கு, வட்டாரம், இடத்திற்கு இடம் சில மாறுபாடுகளை அடைந்து காணப்படும். இந்த மாறுபாடுகள் பேச்சு முறையில் ஏற்பட்ட மாறுபாடுகளுக்கு ஏற்பவும், உள்ளூர் வழக்கத்திற்கு ஏற்பவும் மாறுபடும். ஆனாலும் மூல மொழியில் இருந்து பெரும்பாலும் மாறுவதில்லை. அப்படி மாறுபாடு அதிகமாகி விட்டால் அது ஒரு தனி மொழியாகி விடும். இவற்றை ஆங்கிலத்தில் ‘டையலக்டஸ்’ என்றும், தமிழில் ‘திசை மொழி’ என்றும் குறிப்பிடுகிறோம். கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவை யாவும் தமிழின் திசை மொழிகளே. நாளடைவில் இவற்றின் வேற்றுமை அதிகமாகி விட்டதால் இந்த திசை மொழிகள் தனி மொழிகள் ஆகி விட்டன. எழுத்து வடிவிலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் கிரந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழுடன் ஒரு சம்பந்தமும் இல்லாதபடி மாறிவிட்டன. துளுவுக்கு சமீபத்தில்தான் எழுத்து வடிவம் உருவானது. அதற்கு முன் அது வெறும் பேச்சு, வழக்கு மொழியாக மட்டுமே இருந்தது. எது உண்மையான மொழி. எது வட்டார மொழி என்பதில் மொழி வல்லுநர்களிடம் கூட குழப்பம் இருக்கிறது. என்றாலும் உலகம் முழுவதும் இன்று 2500 முதல் 5000 மொழிகள் வரை உள்ளன. மொழிகள் எப்படி தோன்றியிருக்கும் என்பதிலும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. மொழியின் தோற்றம் பற்றி மாக்ஸ்முல்லர் 3 வகையான கொள்கைகளை கூறியிருக்கிறார். முதல் கொள்கைக்கு ‘பவ்-வவ்’ (‘பௌ’-‘வெள’) கொள்கை என்று பெயர் வைத்திருக்கிறார். இதன்படி ஆதிகால மனிதன் நாயைக் குறிப்பிட வேண்டும் என்றால் அது கத்துவது போல் ‘லொள்’, ‘லொள்’ என்று கூறியிருப்பான். பூனையை ‘மியா’- ‘மியா’ என்று சொல்லியிருப்பான். இவ்வாறு இன்றுள்ள பல உயிரினங்களின் பெயரை நாம் ஆராய்ந்தால் அதன் மூல வேர்ப்பகுதி அந்த விலங்கு ஏற்படுத்திய ஒலியை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். 2-து கொள்கை, உணர்ச்சி வசப்படும்போது இயல்பாக எழும் ஒலிக் குறிப்புகளே மொழிக்கு அடிப்படை என்கிறார். உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் என இதை நாம் கருதலாம். கோபத்தில் கத்துவது, காதல் வயப்படும் போது காதல்- புலம்பல் இவற்றை இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர். வலியால் ஓ, ஆ, என கத்துவது, வியப்பால் ஆ என்பது போன்ற எல்லாம் உணர்ச்சி வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. கலகலவெனச் சிரிப்பதும் ஒரு வித மகிழ்ச்சி உணர்வே. மொழிக்கு உணர்ச்சிகள் அடிப்படையாக உள்ளதை இந்த 2-வது கொள்கை விளக்குகிறது. 3-வது கொள்கை ‘யோ--டோ’ என்பது. ஒரு செயலைச் செய்யும் போது இயற்கையாக எழுப்பும் ஒலிக்குறிப்பு. ஒரு கயிற்றை இழுக்கும் போதோ, நடனம் ஆடும் போதோ பெருமூச்செறிதல் போன்றவை. இன்றைக்கும் கூட கடினமான காரியத்தை செய்யும் போது அம்மா, அப்பா, ஐயோ, ஹை போன்ற ஒலிகள் நம்மை அறியாமலேயே பிறக்கின்றன. ஐலேசா, ஏலேலோ, போன்ற பாடல்களும் இந்த கொள்கையின் அடிப்படையில் பிறந்தவைதான். ஒவ்வொரு தொழில் செய்யும் போதும் நாம் ஒவ்வொரு பாட்டைப் பாடுகிறோம் அல்லவா. இந்த மாதிரி ஒவ்வொரு முயற்சிக்கும் ஒவ்வொரு வித ஊக்க ஒலி ஆதியில் தோன்றி மொழியாக வளர்ந்திருக்கலாம் என்பதுதான் இந்தக் கொள்கையின் கருத்து. மொழிகள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு இத்தகைய ஒலிக் குறிப்புகள் அதற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம். மொழியின் அடிப்படை தத்துவமே. நமது கருத்தைப் பிறருக்கு அறிவிப்பதும், தாம் பிறர் கருத்தை அறிந்து கொள்வதும், அதற்கேற்ப எதிர்வினை ஆற்றுவதும் தான். மாக்ஸ்முல்லர் குறிப்பிட்ட இந்த 3 கொள்கைகளும் மொழி தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

புவி ஈர்ப்பு எதிர்ப்பு விசை

இந்த பிரபஞ்சத்தை நான்கு சக்திகள் தான் இயக்குகின்றன என்று இத்தனை காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் இப்போது ஐந்தாவது சக்தி ஒன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். சரி அந்த முதல் நான்கு சக்திகள் என்னென்ன? புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி, அணுவுக்குள் இருக்கும் மெலிய சக்தி ஆகியவைதான் அந்த 4 சக்திகள். புவி ஈர்ப்பு சக்தி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். மேலே இருந்து ஒரு பொருள் கீழே வருவது இதனால் தான். அடுத்ததாக மின் காந்த சக்தி. இந்த சக்தியைக் கொண்டுதான் டி.வி, ரேடியோ சேனல்கள், டி.வி. ரிமோட், செல்போன் போன்றவை இயங்குகின்றன. 3-வது சக்தி அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி ஆகும். அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள் இருக்கின்றன. இவற்றில் புரோட்டானையும், நியூட்ரானையும் ஒட்ட வைக்கும் சக்தியே அணுவுக்குள் இருக்கும் வலிமையான சக்தி ஆகும். இந்த சக்தியை எரித்துத் தான் சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் ஒளிர்கின்றன. அணுவுக்குள் இருக்கும் மெலிய சக்தி என்பது அணுவின் மையத்தில் இருக்கும் நியூக்ளியஸ் என்ற உட்கரு வெளிப்படுத்தும் சக்திதான். இதைத்தான் அணுசக்தி என்று அழைக்கிறோம். எப்படியோ இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டுபிடித்து விட்டோம். இந்த 4 சக்திக்குள்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். சமீபத்தில் அவர்கள் 5-வதாக ஒரு சக்தி இருக்கிறது என்றும், அதன் பெயர் புவி ஈர்ப்பு எதிர்ப்பு சக்தி என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது. என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சுருங்கிக் கொண்டே போகிறது. இந்த இடங்கள் கருப்புப் பள்ளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருப்புப் பள்ளங்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கின்றன. இவற்றின் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் அதை தம்முள் இழுத்துக் கொள்கின்றன. இந்த ஈர்ப்பில் இருந்து சூரியன், பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவும் தப்ப முடியாது. இதைக் கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானியான டாக்டர் எஸ்.சந்திரசேகர். மிக சமீப காலத்தில் தான் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக புவிஈர்ப்பு எதிர்ப்பு விசை இருப்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். அது பிரபஞ்சத்துக்கு வெளியே எங்கோ ஒரு இடத்தை நோக்கி வினாடிக்கு 700 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஏதோ ஒரு பொருளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது எப்படி? எதனால்? புதிராகவே உள்ளது. இந்த 5-து சக்தி பிரபஞ்சத்தை அழித்து விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.

5,500 ஆண்டு பழமையான கைரேகை

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டென்மார்க்கில் லோலண்ட் தெற்கு கடலோரப்பகுதியில், 5 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான பீங்கான் பாத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீங்கான் பாத்திரத்தில் அதை உருவாக்கிய தொழிலாளியின் கைரேகை பதிந்துள்ளது. அடியில் தட்டையான பாகத்தை கொண்டுள்ள இந்த பாத்திரத்தின் கழுத்து, புனல் வடிவத்தில் உள்ளது. இது புனல் கண்ணாடி குவளை கலாசாரத்தை (கி.மு.4000-2800) பிரதிபலிப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கலாசாரம் ஸ்காண்டிநேவியா மற்றும் வட ஐரோப்பாவின் முதல் விவசாயிகளை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. 3 பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது அதில் ஒன்றுதான் உருவாக்கிய கலைஞரின் கைரேகை பதிந்துள்ள இது பீங்கான் பாத்திரம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (04.07.2015)


ஏலத்துக்கு வருகிறது, அபூர்வ பைபிள்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உலகின் 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆங்கிலத்தில் 1526-ம் ஆண்டு முதல் முதலாக அச்சிட்டு வெளியானதுதான், வில்லியம் டின்டேல் மொழி பெயர்ப்பு பைபிள். அந்த பைபிளில் இருந்து புதிய ஏற்பாடு, 1537-ல் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அபூர்வ புதிய ஏற்பாட்டில் ஒன்று, விரைவில் லண்டன் சோத்பை நிறுவனத்தில் ஏலத்துக்கு வருகிறது. இதை கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் தற்போதைய அதிபர், 1960-களில் ஒரு பழைய புத்தகக்கடைகளில் புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, 25 ஷில்லிங்கிற்கு வாங்கி உள்ளார். இந்த புதிய ஏற்பாடு தற்போது 35 ஆயிரம் பவுண்டிற்கு (சுமார் ரூ.35 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது. (04.07.2015)

பிறப்பு விகிதமும், பிரச்சினைகளும்

மக்கள் தொகை கணக்கில் பிறப்பு விகிதம் அதிகரிக்கத் தொடங்கியதும், மக்கள் தொகை அதிகரிப்பும் அதன் சமூக பொருளாதார விளைவுகள் பற்றிய உலகளாவிய கவலையும், கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. அமெரிக்க கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகை 2012 மார்ச் 12-ல் 700 கோடியை கடந்தது. மேலும் 2050-க்குள் இது 900 கோடியை கடக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளும் சிங்கப்பூர் போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளும் மேலும் மக்கள் தொகை குறைவதை எண்ணி கவலை அடைகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தாமஸ் ராபர்ட் மால்தொஸ், மக்கள்தொகை பெருக்கத்தால் உணவுத்தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவித்தார். அதன்பின்பு பல நாடுகளில் பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கின. இதன் விளைவாக 1970-களில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பலவகையான குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் தீவிரமாக ஆர்வம் காட்டிய பல ஐரோப்பிய, கிழக்காசிய நாடுகள் தற்போது அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றன. 2001-ல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி 40 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 65 நாடுகளில் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சிறிய நாடான சிங்கப்பூர், குறைந்த பிறப்பு விகிதத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளானது. சிங்கப்பூரில் 2009-ல் 1.22 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2010-ல் 1.16 ஆக குறைந்தது. சிங்கப்பூர் தான் பிறப்பு விகிதத்தில் கடைசியாக இருக்கும் நாடு. மக்கள் தொகை அதிகரிப்பைப் போல, குறைவதும் பெரிய பிரச்சினையே. குழந்தை பிறப்பு குறைந்ததால் சிங்கப்பூரில் இப்போது வயதான மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள். இதை சரிக்கட்ட சிங்கப்பூர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இளம் தம்பதிகளை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகின்றன. மாறாக, சீனாவும், இந்தியாவும் குழந்தை பிறப்பை குறைக்கும் விதமாக குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன.

உடம்புக்கு வேண்டாத உணவு

மனிதனை விட ஓரறிவு குறைவாக இருக்கும் விலங்குகள் நம்மை விட சாப்பாட்டு விஷயத்தில் புத்திசாலிகள். எலி, பூனை போன்ற விலங்குகள் என்னதான் கொலைப் பசியாக இருந்தாலும், உணவை உடனே சாப்பிட்டு விடாது, முதலில் முகர்ந்து பார்க்கும். சரியான ஆபத்தில்லாத உணவு என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே சாப்பிடும். ஆனால் மனிதன் அப்படியில்லை, கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் ரகம். அப்படி சாப்பிட்ட உணவை வயிறு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடனே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி எடுத்து விடுகிறோம். இது ஒரு வியாதி கிடையாது. வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை. வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாக்கள் அல்லது கெமிக்கல் புகுந்து விட்டது என்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை செயல். வாந்தி எடுக்கும் போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்றால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவோ, தேவையற்ற கெமிக்கலோ வயிற்றின் இரைப்பைக்குள் நுழைந்துவிட்டால் அதனை உடனே கண்டுபிடிப்பது இரைப்பை சுவர்களில் உள்ள உணர்வு செல்கள்தான். இதுதான் நரம்புகள் மூலமாக மூளைக்குத் தகவலைத் தெரிவிக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்புக்கு ‘வேகஸ்‘ என்று பெயர். மூளைக்கு தகவல் கிடைத்ததும், மூளை கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி ஒத்துக்கொள்ளாத உணவை சிறுகுடல் ஒன்றரையடி மேல் நோக்கி தள்ளிவிடுகிறது. அது வாந்தியாக வெளியே வந்து விடுகிறது. சிறுகுடலில் இருக்கும் சிறு பகுதிகள் அத்தனையும் சேர்ந்து சுருங்கி இரைப்பைக்குள் இருக்கும் தகாத உணவை வாயின் வழியாக வெளியே தள்ளியாக வேண்டும். அதற்கு ஜீரண மண்டலம் மட்டுமல்லாமல், அதற்கு சம்பந்தமே இல்லாத சிறுகுடலைச் சுற்றியிருக்கும் தசைகள் கூட சுருங்கி உணவை வெளியே தள்ளுவதற்கு உதவி செய்கின்றன. தேவையில்லாத உணவை வெளியே தள்ளுவதற்காக வாந்தி எடுப்பது என்றாலும் கூட, இது ஒரு தடவை மட்டும் நடந்தால் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளிலே நாலைந்து முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அது ஆபத்து. தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் உடலிலிருக்கும் நீரின் அளவு குறைந்து போய்விடும். இதனால் ரத்த அழுத்தமும் குறைந்துவிடும். உடம்பிற்கு ஆபத்து வந்துள்ளது என்பதை முதல் அறிக்கையாக வெளியிடுவது இந்த அறிகுறிகள்.

Sunday, July 5, 2015


யானைகளின் வினோதப் பழக்கம்

நமக்கு பிடித்தமான உயிரினங்களில் ஒன்று யானை. பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை யானைகள் உயிர் வாழக் கூடியது. சில யானைகளின் தந்தங்கள் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரும். யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் இருக்க முடியும். யானை மூச்சு விடுவது தும்பிக்கையால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். யானைக்கு வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையால் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்று இருக்கிறது. யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். பின்பு மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும். ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நிற்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கை தான். யானை மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ஓடும். எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை உடையவை. தொலைவில் உள்ள காட்சிகளை பார்க்கமுடியாது. யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு துதிக்கையாக வளர்ந்ததாம். இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானை, பெண் யானை ஆகிய இரண்டுக்குமே தந்தங்கள் கிடையாது. யானைக்கு துதிக்கை பலமானது என்றாலும், அதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அது குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்று, கட்டுக்கடங்காமல் பெரிதாகி விடும். யானையின் உடலில், துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொரிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் தாண்ட முடியாது. நன்றாக பழகிய யானை, பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 2, 2015


கொலையாளி ரோபோ 

மனிதர்களுக்கு உதவிகரமாக இருந்து வரும் ரோபோ, முதன் முதலாக மனிதனை கொலை செய்திருப்பது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மனியின் பானடால் பகுதியில் பிரபல கார் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கார்களின் உதிரிப்பாகங்களை ஒன்றிணைக்கும் பிரிவில், தொழிலாளர்களுக்கு உதவியாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல பணிகள் நடந்து வந்தன. அப்போது மிகப்பெரிய எந்திரங்களை கையாளும் பிரிவில் இயங்கி வந்த ரோபோ ஒன்று திடீரென, அங்கிருந்த ஒரு 22 வயது ஊழியரை கவ்விப்பிடித்து அருகில் இருந்த உலோக தகட்டின் மீது வைத்து நசுக்கியது. இதில் அந்த ஊழியர் பரிதாபமாக இறந்து போனார். இது அருகில் இருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவையற்ற உதிரி பாகங்களை எடுத்து நசுக்கும் அந்த ரோபோ, மனித தவறினாலேயே ஊழியரை கொன்றுவிட்டது என்றும் இதற்காக யார் மீது வழக்கு போடுவது என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். (02.072015)


நெப்போலியனின் மர்ம மரணம்

மாவீரன் என்ற வார்த்தையை சொன்ன மாத்திரத்தில் பலர் நினைவுக்கும் வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாவீரர்களில் நெப்போலியனும் ஒருவர். உலகையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அந்த மாவீரனின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே இன்ன மும் இருக்கிறது. ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி நெப்போலியன் எப்படி இறந்தார் என்பதுதான். இப்படி கேள்வி கேட்பதற்கு காரணமும் இருக்கிறது. மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தை குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச்சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த ஒரு வீரன் தானாகவே நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றால் நம்பமுடியவில்லை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். நெப்போலியன் கடைசியாக இருந்த தனிமைச் சிறையில் என்ன நடந்தது என்பதை அறிய யாருக்கும் எந்த ஆவணமும் அப்போது கிடைக்கவில்லை. கி.பி.1816 முதல் 1821-ம் ஆண்டு வரை அதாவது அவர் இறக்கும் வரை உதிர்ந்த முடிகள் ஆய்வுக்கு கிடைத்தன. ஆய்வின் முடிவில் அந்த முடிகளில் ஆர்கானிக் அமிலம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் முடியில் ஆர்கானிக் அளவு சோதனையில் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு இருப்பதில்லை. அதனால் நெப்போலியனின் மரணத்துக்கு காரணம் விஷமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்தார்கள். விஷம் கலந்த காற்றை சுவாசித்ததால், நெப்போலியன் மரணம் அடைந்ததாக லக்ஸம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் வென்னிங் அறிவித்தார். பின் நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறையை ஆய்வு செய்ததில் மேலும் இரண்டு ஆதாரங்கள் கிடைத்தன. ஒன்று அங்கிருந்த ஓவியம். இரண்டு அந்த அறையின் சுவரை அலங்கரித்த வால்பேப்பர்கள். இவை இரண்டிலும் மெல்லக் கொல்லும் விஷம் பூசப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வண்ணமாக பயன்படுத்தி இருந்தனர். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால் விஷம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசித்து சுவாசித்து இறந்து விட்டார் என்று ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வால் பேப்பரை ஓட்டும் பசையில் விஷத்தை கலந்திருந்ததால், பசி தாங்க முடியாத நெப்போலியன் அந்த வால் பேப்பரை கிழித்து தின்றதால் இறந்தார் என்று ஒரு தரப்பும் அறிவித்தது. இன்னும் முழுமையான தீர்வுக்கு வர முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் சரித்திரத்தை புரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்ன மனம் இது..?

வேறு சாதி பெண்ணை திருமணம் செய்ததால் மகனை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
கோபி, ஜூன்.30- வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் மகனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. காதல் திருமணம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 40). இவர்களுடைய மகன் செல்வராஜ் (20). இவர் கொளப்பலூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். செல்வராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் பெற்றோரை சம்மதிக்கவைத்து அவர்களுடைய வீட்டிலேயே மாடி அறையில் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். செல்வராஜ் காதலித்து திருமணம் செய்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர். அதனால் ராஜம்மாள் மகன் மீது தாங்கமுடியாத ஆத்திரத்திலேயே இருந்ததாக தெரிகிறது. ஆயுள் தண்டனை மகன் திருமணம் செய்துகொண்ட 5-வது நாள் அதிகாலையில் வீட்டின் மாடி அறையில் செல்வராஜ் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரத்துடன் இருந்த ராஜம்மாள், கையில் பெரிய கல்லை தூக்கிக்கொண்டு சென்று, பெற்ற மகன் என்றும் பாராமல் அவரின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் செல்வராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெற்ற மகனின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்ற ராஜம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராஜம்மாள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வானிலை மாற்றங்கள் 

வானிலை முன்னறிவிப்பு எல்லாமே இன்சாட் 1பி செயற்கைகோள் மூலமே தெரிந்து கொள்கிறோம். இன்சாட் 1பி செயற்கைகோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கும். செயற்கைகோள்கள் பொதுவாக 650 முதல் 1500 கி.மீ. உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டுள்ளனர். 1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4 தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 சூறைக்காற்றுகள் வீசி கதி கலங்கடித்துள்ளன. இந்தியாவில் தற்போது 20 கி.மீ. உயரம் வரை காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும். சென்னையில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை நிப்போ ஸ்ட்ராட்டஸ் என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் மழை பெய்யும் சக்தி படைத்தவை. டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம், 1935-ம் ஆண்டு ஜனவரி 16 அன்று குளிரினால் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கிவிட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். வானிலை மாற்றத்தால் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. தற்போது புயல் பற்றிய எச்சரிக்கைகளை பல்வேறு விதமாக அறிகிறோம். இந்த எச்சரிக்கை அறிவிப்பு முறை முதன்முதலில் 1886-ல் தொடங்கியது. வானிலை சீராக இருக்கும் விதத்தில் விமானம் 30,000 அடிக்கு மேல் பறக்கும் போது நகருவதே தெரியாமல் இருக்கும். மழைக்கு இடையே மின்னலடிக்கும் போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது பாதுகாப்பானது என்று கூறப்படுவதுண்டு. சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு’ என்றும், மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை’ எனவும் அழைக்கின்றனர்.


ஆட்டை சாப்பிடும் தாவரம்

என்ன இது ஆடுதானே தாவரத்தை சாப்பிடும்..! இங்கு ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று இருக்கிறதே என்கிறீர்களா..? இயற்கையின் வினோதம் இது. ஏற்கனவே வீனஸ் பிளய் ட்ராப், பிட்ஷர் போன்ற தாவரங்கள் சிறு சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஆனால், இந்த தாவரங்கள் அந்த வகையில் இல்லை. செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்று விஞ்ஞானிகள் அழைக்கும் தாவரம், புவா சிலன்ஸிஸ் என்பதாகும். இதன் பூர்வீகம் சிலி. இது 10 அடிக்கு மேல் உயரமாக புதர் போல் வளரக்கூடியது. நீண்ட முட்களைக் கொண்டது. இந்த முட்கள்தான் இவற்றை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால் இந்த தாவரங்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாக்க விலங்குகளுக்குத்தான் எந்த ஒரு தற்காப்பு வசதியையும் இயற்கை கொடுக்கவில்லை. மாறாக, இந்த தாவரத்தின் நீண்ட கொக்கி போல் வளைந்து இருக்கும் முட்கள் விலங்குகளை தப்பிக்க முடியாமல் பிடித்துக் கொள்ள பயன்படுகின்றன. செம்மறி ஆடோ அல்லது வேறு எந்த விலங்கோ இந்த புதர் நடுவில் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது. அதன் கோரமான முட்கள் உடலைக் கிழிக்கும். அதனையும் மீறி மாட்டிக் கொள்ளும் விலங்குகள் தப்பிக்க முயன்றால் முட்கள் இன்னும் ஆழமாய் உடலுக்குள் பதிந்து, வேறு வழி இல்லாமல் அபயக் குரல் எழுப்பியபடி அந்த விலங்கு இறந்து போக வேண்டியது தான். இறந்துபோன விலங்கின் உயிர்சத்துக்களை அதன் வேர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அதோடு நின்று விடுவதில்லை. இறந்துபோன விலங்குகளின் உடல், மண்ணோடு மக்கி இந்த தாவரத்திற்கு நல்ல உரமாகிறது. அதனால்தான், இதை செம்மறி ஆட்டை சாப்பிடும் தாவரம் என்கிறார்கள். மனிதன் உட்பட எந்த உயிரினமும் இந்த புதருக்குள் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. ஆனாலும் செம்மறி ஆடுகள் இந்த புதரில் அடிக்கடி மாட்டிக் கொண்டு இறந்து போவதால் இப்படியொரு பெயர் வந்திருக்கிறது. விலங்குகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த செடியின் பழங்கள் இனிமையான நறுமணத்தை பரப்புகின்றன. அதன் மணத்தில் மயங்கி புதருக்குள் வரும் விலங்குகள் மாட்டிக் கொண்டு இறந்துவிடுகின்றன. இந்த தாவரத்தை லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிறார்கள். இதன் அருகே யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்துள்ளார்கள்.