Search This Blog

Sunday, February 7, 2016


ராக்கெட்டில் வலம் வந்த முதல் உயிரினம்
 (25/01/2016)

விஞ்ஞானிகள் முதன் முதலில் செய்யும் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சி முடிவையும் விலங்குகள் மூலமே நிகழ்த்துகிறார்கள். அதன்படி விண்வெளியில்  மனிதன் தன் பிரயாணத்தை தொடங்குவதற்கு முன்பு நாயை ராக்கெட்டில் அனுப்பி ஆராய்ச்சி செய்தனர்.  அந்த வகையில் லைக்கா என்ற இரண்டு வயது நிரம்பிய பெண் நாய் தான் முதன் முதலில் பூமியை சுற்றிவந்து ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது.

1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஸ்புட்னிக் என்ற ஒரு விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் தான் லைக்கா பயணம் செய்தது. விண்வெளியில் பயணம் செய்யும் போது என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தார்கள். விண்ணில் இருக்கும் எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் விண்வெளி வீரருக்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் குழம்பி இருந்தனர். 

அதற்காக ரஷிய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் லைக்கா என்ற நாயை விண்கலத்தில் அனுப்பி வைத்தனர். அந்த விண்கலத்தில் ஒரு குறுகலான இடத்தில் இருந்த இருக்கையோடு பெல்ட் கொண்டு அந்த நாய் இணைக்கப்பட்டு இருந்தது.  நாயின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், மனநிலை போன்ற விவரங்கள் உடனடியாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தன. இதற்காக நாயின் உடலில் பல எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் அந்த நாய்க்கான உணவு குறித்த நேரத்தில் திரவ வடிவில் கொடுக்கப்பட்டது. லைக்கா ஆரோக்கியமாக இருந்து வருகிறது. எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் போது அதனுடைய உடல் நிலையில் எந்த  மாற்றமும் தென்படவில்லை என்பன போன்ற மருத்துவ அறிக்கைகளை ரஷிய  நாட்டு விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அந்த நாயை விண்வெளியில் இருந்து உயிருடன் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அன்றைய நாளில் விண்வெளியில் சுற்றி வரும் விண்கலத்தில் இருந்து எந்த ஒரு பொருளையும் பூமிக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. விண்கலத்தில் இருந்த சிறிதளவு ஆக்சிஜனை அந்த நாய் சுவாசித்து முடித்த பிறகு அது மூச்சு விட முடியாமல் இறந்து விட போகிறது என்பது தெரிந்தும் அதை பற்றி ரஷியா கவலைப்படவில்லை.

இதற்காக ரஷியாவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. ஒரு வாரத்திற்கு பிறகு கொஞ்சம் கூட கவலைப்படாமல் மிகவும் அமைதியாக லைக்கா இறந்து விட்டது என்று சுருக்கமாக ரஷியா ஒரு அறிக்கை வெளியிட்டது. லைக்கா மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள் என்று பல நாடுகளை பத்திரிக்கைகள் கேட்டுக்கொண்டன. விண்வெளியை பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்து விட்டு தன் உயிரை அர்ப்பணித்த லைக்கா பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment