Search This Blog

Friday, February 12, 2016


இசை ஜாம்பவான் பீத்தோவான் 

மேற்கத்திய இசையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டவர் பீத்தோவான். இவரது சிம்பொனி இசை இன்றைக்கும் ஒரு பிரமாண்டம் தான். அவரது பெருமை பல ஆண்டுகள் கடந்தும் குறையாமல் இருக்கிறது. ‘நிழல்கள்‘ படத்தில் வரும் ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது‘ பாடல் கூட பீத்தோவானின் சிம்போனியை தழுவி உருவாக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பீத்தோவானின் வாழ்க்கையை மூன்று கட்டமாக பிரிக்கிறார்கள். முதல் கட்டம் 1770 முதல் 1802 வரை. இரண்டாவது கட்டம் 1803 முதல் 1814 வரை, மூன்றாவது கட்டம் 1815 முதல் 1827 வரை. இதில் இரண்டாவது கட்டம் தொடங்கும் போது இவருடைய காதுகள் கேட்கும் சக்தியை இழந்தன. அதன்பின்தான் இவர் இசையில் உலகப் புகழ் பெற்றார். இதுவோர் அரிய நிகழ்வு.

பீத்தோவானின் முழுப் பெயர் லூத்விக் வான் பீத்தோவான். இவருடைய தந்தை ஜோகன்வான் பீத்தோவான். தாய் மரியா மேக்டலீனா கேவிரிச். பீத்தோவான் 1770-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இசை கற்றுக் கொடுத்த முதல் குரு இவருடைய தந்தை தான். பீத்தோவானின் இசை வாழ்க்கையில் ‘வியன்னா‘ நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 1787-ல் அங்கு சென்ற பின்தான் அவர் பல இசை மேதைகளை சந்தித்தார். ஹய்டனும் மொசார்ட்டும் அதில் முக்கியமானவர்கள். 1787-ல் அவருடைய தாயும், 1792-ல் தந்தையும் மறைந்தனர். 1796-ல் டின்விட்டஸ் என்ற காது நோயால் அவதிப்பட்டார். 1801-ல் முழுமையாக கேட்கும் திறனை இழந்தார்.

1803-ல் இவரை உயிருக்கு உயிராய் காதலித்த கில்லிட்டா வேறொருவரை மணந்தார். அதன்பின் ஜோசபின் டெய்ம் என்ற பெண் மீது காதல் கொண்டார். அவரும் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு விதமான மன உளைச்சலுக்கு ஆளானார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளானார். ஆனால், அவற்றையெல்லாம் மீறி சாதித்தது இவரது தனிச் சிறப்பு. இவர் ஒன்பது முறை சிம்பொனிக்கு இசை அமைத்தவர். 12 வகையான ‘அக்கெஷனல்‘ இசையையும், 32 பியானோ சொனாட்டுகளையும் எழுதியுள்ளார். 10 வகையான பியானோ, வயலின் இசைக் குறிப்புகளை உருவாக்கியுள்ளார். சிறந்த பியானோ இசைக்கலைஞராக, இசை நடத்துனராக, இசைக் கச்சேரிகளில் கொடி கட்டிப் பறந்தார், பீத்தோவான்.  இசையையே வாழ்க்கையாக கொண்ட பீத்தோவான் 1827 மார்ச் 26-ல் காலமானார். இவரது இசையை இன்னமும் இசை உலகம் போற்றி வருகிறது. இவர் தன் காதலிக்கு எழுதிய கடிதங்களை பல அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. 1949-ல் ‘எரோயக்கா‘ என்ற படமும், 1962ல் ‘தி மேக்னிபிசியன்ட் ரெபல்‘ என்ற படமும், 1994-ல் ‘இம்மார்ட்டல் பிளான்க்‘ என்ற படமும் பீத்தோவான் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை ஆகும்.  செவிகளை இனிமைப்படுத்தும் சிம்பொனி இசையை உருவாக்கியவர் ஒரு கேட்கும் திறனற்ற ஒருவர் என்பது உலகின் மிகப் பெரிய அதிசயமே!

No comments:

Post a Comment