Search This Blog

Sunday, February 7, 2016


உலகில் இரண்டாவது தானியம் தினை

தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். ஆங்கிலத்தில் இதனை மைனர் மில்லட் என்று அழைக்கிறார்கள். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பலவகையாக பிரிக்கிறார்கள். தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் வெள்ளையர்கள் அப்படியொரு பெயரை வைத்துவிட்டார்கள்.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6000 காலக்கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்தன. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் பயன்பாடு குறைந்து, கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.

இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தன. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இப்போது மீண்டும் திணை உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. தினை ஆரோக்கியத்திற்கு நல்லது.

No comments:

Post a Comment