Search This Blog

Thursday, October 15, 2015


டி.வி. ரிமோட்டுக்காக பேரனை கத்தியால் குத்திய பாட்டி 

ரஷியாவின் மாஸ்கோவை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் தனது 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். இருவரும் ஒருநாள் வீட்டில் இருந்தபோது அந்த பெண் தனது பேரனிடம் டி.வி. ரிமோட்டை எடுத்து தருமாறு கேட்டார். ஆனால் பேரனோ பாட்டியின் பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், கத்தியை எடுத்து பேரன் என்றும் பாராமல் சிறுவனின் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் 3 முறை குத்திவிட்டார். பலத்த சிகிச்சைக்குப்பின் சிறுவன் உயிர் பிழைத்தாலும், அவனது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பேரனை குத்திய பாட்டிக்கு, 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சம்பவத்தின் போது அந்த பெண் மது அருந்தியிருந்ததாகவும், எனினும் அவர் சுயநினைவுடன்தான் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.(16.10.2015)

முதல் திரை முத்தம்
இந்திய சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படும் தாதா சாகேப் பால்கே எடுத்த ‘ராஜா ஹரிச்சந்திரா‘ (1913) படம் தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படம். இந்த படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள்தான். அன்று பெண்கள் சினிமாவில் நடிக்க முன்வராததால் பெண்கள் வேடத்திலும் ஆண்களே நடித்தனர். முதன் முதலாக இந்திய சினிமாவில் பெண்கள் நடிக்கத் தொடங்கியது 1914-ல். தாதாசாகேப் பால்கேயின் இரண்டாவது படமான ‘மோகினி பஸ்மசூர்‘ என்ற படத்தில் துர்காபாயும், அவருடைய மகள் கமலாபாய் கோகலேவும் நடித்தனர். பெண்களை திரையில் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். 

முதன் முதலாக அதிக நாட்கள் ஓடி வெற்றிப் படம் என்று வசூலில் சாதனை புரிந்த படம் ‘லங்கா தகன்‘ (1921). இந்த படம் மும்பை நகரில் கிர்காம் என்ற இடத்தில் இருந்த ‘வெஸ்ட் எண்டு‘ என்ற தியேட்டரில் 23 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது. 

தடை செய்யப்பட்ட முதல் இந்திய சினிமா ‘பகத் விதூர்‘ (1921). படத்தின் தயாரிப்பாளரே மகாத்மா காந்தி வேடத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த படம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ஒருசில மாநிலங்களில் இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக ஓடியது. 

இந்திய சினிமாவில் முதல் தணிக்கைக்குழு (சென்சார் போர்டு) 1920-ல் பாம்பே, கல்கத்தா, மதராஸ், ரங்கூன் (இன்றைய மியான்மர்) ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டது. 1927-ல் லாகூரில் மேலும் ஒரு திரைப்பட தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. சமூகத்தை நையாண்டி செய்த முதல் படம், 1921-ல் வங்க மொழியில் வெளியான ‘பிலேத் போராட்‘ என்பது. இந்த படம் காதலையும், கிழக்கத்திய, மேற்கத்திய முரண்பாடுகளையும் திறம்படச் சொன்னது. 

இந்தியாவின் முதல் சரித்திர படம் 1923-ல் வெளியான ‘சிங்காகாத்‘ என்ற படம் தான். இந்தப் படம் மராட்டிய சக்கரவர்த்தி சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையைப் பற்றிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘தேவதாஸ்‘ திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளில் 12 முறை படமாக்கப்பட்டிருக்கிறது. முதல் தேவதாஸ் 1928-ல் வெளிவந்தது. அதேபோல் முதல் மொகலாய வரலாற்றுப் படம் 1923-ல் ‘நூர்ஜகான்‘ என்ற பெயரில் வந்தது. 

இந்திய சினிமாவில் முதல் முத்தக் காட்சி 1933-ல் வெளிவந்த ‘கர்மா‘ படத்தில் இடம் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் சினிமா முத்தத்திற்கு தடையில்லை. அதனால் மான்ஷு ராய், தேவிகா ராணி ஆகிய இருவரும் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் முத்தமிட்டுக் கொண்டது தான் இந்தியாவின் முதல் திரை முத்தம். 

இந்தியாவின் முதல் கவர்ச்சி நடிகை இத்தாலியைச் சேர்ந்த நடிகை சினோரின்னா மனெல்லி என்ற பெண்தான். இவர் 1922-ல் நடித்த ‘பதிபக்தி‘ படத்தில் உடல் பாகங்கள் எல்லாம் வெளியே தெரியும் வண்ணம் மிக மெல்லிய ஆடை அணிந்து ஆடிய நடனக் காட்சியை மீண்டும் மீண்டும் தணிக்கை செய்தனர். முதல் கவர்ச்சியே அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது.

Wednesday, October 14, 2015


சரியானதை செய்தால் வெற்றி (கன்பூசியஸ்)
சீனாவில் மன்னர்களின் ஆதிக்கத்தால் மக்கள் கடும் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த காலம். மேலும் அதிக வரி விதிக்கப்பட்டதால் மக்கள் வறுமையில் வாடினர். அப்போது தோன்றியவர்தான் கன்பூசியஸ் என்ற தத்துவஞானி. 

‘அதிக வரியும், அதிகமான தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதைவிட்டு பரம்பரை மட்டுமே கொடுக்கும் தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் தர முடியாவிட்டால் அவர்கள் ஆட்சியில் நீடிக்கும் உரிமை அற்றவர்கள்’ என்று கூறி ஒரு அரசன் எப்படி நடக்க வேண்டும் என்று வகுத்துச் சொன்னவர் அவர். 

இவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு மக்கள் மாபெரும் கூட்டமாக திரண்டனர். இப்படி மக்கள் பேராதரவு பெற்ற ஒருவரை கைது செய்தால் நாடு முழுக்க கலவரம் நடக்கும் என்பதை முன்கூட்டிய தீர்மானித்த அந்த அரசன். கன்பூசியசை சட்டத்துறை அமைச்சராக நியமித்தான். அவருக்கென்று வேலை ஆட்கள், பெரிய மாளிகை, மனதை நிறைத்த சம்பளம். இவற்றையெல்லாம் கொடுத்து, புதிய சட்டங்களை இயற்றும் படி மன்னன் கூறினான். அவரும் இரவு, பகல் பாராமல் உழைத்து, மக்கள் நலனுக்காக புதிது, புதிதான சட்டங்களை இயற்றினார். அதை எல்லாம் மன்னரிடம் ஒப்படைத்தார். 

 வெகுகாலம் கடந்தும் கன்பூசியஸ் எழுதிக்கொடுத்த ஒரு சட்டம் கூட அமல் படுத்தப்படவில்லை. சற்று தாமதமாக இந்த பதவியினால் எந்த ஒரு பயனும் ஏற்படாது என்பதை உணர்ந்த கன்பூசியஸ் பதவியில் இருந்து விலகினார். ‘ஒரு செல்வந்தானாக வாழாமல், ஏன் பிச்சைக்காரன் போல் வாழ ஆசைப்படுகிறீர்கள்?’ என்று மன்னன் கோபத்தோடு கேட்டான். ‘’எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்! என்று என் மனம் என்னை தொந்தரவு செய்கிறது’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார் 

கன்பூசியஸ். சிறு வயதிலேயே பழைய இலக்கியங்கள், அரசியல் சட்டங்கள், மதக்கோட்பாடுகள் என எல்லாவற்றையும் படித்து முடித்தார். அவற்றைப் பற்றிச் சிந்திப்பதும், விவாதிப்பதையும் தனது தனிப்பெரும் குணமாக வளர்த்து கொண்டார். இளைஞர் ஆனதும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தந்தார். மதங்கள் எதுவும் மக்கள் துன்பத்துக்குத் தீர்வு சொல்லவில்லை என்பதால், அவற்றை புறக்கணித்தார். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மனதில் புரட்சிக் கருத்துகளை விதைத்தார். பல நாடுகள் அவரைத் தங்கள் எல்லைக்குள்ளேஅனுமதிக்காமல் விரட்டி அடித்தன. 

‘ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடமும் தன்மானம், பெருந்தன்மை, கபடமின்மை, உண்மையாக இருத்தல், அன்பு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதன் இன்பமாக இருக்க முடியும். தனி மனிதன் நிம்மதியாக இருந்தால் நாடும் சிறப்பாக இருக்கும்‘ என மனிதர்களின் துன்பங்களுக்குத் தீர்வு சொன்னார். 

அதைப்போலவே மனிதர்கள் வெற்றி பெறுவதற்கும் கன்பூசியஸ் ஒரு சூத்திரம் சொல்லிக் கொடுத்துள்ளார். அது, ‘மனிதர்கள் எப்போதும் எளிதான செயல்களை செய்யவே ஆசைப்படுகிறார்கள். அது எப்போதும் சரியல்ல. வெற்றி பெற வேண்டுமானால், எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியானதோ அதைச் செய்யுங்கள்!’ என்றவர், இதை தன் வாழ்நாள் முழுதும் கடைபிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் விவசாயிகள் 

மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசை கூட குடிபெயர வைக்கிறது. இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட மாநிலம் பஞ்சாப் தான். அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமைதான் இருக்கிறது. பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு ஏக்கர் விளைநிலம் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டி போட்டு இந்த நிலத்தை வாங்குகிறார்கள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதிக லாபம் கிடைப்பதால் விளைநிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று விவசாயிகள் குடியேறி விடுகிறார்கள். ஆஸ்திரேலியா இந்தியாவை விட மூன்று மடங்கு பரப்பளவில் பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. இதில் 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மா கிடக்கின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு. பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்குகிறது. பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம். ஆஸ்திரேலியாவில் நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே கிடையாது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் இல்லாமல் நடைபெறுவதில்லை. பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலைகளையும் முடித்து விடலாம். காய்கறி, பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது. ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழிலான பால் பண்ணை வைத்து ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும்? தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்கிறார்கள். (15.10.2015)

பணத்துடன் எரிக்கப்பட்ட பிணம் 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த தாவோ என்ற விவசாயிக்கு 2 மகன்கள் உள்ளனர். வயதான தாவோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது நிலத்தை 2 மகன்களுக்கும் பகிர்ந்து அளித்தார். பின்னர் அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, பழைய இரும்பு பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து பிழைத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் தனியாக வாழ முடியவில்லை. எனவே தனது மகன்களுடன் சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவரை புறக்கணித்தனர். இதனால் பெருத்த சோகத்துக்கு உள்ளான அவர், தனது மகன்களை தண்டிக்க விரும்பினார். அதன்படி தான் இறந்த பின், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும், தனது உடலுடன் சேர்த்து எரித்துவிடுங்கள் என உயில் எழுதிவைத்தார். சமீபத்தில் ஒருநாள் தாவோ உயிரிழந்தார். அவரது உடலை எரிப்பதற்காக மகன்கள் எடுத்து சென்றனர். அப்போது அவரது உயிலை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். பின்னர் உயிலில் எழுதியிருந்த படி, தாவோ சேர்த்து வைத்திருந்த 33 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.20 லட்சம்) பணத்தையும் அவரது உடலுடன் சேர்த்து எரித்து விட்டனர். (15.10.2015)
 


உலகின் விலை உயர்ந்த பிஸ்கட் 

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கியது. இதில் பயணிகள், பணியாளர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த சில பயணிகளை எஸ்.எஸ்.கார்பதியா என்ற கப்பல் காப்பாற்றியது. இந்த மீட்பு பணிகளுக்கு, கார்பதியா கப்பலில் பயணித்த ஜேம்ஸ் பென்விக் என்ற பயணியும் உதவி புரிந்தார். அப்போது ஒரு உயிர்காக்கும் படகில் இருந்து பிஸ்கட் ஒன்றை ஜேம்ஸ் பென்விக் எடுத்து வந்தார். இது டைட்டானிக் கப்பல் கேப்டன் உண்பதற்காக வைத்திருந்த பிஸ்கட் ஆகும். இதை ஜேம்ஸ் பென்விக், தனது வீட்டில் ஒரு குறிப்புடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பிஸ்கட், இங்கிலாந்தில் உள்ள ஒரு ஏல நிறுவனம் மூலம் தற்போது ஏலம் விடப்படுகிறது. இது ‘உலகிலேயே விலை உயர்ந்த பிஸ்கட்’ என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பிஸ்கட் சுமார் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (15.10.2015)




உணவு உற்பத்தியை குறைக்கும் சுற்றுச்சூழல்
உலகம் முழுவதும் மாறி வரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர் ஆகிய இருவரும் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் சாராம்சம் வருமாறு:- உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக எராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும் மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுபோக எஞ்சியுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகள் நீர்ப்பாசனத்துக்கும் சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ள வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவீதத்துக்கும் அதிகமாக உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். விழித்துக்கொள்ளுமா, எல்லா நாடுகளும்?