Search This Blog

Sunday, February 28, 2016


வியக்க வைக்கும் எறும்புகள் 29/02/2016

எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை குலையாமல் போவதைப் பார்த்திருக்கலாம். இந்த வரிசைக்கு காரணம் வாசனைதான். முன்னாள் போகும் எறும்பு ஒருவித வாசனையை தரையில் அல்லது சுவரில் விட்டுச் செல்கிறது. பின்னால் வரும் எறும்புகள் அந்த வாசனையை முகர்ந்து கொண்டே ஒரே வரிசையாக செல்கின்றன.

எறும்புகள் வரிசையாக செல்வதை நீங்கள் பார்த்தால் அவற்றின் பாதையில் ஒரு இடைவெளி கிடைத்தால் அல்லது அந்த இடத்தை தேய்த்து விட்டால், அப்போது அங்கு வரும் எறும்புகள் சற்று தடுமாறும். முன்னால் சென்ற எறும்பு விட்டுச் சென்ற அதற்கு வாசனை கிடைக்காமல் போவதுதான் இதற்கு காரணம்.

எறும்புகளுக்கு கண் உண்டு. ஆனாலும் வாசனையை வைத்துதான் வரிசையாக செல்கின்றன. அவற்றை போன்று ஒழுங்கான உயிரினத்தைப் பார்ப்பது கடினம். எல்லாமே மிகவும் சிநேகிதமாக இருக்கக்கூடியவை. எறும்புகள் தங்கள் கூட்டுக்குள் பூச்சிகளை கட்டிப்போட்டு வளர்க்கின்றன. சில எறும்புகள் மற்ற எறும்புகளின் கூட்டுக்குள் சென்று அங்கிருக்கும் எறும்புகளை கடத்தி வந்து அடிமைகளாக வைத்துக் கொள்கின்றன. அவற்றிலும் ஆக்கிரமிப்பு உண்டு.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா எறும்பு வகைகள், ராணுவ அதிகாரிகள் வியக்கும்படி, தங்களது படைகளை படு எச்சரிக்கையுடன் நடத்திச் செல்கின்றன. அவைகளில் முன்னணிப்படை, பக்கவாட்டுப் படை, ஒற்றர்கள் எல்லாம் உண்டு. உணவை கச்சிதமாக அடுக்கி வைக்க சின்னக்குச்சி, இலை நுனி போன்றவற்றை ஆயுதமாக உபயோகிக்கும் எறும்புகளும் உண்டு. இவை எல்லாமே கூட்டமாக இருக்கும் போதுதான். தனி எறும்பு என்று பார்த்தால் ஒன்றுக்கும் பயன்படாத பூஜ்யம்தான்.

எறும்புகளில் ஆயிரம் வகைகள் உள்ளன. பாலைவனத்திலும் எறும்புகள் உண்டு. கடற்கரையில், மலைச்சாரலில், காட்டில் என்று எல்லா இடத்திலும் (எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர) இருக்கின்றன. 20 அடி உயரத்துக்கு புற்றுகள் கட்டும் எறும்புகளும் உண்டு.

பறக்கும் சைக்கிள் 28/02/2016

பெரிய நகரங்களில் வாகனங்களில் செல்வது சாகசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது. சைக்கிளில் செல்வது கூட முடியாத ஒன்றாக உள்ளது. போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் அந்த நேரத்தில், அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும்.

அப்படியொரு எண்ணம்தான் லேரிநீல் என்பவருக்கு தோன்றியது. அதன் விளைவாக பறக்கும் சைக்கிளை கண்டுபிடிக்க அவர் விரும்பினார். டெக்சாஸ் மாநிலத்தின் அரோரோ பகுதியை சேர்ந்த இவரது விடாமுயற்சியில் உருவானது தான் பறக்கும் சைக்கிள்.

இந்த சைக்கிளை தயாரிக்க லேரிநீலுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட தடைகளை கடக்க வேண்டியிருந்தது. இடையில் கண்டுபிடிப்பு நின்றுவிடுமோ என்று கூட பயந்தார். ஆனாலும் எதற்கும் கலங்காமல், தளராத மனதுடன் போராடி இறுதியில் கண்டுபிடித்துவிட்டார்.

பறக்கும் சைக்கிளை தரையிறக்கிய பின், அதன் இறக்கைகளை மடக்கி சாலைகளில் சாதாரணமாக செல்வதற்கு ஏற்ப மாற்றுவதுதான் மிகவும் கடினமாக இருந்தது. இந்த பறக்கும் சைக்கிளுக்கு ‘சூப்பர் ஸ்கை சைக்கிள்‘ என்று பெயர் வைத்தார்.

இதன் பவர் 582 சிசி. இது 68 அங்குலம் நீளமுள்ள இருக்கைகளை கொண்டுள்ளது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதை இறக்குவதற்கு 20 அடி நீளம் கொண்ட சமதளம் இருந்தால் போதும். அதிக பட்ச வேகம் மணிக்கு 104 கி.மீ. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5 மணி நேரம் பறக்கலாம். இதன் விலை 46 ஆயிரம் பவுண்ட். இந்திய மதிப்பில் ரூ.37 லட்சத்து 49 ஆயிரத்து 750.

இந்த சூப்பர் ஸ்கை சைக்கிளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. இதை ஓட்டுவதற்கு விமான பைலட் லைசென்சும், தரையில் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் வேண்டும். ‘பட்டர்பிளை ஏர் கிராப்ட்‘ என்ற நிறுவனம் இதன் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது. இதை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பேட்டன்ட் உரிமையை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்த சூப்பர் ஸ்கை சைக்கிள் வேண்டும் என்று இப்போதே பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. எல்லைப் பாதுகாப்பு படைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் டெக்சாஸ் மாகாண ராணுவம் இந்த சைக்கிளுக்கு நிறைய ஆர்டர் கொடுத்துள்ளது.

வசதி  படைத்தவர்களுக்கு மானியங்கள்  தேவையா? 29/02/2016


எந்தவொரு அரசாங்கத்துக்கும், பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச்செல்லும்போதும், பட்ஜெட்டை தயாரிக்கும்போதும், ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்வது பொருளாதார ஆய்வறிக்கையாகும். அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து நிலைமைகளையும் நன்கு ஆராய்ந்து, “நீங்கள் இப்படி சென்றால்தான் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடமுடியும், அந்த திசைநோக்கி செல்லமுடியும்” என்ற ஒரு நல்ல பாதையை பொருளாதார ஆய்வறிக்கை காட்டும். தற்சமயம் இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக தமிழரான அரவிந்த்  சுப்பிர மணியன் இருக்கிறார். அவர் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த ஆய்வறிக்கையில், வருகிற ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் 30 சதவீதம் பேர்களை ஏழைகள் என்றும், 70 சதவீதம் பேர்களை வசதியுள்ளவர்கள் என்றும் பிரித்துள்ளது. இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையை 3.9 சதவீதத்துக்குள் நிச்சயமாக வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறி, தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைகளையும், எதிர்காலத்தில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதும் வரைபடம்போல காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், தேர்தல் நேரங்களில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, நாட்டின் வளர்ச்சிகளை மறைக்கும் வகையில், இலவசங்களையும், மானியங்களையும் அள்ளித்தருகிறோம் என்று கூறுவார்கள். ஆனால், பொருளாதார நிபுணர்கள், மானியங்களும், இலவசங்களும் குறைவாக இருக்கும் நிலையில்தான் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். எல்லோரும் சுற்றிச்சுற்றி சொன்ன கருத்தை, பொருளாதார ஆய்வறிக்கை பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டது. மானியங் களை முழுமையாக ரத்து செய்யச்சொல்லவில்லை. நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வதுபோல, ஏழைகளுக்கான மானியங்கள், வசதிபடைத்தவர்களுக்கும் செல்லும் நிலைமையை சுட்டிக்காட்டி
இருக்கிறார்கள். மண்எண்ணெய், ரெயில்வே, மின்சாரம், சமையல் கியாஸ் சிலிண்டர், தங்கம், விமான பெட்ரோல், சிறுசேமிப்பு திட்டங்களுக்காக வசதிபடைத்தவர்களுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு இந்த மானியத்தை தாராளமாக கொடுப்பதை நிறுத்தினால், அந்தத்தொகை மிச்சமாகி, ஏழைகளுக்காக செலவழிக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் ஊக்க செலவுகளை நிறுத்தவேண்டும் என்று கூறுவது, இப்போதுள்ள சூழ்நிலையில் சரியாக இருக்குமா?. வருங்கால வைப்பு நிதி மற்றும் வரியில்லாத சேமிப்பு பத்திரங்கள் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களில் பணத்தை திரும்பப்பெறும்போது, அந்த தொகையை வரிக்கு உட்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போதே .25 சதவீத வட்டி பல சேமிப்பு திட்டங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டால், சிறுசேமிப்பு மீது ஆர்வம் மிகவும் குறைந்துவிடும்.

சமையல் கியாஸ் பொருத்தமட்டில், தற்போது 180 ரூபாய் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்குவதற்கு பதிலாக, மானியத்தோடு கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சமீபத்தில் நடந்த மற்றொரு ஆய்வில், சமையல் கியாசுக்காக கொடுக்கப்படும் மானியத்தில் 40 சதவீத பரமஏழைகள், 13 சதவீதத்தைத்தான் பெறுகிறார்கள். அதற்குமேல் உள்ள 60 சதவீதம் பேர்கள்தான் 85 சதவீதத்தை பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல, இந்தியாவில் தற்போது வருமானவரி கட்டுபவர்கள் 5.5 சதவீதம்தான். மற்ற பல நாடுகளைவிட, இந்தியாவில்தான் வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் அதிகம்பேர் வருமானவரி கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியதாகும். மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சிக்கான பல பரிந்துரைகள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்றத்தில் இதை முழுமையாக விவாதித்து, உரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.

Saturday, February 27, 2016


தட்டைப்பாதங்கள் தரும் வேதனை 26/02/2016

மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் வலிமை உள்ளவர்களை சேர்த்துக்கொள்ளும் ராணுவம் கூட தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறது. ஏன்?

பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள். அதன் வடிவம் தட்டையாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம் நீடிக்கும். 7 வயதுக்குள் 95 சதவீத குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும்.  நம் அனைவரின் பாதங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை. பல வடிவங்களில், பல அளவுகளில் காணப்படும். சொல்லப்போனால் ஒருவரின் வலது பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூட ஓரளவு வித்தியாசம் இருக்கிறது. சிலருக்கு நிற்கும் போது மட்டும் உடலின் எடை பாதத்தில் விழுவதால் பாதம் சற்று தட்டையாகத் தோன்றும். அவர்களே உட்கார்ந்தாலோ படுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதி சமத்தாக உட்புறம் வளைந்து நார்மலாகி விடும். இது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுள்ள தட்டைப் பாதம். பாதத்தின் இயல்பான வடிவத்தைக் காக்கும் தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில் பிரச்சினை இருக்காது. அவசரமாக ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொள்வதில் கூட சிரமம் இருக்காது. ஆனால், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும். தவிர ஓட்டப்பந்தய வீரராக வருவது கடினம். இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை.

தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டு சரியானாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டு. அதை இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள். இவர்களுக்கு பின் பாதத்துக்கும், நடுப்பாதத்துக்கும் இடையே உள்ள எலும்புகள் பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும். அங்கு நெகிழ்வுத் தன்மை குறைந்து அதன் காரணமாகவும் தட்டைப்பாதம் உண்டாகலாம். தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால் அதற்கென்று இருக்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின் வெளிப்புறமும் உள்புறமும் அசைவை குறைக்கும் வகையில் ஆபரேஷன் செய்வதே நல்லது. இதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்தது. அப்போதுதான் பாதம் முழு வளர்ச்சியடைந்திருக்கும்.

Friday, February 26, 2016


சாதுர்யம் நிறைந்த சர்ச்சில் 26/02/2016

சாகசம், சாதுர்யம், சாமர்த்தியம், வீரம், துணிச்சல் என்ற அத்தனை திறமைகளோடும் இரண்டாம் உலகப் போரை சந்தித்து இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் தான், வின்ஸ்டன் சர்ச்சில். போர்க்களத்தில் நாட்டை வழிநடத்த சர்ச்சிலை விட சிறந்த பிரதமர் கிடையாது என்று புகழ்கின்றனர், இங்கிலாந்து மக்கள்.

1945-ம் ஆண்டு பிரதமராக இருந்த சர்ச்சிலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. போரைக் கடந்து வந்த இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்தல் நடந்தது. இங்கிலாந்தின் ராணுவ வீரர்களை கிளர்ந்தெழச் செய்த சர்ச்சிலின் பேச்சுத்திறன், வாக்காளர்களை கவருவதற்கு பயன்படவில்லை. ஆம், சர்ச்சிலை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சியினர் பெரும் வெற்றி பெற்றனர்.

“போர் நடக்கும் போது பிரதமராக இருக்க சர்ச்சிலை தவிர தகுதியானவர் யாருமே கிடையாது. ஆனால், போரின் இடிபாடுகளில் இருந்து நாட்டை மீட்டு சீரமைக்கும் பணி என்பது முற்றிலும் மாறுபட்டது. அதற்கு சர்ச்சில் பொருத்தமானவர் இல்லை“ என்று மக்கள் முடிவு கட்டிவிட்டனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவரான அவர், அடுத்த தேர்தலில் (1951) வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி விட்டார்.

சர்ச்சிலுக்கு சில சென்டிமெண்டுகள் இருந்தன. அவர் தனது கைத்தடியை எப்போதும் கூடவே வைத்திருப்பார். ஒருமுறை மறந்து வைத்துவிட்டுப் போன போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அதன்பின் கைத்தடி மீதான சென்டிமெண்ட் இன்னும் அதிகமானது.

இரண்டாம் உலகப்போரில் பங்கெடுப்பு, இரண்டு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்து ராஜதந்திர வித்தைகளை செய்தது, உலக சரித்திரத்தை திசை திருப்பியது என்று வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக இருந்தாலும், சர்ச்சில் தனக்கென்று நேரம் ஒதுக்கிக்கொண்டு தன்னுடைய கலை ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய ‘தி செகண்ட் வோர்ல்ட் வார்‘ புத்தகம் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. சர்ச்சில் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

சர்ச்சிலின் கடைசி காலத்தில் ஒருவர், ‘மரணம் என்றால் உங்களுக்கு பயமா?‘ என்று அவரிடம் கேட்டார். அதற்கு சர்ச்சில் ‘நான் என்னுடைய தயாரிப்பாளரை (கடவுள்) நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் தயாரா என்று தெரியவில்லை‘ என்று பதில் அளித்தார். 1965 ஜனவரி 25-ல் தனது 90-வது வயதில் சர்ச்சில் மறைந்தார்.

Thursday, February 25, 2016


நிறங்கள் மூலம் சிகிச்சை 25/02/16


நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு ‘கிரோமோதெரபி‘ என்று பெயர். இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை.

ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது.

2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி. 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தை பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர்.

சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், நீல நிறம் தொண்டைப் பகுதியையும் இண்டிகோ நிறம் சருமத்தையும் ஊதா நிறம் தலைப் பகுதியையும் காப்பதாக இந்த மருத்துவமுறை சொல்கிறது.

‘டிஸ்லெக்சியா‘ போன்ற கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள். ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். இதனை அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள்.

வைர எரிகற்கள் 24/02/2016

வானம் ஒரு பிடிபடாத மர்மம். விண்ணில் இருந்து அவ்வப்போது ஏதாவது ஒன்று பூமியில் வந்து விழுகிறது. அது என்னவென்று சுதாரிப்பதற்குள், எல்லாவற்றையும் எரித்து விடுகிறது. அப்படித்தான், 1908 ஜூன் 30-ந்தேதி ஒரு சம்பவம் நடந்தது.  ரஷியாவின் மத்திய சைபீரியா பகுதியான துங்கஸ்காவில் அதிகாலை நேரத்தில் வானத்தில் இருந்து ராட்சத தீக்கோளம் பூமியை நோக்கி மிக வேகமாக வந்தது. அது விழுந்து வெடித்தபோது, நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு சத்தம் கேட்டது.  அதன் தாக்கத்தால் இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதனால் ஏற்பட்ட பயங்கர அதிர்வு பூமியை இரண்டு முறை சுற்றி வந்தது. இது நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும்கூட, வானத்தில் பரவியிருந்த நெருப்புத் துகள்களால் இரவு-பகல் என்ற வேறுபாடின்றி வெளிச்சம் நிறைந்திருந்தது.

அந்த வெளிச்சத்தில் துங்கஸ்காவில் இருந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லண்டனில் இரவில் பேப்பர் படிக்க முடிந்தது. இந்த சம்பவத்தைத்தான் விஞ்ஞானிகள் ‘துங்கஸ்கா நிகழ்ச்சி‘ என்று அழைக்கிறார்கள்.

இது எதனால் ஏற்பட்டது என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், தான் தெரிந்தது அதுவொரு வால் நட்சத்திரத்தின் பகுதி என்பது. கிரகங்களுக்கு நடுவே சிறியதும், பெரியதுமாக ஏகப்பட்ட வால் நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சிறியது என்பது தூசு அளவு இருக்கும். பெரியது என்பது இலங்கை தீவு அளவு இருக்கும். துங்கஸ்காவில் விழுந்த எரிகல் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு இருந்தது. மணிக்கு 70 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வந்து பூமி மீது மோதியிருக்கிறது.  எரிகற்கள் என்பது வானச்சத்திரங்களில் இருந்து விழும் துண்டுகள் தான். ஒரு இரவுக்கு 10 எரிகற்கள் வரை பூமியில் விழுகின்றன. இதுவரை விழுந்த எரிகற்களில் மிகப் பெரியது 9 அடி நீளம் கொண்டது. பெரும்பாலும் எரிகற்கள் பூமியின் பாதையில் காற்றுமண்டலத்தில் நுழைந்ததும் வெப்பத்தால் எரியத்தொடங்கி விடுகின்றன.

சுமார் 100 கி.மீ. உயரத்திலேயே அவை சாம்பலாகிவிடுகின்றன. சாம்பலாவதற்குள் பூமியை வந்தடையும் கற்கள் பெரும்பாலும் கடலில்தான் விழுகின்றன. இதற்கு காரணம் பூமியின் பெரும்பகுதி கடலாக இருப்பதுதான்.  எரிகற்களில் இரண்டு வகை உள்ளன. அவை உலோக எரிகற்கள், வைரம் கலந்த எரிகற்கள். இதில் உலோக எரிகற்கள் நிக்கல், இரும்பு கலவையுடன் கூடியது. பூமியில் விழும் எரிகற்களில்  சில சமயம் வைரக்கற்களாக கொட்டவும் வாய்ப்பு உண்டு. கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால், எரிகற்கள் அப்படியல்ல. அவை கிரகங்களில் மோதி அங்கேயே தங்கி விடுகின்றன.  எரிகற்களில் இருந்து நமது பூமியை காப்பாற்றுவது நமது காற்றுமண்டலம்தான். அது மட்டும் இல்லாவிட்டால் பூமியெங்கும் பள்ளங்களாகவும், எரிகல் பாறைகளாகவும் இருக்கும். ஒவ்வொரு கல் விழும்போதும் ஏராளமான உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும். இவையெல்லாம் நடைபெறாமல் காற்றுமண்டலம் தான் நம்மை காப்பாற்றுகிறது. அது நமது அதிர்ஷ்டம்தான். 

உள்ளாட்சி  அமைப்புகளில் 50  சதவீத  பெண்  பிரதிநிதிகள் 24/02/2016

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று பிறந்தநாள். 68 வயது முடிந்து 69-வது வயது பிறக்கும் இந்த நன்னாளில், எல்லோரும் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எப்போதுமே தனது திட்டங்களில் பெண்களை மையப்படுத்தும் ஜெயலலிதா, இந்த பிறந்தநாளுக்கு 4 நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு மசோதாவை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி, தாய்க்குலத்துக்கு தன் பிறந்தநாள் பரிசை அளித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் மேயர்கள், 919 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 124 நகராட்சிகளிலும் தலைவர்கள், 3,613 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 528 பேரூராட்சிகள் இருக்கின்றன. இங்கும் தலைவர்களும், 8,238 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் தலைவர்களும், 99,333 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுதவிர, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் என்று மொத்தம் 1,32,883 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த அமைப்புகளுக்கெல்லாம் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும், 40 சதவீதத்துக்குமேல் பெண்கள் வெற்றிபெற்று உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை அலங்கரித்தனர். இப்போது 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தன்மூலம், பெண்மைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெரிய பெருமையை அளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில், ஆண்களும், பெண்களும் ஏறத்தாழ சரிசம எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். 1,000 ஆண்களுக்கு 996 பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 50 சதவீதத்தை பெண்கள் நெருங்கிவிட்டார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளித்திருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். மத்திய அரசாங்கம் நாடுமுழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றவகையில், ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர பரிசீலித்து கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் மெதுவாக கொண்டுவாருங்கள், நாங்கள் அதற்கு முன்பே 50 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவருகிறோம் என்ற வகையில், தமிழ்நாடு செயல்பட்டிருப்பது நிச்சயமாகவே பெருமைக்குரியதாகும்.

சில மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்தான் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கிராமப்பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நிச்சயமாகவே பெருமைக்குரியதுதான். ‘‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற பாரதியின் கனவு, தமிழ்நாட்டில் நனவாகிவிட்டது.

பெண்கள் தங்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு வாசலாக இருக்கும், இந்த அமைப்புகளில் இந்த தேர்தல்களில் பங்கேற்று, அவர்களின் ஒப்பற்ற சேவைமூலம் தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கவேண்டும். பொதுமக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களின் நிறைகுறைகளைக் கேட்டு, அவர்களுக்கு சேவைசெய்ய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் பெரிதும் உதவும் என்பதால், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவர்கள் அனைவரும், அக்டோபர் மாதத்தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள இப்பொழுதே மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.

Tuesday, February 23, 2016

மனதை பாதிக்கும் கொடூரங்கள்

 ஒரு கொடூர சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? இயற்கை பேரிடர், விபத்து போன்ற சம்பவங்களை நேரில் பார்ப்பவர்களின் மன அதிர்ச்சியை க்ரோ மேடெல் என்பவர் கண்டறிந்து கூறியிருக்கிறார். 1995-ம் ஆண்டில் ரவண்டா நாட்டில் நடந்த கலவரத்தின் போது நடந்த படுகொலைகளை அந்த நாட்டை சேர்ந்த 95 சதவீத குழந்தைகள் நேரில் பார்த்தார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்களின் தாயும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை நேரில் பார்த்தார்கள். நிறைய குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் கத்தியால் குத்தப்பட்டோ அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டோ கொல்லப்பட்டார்கள். அங்கு வாழ்ந்த குழந்தைகள் மற்றவர்களை போன்று தாங்களும் சாகத்தான் வேண்டியிருக்கும் என்று முடிவெடுத்து மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 80 சதவீத குழந்தைகள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அடர்த்தியாக மண்டிக்கிடந்த புதர்களிலும், குன்றுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். உண்ண உணவில்லாமல் பட்டினி கிடந்தார்கள். திறந்த வெளியில் கடுங்குளிரில் அவதிப்பட்டார்கள். பல குழந்தைகள் 8 வாரம் வரை இப்படி வாழ்ந்தார்கள். ரவண்டா நாட்டில் குழந்தைகள் படித்து வந்த பல பள்ளிகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன. தங்களுடைய நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த குழந்தைகள் நேரில் கண்டார்கள். நண்பர்கள் பலர் காணமல் போனார்கள். பல  குழந்தைகள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். இந்த குழந்தைகள் வாழ்ந்து வந்த பல வீடுகள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. எரிந்து கொண்டிருக்கும் வீடுகளுக்குள் குழந்தைகள் உட்பட பலர் தள்ளப்பட்டு கொல்லப்பட்டதை குழந்தைகள் நேரில் கண்டனர். 10 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களை கடத்தி சென்று, அவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி கொடுத்து அவர்களை யுத்த களத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்த குழந்தைகள் ‘வாழ வேண்டும்‘ என்ற ஆர்வத்தையே இழந்து விட்டிருந்தார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சிகள் இவர்களை ஒரு ஜடப்பொருளாக மாற்றியிருந்தன. இவர்கள் விளையாடுவதையும், சிரிப்பதையும் அறவே மறந்து விட்டு அழுது வந்தார்கள். சில சமயங்களில் பழிவாங்க வேண்டுமென்ற வெறி இவர்களை ஆட்கொண்டது. இவர்களில் பலர் சமூக விரோதிகளாக உருவெடுத்தார்கள் என்பது தனிக்கதை.

இவர்களுக்கு  என்ன  நியாயம்? - மும்பை குண்டு வெடிப்பு (22/02/2016)

இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் மும்பை நகரில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் 4 நாட்கள் நடந்தன. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அனுப்பிய 10 தீவிரவாதிகள், மும்பை நகருக்குள் புகுந்து 12 இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் 166 மக்களை கொன்றனர். இவர்களில் கடமை தவறாத துணிச்சல்மிக்க போலீஸ் அதிகாரிகள், காவலர்களும் அடங்கும். 308 அப்பாவி மக்கள் காயமும் அடைந்தனர். இந்த 10 தீவிரவாதிகளில் 9 பேர்களை உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய போலீசாரும், ராணுவத்தினரும் சுட்டுக்கொன்றுவிட்டனர். சதிகாரர்களில் ஒருவனான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப்பிறகு தூக்கிலிடப்பட்டான். இந்த கொடூரசம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இடங்களை கண்டறிந்து, தீவிரவாதிகளுக்கு துப்பு சொன்னதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான டேவிட் ஹெட்லியை, அமெரிக்க உளவு நிறுவனம் 2009-ம் ஆண்டு கைது செய்தது. அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தற்போது அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு சாட்சி அளித்து வருகிறார். இந்த சாட்சியத்தில் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை அளித்ததோடு மட்டுமல்லாமல், குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடியும், உள்துறை மந்திரியாக அமித் ஷாவும் இருந்த நேரத்தில், 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி குஜராத்தில் ஆமதாபாத் அருகே நடந்த ஒரு என்கவுண்ட்டர் வழக்கில் ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலைத்தந்துள்ளார். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவரத்துக்கு பழிவாங்குவதற்காக வந்ததாக மும்பையை அடுத்த மும்பிராவைச்சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பரான ஜாவீது ஷேக் என்று சொல்லப்படும் பிரானேஷ் பிள்ளை, பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோரை குஜராத் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நரேந்திர மோடியைக் கொல்வதற்காக வந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது போலி என்கவுண்ட்டர் என்று டி.ஐ.ஜி. வன்சாரா உள்பட ஜி.எல்.சிங்கால், பி.பி.பாண்டே என்று 8 போலீஸ் அதிகாரிகளை குற்றம்சாட்டி இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தபிறகு, குஜராத் ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இப்போது ஹெட்லி, கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படையை சேர்ந்தவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தான் புலன் விசாரணை நடவடிக்கையில் உள்ள முன்னாள் உளவுப்பிரிவு சிறப்பு இயக்குனர் ராஜேந்திர குமாரும் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் சொல்லிவந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மீண்டும் ஒரு பாரபட்சமற்ற புலன்விசாரணை நடத்தி யார் சொல்வது உண்மை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை ஹெட்லி சொல்வது உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிறையில் இருந்ததற்கும், அவர்களின் பணிப்பாதிப்புக்கும் என்ன நியாயம் கிடைக்கப்போகிறது?. நரேந்திர மோடி, அமித் ஷா மீது அரசியல் ரீதியாக சொன்ன பழிச்சொற்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கப்போகிறது?, இனி எந்த வழக்கு என்றாலும், ஆழமாக விசாரணை நடத்தவேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம். ஆனால், ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.

‘கடவுளின் சொந்த பூமி‘ 23/02/2016

கடவுளின் சொந்த பூமி‘ என்ற வார்த்தையை கேரளா மட்டும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில நாடுகளும், சில இடங்களும்  பயன்படுத்துகின்றன.

இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் எட்வர்ட் டு போய்ஸ் என்ற கவிஞர். இவர்தான் அயர்லாந்தில் இருக்கும் விக்லோ மலைகளின் அழகையும் அதன் வசீகரிக்கும் சூழலையும் வைத்து கடவுளின் சொந்த இடம் இப்படித்தான் இருக்கும் என்று, அந்த வார்த்தையிலிருந்து கவிதையை தொடங்கினார். அந்த கவிதை புகழ் பெற, அந்த இடமே கடவுளின் சொந்த பூமியானது. அன்றிலிருந்து அதாவது கி.பி.1807-ல் இருந்து அது கடவுளின் பூமியாக இன்றுவரை இருக்கிறது. உலகின் முதல் கடவுளின் சொந்த பூமி இதுதான்.  அதன் பின்னர் ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய வெள்ளையர்கள் சும்மா இருப்பார்களா..! அமெரிக்காவில் இருக்கும் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கெல்லாம் ‘கடவுளின் சொந்த பூமி‘ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

உலகின் இரண்டாவது கடவுளின் சொந்த பூமி என்ற பெருமையை, அமெரிக்காவின் மிக்சிகன் அருகே உள்ள டென்னெசி என்ற இடமும், கலிபோர்னியா அருகே இருக்கும் மிசிசிப்பி சமவெளியும் கி.பி.1860-ல் பெற்றன.  அமெரிக்கா சென்று பெயரிட்ட வெள்ளையர்கள் அடுத்து குடியேறியது நியூசிலாந்தில். அங்கும் கடவுளின் சொந்த பூமியை தேடத் தொடங்கினார்கள். மொத்த நாடுமே அழகாய் இருந்ததால் கி.பி.1890-ல் அந்த நாட்டையே கடவுளின் நாடாக மாற்றி விட்டார்கள்.

அடுத்த கடவுளின் நாடாக மாறியது ஆஸ்திரேலியா. இது நடந்தது கி.பி.1900-ல். அதற்கடுத்து, 1970-ல் ஜிம்பாவே நாடு கடவுளின் சொந்த பூமியாக மாறியது.  கி.பி.1989-ல் வால்டர் மென்டேஸ் என்ற விளம்பர பட இயக்குனர், கேரளாவைப் பற்றிய விளம்பரத்தில் கடவுளின் சொந்த பூமி என்ற கேப்ஷனை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை அப்படியே கேரளா சுற்றுலாத் துறை உள்வாங்கிக் கொண்டது. அதையே முன்னிறுத்தி, இன்று வரை சுற்றுலாவில் பின்னி எடுக்கிறது.

சரி, இந்தியாவில் இன்னொரு இடமும் கடவுளின் சொந்த பூமியாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவே அமைந்துள்ள மஜுலி என்ற தீவுதான். இயற்கையின் மொத்த அழகையும் கொள்ளை கொள்ளும் இந்த இடத்தில்தான் பகவான் கிருஷ்ணர் சிறுவனாக இருக்கும்போது தனது தோழர்களுடன் விளையாடியதாக கூறுகிறார்கள். அதனால் அது கடவுளின் சொந்த பூமியாக மாறியது.  இப்படியாக கடவுளின் சொந்த பூமிகள் உலகில் நிறைய இருக்கின்றன. இதில் கேரளா கடைசியாக இடம் பெற்றது தான். எனவே கேரளா மட்டும் தான் கடவுளுக்கு சொந்தம் என்று நினைத்துவிடக் கூடாது. வேறு சில இடங்களும், கடவுளுக்கு சொந்தமாக இருக்கின்றன.

உள்நாட்டு  கடல்வழி  சரக்கு  போக்குவரத்து 23/02/2016

உள்நாட்டு கடல்வழி சரக்கு போக்குவரத்தில் சென்னை துறைமுகத்தில் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு கப்பல் மூலமாக 800 புதிய கார்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்திலிருந்து 6 நாட்களில் இந்த கப்பல் போய் சேர்ந்துவிட்டது. நாட்டிலேயே முதல் முறையாக கார்கள் உள்நாட்டுக்குள் கடல்வழியாக அனுப்பப்படுவது இதுதான் முதல் முறையாகும். ஏற்கனவே மங்களூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசீரா வரை கப்பல் மூலம் லாரிகள் அனுப்பப்பட்டுள்ளன. சாலை வழியாக சென்னையில் இருந்து குஜராத்துக்கு இந்த 800 கார்களையும் கொண்டுசெல்லவேண்டுமென்றால், டிரெய்லர்கள் மூலமாகத்தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஒரு டிரெய்லரில் 7 அல்லது 8 கார்கள்தான் ஏற்றமுடியும். அதன் வாடகை ஒரு டிரெய்லருக்கு ஏறத்தாழ ரூ.1½ லட்சமாகும். ஆனால், இவ்வாறு கப்பல் மூலமாக அனுப்பியதால் போக்குவரத்து செலவில் 30 சதவீதம் மிச்சமாகி யிருக்கும் என்கிறார்கள்.

மத்திய அரசு கடல்வழி சரக்கு போக்குவரத்தில் இப்போது தீவிர அக்கறை கொண்டுள்ளது. ஏனெனில், ஒருபக்கம் விபத்துகளை குறைக்கலாம் என்றாலும், மற்றொரு பக்கம் போக்குவரத்து நெரிசல், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் ஏற்படும் இயற்கை சுற்றுசூழல் கேடுகளை தடுக்கமுடியும். எந்தவொரு பொருளையும் சாலை மூலமாக கொண்டுசெல்வதென்றால், ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 50 காசு செலவாகும். அதேபொருளை ரெயில் மூலம் கொண்டுசென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 செலவாகும். ஆனால், கடல்வழியாக கொண்டுசென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு 25 காசுகள் முதல் 30 காசுகள்வரைதான் செலவாகும். அந்த வகையில், பொருளாதார ரீதியாகவும் இது மிகவும் லாபம் அளிக்கக்கூடியதாகும். தற்போது நாட்டில் மொத்த சரக்கு போக்குவரத்தில் இன்னும் ஒரு 5 சதவீதத்தை கடல்வழியாக கொண்டுசென்றால், ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் மிச்சமாகும். அதேநேரத்தில், 6 சதவீதம் சுற்றுச்சூழல் கேடு நிச்சயமாக குறையும்.

இந்தியாவில் மொத்தம் 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1,076 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. தமிழ்நாட்டில் எண்ணூர், சென்னை, தூத்துக்குடியில் பெரிய துறைமுகங்கள் இருக்கிறது. இதுதவிர, குளச்சல் துறைமுகம் விரைவில் பன்னாட்டு துறைமுகமாகப்போகிறது. மேலும், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன. இதுதவிர, தனியார் முதலீட்டில் நிறைய துறைமுகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் தமிழ்நாட்டில்தான் அதிகமான சாலை விபத்துகளும், அதிகமாக உயிர் இழப்புகளும் நடக்கின்றன என்ற கவலை அளிக்கத்தக்க அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இவ்வளவு நீண்ட கடல்வழியும், அனைத்து இடங்களையும் இணைக்கும் வகையில் துறைமுகங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், இன்னமும் கடல்வழி பயணப்போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பது நிச்சயமாக பெரும் குறையாகும். கடல்வழி போக்குவரத்தை தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தினால், நிச்சயமாக சாலை போக்குவரத்தில் விபத்துகள் கணிசமாக குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உள்ள இந்த நல்வாய்ப்புகளை பயன்படுத்தி, கடல்வழி போக்குவரத்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

மத்திய அரசாங்கம் கடல்வழி போக்குவரத்தில் தீவிர அக்கறைகொண்டுள்ள இந்த நேரத்தில், இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் கடல்வழியை 3 சதவீதம் முதல் 5 சதவீதம்வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சீனா, தென்கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை பயன்படுத்துகிறார்கள் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறிய தகவலையே, நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, அந்த கருத்தின் பலன் தமிழ்நாட்டுக்கு கிடைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும்.

Sunday, February 21, 2016


ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார் 21/02/2016

உலகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹி ட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டன.

ஹிட்லரின் ஆரம்ப கால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதராகவே இருந்தார். முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டியெடுத்தது.

இதை மூன்றே வருடங்களில் சரி செய்தவர், ஹிட்லர். 1933-ல் ட்லர் சான்சலர் பதவியை ஏற்றபோது 60 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர்கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவருடைய அமைச்சரான ஜால்மர் ஷ்ஹாக்ட் என்பவர்தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக்காட்டினார்.

ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர்தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலையை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்தான். முதியவர்களுக்கு பென்சன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப் பெரிய புரட்சி திட்டங்கள்.

போர்ஷ் கார் நிறுவன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும் கூறினார். பின்பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய காருக்கு போக்ஸ்வேகன் என்று பெயரிட்டார். இன்று அந்தக் கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன.

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்த ஹிட்லர், அதற்கென சட்டமும் கொண்டுவந்தார். அன்றைய தொழிற்சாலைகளும் அதற்கான சாதனங்களை பொருத்திக்கொண்டன. அன்று ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலையிலும் சம்பள பிரச்சினை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல், தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் சிறையில் தள்ளினார்.

ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆண்டுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த ராணுவமாக மாற்றினார்.

ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் 5 வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அதன்பின்னர், ட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால், அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறக்கப்பட்டு விட்டன.

Saturday, February 20, 2016

வேவு பார்க்க கண்ணாடி 20/02/2016

உளவு நிறுவனங்கள் பலவகையில் உள்ளன. ஒரு நாட்டை வேவு பார்க்க, ஒரு நிறுவனத்தை வேவு பார்க்க, தனி நபரை வேவு பார்க்க என்று பலவகைகள் உள்ளன. மற்றவர்கள் அறியாமல் கண்காணிப்பதுதான் இதன் தனித்தன்மை. அதனால் இந்த வேவு பார்த்தலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து கொண்டே இருக்கும்.  கண்காணிப்பு கேமராக்கள் முதல் ஆளில்லா விமானங்கள் வரை ஏராளமான உளவு சாதனங்கள் வந்துவிட்டன. இதில் சமீபத்திய வரவு கண்களில் அணிந்து கொள்ளும் கூலிங்கிளாஸ். இதை அணிந்திருக்கும்போது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வராது. சாதாரணமாக அணிந்து கொண்டால் போதும். இதில் மற்றவர்களை வேவு பார்க்கும் கேமரா உள்ளது. இது எதிரே நடக்கும் எல்லா விஷயங்களையும் அப்படியே அந்த கண்ணாடியில் வீடியோ காட்சிகளாக பதிவாக்கிவிடும். இதுவொரு சக்தி வாய்ந்த கேமரா. 720 பி.ஹெச்.டி. என்ற துல்லியமான பட அளவைக் கொண்டது.  பதிவு செய்வதற்கு வசதியாக இந்தக் கண்ணாடியில் 8 ஜி.பி. பிளஸ் மெமரி கார்டு உள்ளது. இதில் நவீன பேட்டரியும் உள்ளது. இது 3 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் சக்தி கொண்டது. இதில் ப்ளூடூத், வைபை ஆகிய இரண்டு தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான தகவல்களை திரட்டலாம். இந்தக் கண்ணாடியை ஒரு ஐபோனில் இணைத்துவிட்டால் அது கண்ணாடியில் பதிவாகும் எல்லா விஷயங்களையும் போனுக்கு அனுப்பிவிடும்.  இந்த வீடியோ பதிவுகளை மைக்ரோ யு.எஸ்.பி. கார்டிலும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதை அமெரிக்காவில் சியாட்டில் உள்ள ஜியோன்ஐஸ் என்ற கம்பெனி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்ணாடியால் பலரின் அத்து மீறிய அந்தரங்கங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
வங்கிகளில் வாராக் கடன் 20/02/2016

இங்கிலாந்து நாட்டில் 1883-ம் ஆண்டு பிறந்து, 1946-ம் ஆண்டு வரை வாழ்ந்த மிகச்சிறந்த பொருளாதார மேதை ஜான் மேனார்டு கெயின்ஸ். இவர்தான் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் போன்ற பல அமைப்புகளை உருவாக்கியவர். வங்கிக்கடன் பற்றி அப்போது இவர் சொல்லிய ஒரு கருத்து இன்றளவும் நினைவில் வைத்து பேசப்படுகிறது. நீ வங்கியில் 1000 பவுண்டு கடன் வாங்கியி ருந்தால், நீ வங்கியின் தயவில் இருப்பாய். ஆனால், 10 லட்சம் பவுண்டு கடன் வாங்கியிருந்தால் வங்கி உன் தயவில் இருக்கும் என்றார். அன்று அவர் சொன்னது இன்றளவும் யதார்த்த உண்மையாக நிலவுகிறது.

கல்விக்கடன் உள்பட சிறிய தொகையைக் கடனாகக் கோரும் ஏழை மக்கள் என்றாலும் சரி, லட்சங்கள் முதல் ஒரு சில கோடி ரூபாய் கடன் கேட்கும் வணிகர்கள், தொழில் அதிபர்கள் என்றாலும் சரி, கடன் வாங்கும் நடைமுறைகளால் பலமுறை அலைக்கழிக்கப்பட்டு, பல உத்தரவாதங்கள், அடமானங்கள் கேட்கப்பட்டு, இறுதியில் விண்ணப்பித்த சிலருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது. அதுபோல, வட்டியைக் கட்டும்போதும் சரி, கடனை பைசல் செய்யும் போதும் சரி, வங்கிகள் மிகக்கறாராக இருக்கிறது. பல நேரங்களில் அடமானம் வைத்த சொத்துக்கள், நகைகள் ஏலத்துக்கு வந்துவிடுகிறது. சிறிய அளவில் கடன் வாங்கு பவர்களுக்கு வங்கிகள் என்றால் சிம்ம சொப்பனம். மறுபடியும் கடன் கேட்க அவர்களிடம்தானே போக வேண்டும் என்ற பயத்தில் கடன் தவணையை சரியாக கட்டி விடுவார்கள். ஆனால், பெரிய அளவில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பக் கட்டாததால், 27 பொதுத்துறை வங்கிகள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வராக் கடன் என்ற பட்டியலிட்டு, அந்த தொகை முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் பல தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப் பட்டது. இந்த செய்தியை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் 500 கோடி ரூபாய்க்குமேல் கடன் வாங்கி கட்டாதவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி 6 வாரகாலத்துக்குள் ஒரு சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிறார்கள். பெரிய மோசடி இது. 2015 ஒரே ஆண்டில் மட்டும் 10 பெரிய வங்கிகள் 40 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. திரும்ப வராது என்று தெரிந்தும், கடன் கொடுத்து இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கி இதைக் கண்காணிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காரசாரமாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வங்கிகளின் லாபம் குறைந்ததற்கு வாராக்கடன் தள்ளு படியை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தொழில் நசிந்துபோய், கடனை கட்ட கையில் எதுவுமே இல்லை என்றால் தள்ளுபடி தவிர, வேறு வழியில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், வேண்டுமென்றே வசதியிருந்தும், கடனை கட்டாதவர்களுக்கு தள்ளுபடி என்பதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எப்படி இருகை தட்டினால் தான் ஓசை வருமோ, அதுபோல வங்கி அதிகாரிகள் துணையில்லாமல், இப்படி வாராக்கடன் தொகை அதிக மாவதற்கு சாத்தியமே இல்லை. ஆக, வாராக்கடன் என்றால், அதை எளிதில் கொடுக்க வகை செய்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தை கொடுக்க வேண்டும். ஆக, வங்கிக்கடன் விஷயத்தில் சிறு கடன் தாரர்கள் மீது பாயும் நடவடிக்கைகள், பெரிய தொகை கடன் வாங்குபவர்கள் மீதும் பாய வேண்டும். ஏற்பட்டிருப்பது பெரிய காயம், இதை பிளாஸ்திரி போட்டு சரிசெய்ய முடியாது, அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. 


தமிழின் பெருமைகள் 19/02/2016

 

Thursday, February 18, 2016


இதய  நோய்  வராமல்  தடுக்க.. 19/02/2016

 இதய நோய் உள்ளவர்கள் சில அறிகுறிகள் மூலம் அதை புரிந்து கொள்ள முடியும். மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும்போது, உயரமான பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.  ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துக்கள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.  பொதுவாக இதய நோய் உள்ளிட்ட, எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரம் சீரான உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சீரான அளவு உணவு சாப்பிட வேண்டும்.  இதய நோயை தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். இது தவிர இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் சத்துணவு, போதிய உடற்பயிற்சி, தினமும் நல்ல தூக்கம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து, சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் கூடியிருந்தால், அதற்குரிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் தவறாமல் உட்கொள்வது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். அதேநேரம், எந்த சூழலிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். ஒரே நேரத்தில் பலவகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்.  அதேநேரம், சுத்த சைவ உணவு உண்பவர்கள், புகையிலை, மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதய நோய் வரலாம். எனவே, மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். மன உளைச்சல் இதய நோய்க்கு வழிவகுத்துக் கொடுக்கும் என்கிறார்கள்.  அதே நேரத்தில் இதய வால்வு நோய்கள் வந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

சியாச்சின்  மலையில்  பாதுகாப்பு  அவசியம் 19/02/2016

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை   பகுதிகளெல்லாம் பல  ஆபத்தான மலைப் பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. மனிதகுலம் வாழவே முடியாத இடங்களில் அதிலும் குறிப்பாக, சியாச்சின் பனிமுகட்டில் முட்டளவுக்கும்மேல் பனிக்குள் நின்றுகொண்டு இருநாட்டு வீரர்களும் உயிரைப்பணையம்வைத்து காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சியாச்சின் பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானதுதான், முன்பெல்லாம் இந்திய, பாகிஸ்தான் வரைபடங்களை பார்த்தால், இந்திய வரைபடத்தில் சியாச்சின் பகுதி இருக்கும். பாகிஸ்தான் வரைபடத்தில் சியாச்சின் இல்லாமல் இருக்கும்.

1970-ம் ஆண்டுகளில் ஒரு  அமெரிக்க  பூகோள  வரை படத்தில் திடீரென சியாச்சின் பகுதியை பாகிஸ்தானுக்குள் வைத்து வரைந்ததால், பாகிஸ்தான் மலையேறும் பயிற்சி வீரர்களுக்கு சியாச்சின் போக அனுமதி வழங்கத்தொடங்கியது. அதிலிருந்து 1984-ம் ஆண்டு முதல் 19 ஆயிரத்து 600 அடி உயரமுள்ள சியாச்சின் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்தப்பக்கம் பாகிஸ்தான் வீரர்களும் நிறுத்தப்பட்டனர். இந்திய ராணுவத்தில் வீரத்திற்கு பெயர்போனது மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்று சொல்லப்படும் படைப்பிரிவு ஆகும். 1988 முதல் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் படைப்பிரிவு சியாச்சின் எல்லையை பாதுகாக்க செல்லத்தொடங்கியது. இந்தப்பகுதியில் அடிக்கடி பனிப்பாறைகள் சரிந்துவிழுந்து, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு உயிரோடு சமாதி கட்டிவிடும். சியாச்சின் போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம் என்ற வகையில், ஒவ்வொரு படைப்பிரிவும் 90 நாட்களுக்கு காவலுக்கு அனுப்பப்படும். அந்தவகையில், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய  பகுதியில்  இதுபோன்ற  பல  பனிச்சரிவுகளால் 879 விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோய்விட்டன.

சமீபத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த 10 வீரர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தபோது, மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்துவிழுந்து, 10 வீரர்கள் உயிரை பறித்துவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஹவில்தார் ஏழுமலை, இருமுறை சியாச்சினில் பணியாற்றிய லான்ஸ் ஹவில்தார் எஸ்.குமார் (மதுரை மாவட்டம், சொக்கதேவன் பட்டியை சேர்ந்தவர்), ராணுவ வீரர் ராமமூர்த்தி  (கிருஷ்ணகிரி  மாவட்டம்,  குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர்), ராணுவ வீரர் ஜி.கணேசன் (தேனி மாவட்டம், குமணன்தொழுவைச் சேர்ந்தவர்) ஆகிய 4 வீரத்தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்திய பகுதியில் சியாச்சின் பாதுகாப்புக்காக தினமும் ரூ.5 கோடி செலவழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் ‘தந்தி’ டி.வி.க்கு, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் அளித்த சிறப்பு பேட்டியில், ‘பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே பரஸ்பரமாக சியாச்சினிலிருந்து படைவீரர்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் குறிப்பிட்டதைக்கூறி, விரைவில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, மேலும் மனித உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுக்க, இந்த யோசனையை செயல்படுத்த முன்வரலாம்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால், இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமில்லை. இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையே 2,910 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை இருக்கிறது. இதில், ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதியில் மட்டும் 772 கிலோமீட்டர் எல்லைக்கோடு இருக்கிறது. அதில் 550 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி போடப்பட்டுள்ளது. 76 கிலோமீட்டர் சியாச்சின் பனி முகடு. இந்த எல்லைப்பகுதி முழுவதும் போர் பதற்றம், தீவிரவாதிகள் ஊடுருவல் என்று பல விஷயங்களில் பாதுகாப்பு இருக்கவேண்டிய நிலையில், எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்கள் போர் தளவாடங்களுடன் தயார் நிலையில் நின்றுகொண்டு இருக்கும்போது, சியாச்சின் பனி முகட்டில் 76 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டும் படையை விலக்கினால், அதை பயன்படுத்தி அந்த இடங்கள் வழியாக ஊடுருவல் நடந்துவிடும்.

அமெரிக்கா-கனடா எல்லையில் பரஸ்பர ராணுவ காவலே கிடையாது. ஏனெனில், அவர்கள் நட்பு நாடுகள். அதுபோல, இந்தியா-பாகிஸ்தான் நட்பு நாடுகளாக இருந்தால் மட்டுமே எல்லையில் ராணுவத்தை விலக்க முடியும்.

60  ஆண்டு  கனவான அத்திக்கடவு-அவினாசி  திட்டம் - 18/02/2016

கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஏழை-பணக்காரன், படித்தவர்-படிக்காதவர், இந்த சாதி-அந்த சாதி, ஆண்- பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், ஒட்டுமொத்த மக்களே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். கொங்குமண்டலம் என்பது வேளாண்மையையே நம்பி வாழும் மண்டலம் ஆகும். இந்த மக்கள் கடந்த 60 ஆண்டுகளாகவே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 1957-ம் ஆண்டு முதல் 67-ம் ஆண்டு வரை மாரப்ப கவுண்டர் அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இந்தத்திட்டத்தை வலியுறுத்திய நேரத்தில், பெருந்தலைவர் காமராஜர் இதற்கு ஒப்புதல் அளித்து, ரூ.132 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான முயற்சிகளை தொடங்கினார். ஆனால், காமராஜர் ஆட்சிக்குப்பிறகு, இந்தத்திட்டம் கனவாகிவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மழைக்காலங்களில் ஊட்டி, குன்னூர் போன்ற பல பகுதிகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, காரமடைக்கு மேலேயுள்ள மலைப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணைக்கு வந்துசேரும். பில்லூர் அணை இருக்கும் பகுதிதான் அத்திக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் வெளிவரும் காலங்களில் ஏறத்தாழ 30 டிஎம்சி தண்ணீர் அளவில் கடலில் போய் கலக்கிறது. காமராஜர் போட்ட திட்டப்படி, அத்திக்கடவில் இருந்து கால்வாய் தோண்டப்பட்டு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்  உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் தண்ணீரை நிரப்பினால், இந்த மாவட்டம் முழுவதும் ஒருபக்கம் விவசாயத்துக்கு பயன்படுத்தினாலும், மறுபக்கம் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்துவிடும் என்பது இதன் உண்மையான பயனாகும். கொங்குமண்டலத்தில் இப்போது நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே போய்விட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் வந்தால், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து 50 அடியில் தண்ணீரை பார்க்கலாம்.

தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால், இந்த திட்டம் குறித்து ஒரு உறுதியான தகவல் வேண்டும் என்பதுதான் இந்த மக்களின் குறிப்பாக வேளாண் பெருமக்களின் கோரிக்கையாகும். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், “2011-ம் ஆண்டில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக ரூ.1,862 கோடி செலவில் திட்ட அறிக்கை தீட்டப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வெள்ள உபரிநீரை எடுத்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்புவதற்கு வகைசெய்யும் இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை நிதிஉதவி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. நீர்ப்பாசனம், நிலத்தடிநீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக இதை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும். அதேசமயம் இந்த திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த பட்ஜெட் அறிவிப்புக்கு நிர்வாக ரீதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவேண்டும். வரப்போகும் புதிய அரசு அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து மாநில அரசு திட்டமாக செயல்படுத்தவேண்டும். அதுபோல, கடலில் வீணாக போய் கலக்கும் தாமிரபரணி, காவிரி உள்பட அனைத்து ஆறுகளின் நீரையும் சேமித்து, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை நிறைவேற்றுவதையே தனது முதல் கடமையாகக் கொள்ளவேண்டும். இலவசம் பெரிதல்ல, மாநிலத்தின் வளமே பெரிது என்பதை குறிக்கோளாகக்கொண்டு அடுத்து அமையப்போகும் அரசு செயல்படவேண்டும்.

Tuesday, February 16, 2016

ஓசோன் வாயு

‘ஓசோன்‘ ஒரு வாயு. இளநீல வண்ணம் கொண்டது. இதன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கின்றன. கிரேக்க மொழியில் ‘ஓசோன்‘ என்றால் வாசம் என்று பொருள். லேசான மீன் வாடை கொண்டது. ஓசோன் இடி, மின்னலுடன் கூடிய காற்று வீசும் போது மீன் வாடையை நுகரமுடியும். அதுதான் ஓசோனின் மணம். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போதும் இதை உணர முடியும். ஓசோன் நன்மையையும் செய்யும். தீமையையும் செய்யும். ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும். மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். சில தாவரங்கள் கருகிப் போகும். இதே ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுத்து. பூமிக்குள் ஊடுருவாமல் தடுத்து விடும். கடல் மட்டத்தில் இருந்து 13 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் ஓசோன் படலம் படர்ந்து இருக்கிறது. சூரியனில் இருந்து வெளியேறும் அதிக அளவு அலைவரிசை உள்ள ‘அல்ட்ரா வயலட்‘ கதிர்களில் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்வதால், அந்த கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. பூமியில் ஓசோன் வாயுவின் அளவு குளிர்கலங்களில் சற்றே அதிகமாக இருக்கும். அதிலும் மார்கழி மாதத்தில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதிகாலையில் கோலம் போடும் பெண்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் இதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் நுரையிரலின் கொள்ளளவை குறைப்பது, நெஞ்சுவலி, தொண்டைக் கரகரப்பு, இருமல் போன்றவை இதன் பாதிப்பால் வரும். சி.எப்.சி. எனப்படும் ‘ப்ளோரோ கார்பன்‘ மற்றும் பி.எம்.சி. எனப்படும் ‘ப்ரோமொப்ளுரோ கார்பன்‘ ஆகிய வேதிப்பொருட்களுடன் புற ஊதா கதிர்கள் வினைபுரியும் போது குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் தனியே வெளியிடப்படகின்றன. இந்த வாயுக்களின் ஒரு மூலக்கூறு ஓசோன் வாயுவின் ஒரு லட்சம் மூலக்கூறுகளை சிதைக்கின்றன. அப்போது ஏற்படும் இடைவெளிகள் மூலம் உறிஞ்சப்படாத புறஊதா பூமியில் நுழைகின்றன. இதைதான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு 4 சதவீதம் ஓசோன் படலம் குறைகிறது. இதற்கு 76 சதவீதம் மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம். இததான் பெரும் கொடுமை. ஒரு சதவீதம் ஓசோன் குறைந்தால் 1 முதல் 1.5 லட்சம் கண்பார்வை இழப்பு ஏற்படும். தாவரங்களின் டி.என்.ஏ. பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறையும், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். அதனால் குலோரோப்ளுரோ கார்பன் கலந்துள்ள பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். ப்ரோமோ மீத்தேன் கலந்த ரசாயன இடு பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. மோட்டார் வாகனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். சைக்கிளில் செல்வது, நடந்து போவது உடலுக்கு நல்லது. ஓசோனுக்கும் நல்லது. ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தால் ஓசோன் ஓட்டை விழுவதை தடுக்கலாம்.

சுற்றுச்சூழலின் வரலாறு 15/02/2016


இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்கேட்டை பற்றி விரிவாகப் பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், பிள்ளையார் சுழி போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள்.

கி.மு.400-க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒரு ரசாயனத்தை கலந்தனர். இந்த ரசாயனம் மதுவுக்கு ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது.  இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமப்பேரரசர்களின் எலும்புக்கூடுகள் பலவற்றில் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு.வில் ரோமப்பேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பி.யில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்சிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப்பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும். அந்த வேலையை செய்ய மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார். அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இன மக்கள், இயற்கை விரும்பிகள். இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கட்டிப்பிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.

363 மரங்களையும் கட்டிப் பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய பின்புதான் மன்னனின் மனம் லேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று தனது போர் வீரர்களை திரும்பி வர கட்டளை இட்டான். பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை ‘சிப்கோ இயக்கம்‘ என்று கொண்டாடுகிறார்கள். 

ஒரு பிரச்சினையை பற்றி ஏதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினார். ‘மேன் அண்டு நேச்சர்’ என்ற இந்த புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.

Sunday, February 14, 2016

காதலர் தினம் பிப்ரவரி 14
 
இன்றைக்கு காதலர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த தினம் கடந்த 10 ஆண்டுகளில்தான் இந்தியாவில் புகழ் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் நாள் காதலர்களால் கொண்டாடப்படும் இந்த நாளை ‘வாலன்டைன்ஸ் டே‘ என்கிறார்கள். இந்த வாலன்டைன்ஸ் என்பவர் ஒரு பாதிரியார். இவரது பெயரில்தான் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். கி.பி. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் காதலர்களின் பிரியம் மிக்க பாதிரியார். அந்த காலக்கட்டத்தில் ரோம் சாம்ராஜ்ஜியத்தை இரண்டாம் கிளாடியஸ் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இன்றைய உலகம் போல் அன்றைய உலகம் அமைதியாக இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. அதற்கு தொடர்ந்து வாலிப ஆண்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்நாளில் ரோம் தேசத்தில் திருமணம் முடிந்த ஆண்களை போரில் ஈடுபடுத்தக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது. அதனால் ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை தொடர்ந்து இருந்தது. இந்த பற்றாக்குறையை போக்க இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் திருமணம் செய்யக்கூடாது. அவர்கள் கட்டாயம் ராணுவத்தில் சேர வேண்டும் என்று கட்டளையிட்டார். அதனால் திருமணம் என்பது அந்நாட்டில் நடக்காத காரியமானது. இந்நிலையில் அந்தநாட்டில் வாழ்ந்து வந்த வாலன்டைன் என்ற பாதிரியார் மன்னனின் இந்தக் கட்டளையை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு ரகசிய திருமணத்தையும் செய்து வைத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவ காதலில் விழுந்த ஆண்களும் பெண்களும் வாலன்டைனை தேடி வந்தார்கள். தன்னை நாடி வந்தவர்கள் அனைவருக்கும் பாதிரியார் திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், பாதிரியாருக்கு மரணதண்டனை விதித்தார். அவர் மரணதண்டனை விதிக்கப்பட்டு இறந்த நாளான பிப்ரவரி 14-ம் நாளை இளைஞர்கள் வாலன்டைன் தினமாகவும், திருமண தினமாகவும் கொண்டாடத் தொடங்கினர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வாலன்டைன் தினம் காதலர் தினமாக மாறியது. அமெரிக்காவில் விடுமுறை தினமாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கொண்டாட்டத்துக்கும், அதே அளவு எதிர்ப்புக்கும் குறைச்சல் இல்லை.





மறைந்து போன மகாராஜா

 காடுகளில் நான் தான் ராஜா என்று கர்ஜித்து திரியும் சிங்கங்களை எல்லாம் ஜூஜூபி என்று சொல்ல வைக்கும் ஒரு வலிமையான படைப்புதான் மகாராஜா சிங்கம் என்று அழைக்கப்படும் மார்சுபியல் சிங்கம். ஆஸ்திரேலியாவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டை கலக்கிக் கொண்டிருந்த ஒரு உயிரினம்.  இது பார்ப்பதற்கு சிறுத்தைப் போல் இருக்கும். உடல் முழுவதும் சிறுத்தைப் போன்ற வட்ட வட்ட புள்ளிகளும், புலி போல் வரி கோடுகளும் கலந்து இருக்கும் ஒரு படைப்பு. இது மிகப் பயங்கரமான கொடிய உயிரினம். இன்றைக்கு பிரமாண்டமாக தெரியும் ஆப்பிரிக்க சிங்கத்திற்கும், இதற்கும் சண்டை வந்தால், மார்சுபியல் சிங்கம் கொடுக்கும் ஒரு அடியில் ஆப்பிரிக்க சிங்கம் நிலைகுலைந்து போய்விடும்.  இந்த சிங்கத்தின் பலத்துக்கு பற்களும் நகங்களும்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். தாடைகளின் இருபுறமும் கூர்மையாக காணப்படும் பற்கள், பெரிய மிருகங்களின் சதையைக் கூட எளிதில் குத்திக் கிழித்துவிடும். இதன் நகங்களும் மிகவும் கூர்மையும், பலமும் வாய்ந்தவை.  19-ம் நூற்றாண்டில் இந்த சிங்கங்களின் எலும்புகள் ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் கிடைத்தன. ஆனால், 2002-ல் தான் இதன் முழுமையான எலும்புக்கூடு ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்டது. டிம் வில்லிங் என்ற இயற்கை ஆர்வலர் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குகை ஒன்றில் மார்சுபியல் சிங்கங்களின் உருவங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.  மிகவும் பலமும், குரூரமும் கொண்ட இந்த இனம் எப்படி அழிந்தது? என்பது வியப்பான ஒன்றாகவே இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

Friday, February 12, 2016


மனிதனை முன்னேற்றிய தானியங்கள் 13/02/2016

இன்றைய உலகில் மனிதனுக்கு உணவளிப்பவை தானியங்கள் தான். தானியம் புல் வகையைச் சேர்ந்த ஒரு பயிர். இந்த புல்லின் விதைகளைத்தான் தானியம் என்கிறோம். இதன் விதை உண்மையில் ஒரு கனி. ஒரேயொரு விதையும், அந்த விதையைச் சுற்றி இருக்கும் கனிச்சுவரும், அந்த கனிச்சுவரை மூடியபடி இருக்கும் உமியுமே தானியமாகும். கிராமங்களில் இந்த வகை தானியங்களை ‘தவசம்‘ என்றும் அழைக்கிறார்கள்.  மனிதன் ஆரம்பக் காலங்களில் விலங்குகளை வேட்டையாடி உண்டான். அதன்பின் காய், கனிகளை உணவாக உட்கொண்டான். அப்புறம் காட்டுப் புல்வகைகளை சமைத்து சாப்பிட்டான். இப்படியே வளர்ந்த மனிதன் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் தானியங்களை கல் கருவிகளை கொண்டு அரைத்து உண்ணும் முறையைக் கண்டுபிடித்தான். அப்போதும் அவன் விவசாயம் செய்ய கற்கவில்லை. காடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த தானியங்களை மட்டுமே உணவாக்கிக் கொண்டான்.  அதன் பின் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்தே தானியங்களை விளைவிக்க கற்றுக் கொண்டான். இதுதான் மனித சரித்திரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காட்டுமிராண்டியாக, நாடோடியாக திரிந்து கொண்டிருந்த மனிதன், ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த விவசாயம் தான்.  மனிதன் முதன் முதலாக பயிரிட்டது தானியம் தான். தனக்கு உணவாக பயன்படக்கூடிய புல் விதைகளைக் கண்டுபிடித்து பயிரிடத் தொடங்கினான். இதன் மூலம் தனக்கும் தன் விலங்குகளுக்குமான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான். உணவுக்காக காடு, மேடுகளில் அலைவதை நிறுத்திக் கொண்டான். இதன்மூலம் அவனுக்கு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை பல ஆக்கங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினான்.  நாகரிகம், கலாச்சாரம், அறிவியல் போன்றவை வளர்வதற்கு அடிப்படையாக அமைந்ததே தானிய உற்பத்திதான். தானியங்களே மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பிரதான உணவு. உலகில் பாதிப் பேர் அரிசி சோற்றை சாப்பிடுகிறார்கள். மீதிப் பாதி பேர் கோதுமையில் உணவு வகைகளை செய்து சாப்பிடுகிறார்கள். இரண்டுமே தானியங்கள்தான். மனிதன் தனக்கு தேவையான கலோரியில் 75 சதவீதத்தை தானியங்கள் மூலமே பெறுகிறான். உலகில் 70 சதவீத விளைநிலங்களில் தானியங்களே பயிரிடப்படுகின்றன என்றால் அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.  நமது பிரதான உணவாக இருக்கக்கூடிய நெல், புல் இனத்தை சேர்ந்தது.  இதை ஏன் இங்கு சொல்லவேண்டும் என்றால், நகரத்தில் வாழும் மாணவர்கள் பலரும் நெல் மரத்திலிருந்து கிடைக்ககூடிய ஒன்று என்றும், அரிசி மற்றொரு தாவரத்தில் இருந்து வருகிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை இன்றைய தலைமுறையிடமிருந்து நாம் வெகு தூரத்துக்கு விலக்கி வைத்துவிட்டோம் என்பதன் அடையாளம் இது. எது எப்படியோ இன்றைய மனித வாழ்வுக்கு முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது தானியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
சமையல் கியாசுக்கு மானியம் வேண்டாம் 
13/02/2016

ஒரு காலத்தில் விறகு வைத்து, அடுப்புமூட்டி சமையல் செய்துகொண்டிருந்த நிலைமை போய், நிலக்கரி, உமிஅடுப்பு, மண்எண்ணெய் ஸ்டவ் என வந்து, தற்போது நாட்டில் பெரும்பாலான வீடுகளில் கியாஸ்சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தவேண்டும் என்ற ஆசையால், அதற்கே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விறகு அடுப்பு என்பது வனவளத்தை சீரழிக்கும் வகையில், மரங்கள் வெட்டப்படுவதை அதிகரிக்கும் என்பதாலும், இத்தகைய அடுப்புகளிலிருந்து வெளிவரும் புகை சுற்றுச் சூழலை பாதிக்கும் என்பதாலும், சமையல் கியாஸ்சிலிண்டர் பயன்பாட்டையே எல்லோரும் பெரிதும் ஊக்குவிக் கிறார்கள்.

இந்தியாவில் ஏறத்தாழ 17 கோடி குடும்பங்களில் சமையல் கியாஸ்சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கும் வகையில், ரூ.40 ஆயிரம் கோடிக்குமேல் அரசு செலவழிக்கிறது. மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அமல்படுத்த தொடங்கியதிலிருந்து, 14 கோடியே 74 லட்சம் குடும்பங்கள் மானியத்தை நேரடியாக பெற்றுவருகின்றன. மேலும், மானியச்செலவை குறைக்கவேண்டும் என்ற தத்துவத்தில், ‘எனக்கு அரசின் மானியம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கூறிவிடலாம். அவர்கள் மனமுவந்து தரும் அந்த மானியத் தொகையைக்கொண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழேஉள்ள ஏழை மக்களின் வீடுகளுக்கு கியாஸ்சிலிண்டர் வழங்கப் படும், அவர்களிடம் டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் கேட்காது, அவர்கள் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்பை ஏற்று, இந்தியா முழுவதிலும் 68 லட்சத்து 34 ஆயிரம் பேர் எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று மனமுவந்து கொடுத்திருக் கிறார்கள். இந்ததொகையை வைத்து 57 லட்சம் பரம ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் புதிய கியாஸ் இணைப்புகள் வழங்கியிருக்கிறது. ஒரு கோடியே 77 லட்சத்து 74 ஆயிரம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ள தமிழ்நாட்டில், 2 லட்சத்து 3 ஆயிரம் பேர்தான் எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று தாராளமனதுடன் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசு, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் பெறுபவர்களின் மானியத்தை இந்த ஆண்டு தொடக்கம் முதல் ரத்துசெய்திருக்கிறது.

2014-ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வுப்படி, இந்தியாவில் உள்ள 15 சதவீதம் வீடுகள் அதாவது, கியாஸ் சிலிண்டர் வாங்குபவர்களில் 25 சதவீதம் பேர் மானியத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடிய தகுதி படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இன்னும் ஏராளமானோர் மானியம் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்வருவதற்கான வழிவகைகளை அரசு செய்யவேண்டும். 5 சதவீத வீடுகளில் கார் இருக்கிறது. அவர்களும் மானியம்வேண்டாம் என்று சொல்லலாம். இதுபோல, ஆதார் அடையாள அட்டையில் ஆடம்பரபொருட்கள் வைத்திருக்கிறோம் என்று கூறியவர் களையும் மானியம் வேண்டாம் என்று சொல்லச்செய்யலாம். எல்லோரையும்விட, மக்கள் பிரதிநிதிகள் தாங்களாகவே முன்வந்து மானியம் வேண்டாம் என்றுசொல்லி முன்மாதிரியாக திகழலாம். தமிழ்நாட்டை பொருத்தமட்டில், 39 பாராளுமன்ற உறுப்பினர்கள், 18 டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள், 234 எம்.எல்.ஏ.க்கள், 12 மாநகராட்சி மேயர்கள், 919 மாநகராட்சி கவுன்சிலர்கள், 124 நகராட்சி தலைவர்கள், 3,613 நகராட்சி கவுன்சிலர்கள், 528 பேரூராட்சி தலைவர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள், 655 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 6,471 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 385 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,333 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 174 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மானியம் வேண்டாம் என்றுசொல்லி புதிய சரித்திரம் படைத்தாலே, இந்தியா முழுமைக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கும்.

ஈர்ப்பு  அலைகளை  கண்டுபிடித்ததில் இந்திய  விஞ்ஞானிகளுக்கு  பங்கு 

13/02/2014

புனே, பிப்.13- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்ததில்இந்திய விஞ்ஞானிகளுக்கு பங்கு உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் 1905-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ந் தேதி ஈர்ப்பு விசை தொடர்பாக வெளியிட்ட ஒரு கோட்பாடு, சார்பியல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. சார்பியல் கோட்பாடு  விண்வெளியில் சூரியனைப்போன்று உள்ள நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும். அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது, அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு, அவை ஈர்ப்பு அலைகளாக வெளியாகும். இந்த ஈர்ப்பு அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும், காலத்தையும் உருவாக்குகின்றன. உண்மையில் காலமும் வெளியும் ஒன்றுதான் என்பதுதான் ‘ரிலேட்டிவிட்டி தியரி’ என்னும் சார்பியல் கோட்பாடு. இந்த கண்டுபிடிப்பு அந்தக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி இருப்பினும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உண்மைதானா என்பது பற்றி இந்திய விஞ்ஞானிகள் உள்பட ஆயிரம் சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.  இப்போது, ஐன்ஸ்டீன் கூறிய சார்பியல் கோட்பாடு உண்மைதான் என்று சர்வதேச விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.  இது குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் இயற்பியல் விஞ்ஞானி டேவிட் ரெயிட்ஜ் வெளியிடுகையில், “ நாங்கள் ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்துள்ளோம்” என குறிப்பிட்டார். பிரபஞ்சம் தோன்றியது எப்படி? இது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி கண்டறிவதற்கான புதிய வாசலை திறந்து விட்டுள்ளது. ஈர்ப்பு அலைகளை கண்டறிந்ததில் புனேயை சேர்ந்த வானியல், இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையத்தை சேர்ந்த விஞ்ஞானி சஞ்சீவ் துரந்தாரின் பங்கு முக்கியமானது.  இவர்தான் 1980-களின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளில் ஆர்வம் காட்டிய நாளில், புவி ஈர்ப்பு அலைகள் என்ற அறிவியல் அற்புதம் இருப்பதை உறுதிபடக்கூறினார். ஆனால் அதை அப்போது விஞ்ஞானிகள் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை.  எப்படி உணர்வது? 2009-ம் ஆண்டு, 60 விஞ்ஞானிகளை கொண்டு இந்திய ஈர்ப்பு அலைகள் கண்காணிப்பகம் (இண்ட் இகோ) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஈர்ப்பு அலைகள் பற்றி ஆராய்ந்து வந்தனர். இதில் சி.எம்.ஐ. சென்னை என்று அழைக்கப்படுகிற சென்னை கணித நிறுவனம், ஐ.ஐ.டி. காந்திநகர், டி.ஐ.எப்.ஆர். மும்பை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அங்கம் வகித்தன. 130 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக கருதப்படுகிற இந்த ஈர்ப்பு அலைகளை எப்படி உணர்ந்து கொள்வது? புனேயை சேர்ந்த விஞ்ஞானி ஜெயந்த் நார்லிக்கர் இது பற்றி கூறும்போது, “யானை மீது ஒரு ஈ வந்து அமர்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். யானை மீது ஈ வந்து அமர்வதால் அதன் எடை கூடும். ஆனால் அதை யானை உணர முடியாது. அதேபோன்றுதான் லிகோ என்ற கருவி கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஈர்ப்பு அலை மிகமிக சிறிதானது” என்றார். இந்த கண்டுபிடிப்பு நீண்ட காலத்திற்கு நினைவுகூரப்படும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இசை ஜாம்பவான் பீத்தோவான் 

மேற்கத்திய இசையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டவர் பீத்தோவான். இவரது சிம்பொனி இசை இன்றைக்கும் ஒரு பிரமாண்டம் தான். அவரது பெருமை பல ஆண்டுகள் கடந்தும் குறையாமல் இருக்கிறது. ‘நிழல்கள்‘ படத்தில் வரும் ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது‘ பாடல் கூட பீத்தோவானின் சிம்போனியை தழுவி உருவாக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பீத்தோவானின் வாழ்க்கையை மூன்று கட்டமாக பிரிக்கிறார்கள். முதல் கட்டம் 1770 முதல் 1802 வரை. இரண்டாவது கட்டம் 1803 முதல் 1814 வரை, மூன்றாவது கட்டம் 1815 முதல் 1827 வரை. இதில் இரண்டாவது கட்டம் தொடங்கும் போது இவருடைய காதுகள் கேட்கும் சக்தியை இழந்தன. அதன்பின்தான் இவர் இசையில் உலகப் புகழ் பெற்றார். இதுவோர் அரிய நிகழ்வு.

பீத்தோவானின் முழுப் பெயர் லூத்விக் வான் பீத்தோவான். இவருடைய தந்தை ஜோகன்வான் பீத்தோவான். தாய் மரியா மேக்டலீனா கேவிரிச். பீத்தோவான் 1770-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இசை கற்றுக் கொடுத்த முதல் குரு இவருடைய தந்தை தான். பீத்தோவானின் இசை வாழ்க்கையில் ‘வியன்னா‘ நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 1787-ல் அங்கு சென்ற பின்தான் அவர் பல இசை மேதைகளை சந்தித்தார். ஹய்டனும் மொசார்ட்டும் அதில் முக்கியமானவர்கள். 1787-ல் அவருடைய தாயும், 1792-ல் தந்தையும் மறைந்தனர். 1796-ல் டின்விட்டஸ் என்ற காது நோயால் அவதிப்பட்டார். 1801-ல் முழுமையாக கேட்கும் திறனை இழந்தார்.

1803-ல் இவரை உயிருக்கு உயிராய் காதலித்த கில்லிட்டா வேறொருவரை மணந்தார். அதன்பின் ஜோசபின் டெய்ம் என்ற பெண் மீது காதல் கொண்டார். அவரும் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு விதமான மன உளைச்சலுக்கு ஆளானார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளானார். ஆனால், அவற்றையெல்லாம் மீறி சாதித்தது இவரது தனிச் சிறப்பு. இவர் ஒன்பது முறை சிம்பொனிக்கு இசை அமைத்தவர். 12 வகையான ‘அக்கெஷனல்‘ இசையையும், 32 பியானோ சொனாட்டுகளையும் எழுதியுள்ளார். 10 வகையான பியானோ, வயலின் இசைக் குறிப்புகளை உருவாக்கியுள்ளார். சிறந்த பியானோ இசைக்கலைஞராக, இசை நடத்துனராக, இசைக் கச்சேரிகளில் கொடி கட்டிப் பறந்தார், பீத்தோவான்.  இசையையே வாழ்க்கையாக கொண்ட பீத்தோவான் 1827 மார்ச் 26-ல் காலமானார். இவரது இசையை இன்னமும் இசை உலகம் போற்றி வருகிறது. இவர் தன் காதலிக்கு எழுதிய கடிதங்களை பல அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகின்றன. 1949-ல் ‘எரோயக்கா‘ என்ற படமும், 1962ல் ‘தி மேக்னிபிசியன்ட் ரெபல்‘ என்ற படமும், 1994-ல் ‘இம்மார்ட்டல் பிளான்க்‘ என்ற படமும் பீத்தோவான் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை ஆகும்.  செவிகளை இனிமைப்படுத்தும் சிம்பொனி இசையை உருவாக்கியவர் ஒரு கேட்கும் திறனற்ற ஒருவர் என்பது உலகின் மிகப் பெரிய அதிசயமே!

முதல் இரட்டை வேட படம்

இரட்டை வேடத்தில் ஒரு நடிகர் நடிப்பது இன்றைக்கும் கூட வியப்பான விஷயம் தான். சம்பந்தப்பட்ட நடிகருக்கு மட்டுமல்லாது, அவருடைய ரசிகர்களுக்கும் அது இரட்டிப்பு சந்தோஷம் தரும் ஒன்று.

இரட்டை வேடத்தில் நடிக்காத நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அனேகமாக அனைத்து நடிகர்களுமே இரட்டை வேடத்தில் நடித்தவர்கள் தான். இந்த இரட்டை வேடப் படம் முதன் முதலில் வந்தது 1940-ல். இப்போது போல் கிராபிக்ஸ், டெக்னிக் என்று எதுவுமே இல்லாத அந்த காலத்தில் பிலிமின் ஒருபகுதியை மறைத்து, அதில் நடிகரின் ஒரு வேடத்தை எடுத்துக் கொள்வார்கள். அதற்கு எதிரே மீண்டும் அதே நடிகரை மற்றொரு வேடத்தில் நடிக்க வைத்து பிலிமின் மற்றொரு பகுதியை மறைத்து எடுப்பார்கள்.

இரட்டை வேட படத்தில், இரட்டை வேடமும் ஒரே பிரேமில் வரும் காட்சிகளை படமாக்குவது கேமராமேனுக்கு சவாலான வேலை. இன்று பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதால், ஒரு நடிகர் எத்தனை வேடம் ஏற்று நடித்தாலும் அத்தனையையும் ஒரே பிரேமில் சுலபமாக காட்டிவிட முடியும்.

1940-ல் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ‘தி மேன் இன் த அயர்ன் மாஸ்க்‘ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து பி.யு.சின்னப்பாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து உருவாக்கிய படம்தான் ‘உத்தம புத்திரன்‘. இதே கதையை அப்படியே 1958-ல் சிவாஜிகணேசனை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து அதே பெயரையும் வைத்து மீண்டும் ஒரு உத்தம புத்திரனை வெளியிட்டார்கள். இதுதான் சிவாஜிக்கு முதல் இரட்டை வேட படம்.

மன்னர் குலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாய்மாமன் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவன் நல்லவனாகவும், மற்றொருவன் கெட்டவனாகவும் மாறி, இறுதியில் நல்லவன் முடிசூட்டிக் கொள்வதுதான் கதை. இதுவொரு சாகா வரம் பெற்ற கதை என்றும் சொல்லலாம்.

சிவாஜி நடித்த உத்தமபுத்திரனை காலத்தை வென்ற படம் என்று சொல்லலாம். விக்கிரமன், பார்த்திபன் என இரட்டை வேடங்களில் அவர் அசத்தியிருப்பார். அதிலும், “யாரடி நீ மோகினி“ பாடலும், அதில் சிவாஜியின் கைதட்டலுடன் கூடிய நடனமும் இன்றும் மறக்க முடியாதவை. 

பி.யு.சின்னப்பாவின் உத்தம புத்திரனில் தொடங்கி சிவாஜியின் உத்தம புத்திரன், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப்பிள்ளை, கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே‘, ரஜினியின் ராஜாதி ராஜா என்று ஏகப்பட்ட படங்கள் இதே பாணியில் வந்துவிட்டன. ஆனாலும் இந்த கதை திகட்டாத கதையாகத்தான் உலக அரங்கில் இன்றும் இருக்கிறது.

Thursday, February 11, 2016


முதல் இயற்கை வேளாண் மாநிலம், சிக்கிம் 
 10/02/2016

ஒரு மாநிலமே அதன் முழு விவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த மாநிலத்தின் பெயர் சிக்கிம். இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும், ஐந்து முறை தொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர் மனதின் ஓரத்தில் விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது.  விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்று விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டார். அந்த விவசாயம் இயற்கை முறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவர் தனது விருப்பத்தை 2003-ம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் சிக்கிம் இனி ஒரு ‘ஆர்கானிக் ஸ்டேட்‘ என்றார்.  அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு‘ என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.

அத்தனை நிலங்களையும் இயற்கை வேளாண்மைக்கு மாற்ற, நிறைய இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்‘ என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்த கிராமங்களை ‘பயோ வில்லேஜ்‘ அதாவது ‘உயிர் கிராமங்கள்‘ என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின.  அப்போது மற்றுறோர் அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்டா வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு விட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு ‘சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்‘ என்ற இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது. அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன.

இத்தனை ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம், நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது.  ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை  சந்தித்தாலும் நாட்கள் செல்லச் செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க  உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறாக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Monday, February 8, 2016

பிப்ரவரி ரஷ்ய புரட்சி 
 

 ரஷியாவில் ஜார் மன்னர்கள் நீண்ட நெடுங்காலமாக கொடுங்கோலாட்சி புரிந்து வந்தனர். 1900-ம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்சி வெடிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் முதல் உலகப்போர் தொடங்கியது. உடனே கொடுங்கோலாட்சியை தளர்த்திக் கொண்டு மக்களை போரில் பங்கேற்க அழைத்தார் அப்போதைய ஜார் மன்னர்.  போர் முடிந்ததும் தனது கொடூர முகத்தை மீண்டும் காட்டினார். 1917-ல் தொழிலாளர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். எங்கும் வேலை நிறுத்தம், போராட்டம் என உழைப்பாளர்களின் எதிர்ப்பு கிளம்பியது. விளாடிமிர் லெனின் தலைமை தாங்கிய இந்த புரட்சிக்கு ‘பிப்ரவரி புரட்சி‘ என்று பெயர்.   கலகக்காரர்கள் மீது ரஷிய ராணுவத்தை ஏவி விட்டார் அப்போதைய ஜார் மன்னர் நிக்கோலஸ். ஆனால், எதிர்பாராதவிதமாக ராணுவத்தின் பெரும் பகுதி புரட்சியாளர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டன.  ஜார் மன்னரை தூக்கி எறிந்துவிட்டு, ‘ரஷியன் புரொவிஷனல் கவர்ன்மெண்ட்‘ என்ற பெயரில் இளவரசர் ஒருவரும் கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். லெனின் வலது கையாக செயல்பட்ட ட்ராட்ஸ்கி கைது செய்யப்பட்டார். மறுபடியும் புரட்சி தொடங்கியது. இதற்கு ‘அக்டோபர் புரட்சி‘ என்று பெயர்.  இடைக்கால ஆட்சி தொடங்கிய 8 மாதங்களில் இதுவும் சரிப்படாது என்று அதையும் தூக்கி எறிந்து லெனின் ஆதரவு சக்திகளான போல்ஷவிக்குகள் ரஷியாவை உழைப்பாளர்களே ஆட்சி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.  ஜார் மன்னர்களின் ஆட்சியை மறுபடி கொண்டுவர நினைத்த ரஷிய முதலாளிகள், வெண்படை என்ற பெயரில் சண்டை இட்டார்கள். ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை கொண்டிருந்த செங்கொடி படை, அதை எதிர்த்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் போரிட்டது.  வெண்படைக்கு வெளிநாட்டு ராணுவங்களின் ஆதரவு இருந்தும் கூட செம்படை வெண்படையை தோற்கடித்தது. இந்த செம்படைதான் பிறகு ரஷிய ராணுவமாக உருவெடுத்தது. ஒரு மாபெரும் மக்கள் புரட்சியால் மாபெரும் கம்யூனிஸ்டு தேசமாக மலர்ந்த சோவியத் யூனியன், பரிதாமாக சிதறுண்ட வரலாறும் உண்டு.

Sunday, February 7, 2016


ரத்தப்பணம் 
(24/01/2016)

கருப்புப் பணம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒயிட் மணி என்ற வெள்ளைப் பணம் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தப் பணம் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா..?  இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்வோம். ரத்தப் பணம் என்பது கேங் ஸ்டார்கள் மொழியில் இருக்கிறது. இந்த  ரத்தப்பணத்திற்கு இடத்திற்கு தகுந்தபடி பல பெயர்கள் இருக்கின்றன. திய்யா, கிஸாஸ், எரிக்பைன், காலனாஸ், விரா, க்லொசிஸ்னா, மிமைசின், ஸீர், வியர்கில்ட் இவையெல்லாம் ரத்தப் பணத்தின்  மாற்றுப் பெயர்கள்.  தவறாக யாரையாவது கொலை செய்துவிட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுக்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்குத்தான் இத்தனை பெயர்கள்.

இயேசு நாதரை காட்டிக்கொடுத்து 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான், யூதாஸ். இயேசு சிலுவையில் அறையப்பட்டப் பின்பு, அவன் தன் தவறை உணர்ந்து குற்ற உணர்வு தாளாமல் வாங்கிய காசுகளை திருப்பிக் கொடுத்தான். அப்போது ஆட்சியாளர்கள் இந்த பணத்தை மீண்டும் கஜானாவில் வைக்க முடியாது. இது ரத்தத்துக்கு கிடைத்த விலை என்று சொன்னார்களாம். அப்போது தோன்றியதுதான் ‘பிளட் மணி’ என்ற வார்த்தை. அதாவது ரத்தத்துக்கு ஈடாக கொடுக்கும் பணம்.

ஜெர்மனியில் ‘வியர்கில்ட்’ என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ‘வியர்’ என்றல் மனிதன். ‘கில்ட்’ என்றால் பணம். ஒவ்வொரு மனித உயிருக்கும் அவர்கள் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள். அதன்படி தொழிலாளி உயிருக்கு விலை குறைவு. அரசனின் உயிர் என்றால் விலை அதிகம். அடிமைகளாக வாங்கப்பட்ட மனிதர்களை கொல்ல யாரும், யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை. இஷ்டம் போல் அவர்களை கொல்லலாம்.

இது மட்டுமில்லாமல், சில நேரங்களில் ‘உயிருக்கு உயிர்’ என்ற நடைமுறையும் இருந்தது. அதன்படி குடும்பத்தின் ஆண் வாரிசை யாராவது கொன்று விட்டால், கொன்றவரின் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் வாரிசை தத்தெடுத்து தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்வார்கள்.

தேவாலயத்திலோ, அரண்மனையிலோ ஒருவர் கொலை செய்யப்பட்டால், இந்த நஷ்டஈட்டு முறை எதுவும் செல்லாது. அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை தான்.

ராக்கெட்டில் வலம் வந்த முதல் உயிரினம்
 (25/01/2016)

விஞ்ஞானிகள் முதன் முதலில் செய்யும் எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சி முடிவையும் விலங்குகள் மூலமே நிகழ்த்துகிறார்கள். அதன்படி விண்வெளியில்  மனிதன் தன் பிரயாணத்தை தொடங்குவதற்கு முன்பு நாயை ராக்கெட்டில் அனுப்பி ஆராய்ச்சி செய்தனர்.  அந்த வகையில் லைக்கா என்ற இரண்டு வயது நிரம்பிய பெண் நாய் தான் முதன் முதலில் பூமியை சுற்றிவந்து ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது.

1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஸ்புட்னிக் என்ற ஒரு விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் தான் லைக்கா பயணம் செய்தது. விண்வெளியில் பயணம் செய்யும் போது என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தார்கள். விண்ணில் இருக்கும் எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் விண்வெளி வீரருக்கு ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் குழம்பி இருந்தனர். 

அதற்காக ரஷிய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் லைக்கா என்ற நாயை விண்கலத்தில் அனுப்பி வைத்தனர். அந்த விண்கலத்தில் ஒரு குறுகலான இடத்தில் இருந்த இருக்கையோடு பெல்ட் கொண்டு அந்த நாய் இணைக்கப்பட்டு இருந்தது.  நாயின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், மனநிலை போன்ற விவரங்கள் உடனடியாக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தன. இதற்காக நாயின் உடலில் பல எலக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் அந்த நாய்க்கான உணவு குறித்த நேரத்தில் திரவ வடிவில் கொடுக்கப்பட்டது. லைக்கா ஆரோக்கியமாக இருந்து வருகிறது. எடையில்லாத பகுதியில் பிரயாணம் செய்யும் போது அதனுடைய உடல் நிலையில் எந்த  மாற்றமும் தென்படவில்லை என்பன போன்ற மருத்துவ அறிக்கைகளை ரஷிய  நாட்டு விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அந்த நாயை விண்வெளியில் இருந்து உயிருடன் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அன்றைய நாளில் விண்வெளியில் சுற்றி வரும் விண்கலத்தில் இருந்து எந்த ஒரு பொருளையும் பூமிக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. விண்கலத்தில் இருந்த சிறிதளவு ஆக்சிஜனை அந்த நாய் சுவாசித்து முடித்த பிறகு அது மூச்சு விட முடியாமல் இறந்து விட போகிறது என்பது தெரிந்தும் அதை பற்றி ரஷியா கவலைப்படவில்லை.

இதற்காக ரஷியாவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. ஒரு வாரத்திற்கு பிறகு கொஞ்சம் கூட கவலைப்படாமல் மிகவும் அமைதியாக லைக்கா இறந்து விட்டது என்று சுருக்கமாக ரஷியா ஒரு அறிக்கை வெளியிட்டது. லைக்கா மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள் என்று பல நாடுகளை பத்திரிக்கைகள் கேட்டுக்கொண்டன. விண்வெளியை பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்து விட்டு தன் உயிரை அர்ப்பணித்த லைக்கா பாராட்டுக்குரியது.


மழைநீர் சேகரிப்பின் தந்தை  
(26/01/2016)

பொதுவாக தமிழகத்தில் மழைக்காலத்தில் மட்டுமே  நீர் நிறைந்து ஓடும் ஆறுகள் இருந்தன. அன்றைய மன்னர்கள் அதை வைத்து தான் விவசாய பணிகளை வழி வகை செய்தனர். குடிநீரையும் மக்களுக்கு பகிர்ந்து அளித்து வந்தனர். மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது மன்னனின் தலையாய கடமை. அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாக வேண்டிய பொறுப்பு எல்லா மன்னர்களுக்குமே இருந்தது. அதில் இருந்து தவறினால் புலவர்கள் கேவலமாக, பாடியே கொன்று விடுவார்கள். பழிச்சொல்லுக்கு அஞ்சியவர்கள் அன்றைய மன்னர்கள். அதற்காகவே நீரை சேமிக்கும் உத்தியை மன்னர்கள் மாய்ந்து, மாய்ந்து செய்தார்கள்.

அத்தகைய மன்னர்களில் முதன்மையானவர் ‘இருப்பைக்குடி கிழவன்’ என்ற சிற்றரசன். இவரை நீரியியல் நிபுணர், நீரியியல் பொறியாளர், நீரியியல் வல்லுனர், நீரியியல் விஞ்ஞானி என்று எந்த பெயர் கொண்டு அழைத்தாலும், அது அவரது நீர் நிபுணத்துவத்துக்கு குறைவான சொல்லாகவே இருக்கும். அந்த அளவு நீர் ஞானம் கொண்ட ஒரு மன்னன். இவர் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த ‘இருஞ்சோணாடு’ என்ற பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர். இன்றைய சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு அது. வறண்ட நிலப்பரப்பை அதிகம் கொண்ட தனது நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவில், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீர் பாசனத்திற்காகவே செலவழித்த மன்னன். தனது நாடு மட்டுமல்லாமல் பாண்டிய நாடு முழுவதும் ஏரிகளை உருவாக்கிய பெருமை இந்த மன்னனையே சேரும். வைகை நதிக்கரையில் பல கண்மாய்களை உருவாக்கி அவற்றுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களை வடிவமைத்து தந்த தொழில்நுட்ப பொறியாளர் இந்தக் கிழவன் தான். இன்றைக்கு பெரிதாக பேசப்படும் ‘வாட்டர் ஹார்வெஸ்டிங்’ என்ற ‘நீர் அறுவடை’ அதாவது மழைநீர் சேமிப்பை சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திக் காட்டிய முன்னோடி. கி.பி.815 முதல் கி.பி.890 வரையிலான காலக்கட்டத்திலேயே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் இவரை ‘மழைநீர் சேகரிப்பின் தந்தை’ என்று சொல்வார்கள். மழைநீரை கொஞ்சம் கூட வீணாக்காமல் அதை அப்படியே ஓரிடத்தில் சேர்த்துவைத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதில் கில்லாடி. மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியதுதான். புவியீர்ப்பு விசைக்கு எதிராக எப்படி நீரை மேலேற்றினார் என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் மேலாண்மையில் சாதனை மன்னர் இவர் என்பதில் சந்தேகமில்லை. இந்த செயல்முறையால் அதுவரை நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின. கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி,  திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று இன்றும் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏரிகள் அனைத்தையும் அவர் உருவாக்கியதுதான். தற்போது தென் மாவட்டங்களில் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது என்றால் அதற்கு  இருப்பைக்குடி கிழவன் அன்று ஏற்படுத்தித் தந்த நீர்நிலைகள் தான் பெரும் காரணம்.


கணித சக்கரவர்த்தி
27/01/2016

அலுவலக வரவு, செலவு கணக்குகளை 12 மணி நேரம் கடுமையாக போராடி பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து தவறுகளை திருத்தியது.  குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கோ கடுங்கோபம். ‘ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்து இருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?’ என்று கேட்டார்.  ‘அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!’ என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து அந்த கணக்கை சரி பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது.  இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே திருத்திய அந்த குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கிய கால் பிரெட்ரிக் காஸ் என்பதாகும்.  எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து, பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து, உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ்.

நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காடச் செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி, சிரமமின்றி கணிதத்தை எளிதாக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள். கி.பி. 1777ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே, எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்து இருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டினையே உதாரணமாக சொல்லலாம்.

ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாகி இருக்கும் என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23ல். ஆக 19க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ் தான்.  1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். பாளினாமியல் சமன்பாடுகளுக்கு பலமுறையில் விடை அடையாளம் என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் சமன்பாடுகளை எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாய் பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை.  எப்படி இவருக்குள் தினம் தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்தது உலகம். 1809-ல் விண் பொருட்களின் இயக்கம் என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கைகோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன.  மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணித திறமைக் கொண்டிருந்த காஸ். தனி ஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக் கொள்ளமால் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்து இருக்கும்.

வானிலையின் மிகப்பெரிய மாற்றங்கள்
 28/01/2016

நாம் அறிந்து கொள்ளும் வானிலை முன்னறிவிப்பு எல்லாவற்றையும் இன்சாட் 1பி செயற்கைக் கொள் மூலமே தெரிந்து கொள்கிறோம். இன்சாட் 1பி செயற்கைக்கோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக்கொண்டே இருக்கும். புயல் பற்றிய எச்சரிக்கைகளை இப்போது நாம் கேட்கிறோமே, அந்த எச்சரிக்கை செய்யும் வழக்கம் முதன்முதலில் 1886-ல் தொடங்கியது.

செயற்கைக் கோள்கள் பொதுவாக 650 - 1500 கிலோ மீட்டர் உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் 14½ முறை சுற்றுவதாக கணக்கிட்டு உள்ளனர்

1974-ம் ஆண்டு ஏப்ரல் 3, 4-ந் தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 முறை சூறைக் காற்று அடித்து கதி கலங்க வைத்துள்ளது. இந்தியாவில் தற்போது 20 கிலோ மீட்டர் உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்க இயலும்.

மின்னல் அடிக்கும்போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது மிக பாதுகாப்பானது ஆகும். மேலும் சூறைக்காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு‘ என்றும் மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை‘ எனவும் அழைக்கின்றனர்.

சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பதிவானது. இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன. கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை ‘நிப்போ ஸ்ட்ராட்டஸ்’ என அழைக்கின்றனர். இவை 10 முதல் 15 நிமிடம் வரை மழை தரும் சக்தி படைத்தவை.

விமானம் 30 ஆயிரம் அடிக்கு மேல் பறக்கும்போதுதான் நகருவதே தெரியாமல் செல்லும். 1935-ம் வருடம் ஜனவரி 16-ந்தேதி அன்று குளிரினால் டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம் 0.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கி விட்டது. இவையெல்லாம் வானிலையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள் ஆகும்.

ஓர்  இனத்துக்காக  எழுதிய  நாவல் (01/02/2016)

சமூகத்தின் மீது கொண்ட கோபம், விருப்பு, வெறுப்பு என்ற பல்வேறு கோணங்களை வைத்து நாவல் எழுதப்படுவது வழக்கம். இனத்தை காப்பாற்றுவதற்காக ஒரு நாவல் படைக்கப்பட்டது என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

அந்த நாவலின் பெயர் ‘ரிசுரெஷன்’. அதாவது ‘உயிர்த்தெழுதல்’. எழுதியவர் லியோ டால்ஸ்டாய். ரஷியாவில் வாழ்ந்த டுகோபார்ஸ் இனத்தை காப்பாற்றுவதற்காக இந்த நாவலை அவர் எழுதினார்.மொத்தம் 12 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட 40 ஆயிரம் மக்கள் மட்டுமே அந்த இனத்தில் இருந்தனர். இடையர்களும், விவசாயிகளும் சேர்ந்து உருவாக்கிய இனம் இது. இவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அகிம்சையை இவர்களிடம் இருந்துதான் மகாத்மா காந்தி கற்றுக் கொண்டார்.

இவர்கள் ராணுவத்தை விரும்பவில்லை. எதற்குமே அரசாங்கத்தை நம்புவதில்லை. அதனால் இவர்கள் அரசுக்கு வரியும் கட்டுவதில்லை. ராணுவத்திலும் சேருவதில்லை. இதனால் அவர்களை ரஷிய அரசு பலவிதத்தில் கொடுமைப்படுத்தியது. டுகோபார்ஸ் இனத்தவர் எந்த கொடுமைகளையும் எதிர்ப்பு காட்டாமல் ஏற்றுக்கொள்வது அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அவர்களை சிறையில் தள்ளியது. அதையும் அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள். கடைசியாக கனடா நாடு இவர்களை தனது நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஆயிரம் மைல்கள் கொண்ட பசிபிக் கடலை கடந்து செல்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

அந்த பணத்தை பெறுவதற்காக லியோ டால்ஸ்டாய் எழுதியதுதான் ‘உயிர்த்தெழுதல்’ என்ற நாவல். இதன் ராயல்டி பணத்தை வைத்துதான் அவர்களை கனடா நாட்டிற்கு கப்பலேற்றி அனுப்பினார். 2,300 டுகோபார்ஸ் இனத்தவர்கள் முதல் கப்பலில் பயணித்தார்கள். பாதி கடலைக் கடந்தபின் ஒரு குழந்தைக்கு அம்மை நோய் வந்துவிட்டது. அதனால், அந்த கப்பல் பாதியிலேயே திரும்பிவிட்டது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் எழுதி வாரம் வாரம் அத்தியாயத்தை வெளியிட்டார். ரஷிய மக்கள் ஆர்வத்தோடு அந்த நாவலை படித்தனர். மொத்தம் 17 ஆயிரம் ரூபிள் தந்து அந்த மக்கள் இடம் பெயர உதவினார், லியோ டால்ஸ்டாய். தான் நேசித்த மக்களை காப்பாற்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரே நாவல் இதுதான். இந்த உதவியை மறக்காத அந்த இன மக்கள் டால்ஸ்டாயை தங்களின் குல தெய்வமாகவே வணங்குகிறார்கள்.

யானைகளும் தமிழர்களும்  

உலகம் முழுவதிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல விலங்குகளையே பயன்படுத்தினர். பாலைவனங்களில் ஒட்டகங்கள் போக்குவரத்துக்கு பயன்பட்டன. சில இடங்களில் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன.  தமிழர்களை பொறுத்த அளவில் பழந்தமிழர்கள் யானைகளை அதிகம் பயன்படுத்தியதாக பழமையான நூல்களில் காணப்படுகிறது. தமிழர்கள் ஏறிச்செல்லவும், போரிடவும் யானைகளை பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். யானைகளை பிடிக்க அவை செல்லும் வழியில் பெரிய குழிகளை வெட்டினர். அந்த குழிகளை அடையாளம் காணமுடியாத வகையில் இலை, தழைகளால், கழிகளால் மறைத்து விடுவார்கள். இதனை அறியாத யானைகள் அந்த வழியில் வரும் போது குழிகளில் விழுந்து விடும். குழிகளில் விழுந்த யானைகளை பிடித்து பழக்கி பயன்படுத்தினர். சில பெரிய யானைகள் இவ்வாறு குழிகளில் விழும் போது தந்தத்தை கொண்டு மண்ணை சரித்து தப்பி விடும்.  குழிகளில் விழுந்து தப்ப இயலாத யானைகளை பிடித்து வந்து யானைப்பாகர்கள் பழக்குவர். அவர்கள் கையில் இருக்கும் அங்குசம் கொண்டு யானைகளை அடக்குவார்கள். யானைகளுக்கு கட்டளையிட அதற்கென்று தனி மொழி ஒன்றும் பாகர்களிடம் புழக்கத்தில் இருந்தது. யானைகளை பெரிய கல் தூண்களில் கட்டி வைப்பார்கள். அதற்கு கட்டுத்தறி என்று பெயர். யானைக்கு கரும்பும், நெல்லும், சோற்றுக்கவளமும் உணவாக அளித்தனர். நெய்ச்சோறும் அவ்வப்போது உணவாக அளிப்பார்கள். யானைகள் மீது ஏறிச்செல்லும் போது யானைகளை அழகுபடுத்தி அவற்றின் மீது அமர்ந்து செல்வர். யானையின் நெற்றியில் இருந்து துதிக்கை வரை பொன்னால் செய்த முகப்பட்டத்தை அணிவித்திருப்பர். யானையின் கழுத்திலும் மாலைகளை அணிவித்தனர். தந்தத்தின் முனையில் பொன்னால் செய்த பூண் அணிவித்திருப்பார்கள். இதற்கு கிம்புரி என்று பெயர்.  பொதுவாக, அரசர்கள் யானையின் மீது ஏறி நகரை வலம் வருவர். பெண்களும் கூட யானையின் மீது அமர்ந்து பயணிப்பர். மன்னர்கள் அதிக அளவில் யானைகளை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்திருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. சேரமன்னர்களில் ஒருவனுக்கு பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற பெயர் இருந்தது. தங்களிடம் பரிசு பெற புலவர்களுக்கு யானைகளையும் பரிசாக அளிக்கும் பழக்கம் மன்னர்களிடம் இருந்தது. உலக அளவில் சோழமன்னர்களிடம் மட்டுமே ஆயிரக்கணக்கில் யானைகளை கொண்ட படைகள் இருந்ததாக அறிய முடிகிறது.  மனித இனம் இன்றும் கண்டு பிரமிக்கும் யானையை சர்வளசாதாரணமாகப் பிடித்து பழக்கி அவற்றை பயன்படுத்தியது தமிழர்களின் மிகச்சிறந்த பராக்கிரமத்திற்கு உதாரணம். எந்த அளவுக்கு விலங்குகள் தங்களுக்கு பயன்பட்டனவோ, அதே அளவுக்கு அந்த விலங்குகளுக்கு தகுந்த மரியாதையும், உயர்வான பராமரிப்பையும் கொடுத்து அவற்றை தங்களது குடும்பத்தில்  உறுப்பினராக உயர்த்தி வைக்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்ததமைக்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஏழை நாடுகள்  (30.01.2016)

பத்து வருடங்களுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. உலக அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியராக இருந்தார். இந்த தகவலை உலக வங்கி தெரிவித்தது. ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அது கணித்தது.  அந்த கணக்குப்படி 46 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாழ்வதாக உலக வங்கி தெரிவித்தது. இது உலக அளவிலான ஏழை மக்களில் 33 சதவீதமாகும். அதன்படி உலகில் வறுமையில் வாடுவோர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர். இந்த நிலை இன்று மாறி விட்டது.  இந்தியாவில் 96 கோடி மக்கள் வருமானம் இன்றைக்கும் 2.5 டாலருக்கும் குறைவாக உள்ளது.  ஆனாலும் ஏழை நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் பெயர் வரவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்.  உலக அளவில் வறுமையில் முதலிடத்தில் இருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ:-  முதலிடத்தில் மால்வி என்ற தென்கிழக்கு ஆப்பிரிக்க  நாடு இருக்கிறது. அதற்கடுத்து, இரண்டாம் இடத்தில் புரூண்டி உள்ளது. மூன்றாம் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு இருக்கிறது. நான்காம் இடத்தில் நைஜெர் நாடு உள்ளது. ஐந்தாம் இடத்தில் லைபீரியா நாடும், ஆறாம் இடத்தில் மடகாஸ்கரும், ஏழாம் இடத்தில் காங்கோ நாடும், எட்டாம் இடத்தில் காம்பியாவும், ஒன்பதாம் இடத்தில் எத்தியோப்பியாவும், பத்தாம் இடத்தில் கினியா நாடும் உள்ளன.

 வானில் ஓர் அதிசயம் (31/01/2016)

 வானில் அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படியொரு மாற்றம் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அது விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு  அரிய விருந்தை படைத்துக்கொண்டிருக்கிறது.  இந்த அதிசயம் வருகிற (பிப்ரவரி) 20-ந்தேதி வரை நீடிக்கும். இது ஒரு அபூர்வ விஷயமாகும். ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில், சாதாரணமாக, தொலை நோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் தெரியும்.  இவை புதன், வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன் (குரு) ஆகிய கிரகங்கள் (கோள்கள்) 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், இது போன்று வரிசையாக அணிவகுத்து ஒரே நேரத்தில் காணும் விதமாக வரும் இந்த கிரகங்களின் அணிவகுப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்தக் காட்சி ஜனவரி 27-ல் தொடங்கி விட்டது.  பிப்ரவரி 20 வரை இது தெரியும். புதன் கிரகம் இந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு இந்த அதிசயத்தை பார்த்து ரசிக்கலாம். இந்த ஐந்து கோள்களும், அவற்றின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, சூரியனின் தோற்றப்பாதை என்று அறியப்படும் திசையில் அணிவகுப்பதால் இந்த விஷயம் நடைமுறையில் சாத்தியமாகிறது.  இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது. இதே போன்றதொரு அணிவகுப்பு வருகிற ஆகஸ்டு 13-ந்தேதியிலிருந்து 19-ந்தேதி வரை மீண்டும் நடக்கும்.அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பாதியில் வசிக்கும் மக்கள் மட்டும் இதை நன்றாகப் பார்க்க முடியும். கடந்த முறை இதே போன்ற தொரு அணிவகுப்பு டிசம்பர் 2004-ல் இருந்து ஜனவரி 2005 வரை நடந்தது.  இப்போது மீண்டும் வானில் தோன்றியிருக்கும் இந்த அதிசயத்தை நாமும் கண்டு களிப்போம்.

ஒரே ஒரு  மாணவிக்காக   ஓடும் ரெயில்

ஒரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் மிகக் கவனமாக உள்ளன. அந்த நாடுகள் எப்போதும், அந்த நாட்டு மக்களுக்காகவே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அப்படி ஒன்றுதான் ஒரேஒரு பள்ளி மாணவிக்காக ஒரு ரெயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு ஆட்டோவை கூட இயக்காது. ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டும் தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ஒரு ரெயிலை இயக்கி வருகிறது. காணா என்ற அந்த மாணவி பள்ளி இறுதி வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காடியொ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார். இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரெயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரெயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள ‘காமிஷிரதகி’ ரெயில் நிலையத்தில் இருந்து ‘ஷின்அசகவா’ ரெயில் நிலையம் வரை ஒரேஒரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம்.

அதோடு நின்று விடாமல் மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரெயிலின் நேரத்தையும் மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரெயில் நிர்வாகமும், அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரெயிலை நீடித்து இயக்கியது. அதாவது, 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரெயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது. ஜப்பான் ரெயில் தடங்கள் நமது ரெயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித்துகள்கள் கொட்டி ரெயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும்.  தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித்துகள்களை அகற்ற வேண்டும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள்.

மாணவியின் படிப்பு வரும் மார்ச் மாதம் 26-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்று தான் இந்த ரெயிலின் கடைசி ஓட்டம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேஒரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியாது.

அழிக்க முடியாத மெமரி கார்டு 

மெமரி கார்டு, பென்-டிரைவ் போன்ற இரண்டாம் தர சேமிப்பகங்களில், நாம் சேமித்து வைக்கும் எந்த சேமிப்பையும் முழுமையாக அழிக்க முடியாது. இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இதில் நாம் சேமிக்கும் தகவல் எல்லாமே 0 மற்றும் 1 என்ற முறையிலேயே சேமிக்கப்படுகிறது. இப்படி சேமிக்கும் தகவல் எதுவுமே எப்போதும் அழிவதேயில்லை. அதை எப்போது வேண்டுமானாலும் ‘ரெக்கவர்‘ செய்து பெறலாம். அது சமீபத்தில் சேமித்த தகவல் மட்டுமல்ல, பல மாதங்களுக்கு முன் சேமித்த தகவல்களையும் திரும்ப பெறமுடியும்.  இதனால்தான் சிலரின் அந்தரங்கம் வெளியே இணையத்தில் வந்துவிடுகிறது. மெமரி கார்டு அல்லது பென்டிரைவ்களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும், அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணையோடு அந்த கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும். இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது.  கணினி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்டு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்பார்கள். என்னதான் நாம் மெமரி கார்டில்  இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக ரெக்கவர் செய்து கொடுக்க பல மென்பொருள்கள் வந்துவிட்டன. நாம் திரையை பார்த்துக்கொண்டு தான் இருப்போம். ஆனால் நமது மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும், உங்கள் மெமரி கார்டு வைரஸால் பாதிக்கப்பட்டால், சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம். வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் கணினியின் ‘ஸ்டார்ட்’  பொத்தானை ‘ரைட் கிளிக்’ செய்து, ‘எக்ஸ்ப்ளோர்’ என்பதை சொடுக்கி வரும் திரையில், இடதுபக்கத்தில் ‘மெமரி கார்டு‘க்கான டிரைவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து, நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் மெமரி கார்டை ‘பார்மட்’ செய்து பயன்படுத்தலாம். மெமரி கார்டை யாரிடமும் கொடுக்காமல் இருப்பதே நமது தகவல்களுக்கு பாதுகாப்பு.