Search This Blog

Monday, July 13, 2015


கணிதச் சக்கரவர்த்தி ‘காஸ்’

அலுவலக வரவு செலவு கணக்குகளை 12 மணி நேரம் போராடி பார்த்து முடித்தார் அந்த நடுத்தர வயது மனிதர். வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய குழந்தை 5 நிமிடத்தில் அந்த கணக்கை பார்த்து தவறுகளை திருத்தியது. குழந்தையின் இந்த புத்திசாலித்தனத்தை தந்தையால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கோ கடுங்கோபம். ‘ஒருநாள் முழுக்க ராத்திரி பகல் விழித்திருந்து நான் பார்த்த கணக்கை நீ 5 நிமிடத்தில் சரி செய்து விட்டாயா..?‘ என்று கேட்டார். ‘அதுக்கெல்லாம் குறுக்கு வழி இருக்கப்பா! வேணும்னா, நான் திருத்தியதை நீங்க மறுபடியும் சரிபாருங்க!‘ என்றது குழந்தை. மீண்டும் அந்த தந்தை மணிக்கணக்காக உட்கார்ந்து அந்த கணக்கை சரி பார்த்தார். குழந்தை சொன்னதுதான் சரியாக இருந்தது. இப்படி பெரிய நிறுவனத்தின் கணக்கையே திருத்திய அந்தக் குழந்தையின் வயது 3 மட்டுமே. பிறவி மேதையான அந்த குழந்தைதான் பின்னாளில் பெரிய பெரிய கணித முறைகளை உருவாக்கிய கால் பிரெட்ரிக் காஸ் என்பதாகும். எண் கணிதம், அறிவியல் ஆய்வுகள், ஜியோமெட்ரி, பூமியின் மேற்பரப்பு, கணக்கியல், வானவியல், காந்தவியல், ஒளியியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்து பிரமிப்பூட்டும் முடிவுகளை கண்டறிந்து உலகுக்கு சொன்ன ஒரு அசாதாரண மனிதர்தான் காஸ். நடக்கக்கூட அறியாத குழந்தையாய் இருக்கும் போதே, இவரது கணித ஞானம் பெரிய மேதைகளையே திக்குமுக்காட செய்தது. கணித உலகில் பல சமன்பாடுகளை உருவாக்கி சிரமமின்றி கணிதத்தை எளிமையாக ஆக்கியதால் இவரை கணிதமேதைகளின் சக்கரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.கி.பி. 1777-ல் பிறந்த காஸ், இளமைப் பருவத்தை அடையும் முன்பே எண் கணிதத்துக்கான முழு அஸ்திவாரத்தை வடிவமைத்து முடித்திருந்தார். இந்த கண்டுபிடிப்பின் ஒரு பகுதிதான் வட்டச்சுற்று. இதற்கு கடிகார நேரக் கணக்கீட்டையே உதாரணமாக சொல்லலாம். ஒருநாள் என்பது 24 மணி நேரம், 00 முதல் 23 வரை கொண்டது. 00 என்பது நடுஇரவு. இம்முறையில் 19 என்பது மாலை 7 மணியை குறிக்கும். ஆனால், இதனை கடந்து 8 மணி நேரம் கழித்து மணி என்னவாகி இருக்கும் என்று கேட்டால் 19 + 8 = 27 என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 00 முதல் 23 வரையான வட்டச்சுற்று உடைந்து முடிவது 23ல். ஆக 19க்கு பிறகு 8 மணி நேரம் கடந்தால் வருவது அதிகாலை 3 மணி என கணக்கிட வேண்டும். இப்படி வட்டச்சுற்றை கணித்தவர் காஸ் தான். 1801-ல் கணித முறையினை ஆழமாக விளக்கி ஒரு புத்தகம் எழுதினார் காஸ். ‘பாளினாமியல்‘ சமன்பாடுகளுக்கு பல முறையில் விடை என்ற கட்டுரையை பற்பல உதாரணங்களுடன் எழுதினார். அந்த புத்தகத்தை படித்து கணித உலகமே வாய் பிளந்து நின்றது. ஒவ்வொரு முடிவும் ஆதாரமானவை. எப்படி இவருக்குள் தினம், தினம் இப்படி கணித வழிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என வியந்தது உலகம். 1809-ல் விண் பொருட்களின் இயக்கம் என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இதுதான் இன்று நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோள்களுக்கு அடிப்படை ஆதாரம். இதன் மூலம் தான் செல்போன் இயக்கத்துக்கும் வழிகள் பிறந்தன. மனித சக்தியால் ஆகாது என்று சொல்லும் அளவுக்கு ஆழமான கணிதத் திறமை கொண்டிருந்த காஸ். தனி ஒரு மனிதனாக ரகசியமாக செய்தார். தனக்கென ஒரு சிஷ்யனை உருவாக்கிக்கொள்ளாமல் விட்டுவிட்டார். அப்படி ஒருவரை உருவாக்கி இருந்தால் கணிதத்துறை இன்னும் பிரமாண்டமான பல முடிவுகளை கண்டறிந்திருக்கும்.

No comments:

Post a Comment