Search This Blog

Monday, March 14, 2016


112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்
கின்னஸ் சாதனை படைத்தார்

வாஷிங்டன், மார்ச்.13-

இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல். இவர் போலந்து நாட்டில் ஜார்னவ் நகர் அருகே 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது, ஆஸ்விட்ச் நகரில் நாஜிக்கள் சித்ரவதை முகாமில் உயிர் தப்பியவர் ஆவார். ஆனால் இவரது மனைவி சாஜா அதில் உயிரிழந்தார். ஜெர்மனி கையகப்படுத்தியபோது, லூட்ஸ் நகரில் அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர். 1950-ம் ஆண்டு கிறிஸ்டல் தனது 2-வது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அவரது வயது 112 வருடங்கள் 178 நாட்கள். இதனால் உலகிலேயே அதிக வயதான மனிதர் என்று அவர் கின்னஸ் சாதனை படைத்தார். அவருக்கு வீடு தேடிச்சென்று கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

அந்த நிறுவன அதிகாரிகளிடம் பேசிய அவர், “நான் இத்தனை நீண்ட காலம் வாழுவதின் ரகசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. எல்லாமே, நமக்கு மேலே உள்ள ஒரு சக்தியால்தான் நடக்கிறது என்று நான் நம்புகிறவன். அதற்கு காரணம் என்ன என்று நம்மால் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது. என்னை விட அழகான, வலிமையான, சிறப்பான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்போது இல்லை” என கூறினார்.

இதற்கு முன் உலகிலேயே வயதான மனிதர் என்ற பெயரை பெற்றிருந்தவர் ஜப்பானை சேர்ந்த யாசுதரோ கொய்டே (112 வயது, 312 நாட்கள்). இவர் ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்தே கிறிஸ்டல் உலகின் வயதான மனிதர் பெயரை பெறுகிறார்.

No comments:

Post a Comment