குறையும் உணவு உற்பத்தி 04/03/2016
உலகம் முழுவதும் மாறிவரும் பருவநிலை மாறுபாட்டினால் உணவு உற்பத்தி 18 சதவீதமாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களான டேவிட் லெக்கிளாரி, மைக்கேல் ஓபர்ஸ்டீனர் ஆகியோர் உலக அளவிலான சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாசு காரணமாக, பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஒருசில இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது. மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏராளமான மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வான் மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகிறது. மக்களும், மரங்களும் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் அந்தந்த நாடுகளின் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுபோக மீதமுள்ள நீர்நிலைகளும் மாசுபட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகளுக்கு நீர்ப்பாசனத்துக்கும், சேமிப்பதற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் 25 சதவீதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட வேண்டும். தகுந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வரும் 2050-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 18 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. இது தான் அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம்.
No comments:
Post a Comment