எழுத்துக்களின் உருவாக்கம் 07/03/2016
பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியைத் தொடர்ந்து எழுத்து உருவானது. எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.
கி.மு. 4000 ஆண்டிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி, அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
காகிதம் என்று ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அதை உடைத்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பெற்றுக்கொண்டவர் பார்சலை லேசாக தட்டி உதிர்த்தால் போதும். உள்ளே உள்ள விஷயத்தை படிக்கலாம்.
ஆயிரக்கணக்கான குறியீடுகளை வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப்பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், மருத்துவம், அரசியல் போன்ற விஷயங்களை எழுதுவதற்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்படியாக எழுத்து என்பது முழு வடிவம் பெற 800 ஆண்டுகள் பிடித்தன. மொழி, மனிதனின் கைவசப்பட்டவுடன், அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000 ஆண்டில் பாபிலோனியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பழமொழிகளைக்கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடமாக இருந்து இருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையங்கள் இருந்தால், அங்கே கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்கிற பழமொழி ஒரு கல்வெட்டில் கிடைத்து இருக்கிறது. இன்றளவும் பின்பற்றப்படும் ‘வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது‘ என்ற பழமொழியும் களிமண் குறிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment