Search This Blog

Monday, August 31, 2015


புத்திசாலி யானைகள்
யானைகள் புத்திசாலிகள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதை நிரூபிப்பது போல் இந்த ஆய்வு உள்ளது. ஒரு யானை, தான் கேட்கும் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதை கண்டறிந்து விடுமாம். அது மட்டுமல்ல அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும்கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க காட்டு யானைகள் மத்தியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் ‘ப்ரோசீடிங்க்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்‘ என்கிற அறிவியல் இதழில் வந்துள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கேரன் மெக்கம்ப், கிரேமி ஷானன் ஆகியோர் நடத்தினர். ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கும் அந்தநாட்டில் மாடு மேய்க்கும் ‘மாசாய்‘ இன மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது உண்டு. மாசாய் இனமக்கள் யானைகளை வன்முறையாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள். ஆனால் அதே ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘கம்பா‘ இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வந்தாலும், இந்த இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்வதில்லை. இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். ‘அதோ பாரு, அங்க பாரு! யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு!‘ என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தனர்.இந்த குரல்களை தனியாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்பிரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக சத்தமாக ஒலிபரப்பினர். இதில் மாசாய் இன ஆண்களின் குரல்களை கேட்டவுடன், காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்ப குழுக்களாக ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் செயல்பாடுகளையும், சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தின. இதுதவிர ஒருவித கலவர நிலையில் யானைகள் இருந்தன, இதேபோல் கம்பா இன ஆண்களின் குரலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினர். அதைக்கேட்ட யானைகள் முன்பைப் போல கலவரப்படவில்லை. எச்சரிக்கை ஒலியை மட்டும் விடுத்து, கவனத்துடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதன் மூலம் யானைகளுக்கும் மனிதர்களின் குரலை கண்டறியும் சக்தி உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment