ஆண்-பெண் குரல் வித்தியாசம்
உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன்
மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப
முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும். மனிதனின் இந்த பேசும் அமைப்புக்கு
காரணமாக இருப்பது பேசும் பெட்டி. இது மனிதனை தவிர, இன்னொரு உயிரினத்திற்கும்
இருக்கிறது என்றால் அது கிளிக்கு மட்டும்தான். இதன் பேசும் பெட்டி கிட்டத்தட்ட
மனிதனின் பேசும் பெட்டியில் 50 சதவீதம் உள்ளது. அதனால்தான் கிளிகள், மனிதனைப் போல்
தெளிவாகப் பேசமுடியா விட்டாலும் சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிக்
கொடுத்தால் அந்த வார்த்தை களை மட்டும் பேசுகின்றன.
ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத்
தொடங்குகிறது. இது லேசான மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில்
விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும், பெண்ணுக்கு இனிமையான
குரலும் தோன்றுகின்றன. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக
மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மை போய் கரகரப்பு சேர்ந்து
விடுகிறது.
மனிதனை பேச வைப்பது குரல் நாண்கள் என்று சொல்லப் படுகிற தசை மடிப்புகள்தான்.
இந்த குரல் நாண்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், பேச முயலும்
போது விரைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை
சென்றடையும் காற்று, நாம் பேசும் போது திரும்பி வந்து விறைப்பாக இருக்கும் குரல்
நாண்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.
குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம்
இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த
குரல் நாண்கள் சத்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும்,
பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும்
அதிர்கின்றன. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது.
அறுபது வயதுக்கு மேல் ஆண், பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன் ஒன்று
உரசிக்கொள்ளத் தொடங்கி விடும். அதனால் அவர்கள் குரலில் தளர்ச்சியும் நடுக்கமும்
உண்டாகின்றன. இதனால்தான் வயதான சிலரால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல்
போய்விடுகிறது.
எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று
மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைபிடித்தலும், குரல் நாணை நேரடியாக
பாதிக்கும் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப்
பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக
வைத்திருப்பவர்களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இவற்றை கடைப்பிடித்து நாமும் நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment