பனை தரும் நீர் மேலாண்மை
பனைமரத்தை நாம் ஒரு வறட்சித் தாவரம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப வறண்ட
பகுதிகளில் தான் இவை அதிகம் காணப்படும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து
விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5
கோடி உள்ளன. இவற்றில் 2.5 கோடி மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்
மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை
மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகம். பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30
லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. நமது முன்னோர்கள் மக்கள் வாழும் எல்லா
பகுதிகளிலும் ஏகப்பட்ட குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினர். இப்படி குளங்களை
வெட்டினால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்து விடாது.
நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் ஒன்றுதான்
பனை மரம். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி
ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை
பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில்
பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை
குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும்.
இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன்
மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில்
கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர்
பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள்.
இதோடு பனையின் நன்மைகள் நின்றுவிடுவதில்லை. ஒரு பனை மரம் ஆண்டுக்கு 180
லிட்டர் பதநீர், 25 கிலோ பனை வெல்லம், 16 கிலோ பனங்கற்கண்டு, 12 கிலோ தும்பு, 10
கிலோ விறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் ஆகியவற்றை கொடுக்கிறது. பனை மூலம்
கிடைக்கும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தது. நதிகளை காப்பாற்ற
பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இது செலவு வைக்காத நீர் மேலாண்மையாகும்.
No comments:
Post a Comment