Search This Blog

Monday, September 28, 2015


விவசாயத்தை பாழ்படுத்தும் எலிகள்
விவசாயத்தில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் நெல், கரும்பு பயிர் செய்திருந்தால் எலிகளின் தொல்லை பற்றி கேட்கவே வேண்டாம். அறுவடைக்குப் பின்பும் இவை பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எலிகள் சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அவற்றின் கழிவுப் பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் சேதப்படுத்தும் அளவு 30 மடங்காகும். ஒரு எலி ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 250 கிராம் வரை உணவு உட்கொள்ளும். எலியின் உடல் அளவோடு ஒப்பிடும் போது அது சாப்பிடும் உணவின் அளவு மிக அதிகம். ஒரு எலிக்கு 40 மில்லி நீர் அன்றாடம் தேவைப் படுகிறது. எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியவை. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகின்றன. ஓராண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர்ப்பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 400 கோடி எலிகள் உள்ளன. ஒரு மனிதனின் ஒரு நாள் உணவை இரண்டு எலிகள் ஒரு நாளில் காலி செய்து விடுகின்றன. இந்தியாவில் மொத்தம் 71 வகையான எலி வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு வகை ஆண்-பெண் பிறப்புறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டவை. இவற்றில் ஒரு எலி 18 மாதங்களில் 10 லட்சம் எலிகளை உருவாக்கிவிடுமாம். விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை, பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம். வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்புத் தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தையும், இனப்பெருக்கத்தையும் குறைக்கலாம். எலிகளை கட்டுப்படுத்தினால் மகசூலை கூட்ட முடியும்.

No comments:

Post a Comment