பகல் தூக்கம் நல்லதா?
பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரின் கருத்து. ஆனால், அது
தவறு என்கின்றன, ஆய்வுகள். வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக
தூங்கினால் தான் ஆபத்து என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத் தான்
படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 8 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை
முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் போது, சற்று
ஆசுவாசப்படுத்திக் கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில்
எல்லாவற்றையும் மறந்து விட்டு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும்,
மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன.
இப்படி போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டைக் கூட்டுவதாக
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 39 பேரிடம் இந்த ஆய்வை
மேற்கொண்டார்கள். அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல்பாடு அதிகரித்து
அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 39 பேரை, இரவு
நேரத்தில் நன்றாக தூங்க வைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.
அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க
வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில்
மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை
செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பலமுறை மேற்கொண்ட
போதிலும், ஒரே முடிவுதான் வந்தது.
மேலும் பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்று அமெரிக்காவின்
பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாராகாங்கிளின்
ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய
வந்தது.
இவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு
மணி நேரம் தூங்கும்படியும், மற்றொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும்
செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது
உறுதி செய்யப்பட்டது. பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது
என்பது தெரியவந்தது.
இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில்
குட்டித்தூக்கம் மட்டுமே பயன்தரும். அதைவிட்டு ஒரு மணி நேர தூக்கமானது, அதிக நேரம்
நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்
என்பதுதான் அந்த எச்சரிக்கை. பகலில் அளவாகத் தூங்கினால் நலமாக வாழலாம்.
No comments:
Post a Comment