Search This Blog

Monday, August 31, 2015


ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு
பணம் இன்றைய உலகை ஆளும் மிக முக்கிய பொருள். பணம் வருவதற்கு முன்பு பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்தது. இது ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உலோக நாணயங்கள் 2400 வருடங்களுக்கு முன்பு உபயோகத்தில் வந்தன. அதன் நவீன வடிவம் தான் இன்றைய ரூபாய் நோட்டுகள். ரூபாய் நோட்டு கசங்கி இருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது கறைகள் படிந்திருந்தாலோ அதன் மதிப்பை அது இழப்பதில்லை. எந்த நிலையில் இருந்தாலும் அதன் மதிப்பு மாறுவதில்லை. நமது மக்கள் தான் செல்லாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் வாங்குபவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள். அவர்கள் குறைந்த பணத்தைக் கொடுத்து, வங்கியில் முழுத் தொகையையும் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எந்த பணமும் எந்த நிலையிலும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று. வட இந்தியாவில், பல இடங்களில் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தாலும் முகம் சுழிக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் தான் கொஞ்சம் கசங்கியிருந்தாலும் செல்லாது என்று சொல்லிவிடுகிறார்கள். சரி, இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா? குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அதிக செலவும், மதிப்பு அதிகம் கொண்ட நோட்டுகள் அச்சடிக்க குறைந்த செலவும் ஆகிறது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது. அதனால்தான் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள். (இப்போது மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்). அதேநேரம் ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 48 பைசா மட்டுமே செலவாகிறது. பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 96 பைசாவும், இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 46 பைசாவும், ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 81 பைசாவும், நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 79 பைசாவும், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசாவும், ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க 4 ரூபாய் 6 பைசாவும் செலவாகின்றன. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 100 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட, 50 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. ஒரு நாட்டில் எந்த அளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நாடு அதன் விருப்பத்திற்கு ஏற்ப நோட்டை அச்சடித்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதன்படியே ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடிக்க முடியும். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நாடும் அதன் இஷ்டத்துக்கு பணத்தை அச்சடித்து வெளிவிட்டு விடும்.

No comments:

Post a Comment