Search This Blog

Monday, April 18, 2016


நாம் வாழ பூமி வேண்டும் 19/04/2016

சமீபத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தொடர் ஆபத்துக்களைப் பார்க்கும் போது மனதில் பெரும் அச்சம் தோன்றுகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பூமிதான். இந்த பூமியில் தான் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும்.

பூமியை சுரண்டி பணம் ஈட்டிய பின், அந்த பணத்தைக் கொண்டு வேறு ஒரு கிரகத்தில் நாம் வாழப்போவதில்லை. இந்த பூமியில்தான் வாழவேண்டும். அப்படியென்றால் இந்த பூமியை நாம் எந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்கள், ஆய்வாளர்கள்.

நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும், அவற்றை அனுபவிக்கவும், வரும்காலங்களில் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை, வெறும் பணத்தை வைத்து எந்த பெரிய கடைகளிலும் வாங்கி விட முடியாது. அதனால் நாம் மாறியாக வேண்டும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லை. ‘நீ உயிரோடு இருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்‘ என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்து தான் முடிப்போம்.

அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மாறாவிட்டால் துளியும் தயங்காமல் தள்ளி விட்டு விடும் என்று மேலும் நம்மை பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்ய வேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்து இருக்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக செலவழித்து தீர்த்துவிடாமல், குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும்.

இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று எல்லாவற்றையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டை குறைக்க குறைக்க, உற்பத்தியின் அளவு குறையும். இதனால் இயற்கையின் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ, வேலைவாய்ப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள்.

இதோடு நம் கடமை முடிந்து போய்விடவில்லை. சுற்றுச் சூழலை பற்றியும், உலக வெப்பமயமாதலைப் பற்றியும் புத்தகங்கள், விழிப்புணர்வு கட்டுரைகள் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் மாறினால்தான், உண்மையான மாற்றம் ஏற்படும் என்று மேலும் அவர்கள் கூறுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம் என்று அறிவுரை கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

No comments:

Post a Comment