Search This Blog

Tuesday, June 30, 2015







எதிரொலி

பெரிய அறையிலோ, கோவில்களிலோ நின்று உரக்க கத்தினால் அந்த ஒலி சுவரில் பட்டு திரும்பி வரும். இதை எதிரொலி என்கிறார்கள். ஒலியானது அலைகளாக மாறி ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பரவுகிறது. ஒலி அலைகள் காற்று, நீர், திடப்பொருள் வழியாகவும் பரவுகின்றன. ஒலியின் திசைவேகம் வினாடிக்கு 340 மீட்டர் ஆகும். நாம் பேசும் போது ஒலி அலைகள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன. இந்த அலைகள் சுவர் அல்லது மற்ற தடைகளை சந்தித்ததும் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரொலித்து வரும் ஒலியே எதிரொலியாகும். குரல் எழுப்புபவர் இருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 17 மீட்டர் தொலைவில் தடை இருந்தால் எதிரொலி உண்டாகும். எந்த ஒரு ஒலியும் நமது காதுகளில் 1/10 வினாடி நேரம் நிலைத்திருக்கும். ஆகவே இந்த வினாடியில் வேறெந்த ஒலி காதில் விழுந்தாலும் முன்னர் கேட்ட ஒலி காதில் நிலைத்திருப்பதால் இந்த ஒலியை காது உணராது. ஆகவே ஒலியை தடுக்கும் பொருள் 17 மீட்டருக்கு (55 அடி) தள்ளி இருந்தால் தான், பேசுபவரின் வாயிலிருந்து வெளிவரும் ஒலி 1/10 வினாடி நேரத்தில் தடுக்கும் பொருளை அடைந்து திரும்ப வருவதற்கு சரியாக இருக்கும். அதே நேரத்தில் காது தனது முதல் ஒலியின் பாதிப்பில் இருந்து விடுபட்டு எதிரொலியை கேட்டுணர்கிறது. மரம், சணல், அட்டை, துணி போன்ற பொருட்கள் ஒலியை ஈர்த்துக்கொள்கின்றன. சுவர்கள், பாறை, தண்ணீர் ஆகியவை ஒலியை திருப்பி அனுப்பி விடுகின்றன. இன்றைய காலகட்டங்களில் எதிரொலியை குறைத்து ஒலியை நல்ல முறையில் பரவச்செய்யும் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். இன்றைய தியேட்டர்களும் அரங்குகளும் வட்டவடிவில் மூலைகளைக்கொண்டு அமைக்கிறார்கள். இதனால் ஒலி அலைகள் ஈர்க்கப்படுகின்றன அல்லது சிதறடிக்கப்படுகின்றன. இப்படித்தான் ஒலி கட்டுப்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment