இந்திய உளவு நிறுவனங்கள் 06/05/2016
இந்தியாவில் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, ‘இன்டெலிஜென்ஸ் பீரோ‘, சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று ‘ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்‘, இதனை சுருக்கமாக ‘ரா‘ என்று அழைக்கிறார்கள்.
உள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகிலேயே மிக பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்புப்படை பிரிவுகளுக்கும் தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.
அடுத்த உளவு அமைப்பான ரா. 1968-ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது.
உலகநாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு உளவு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி, பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் ‘ரா‘தான்.
நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999-ம் ஆண்டு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த ‘ரா‘ அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளிலும் பாகிஸ்தானின் ஆதிக்கம் பெருமளவு குறைந்ததற்கு ‘ரா‘வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.
இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள், பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும் என்கிறது அரசாங்கம். உண்மைதானே!
No comments:
Post a Comment