நமது நாட்டின் ஒருபுறம் தண்ணீர் கிடைக்காமல் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. மறுபுறம் தண்ணீர் கிடைத்தாலும் அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இத்தகைய நிலையை எல்லாம் தாண்டித் தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் விவசாயமே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இத்தகைய தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விவசாயம் செய்வதற்கு ஏற்ற தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ரூ.12 கோடியை ஒதுக்கி உள்ளது.
வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களை கண்டறிந்து, அவற்றின் ஜீன்களை பெற்று, அதனைக் கொண்டு மேலும் பல தாவர வகைகளை உருவாக்கும் திட்டத்திற்கே இந்த 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயொடெக்னாலஜி இதை சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம் வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ஜீன்கள் தொகுக்கப்படும். அந்த ஜீன்கள் தற்போது பயன் தந்து கொண்டிருக்கும் தாவரங்களுக்குள் புகுத்தப்படும். இதனால் நெல் போன்ற பயன்தரும் தாவரங்கள் மனிதனுக்கான பயனை எப்போதும் போல் தந்து கொண்டே வறட்சியையும் தாங்கி வளரும். இதனால் உணவு உற்பத்தி தடையின்றி நடக்கும்.
இதேபோன்ற முயற்சி விலங்குகள் மீதும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் இன்னுமொரு பயனும் இருக்கிறது. தாவரங்களில் மேற்கொள்ளப்படும் ஜீன் மாற்றங்களால் நல்ல சத்துள்ள உணவை தரும் வகையில் அந்த தாவரங்கள் மாற்றப்படும்.
இத்தகைய ஆராய்ச்சி மூலம் இந்தியாவில் ஏற்கனவே சத்துள்ள உருளைக்கிழங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உருளைக்கிழங்கில் மாவுச்சத்து மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஜீன்கள் மூலம் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள ஜீன் வங்கியில் நான்காயிரம் மருத்துவ தாவரங்களின் ஜீன்களும், 500 நார்ச்சத்து தாவரங்களின் ஜீன்களும், 100 நறுமண தாவரங்களின் ஜீன்களும், எண்ணெய் வித்துக்களின் ஜீன்களும், 400 தீவனத் தாவரங்களின் ஜீன்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேறுபட்ட உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையும், வடகிழக்கு இந்தியாவும் உலகின் 25 முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கின்றன.
No comments:
Post a Comment